Monday, March 14, 2011

டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

-------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:

உயிரியல் அல்லது பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life): ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.
-------

அரிசோனா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்த "உயிர் என்றால் என்ன?" என்ற விவாதத்தில் பல சுவாரசிய காட்சிகள் நடந்தேறின. உயிரியல் மரம் குறித்து வென்டர் கூறிய கருத்துக்கள் பலரது புருவத்தை உயர செய்துள்ளது. 

(வென்டர் குறித்த இந்த தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்)

டாகின்சின் வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உயிரியல் மரத்தை "புனைவு/கட்டுக்கதை (fiction)" என்று வர்ணித்துள்ளார் வென்டர்.

இந்த செய்தி உங்களது ஆர்வத்தை தூண்டியிருந்தால் மேற்கொண்டும் படியுங்கள். 

டாகின்ஸ், வென்டர், பால் டேவிஸ், லாரன்ஸ் க்ராஸ், க்றிஸ் மெக்கே உள்ளிட்ட ஏழு அறிவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த உரையாடல் நிகழ்ச்சியில் "உயிர் என்றால் என்ன?, உயிர் தோன்றியது எப்படி?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ரோஜர் பின்ஹம் விவாதத்தை நடத்தினார். 



உரையாடலில் கலந்து கொண்டவர்களில் பலர், இவ்வுலகில் உயிர் என்பது ஒரே வகை தான் என்று கூறினர். அதாவது, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதையரில் இருந்து வந்துள்ளதால் இவ்வுலகில் உயிர் என்பது ஒரு வகை மட்டுமே என்பது பலரது கருத்தாக இருந்தது, ஒருவரைத் தவிர...

ஆம்....கிரேக் வென்டரை தவிர. 
   
அப்போது நடந்த சுவாரசிய உரையாடல் இங்கே உங்கள் பார்வைக்கு, 

வென்டர்: இவ்வுலகில், உயிர் என்பது ஒரு வகைதான் என்ற (இங்குள்ள) என் சக தோழர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். நம்மிடையே பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. 

pH 12 baseசில் உங்களை தூக்கி போட்டால் உங்களது தோல் கரைந்து விடும். ஆனால் அதில் வாழக்கூடிய உயிரினங்களும் உள்ளன. இந்த இரண்டையும் ஒரே வகையான உயிரினங்கள் என்று நான் கூற மாட்டேன்.   

பால் டேவிஸ்: (ஆனால்) நமக்கெல்லாம் ஓரே மரபணு குறியீடு (Genetic code) தானே இருக்கின்றது? நமக்கெல்லாம் ஒரே பொதுவான மூதாதையர் தானே...

வென்டர்: இல்லை, நமக்கெல்லாம் ஒரே மாதிரியான மரபணு குறியீடுகள் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், Mycoplasma பாக்டீரியாக்களில் உள்ள மரபணு குறியீடு உங்களது செல்களில் வேலை செய்யாது. ஆக, உயிரினங்களுக்குள்ளாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

உரையாடல் படுசுவாரசியமாக சென்றது...

டேவிஸ்: அவை (Mycoplasmas) வேறு உயிரியல் மரத்தை சார்ந்தவை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். 

வென்டர்: உயிரியல் மரம் என்பது ஆரம்ப கால அறிவியல் அறிவை கொண்டு புனையப்பட்டது. அது நிலைத்து நிற்கவும் இல்லை. (ஆக) உயிரியல் மரம் என்று ஒன்றுமில்லை. 

வென்டரின் அதிரடியான இந்த பதில்கள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும். 

பரிணாம உலகின் அடிப்படையான "பரிணாம மரம்" குறித்த வென்டரின் கருத்துக்கள் டாகின்ஸ் உள்ளிட்ட அனைவரையும் திணறடித்திருக்க வேண்டும். அதனை டாகின்ஸ் வெளிப்படுத்தவும் செய்தார். 

டாகின்ஸ்: உயிரியல் மரம் என்பது கட்டுக்கதை/புனைவு என்ற வென்டரின் கருத்துக்கள் என்னை ஆச்சர்யமடைய செய்கின்றன. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏ குறியீடுகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆக, இவையெல்லாம் தொடர்புடையவை என்று தானே அர்த்தம்?

இதை அவர் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓரிரு நொடிகள் அமைதி. ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர். 
.
.
.
சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர். 



