Monday, May 30, 2011

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?




அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 

அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

பதிவிற்குள் செல்லும்முன்,  நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.

பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.

பதிவிற்குள் செல்வோம். 

திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர். 

அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது. 

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1). 

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது. 

---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது, 
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்' 
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்). 

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு, 

'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன். 

என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்! 

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :) 

அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். 
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது' 
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள். 

மேலும், 
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது' 
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள். 

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன. 

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது. 

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை. 

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :) 

குறிப்பு: 

மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள். 

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன். 

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!(9)

அன்பு சகோதரி.
--------------------------

அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள். 

  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும், 
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,    
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும், 

இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக... 

இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன். 

Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். சஹிஹ் ஹதீஸ்களில் இது போன்ற தகவல்கள் காணப்படவில்லை. அதே நேரம் சில வரலாற்று நூல்களில் இதனை காணமுடிகின்றது.

அப்படியே இருந்தாலும் அந்த வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன், 


வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.   


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Monday, May 16, 2011

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்?




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சீனாவில் இஸ்லாம் - ஓர் ஆய்வு (Part 1 of 2):

--------------
Please Note:
சீன பெயர்களின் உச்சரிப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும் தவறுகள் இருக்கலாம். சுட்டி காட்டப்படும்பட்சத்தில் தவறுகள் திருத்தப்படும்.
--------------

நீர்மூழ்கி தொழில்நுட்ப வல்லுனரும், வரலாற்றாசிரியருமான பிரிட்டனை சார்ந்த கவின் மென்சிஸ் (Gavin Menzies), கடந்த 2002 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி, தன்னுடைய கோட்பாடு பற்றிய உரையை இலண்டன் இராயல் புவியியல் சங்கத்தில் முன்வைத்தார். அவருடைய உரை அங்கிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும். காரணம், அவருடைய கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அது வரலாற்றையே மாற்றியமைப்பதாய் அமையும்.

அப்படி என்ன வாதத்தை வைத்தார் அவர்?

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே (1421), சீன முஸ்லிம் கடல்வழி ஆய்வாளரான ஷெங் ஹி (Zheng He, இவரை ஷெங் ஹோ என்றால் தான் பல சீனர்களுக்கு தெரியும்) அமெரிக்காவை கண்டுபிடித்து விட்டார் என்ற தகவல் தான் அது. 

பல ஆவணங்களை முன்வைத்து தன்னுடைய வாதத்தை வைத்தார் அவர். ஆனால் அவருடைய கோட்பாடு மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் அவர் போன்ற துறைச்சார்ந்தவர்களால் நிராகரிக்கப்பட்டது. 

ஷெங் ஹி என்ற சீன முஸ்லிம் அமெரிக்காவை கண்டுபிடித்தாரோ இல்லையோ, அவர் கடல்வழி ஆராய்ச்சியில் செய்த பங்களிப்புகள் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. 

சீன வரலாறு முழுக்க ஷெங் ஹி போன்ற முஸ்லிம்கள் தங்கள் மண்ணிற்கு செய்த பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

சீன முஸ்லிம்கள் குறித்த தகவல்கள் சுவாரசியமானவை, ஆச்சர்யமூட்டுபவை. தங்களின் வசிப்பிடத்தால், அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு இருந்தாலும், கடந்த பதிமூன்று நூற்றாண்டுகளாக பல தடைகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்திருக்கின்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).       

சீன முஸ்லிம்கள் கடந்து வந்த பாதையை, அவர்களின் தற்போதைய நிலையை ஆராய முற்படுவதே இந்த பதிவுகள். இன்ஷா அல்லாஹ்.   

சீன இனங்கள்:

சீனாவை பொறுத்தவரை இனம் சார்ந்தே மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகின்றது. இதுவரை 56 இனங்கள் சீன அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹன் (Han) இன மக்களே பெரும்பான்மையினர் (91%). மீதமுள்ள 55 இனத்தவர் சிறுபான்மையினர். இந்த 55-ல் பத்து இனத்தவர்கள் முஸ்லிம்கள். இந்த பத்து முஸ்லிம் இனத்தவரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்கள் உய்குர் (Uyghur or Uighur) மற்றும் ஹுய் (Hui) இனத்தவர்கள். 