பின்னர், உரையாடலை நடத்திய ரோஜர் வேறு கேள்விக்கு செல்ல விஷயம் முடிவுக்கு வந்தது. டாகின்சின் பதில் குறித்து வென்டரை கருத்து கேட்டிருந்தால் விவாதம் இன்னும் படு சூடாக இருந்திருக்கும். வென்டர் தானாக முன்வந்தாவது கருத்து சொல்லியிருக்கலாம். எதற்கு இங்கே பிரச்சனை என்று சிரிப்போடு நிறுத்தி கொண்டார் போல...  

டாகின்சின் இத்தகைய பதிலை "பெரிய பொய் (Whopper)" என்று வர்ணிக்கின்றது "பரிணாம செய்திகள் (Evolutionary News)" தளம். 

ஏனென்றால், சற்று முன் தான் வென்டர் தெளிவாக கூறினார், Mycoplasma பாக்டீரியாக்களின் மரபணு குறியீடுகள் வேறானவை என்று. இத்தனைக்கும், வென்டர் கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ஆய்வுக்கு பயன்படுத்தி வருவது இந்த பாக்டீரியாக்களை தான். ஆனால் டாகின்சோ வேறு மாதிரியாக சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை? 

எது எப்படியென்றாலும், வென்டரின் கருத்துக்கள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் உண்மை.

உயிரின் தேடலைப்பற்றிய இந்த கலந்துரையாடலில் என்னை கவனிக்க வைத்த இரண்டு கருத்துக்கள்,

1. ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.       

2. உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயற்சிக்கலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.     

அறிவுக்கு நல்ல தீனியாய் அமைந்த இந்த உரையாடலை காண விரும்புபவர்கள், விவாதத்தின் முதல் பகுதியை கீழே காணலாம் (வென்டர்-டாகின்ஸ் குறித்து நான் மேலே குறிப்பிட்டவை 8.48வது நிமிடத்திலிருந்து தொடங்குகின்றது).




மற்ற இரண்டு பகுதிகளை பார்க்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும். 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. The Great Debate - What is life? (part 2 of 3). link
2. The Great Debate - What is life? (part 3 of 3). link
3. Venter vs. Dawkins on the Tree of Life -- and Another Dawkins Whopper. link

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ






Monday, March 7, 2011

விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக..ஆமீன். 

சென்சிடிவ்வான தகவல்கள் அடங்கிய பதிவு. படிப்பவர் கவனம் பரிந்துரைக்கப்படுகின்றது. 

வரலாற்றில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தரக்கூடியவை. இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளும்  அத்தகைய ரகத்தை சார்ந்தவைதான். 

"பெண்களே நீங்கள் உடலாலும், அறிவாலும் ஆண்களை விட கீழானவர்களே" - யார் தெரியுமா இப்படி கூறியவர்கள்?.....விஞ்ஞானிகள்...ஆம் விஞ்ஞானிகளே தான். அதிலும் பிரபல விஞ்ஞானிகள்.... 

உங்களுக்கு இது அதிர்ச்சியை தரலாம். இவ்வளவு முக்கிய தகவலை நாங்கள் இது வரை கேள்விப்பட்டதில்லையே என்றும் உங்களில் சிலர் எண்ணலாம்.  வரலாற்றில் பல செய்திகள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பது புதிதில்லையே...

விஞ்ஞானிகள் சொன்னார்களா?...அவர்கள் நன்கு ஆராயாமல்  எதையும் சொல்லமாட்டார்களே என்று நீங்கள் கேட்கலாம். உங்களுடைய கருத்து சரிதான். 'ஆண்களை விட தாழ்ந்தவர்கள் பெண்கள்' என்ற கருத்தை நன்கு ஆராய்ந்தே(??) கூறியவர்கள் நாம் மேலே பார்த்த விஞ்ஞானிகள்.

இவர்களுக்கு துணையாய் நின்றது பரிணாம கோட்பாடு. ஆம், இந்த அறிவியலாளர்கள் மேற்கூறிய முடிவுக்கு வர காரணமாக இருந்தது பரிணாம கோட்பாடுதான். 

எப்படி இனவெறியர்களுக்கு துணையாக நின்று இலட்சகணக்கான மக்கள் கொல்லப்பட காரணமாக பரிணாமம் இருந்ததோ, அதுபோலவே, ஆண்களை விட கீழானவர்கள் பெண்கள் என்ற கருத்துக்கு துணையாக நின்று மனரீதியாக பெண்கள் கொல்லப்பட காரணமாய் இருந்தது பரிணாம கோட்பாடு. இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

கொரில்லா குரங்குகளின் மூளைகளுக்கு நிகரானது பெண்களின் மூளை என்று கருத்து கூறிய பிரபல விஞ்ஞானிகள் கூட உலகில் உண்டு என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? மனைவி என்பவள் நாயை விட மேலானவள் என்று டார்வின் கூறினாரே, இது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?      

"ஆண்களை விட அறிவுத்திறனிலும், உடல் வலிமையிலும் நீங்கள் தாழ்ந்தவர்களே" என்று பெண்களை நோக்கி அறிவியல் ரீதியாக விளக்கம் கொடுத்து, அவர்களை "நாம் கீழானவர்களே" என்று உளவியல்ரீதியாக நம்பவைத்து கேவலப்படுத்தியது பரிணாம கோட்பாடு.    

ஆணாதிக்கம்...ஆணாதிக்கம் என்று பெண்ணுரிமைக்காக கூப்பாடு போடும் பரிணாம ஆதரவாளர்கள், தற்போது அதி விரைவாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த ஆணாதிக்கத்திற்கு அறிவியல் ரீதியாக தீனி போட்டு வளர்த்ததில் பரிணாம கோட்பாட்டிற்கு முக்கிய பங்குண்டு என்பதைத்தான். 'பெண்ணை விட உயர்ந்தவன் ஆண்' என்பதை அழுத்தம் திரூத்தமாக சொன்னவர்களில் டார்வினும் உண்டு என்பத்தைத்தான்.

ஆதாரங்களே இல்லாத, ஒரு யூகமாக இருக்க கூட தகுதி இல்லாத பரிணாம கோட்பாடு, இவ்வுலகிற்கு பரிசாக தந்த சீர்கேடுகளில் முக்கியமானவை...இனவெறி மற்றும் பெண்ணடிமைத்தனம். 

மனிதர்களிடேயே உயர்வு தாழ்வை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. அதுபோலவே,  பெண்ணடிமைத்தனத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தியது பரிணாம கோட்பாடு. 

சரி, மேலே பார்த்ததற்கெல்லாம் என்ன ஆதாரம்? இதோ ஒன்றன் பின் ஒன்றாக வருகின்றன.

பெண்கள் குறித்த பரிணாமத்தின் பார்வை:

பரிணாமம் குறித்த டார்வினின் இரண்டாவது புத்தகமான "The Descent of Man, and Selection in Relation to Sex" மனித பரிணாமம் குறித்து பேசுகின்றது. இதில் ஆண், பெண் வித்தியாசம் குறித்து விரிவாக விவரித்திருகின்றார் டார்வின்.

பெண்களை சொந்தமாக்கி கொள்ள ஆதிகால ஆண்கள் போராடி வந்ததாக குறிப்பிடும் டார்வின், பெண்களை கவர வெறும் உடல் வலிமை மட்டும் போதாது என்பதால் காலப்போக்கில் ஆண்கள் அறிவுத்திறனில் வளர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகின்றார் (Sexual Selection Hypothesis).

மேலும், தங்களுடைய மனைவியரை அடுத்தவர் கவருவதிலிருந்து காக்கவும், தன் குடும்பத்திற்கு தேவையான உணவையும் இடத்தையும் கொடுப்பதில் ஆண்கள் மும்முரமாக செயல்பட்டதால் அறிவிலும், உடல் வலிமையிலும் ஆண்கள் உயர்ந்தவர்களாக பரிணமித்து விட்டதாக கூறினார் டார்வின்.

பெண்களுக்கு இந்த தேவைகள் இல்லாததால் அவர்கள் ஆண்களை விட தாமதமாகவே  பரிணமித்ததாக குறிப்பிடுகின்றார் டார்வின்.

We may also infer, from the law of the deviation of averages, so well illustrated by Mr. Galton, in his work on 'Hereditary Genius,' that if men are capable of decided eminence over women in many subjects, the average standard of mental power in man must be above that of woman.
The half-human male progenitors of man, and men in a savage state, have struggled together during many generations for the possession of the females. But mere bodily strength and size would do little for victory, unless associated with courage, perseverance, and determined energy. With social animals, the young males have to pass through many a contest before they win a female, and the older males have to retain their females by renewed battles. They have, also, in the case of man, to defend their females, as well as their young, from enemies of all kinds, and to hunt for their joint subsistence. But to avoid enemies, or to attack them with success, to capture wild animals, and to invent and fashion weapons, requires the aid of the higher mental faculties, namely, observation, reason, invention, or imagination. These various faculties will thus have been continually put to the test, and selected. --- Charles Darwin,The Descent of Man, and Selection in Relation to Sex, 1871, Page No.327.