உய்குர் இன மக்கள் (வீகுர் எனவும் உச்சரிக்கப்படுகின்றது) அதிகமாக வாழும் பகுதி சின்ஜிஅங் உய்கூர் தன்னாட்சி பகுதி (Xinjiang Uyghur Autonomous Region) என்று அழைக்கப்படுகின்றது. அது போல, ஹுய் இன மக்கள் அதிகம் வாழும் பகுதி நின்க்சியா ஹுய் தன்னாட்சி பகுதி என்றழைக்கப்படுகின்றது (Ningxia Hui Autonomous region).    


உய்குர் இன மக்கள்: 

சீன முஸ்லிம்கள் குறித்து பேசும் போது பலரும் எதிர்ப்பார்க்கக்கூடிய முதல் தகவல் சின்ஜிஅங் பகுதி குறித்தே இருக்கும். இந்த பகுதி கடந்த சில வருடங்களாக ஊடங்களில் அதிகம் வலம் வருகின்றது. அங்கு நடக்கும் கலவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளன.  

இன்றைய சீனாவின் முஸ்லிம் மக்கள் தொகை, சுமார் இரண்டு கோடியில் இருந்து பத்து கோடி வரை இருக்கலாமென்று தகவல்கள் கூறுகின்றன. இது சீன மக்கள் தொகையில் 2% - 7.5%-மாக இருக்கின்றது.

சீனாவின் மக்கள் தொகையில் இருபதில் ஒரு பங்கு தான் முஸ்லிம்கள் என்றாலும், சீனாவின் நிலப்பரப்பில், ஆறில் ஒரு பங்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர். 

ஆம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய சின்ஜிஅங் பகுதி, சீனாவின் நிலப்பரப்பில் பதினாறு சதவிதத்தை கொண்டது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம். ஏனென்றால், பிரிவினைவாதிகளுக்கு இணங்கி இந்த பகுதிக்கு சீனா சுதந்திரத்தை வழங்கினால் தன் நிலப்பரப்பில் கணிசமான அளவை அது இழக்க வேண்டிவரும். 

இங்குள்ள உய்குர் இனத்தவரின் எண்ணிக்கை 45%. இந்த பகுதியில் உள்ள மற்ற முஸ்லிம் இனத்தவரையும் சேர்த்தால், சின்ஜிஅங் பகுதியில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 60% பேர் முஸ்லிம்கள். மீதம் இருப்பவர்கள் ஹன் இன சீன மக்கள்.



தமிழ் பேசுவதால் நாம் தமிழர்கள் என்று அழைக்கப்படுவது போல, உய்குர் மொழி பேசுவதால் இவர்கள் உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றார்கள். உய்குர் மொழி துருக்கிய மொழிகளில் ஒன்றாகும். அரபி எழுத்துக்களை கையெழுத்து படிவமாக (Script) கொண்ட மொழியாகும். 

உய்குர் இனத்தவரை பொறுத்தவரை, இவர்கள் மதத்தால், கலாச்சாரத்தால், மொழியால் ஹன் இனத்தவரிடமிருந்து (இவர்கள் மாண்டரின் மொழி பேசுபவர்கள்) வேறுபட்டவர்கள். உய்குர் இனத்தவரின் முன்னோர்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்கள். 

எப்படி ரஷ்யாவிற்கு ஒரு செசன்யாவோ (பார்க்க <<செசன்யா - என்ன தான் பிரச்சனை?>>) அது போல தான் சீனாவிற்கு சின்ஜிஅங். எப்படி ரஷ்யாவால் செசன்யாவை விட்டு கொடுக்க முடியாதோ அது போல சீனாவினாலும் சின்ஜிஅங்கை விட்டு கொடுக்க முடியாது. எண்ணை, இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இந்த பகுதியில் மிகுந்திருப்பது இதற்கு முக்கிய காரணம்.

1949-ஆம் ஆண்டுக்கு முன், சின்ஜிஅங்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவின் உதவிக்கொண்டு தங்களை குடியரசாக அறிவித்து கொண்டார்கள் உய்குர் இன மக்கள். அந்த குடியரசின் பெயர் கிழக்கு துர்கெஸ்தான் (East Turkestan). அந்த ஆண்டு, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் இந்த பகுதியை மீண்டும் பிடித்தது. இதனை தன்னாட்சி பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கிருந்த ஹன் இன மக்களின் எண்ணிக்கை ஆறு சதவிதம் மட்டுமே. உய்குர் இன மக்களோ 80-90% இருந்தனர். இன்றோ ஹன் இனத்தவர் 40% இருக்கின்றார்கள், உய்குர் இனத்தவரோ 45% இருக்கின்றார்கள்.  

இது எப்படி சாத்தியம்?  

இந்த பகுதியில் எழும்பும் சுதந்திர கோஷத்தை நீர்த்துப்போக செய்ய அங்கு ஹன் இன மக்களை அதிகளவில் குடியமர்த்தி வருகின்றது சீன அரசு என்பது உய்குர் மக்களின் குற்றச்சாட்டாகும்.  

ஆனால் சீன அரசு இதனை மறுக்கின்றது. இயற்கை வளங்கள் அதிகம் வாய்ந்த சின்ஜிஅங்கில், பொருளாதார நடவடிக்கைகள் பெருகும்போது, இயல்பாகவே, மற்ற இடங்களில் வசிக்கும் ஹன் இன சீன மக்கள் அந்த பகுதியை நோக்கி நகர்வது வாடிக்கையானது தான் என்பது சீன அரசின் வாதமாக இருக்கின்றது.

சீன அரசின் வாதத்தில் நியாயம் இருப்பதாக தோன்றும் அதே நேரத்தில், நாம் மற்றொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். உய்குர் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி சின்ஜிஅங். இவர்கள் அறிந்ததெல்லாம் தங்களுடைய தாய்மொழியும், அரபியும் மட்டுமே. அப்படியிருக்க, கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் மாண்டரின் (சீன பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழி) மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. 

(இதுமட்டுமல்லாமல், 2002-ஆம் ஆண்டு, சின்ஜிஅங் பல்கலைகழகத்தில் உய்குர் மொழி பயிற்றுவிக்கப்படுவதை தடை செய்தது அரசு) 

இதனால், இயல்பாகவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் உய்குர் இன மக்கள். தங்களுடைய பொருளாதார வாய்ப்புகள் ஹன் இனத்தவருக்கு போகின்றன என்பது உய்குர் இனத்தவரின் நீண்ட கால ஆதங்கமாக இருக்கின்றது. சின்ஜிஅங் பகுதியை உற்று நோக்கும் எவருக்கும் எளிதாக புரியக்கூடிய விஷயம் இது.  

பல ஆண்டுகளாக பனிப்போராக நீடித்து வந்த உய்குர்-ஹன் இனத்தவருக்குள்ளான பிரச்சனையின் வெளிப்பாடே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கோரமான இனக்கலவரங்கள் (July, 2009). இதில் சுமார் 156 பேர் இறந்தார்கள், 800-ருக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். இந்த கலவரத்திற்கு பிரிவினைவாதிகளே காரணமென சீன அரசு குற்றஞ்சாட்டியது. சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 1400 பேர் கைது செய்யப்பட, தங்களின் கணவர்கள் பிள்ளைகள் வஞ்சிக்கப்படுவதாக கூறி பெண்கள் போராட்டங்களில் குதிக்க, பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. 



பிரிவினைவாதம் குறித்து பேசும்போது சில சுவாரசிய செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. சின்ஜிஅங்கில் சுதந்திர கோஷம் கேட்பதென்பது அறுபது ஆண்டுகளாக நடந்து வருவது தான். ஆனால், 2001-க்கு பிறகு இதில் முக்கிய திருப்புமுனையாக, இந்த பிரிவினைவாதத்தை பயங்கரவாதத்தோடு (அதிகளவில்) தொடர்புப்படுத்தி பேச ஆரம்பித்தது சீன அரசு. தன்னுடைய சின்ஜிஅங் நடவடிக்கைகளுக்கு தீவிரவாதத்தை காரணம் காட்டி உலகளவில் ஆதரவை தேட ஆரம்பித்தது சீனா. 