மொத்தத்தில், ஆண்கள் உயர்ந்தவர்கள் பெண்கள் தாழ்ந்தவர்கள். டார்வினுடைய இந்த கருத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அவரால் பிரபலமான பரிணாம கோட்பாட்டை பொறுத்தவரை, மனிதர்கள் என்பவர்கள் முன்னேறிய விலங்குகள். அவ்வளவே.

[இங்கு  மற்றொரு முக்கிய செய்தியையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பரிணாமத்தின் ஆணிவேரான இயற்கை தேர்வை கண்டுபிடித்ததில் டார்வினுடன் சேர்ந்து பெருமையை பகிர்ந்து கொள்பவர் அல்ப்ரெட் ரஸ்ஸல் வாலஸ் அவர்கள். அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் வாலஸ், டார்வினுடைய மனித பரிணாமம் குறித்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அதற்கு காரணம், ஒழுக்கம் மற்றும் அற்புத அறிவுத்திறனை மனித இனம் கொண்டிருந்ததுதான்.

மனிதனின் இந்த தன்மைகள் இயற்கைத் தேர்வால் வந்திருக்க வேண்டுமென்ற விளக்கத்தை நிராகரித்தார் வாலஸ். இவற்றை விளக்க இயற்கை தேர்வு ஒத்துவராது என்றும், நம்மை மீறிய ஒரு சக்தியே இவற்றிற்கு காரணமாக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார் வாலஸ். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் உயிரினத்தையும் அந்த சக்தி தான் உருவாக்கியிருக்க வேண்டுமென்றும் கூறினார். வாலசின் இந்த கருத்துக்கள் டார்வின் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிகுந்த சங்கடப்படுத்தியது]

டார்வினுடைய ஆண் பெண் குறித்த கருத்துக்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையிலும் அமையாதவை. எப்படி இன்றளவும் பரிணாமத்திற்கு ஆதாரங்களில்லையோ, அதுபோலேவே அவர் கூறிய ஆண், பெண் வித்தியாசத்திற்கும் ஆதாரங்களில்லை.

டார்வின் தன் இளமை பருவத்தில் கூறிய கருத்து, பெண்கள் குறித்த அவரது பார்வையை இன்னும் மோசமாக்குகின்றது. திருமணத்தில் உள்ள நன்மைகளை பட்டியலிடும் அவர், மனைவியின் தன்மைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"...Constant companion (and friend in old age) who will feel interested in one - Object to be beloved and played with. Better than a dog anyhow - Home, & someone to take care of house..." --- Darwin Letters, Cambridge University Library.
நிரந்தரமான உடனிருப்பவர் ( வயதான காலத்தில் நண்பர்) - விரும்பப்படுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றவர். எப்படியானாலும் நாயை விட மேலானவர் - வீட்டை கவனித்து கொள்பவர்" --- (Extract from the original quote of) Darwin Letters, Cambridge University Library.



டார்வினின் இது போன்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பவை. தன்னுடைய கோட்பாட்டை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தெரிவித்த கருத்துக்கள் இவை. அவர் முன்வைத்த கோட்பாடு, அவருடைய இது போன்ற எண்ணங்களை மாற்றாமல், ஆண் பெண் உயர்வு தாழ்வுக்கு அறிவியல் ரீதியாக சாயம் பூசியது.

பரிணாம கோட்பாடு சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்:

பிறப்பிலேயே தாழ்ந்தவர்கள் பெண்கள் என்ற கருத்தை உருவாக்கியது பரிணாமம். பெண்களை காட்டிலும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அறிவியலாளர்களிடையே உருவாக்கியது பரிணாமம். "அறிவியலே கூறிவிட்டது, நாங்கள் அறிவில் குறைந்தவர்களே" என்று உளவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

சமூகத்தில் பரிணாமம் ஏற்படுத்திய விளைவு எந்த அளவு என்றால், உளவியல் ரீதியாக ஆண்கள் ஒரு இனமாகவும், பெண்கள் வேறு இனமாகவும் பார்க்கப்பட்டார்கள்.
"The year 1884 saw the publication of scientific book in which woman is called Homo parietalis and man is called homo frontilis" --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419. 
1884 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிவியல் புத்தகத்தில் பெண்கள் Homo parietalis எனவும், ஆண்கள் homo frontilis எனவும் அழைக்கப்பட்டார்கள் --- The history of science and technology: a browser's guide to the great discoveries, inventions, and the people who made them, from the dawn of time to today, Bryan H. Bunch, Alexander Hellemans, 2004, Page No:419.  

பெண்கள் தாழ்ந்தவர்களாக சித்தரிக்கப்பட டார்வினுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு பால் ப்ரோகா (Paul Broca) என்ற பிரபல பிரெஞ்சு விஞ்ஞானிக்கும் உண்டு. இவர் என்ன செய்தாரென்றால், மனிதர்களின் மூளையை எடை போட்டு பெண்களை விட ஆண்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார்.

இவருடைய இந்த ஆய்வு சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

பாரிசில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்தினார் ப்ரோகா. சுமார் 292 ஆண் மூளைகளை ஆய்வு செய்த அவர், அந்த மூளைகளின் சராசரி எடை சுமார் 1,325 கிராம்கள் என கண்டறிந்தார். பின்னர், சுமார் 192 பெண் மூளைகளை ஆராய்ந்த ப்ரோகா, அவற்றின் சராசரி எடை சுமார் 1,144 கிராம்கள் என கண்டறிந்தார். ஆக, ஆண்களுடைய மூளைக்கும், பெண்களுடைய மூளைக்கும் சுமார் 181 கிராம்கள் வித்தியாசம். தன்னுடைய ஆய்வு முடிவுகள் 'ஆண்களே அறிவுத்திறனில் உயர்ந்தவர்கள்' என்ற கூற்றை நிரூபிப்பதாக கூறினார் ப்ரோகா.

1873 ஆம் ஆண்டு, L'Homme Mort என்னும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆதிகால மனித மண்டையோடுகளை ஆராய்ந்தார் ப்ரோகா. இந்த ஆய்வின் மூலம் அவர் கண்டறிந்தது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்த மண்டையோடு கொள்ளளளவு வித்தியாசம் சுமார் 99.5 cubic centimeters. இன்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கக்கூடிய கொள்ளளவு வித்தியாசம் சுமார் 129.5  to  220.7 cubic centimeters.

ஆக, கொள்ளளவு வித்தியாசங்கள் அதிகரித்திருப்பது, பெண்களை விட ஆண்கள் வேகமாக பரிணமித்திருப்பதற்கு ஆதாரம் என எண்ண தொடங்கினர் ப்ரோகாவின் குழுவினர். இதனை தெளிவாக அறிவிக்கவும் செய்தனர்.

'அறிவுத்திறனில் தாங்கள் தாழ்ந்தவர்களே' என்று அறிவியல் ரீதியாக நம்பவைக்கப்பட்டார்கள் பெண்கள்.

ப்ரோகாவின் குழுவில் இருந்த L.Manouvrier என்பவர், பெண்கள் குறித்த ப்ரோகாவின் கருத்துக்களை நிராகரித்தார். இந்த ஆய்வு குறித்து வேதனையுடன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் L. Manouvrier,

"The  theologians  had  asked  if women had a soul. Several centuries later, some scientists were  ready  to  refuse  them  a  human intelligence" ---  L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.    
பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா என்று கேட்டனர் வேத விற்பன்னர்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, சில விஞ்ஞானிகள், பெண்களுக்குண்டான அறிவுத்திறனை மறுக்க தயாராக இருக்கின்றனர் ---  (Extract from the original quote of) L.Manouvrier, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ப்ரோகா தோற்றுவித்த பள்ளியின் தலைமை அறிவியலாளர்களில் ஒருவரான ல பான் (Le Bon) வரலாற்றில் முக்கிய விஞ்ஞானியாக அறியப்படுபவர். ப்ரோகாவின் ஆய்வு தகவல்களை உபயோகப்படுத்தி இவர் எழுதிய கட்டுரையை பிரான்சின் மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழ் 1879 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் மிக மோசமான, அப்போதைய அறிவியல் உலகம் காணாத நச்சு கருத்தை தெரிவித்திருந்தார் ல பான்.