ஆனால் சீனாவின் இத்தகைய அணுகுமுறையை கடுமையாக கண்டித்தன மனித உரிமை இயக்கங்கள். தீவிரவாதத்தின் மீதான நடவடிக்கை என்று கூறி உய்குர் இனத்தவர் மீதான தங்களது அடக்குமுறையை அதிகரிக்கப்பார்க்கின்றது சீன அரசு என அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.   

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இருக்கக்கூடிய மற்றொரு முக்கிய பிரச்சனை, உய்குர் இன மக்களின் மத நம்பிக்கைகள் மீதான சீன அரசின் அடக்குமுறை. வேலை நாட்களில் தொழுவதோ, நோன்பு நோற்பதோ கூடாது. இளைஞர்களை பள்ளிவாசல்களை விட்டு தூரத்தில் வைக்கவே விரும்புகின்றது அரசு.  

நிச்சயமாக சீன அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வினோதமானவை. ஏனென்றால், கடந்த காலங்களில் முஸ்லிம்களுடன் இணக்கமாகவே இருந்துள்ளது சீன அரசாங்கம் (இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் பதிவில் இவற்றை பார்ப்போம்). பலவிதத்திலும் முஸ்லிம்களுக்கு உதவியாக இருந்துள்ளது சீன அரசு. அப்படியிருந்தவர்கள் இன்று இப்படி செயல்பட என்ன காரணம்? மத நம்பிக்கைகளை விட்டு இவர்களை விலக்குவதால் பிரிவினைவாதம் குறையலாம் என்பது சீன அரசாங்கத்தின் கணக்காக இருக்கலாம்.    



தற்போதைய நிலையில், பிரிவினைவாத கோரிக்கைகள் குறைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், "தனி நாடு" கோரிக்கை உய்குர் இனத்தவரிடையே ஒருமித்த ஆதரவை பெற்றதும் இல்லை. 

இப்போது இவர்களுக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், சீன அரசின் நடவடிக்கைகளால் தங்களின் இனம் அழிக்கப்பட்டுவிடுமோ  என்பது தான். 

பின்வரும் நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொள்ளும்பட்சத்தில் இந்த பகுதியில் நிரந்தர அமைதி திரும்பலாம், 

  • உய்குர் மொழியில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது,
  • அதன் மூலமாக இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்துவது, 
  • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் உய்குர் இனத்தவர் மீது நடத்தும் அடக்குமுறையை கைவிடுவது, 
  • மத நம்பிக்கைகள் மீதான தன்னுடைய அதிகாரத்தை கைவிடுவது, 
  • உய்குர் இனத்தவரின் தனித்தன்மையை பாதுகாப்பது.  

ஆக, இவை தான் சின்ஜிஅங் பிரச்சனையின் முக்கிய சாரம்சங்கள். அப்பகுதியில் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவத்தின் மூலம் நிரந்தர அமைதி திரும்பலாம். 

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்:

உய்குர்களுக்கும், ஹன் இனத்தவருக்குமிடையே பல வேறுபாடுகள் என்றால், ஹுய் இனத்தவருக்கும் ஹன் இனத்தவருக்குமிடையே (பெரிய அளவில்) ஒரு வேறுபாடும் கிடையாது. 

ஆம்...மொழியாலும், உடலமைப்பாலும் ஹன் இன சீனர்களை அப்படியே ஒத்திருப்பார்கள் இவர்கள். இவர்களுக்குள்ளான (வெளிப்படையாக தெரியும்) வித்தியாசங்கள் என்றால், அது, ஹுய் இனத்தவர்,

  • பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள், 
  • மதுவை விலக்குவார்கள், 
  • பெண்கள் ஹிஜாப் அணிவார்கள் 

என்பன போன்றவை தான். 

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், இந்த இரண்டு இனத்தவரையும் பிரிப்பது இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறி மட்டுமே. 