(பின்வரும் பத்தி மிக மிக சென்சிடிவான தகவல்களை கொண்டது. விரும்பாதவர்கள் பின்வரும் பத்தியை தாண்டி செல்லவும்)
"In  the  most  intelligent  races,  as  among  the Parisians,  there  are  a  large  number  of  women whose  brains  are  closer  in  size  to  those  of gorillas than to the most developed male brains. This  inferiority  is  so  obvious  that  no  one  can contest it for a moment; only its degree is worth discussion. All psychologists who have studied the intelligence of women, as well as poets and novelists, recognize today that they represent the most inferior forms of human evolution and that they are closer to children and savages than to an adult,  civilized  man.  They  excel in  fickleness, inconstancy, absence of thought and logic, and incapacity to reason. Without doubt there exist some distinguished women, very superior to the average man, but they are as exceptional as the birth  of  any monstrosity,  as,  for  example,  of  a gorilla  with two  heads;  consequently,  we  may neglect them entirely" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159. 
"பாரிஸ் மக்களை போன்ற அறிவில் சிறந்த இனத்தில், நிறைய பெண்களின் மூளைகள், நன்கு வளர்ந்த ஆணின் மூளையை விடவும், கொரில்லாக்களின் மூளையையே ஒத்து வருகின்றது. இது எதிர்க்க முடியாத உண்மை. பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்த உளவியல் நிபுணர்கள் அனைவரும் இன்று உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பது என்னவென்றால், பரிணாமத்தின் படி அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதைத்தான்.
பெண்களின் அறிவுத்திறன், நாகரிகம் அடைந்த மனிதனை ஒத்திருப்பதை காட்டிலும், குழந்தைகளையும் காட்டுமிராண்டிகளையுமே ஒத்திருக்கின்றது. சபலத்திலும், நிலையாமையிலும், சிந்திக்க தெரியாமல் இருப்பதிலும், கேள்வி கேட்பதில் திறமையில்லாமல் இருப்பதிலும் பெண்கள் மேம்பட்டிருக்கின்றனர்.
நிச்சயமாக, சராசரி மனிதனை விட (அறிவில்) உயர்ந்த சில பெண்கள் இருக்கின்றனர். எப்படி இரண்டு தலை கொண்ட கொரில்லாக்கள் பிறக்கின்றனவோ அதுபோலவே இவர்களும் விதிவிலக்கானவர்கள். ஆகையால், இவர்களை முற்றிலுமாக நிராகரித்து விடலாம்" --- Le Bon, as quoted by Stephen Jay Gould in his book The Panda’s Thumb, 1980. W.W. Norton, pp. 152-159.

ல பானின் இந்த கருத்துக்கள் எரிச்சலூட்டுபவை. ஆனால் இதே போன்றதொரு கருத்தை தான் டார்வினும் கொண்டிருந்தார். பெண்களின் சில பழக்க வழக்கங்கள் கீழ்நிலை இனங்களோடு ஒத்துபோவதாக கூறியவர் அவர்.  அதுமட்டுமல்லாமல், நாகரிகத்தில், தாழ்வான நிலையிலேயே பெண்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டவர் டார்வின்...
"It is generally admitted that with woman the powers of intuition, of rapid perception, and perhaps of imitation, are more strongly marked than in man; but some, at least, of these faculties are characteristic of the lower races, and therefore of a past and lower state of civilisation" --- Charles Darwin, The Decent of Man, 1871, Page No. 326-327.
ல பான் இதோடு நிறுத்தவில்லை. பெண்களுக்கு உயர் கல்வி தரும் அமெரிக்க சீர்திருத்தவாதிகள் சிலரது திட்டத்தையும் கேள்வி கேட்டார். இயற்கை பெண்களுக்கு கொடுத்துள்ள தாழ்வான நிலையை தவறாக புரிந்து கொள்ள கூடாதென்றும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு கல்வி கொடுக்கப்பட்டால் சமூக புரட்சி நடந்து குடும்ப பிணைப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

பான் போல தங்களது சொந்த கருத்துக்களுக்கு ஆதரவாக அறிவியலை வளைத்து கொண்ட அறிவியலாளர்கள் அன்று இருந்தனர்.

உதாரணத்திற்கு, மனிதனுடைய புத்திசாலித்தனம், மூளையின் "frontal lobe" பகுதியை சார்ந்தே அமைந்திருக்கின்றது என சில விஞ்ஞானிகள் எண்ணினர். பின்னர், பெண்களுடைய frontal lobe பகுதி ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, தங்களுடைய எண்ணத்தை மாற்றி கொண்டனர். அதாவது, புத்திசாலித்தனதுக்கு Frontal Lobe காரணமல்ல, Parietal Lobe பகுதியே காரணமாக இருக்க வேண்டுமென்று தங்களது எண்ணத்தை மாற்றி கொண்டனர்.

(ஒருவேளை, பெண்களின் மூளை ஆண்களை விட பெரியது என்று கண்டுபிடித்திருந்தால், புத்திசாலித்தனத்துக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லை என்று முடிவு கட்டியிருப்பார்கள் போல...)

பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் டார்வின் முதற்கொண்டு அன்றைய விஞ்ஞானிகள் பலருக்குள்ளும் நன்கு பதிந்திருந்ததால், தங்களது எண்ணங்களுக்கு ஏற்றவாறு தான் அறிவியலை அணுகினார்களே தவிர தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல.          

இன்றைய சூழல்: 

உயரம், பருவம் ஆகியவையை சார்ந்து(ம்) மூளையின் அளவு வேறுபடும். இன்றைய மனிதர்களிலேயே கூட மூளையின் அளவில் நிறைய வேறுபாடு உண்டு. ஆக, மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை கணக்கிடுவதெல்லாம் இன்றைய அறிவியலுக்கு ஒத்துவராதது. அவை தவறென நிரூபிக்கப்பட்டவை. ப்ரோகா முதற்கொண்டு பல விஞ்ஞானிகளின் பெண்கள் குறித்த ஆய்வுகளை "non-sense" என்று கூறுகின்றது இன்றைய அறிவியல்.

அதுபோல, ஆண் பெண் வித்தியாசம் குறித்த டார்வினின் கூற்றுக்கும் ஆதாரங்கள் இல்லை.  இருந்தாலும், டார்வின் அறிமுகப்படுத்திய Sexual Selection Hypothesis இன்றளவும் ஆண், பெண் வித்தியாசங்களுக்கான சிறந்த விளக்கமாக பார்க்கப்படுவதாக விக்கிபீடியா கூறுகின்றது.

அவ்வப்போது அறிவுத்திறன் குறித்த சர்ச்சைகள் தோன்றி கொண்டுதான் இருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் தலைவர் லாரான்ஸ் சம்மர்ஸ் (Lawrence Summers) மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அறிவியல் மற்றும் கணக்கு துறைகளில் பெண்கள் (அதிக அளவில்) வெற்றி பெற முடியாததற்கு காரணம், அவர்கள் பிறப்பிலேயே அப்படித்தான் என்று அவர் கூறினார். ஆம், அன்று டார்வின் கொண்டிருந்த அதே கருத்துக்கள் இன்று சம்மர்ஸ் வாயிலிருந்து வந்து விழுந்தன. 

டென்மார்க்கை சார்ந்த பிரபல மனோதத்துவ நிபுணரான ஹெல்முத் நைபோர்க் (Helmuth Nyborg) பெரும் சர்ச்சையை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தினார். சர்ச்சைக்கு காரணம், "Personality and Individual Differences" என்ற அறிவியல் ஆய்விதழில் வெளிவந்த அவருடைய ஆய்வு கட்டுரை. அந்த கட்டுரையில், பெண்களை விட ஆண்களே அறிவில் சிறந்தவர்கள் என்று தன்னுடைய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இது மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க, தன்னுடைய பணியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார் நைபோர்க். இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நைபோர்க்கின் ஆய்வில் எந்த தவறுமில்லை என்று அவருக்கு ஆதரவாக பல ஆய்வாளர்கள் திரண்டது தான்.

நைபோர்க் சர்ச்சைகளில் சிக்கியது இது முதல் முறையல்ல. கருப்பினத்தரை விட வெள்ளை இனத்தவரே அறிவில் சிறந்தவர்கள் என்று ஏற்கனவே கருத்து கூறியிருந்தவர் நைபோர்க்.

நைபோர்க்கின் கருத்துக்களை உற்று நோக்குங்கள். டார்வினின்  பார்வைகளும் இப்படித்தான் இருந்தன.  

ஆக, இன்றளவும் இந்த சர்ச்சைகள் குறையவில்லை. பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறும் பிரபல ஆய்வாளர்கள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணாதிக்கத்திற்கு துணை போய் கொண்டு தான் இருக்கின்றனர்.

முடிவாக: 

வரலாற்றை ஆழ்ந்து நோக்கும் யாருக்கும் தெரியவரும் உண்மை என்னவென்றால், பெண்ணடிமைத்தனத்திற்கு சமூகம் மட்டுமே காரணமல்ல, விஞ்ஞானிகளும் காரணம் என்பதுதான். 

அந்த விஞ்ஞானிகளுக்கு உறுதுணையாக இருந்து, பெண்களை உளவியல் ரீதியாக காயப்படுத்தியது பரிணாமம் என்ற ஆதாரமில்லாத கோட்பாடு தான்.