யார் இந்த ஹுய் இனத்தவர்?

இந்த கேள்விக்கு விடை காண நாம் நாயகம் (ஸல்) அவர்களது காலத்திற்கு அருகில் செல்ல வேண்டும். இது குறித்த தகவல்கள், மற்றும் சீன முஸ்லிம்கள் குறித்த பொதுவான சில சுவாரசிய தகவல்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பதிவில்...

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.    

References:
1. Uyghur Muslim Ethnic Separatism in Xinjiang, china - Elizabeth Van Wie Davis, Asia-Paciifc Center for Security Studies, January, 2008. (Document available upon request) 
2. China’s Xinjiang problem - The Hindu, Aug 12, 2008. link
3. Q+A - Who are the Uighurs and why did they riot? - Reuters, 7th July, 2009. link
4. Strangers in their own Land - By Ron Gluckman /Kashgar, Turpin, Urumchi and around Xinjiang, China. link
5. Who are the Uyghur? - Islamicity, 4th March 2011. link
6. 1421: The Year China Discovered America -gavinmenzies.net, link
7. 1421: The Year a Chinese Muslim Discovered America - Islamicity, link
8. The Silk Road - Ancient China for kids. link
9. Zheng He - Wikipedia. link
10. Gavin Menzies - Wikipedia. link
11. Islam in China: The Uyghur - Muslim Voices. link
12. Fresh protests erupt in China's Xinjiang region - Japan Today. 12th July 2009. link
13. China's Xinjiang Problem Has Nothing Much to Do With Islam - New York Times. November 30, 2001. link 
14. Xinjiang Uyghur Autonomous Region - Wikipedia. link
15. Uighur - Asian History. link 
16. Uyghur people - wikipedia. link
17. The Xinjiang Conflict: Uyghur Identity, Language, Policy, and Political Discourse - Arienne M. Dwyer, East West center. link
18. Uighur language - Encyclopedia Britannica. link


உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ 






Monday, May 9, 2011

இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
 
இஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள், 

  • அம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன, 
  • இவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம், 
  • இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன 

என்பன போன்றவையாகும்.

ஆம். இந்த கருத்துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள். 

ஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது. 

நாம் மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாது வேறு மாதிரியான நன்மைகளை இந்த பதிவுகள் தருகின்றனவா?...ஆம் என்றால் எம்மாதிரியான நன்மைகள் அவை?

நாம் மேலே பார்த்தவைகள் மட்டுமல்லாது வேறு பல நன்மைகளையும் அம்மாதிரியான பதிவுகள் நமக்கு தருகின்றன என்பதை ப்ராட்டிகலாக விளக்க முயற்சிக்கும் பதிவே இது...

இந்த பதிவிற்கு நான் உதாரணமாக எடுத்து கொள்ளப்போவது, உலகின் "உண்மையான" கம்யுனிஸ்ட்களான வினவு குழுவினரை தான் (பித்தலாட்டங்களில் ஈடுபடுபதற்கு பெயர் தான் உண்மையான கம்யுனிசமோ?...பார்க்க <<வினவின் பித்தலாட்டம் அம்பலம்>> மற்றும் <<திருந்த மாட்டீர்களா வினவு>>)

பல மாதங்களுக்கு முன் அஹ்மதியாக்கள் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது வினவு. வழக்கம் போல தங்களது இஸ்லாத்திற்கெதிரான வாதங்களை போகிற போக்கில் தெளித்து விட்டு போனார்கள் வினவு குழுவினர். அக்கட்டுரையின் மையக்கருத்து நியாயமானதாய் இருக்க, அதற்கு ஆதரவாக என்னுடைய கருத்தை தெரிவித்து விட்டு, இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தேன். 

பின்னூட்டங்கள் வளர ஆரம்பித்தன. மேலும் பலரும் தங்களது இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். மிக நீண்ட உரையாடல் அது. பலருக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க இஸ்லாம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அறிந்தவற்றை கருத்துக்களாக முன்வைத்தேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அது தான் நான் பதிவுலகில் கலந்து கொண்ட முதல் உரையாடல்.