உண்மைகள் வரலாற்றில் மறைத்திருக்கப்படலாம். ஆனால் அவை நிரந்தரமாக மறைந்திருக்காது.

ஆணாதிக்கத்தை அறிவியல் ரீதியாக நியாயப்படுத்தி, ஆணாதிக்க சமூகத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது பரிணாம கோட்பாடு. பெண்ணடிமைத்தனத்தை போற்றி வந்த மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது பரிணாம கோட்பாடு.

"Charles darwin believed in general female inferioty in reasoning, creative imagination, and so on...A refinement of the 'inferiority' theme took shape with the development  of evolutionay theory in the mid-19 century" - Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.
படைப்பு திறன், கேள்வி கேட்கும் திறன் என இன்னும் பல பிரிவுகளில் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை டார்வின் கொண்டிருந்தார்...  
பரிணாம கோட்பாடு வளர்ச்சி பெற ஆரம்பிக்க '(பெண்கள்) தாழ்ந்தவர்கள்' என்ற கருத்தும் வடிவம் பெற ஆரம்பித்தது" -  (Extract from the original quote of) Judith Worell, Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender, Volume 1, 2001, Page No.595.  

எப்படி தன் இனவெறிக்கு பரிணாமத்தை காரணமாக காட்டி நியாயம் கற்பித்தாரோ ஹிட்லர், அதுபோலவே, பெண்கள் குறித்த தங்களது பாரபட்சமான கருத்துக்களுக்கு காரணமாக ஆய்வாளர்கள் கை நீட்டியது பரிணாம கோட்பாடை நோக்கி தான்.

அறிவியல் கருத்துக்கள் மாறக்கூடியவை. மூளையின் அளவை கொண்டு அறிவுத்திறனை(??) கணக்கிட்டார்கள் என்றால் அது அன்றைய தவறான புரிதல். அதுபோலவே, பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரங்கள் இருப்பதாக அன்று நம்பினர். பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அந்த ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் ஆகி, இன்றோ, அதற்கு நேர்மாறான நிலைமையல்லவா இருக்கின்றது!!!

பரிணாம ஆதரவாளர்களிடம் மீண்டும் நான் கேட்டு கொள்வதெல்லாம், திறந்த மனதோடு பரிணாம கோட்பாட்டை ஆராய முன்வாருங்கள் என்பதுதான். பரிணாமத்தால் மனித சமுதாயம் அடைந்த பயன் என்று ஒன்றுமில்லை. அறிவியல் போர்வையில் தவறான தகவல்கள், இனவெறி, பெண்கள் தாழ்த்தப்பட்டது (and etc) என இவைதான் பரிணாம கோட்பாடு நமக்கு கொடுத்த பரிசுகள்.

பெண்ணுரிமை ஆர்வலர்கள் எதிர்த்து போராட வேண்டியது ஆணாதிக்க சமூகத்தை மட்டுமல்ல, அவர்களுக்கு துணை போய் கொண்டிருக்கும் ஆய்வாளர்களை எதிர்த்தும் தான்...

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் - (குரான் 33:35)

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...  

References:
1. The Descent of Man - Charles Darwin, 1871, Page No.326 - 328. link
2. The Panda's thumb - Stephen Jay Gould, 1980, W.W. Norton, Page No. 152-159. link
3. The history of the human female inferiority ideas in evolutionary biology - Bergman G, U.S. National Library of Medicine. link
4. Encyclopedia of women and gender: sex similarities and differences and the impact of society on gender - Judith Worell, Volume 1, 2001, Page No.595.
5. The history of science and technology - Bryan H. Bunch & Alexander Hellemans, Houghton Mifflin Harcourt, 2004, Page No.419.
6. Charles Darwin, Alfred Russel Wallace, and the Evolution / Creation of the Human Brain And Mind - Stephen E. Glickman, Departments of Psychology and Integrative Biology, University of California, Berkeley, USA. link
7. Summers' remarks on women draw fire - The Boston Globe,  January 17, 2005. link
8. Sex-related differences in general intelligence g, brain size, and social status - Helmuth Nyborg, Science Direct, 8th June 2005. link
9. Sexual Selection - evolution.berkeley.edu. link
10. Helmuth Nyborg - Wikipedia. link
11. The Descent of Man - Wikipedia. link
12. Sexual Selection - Wikipedia. link
13. Alfred Russel Wallace - Wikipedia. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