இங்கே சற்று நிறுத்தி ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு பதில் தேட தொடங்கியபோது நான் வியப்படைந்த ஒரு விஷயம், அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை கண்டு தான். அதிலும் இளைஞர்கள் அதிகளவில் இருந்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.
 

எவ்வளவு அழகாக பணியாற்றுகின்றார்கள்!!! சுப்ஹானல்லாஹ்(1). இஸ்லாம் மீது அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையும், ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும், எதை கண்டும் அஞ்சாத அவர்களது உள்ளமும் என்னை திணறடித்தன. பல்வேறு கொள்கை கொண்டவர்களுடன் அவர்கள் புரிந்த/புரிந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் என் தேடல்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தன. 

பதிவை தொடர்வோம்.  

அந்த பதிவில் கருத்து தெரிவித்த பி.ஏ.ஷேக் தாவுத் (அத்திக்கடையன் வலைத்தளத்தை நடத்தியவர். அந்த தளம் தற்போது செயல்படவில்லை. ஆனால் மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலமாக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்), என்னுடைய கருத்துக்களை படித்து விட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக மெயில் அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஈமானை(2) பற்றி பிடித்து கொண்டிருப்பவர்களின் நட்பை நாம் என்றும் விரும்புவோம். முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் மற்றொரு சகோதரர் என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.       

வினவின் அதே பதிவில் எனக்கு அறிமுகமான மற்றொரு நபர் சகோதரர் "நெத்தியடி" முஹம்மத் அவர்கள். ஆம், பின்னூட்டவாதி தளத்தை நடத்தி கொண்டிருக்கும் முஹம்மது ஆஷிக் பற்றி தான் பேசுகின்றேன். அவருக்கும் அது தான் முதல் விவாதம் என்று நினைக்கின்றேன். அவருடைய ஊக்கமும் எனக்கு பலத்தை கொடுக்க மேலும் மேலும் பதில்களை பதித்தோம். 

மேலும் ஒரு நம்பிக்கையாளர் அணியில் சேர்ந்த உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தோம். 

இப்படி எங்கள் மூவரையும் உருவாக்கி எங்கள் அழைப்பு பணிக்கு அடித்தளம் போட்டது வினவின் அந்த பதிவு தான்.

பின்னர் சகோதரர்களின் ஆலோசனைப்படி எதிர்க்குரல் தளம் தொடங்கப்பட்டது. நானும், ஷேக் தாவுத்தும் எங்களது வலைத்தளங்களின் மூலம் செயல்பட, பின்னூட்டங்கள் வாயிலாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்தார் முஹம்மது ஆஷிக்.  

வினவு தளத்தில் மேலூர் ஷாஜஹான் அவர்கள் நடத்திய விவாதங்களையும் மறக்க முடியாது.

பிறகு, எங்களுடைய நட்பு வட்டாரம் போதாதென்று நினைத்த வினவு குழுவினர் மேலும் ஒரு சகோதரரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், வலையுகம் தளத்தை நடத்தி வரும் சகோதரர் ஹைதர் அலி. வினவின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளில் பின்னூட்டமிட்டு கொண்டிருந்தார் ஹைதர் அலி. அதன் மூலமாக அவர் எங்களுக்கு அறிமுகமாக, நாளடைவில் எங்களது நட்பு வட்டாரத்தில் சேர்ந்தார். வினவின் பின்னூட்ட பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் சகோதரர் ஹைதர் அலிக்கும் பங்குண்டு.  

இப்படி எங்கள் நால்வருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாங்கள் அனைவரும் வினவின் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான்.

பின்னர், முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது வலைத்தளங்களை தொடங்கினார்கள். இன்று முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது தளங்கள் மூலமாக சிறப்பானதொரு அழைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டு, அவர்களுக்கு ஊக்கமாய் இருந்தது வினவும் அதன் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளும் தான். 

வெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்த எங்கள் நால்வரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி நாங்கள் ஒன்றிணைந்து  செயல்பட துணையாய் நின்றது வினவின் பதிவுகளே. 

இன்று மேலும் பல பதிவுலக சகோதர சகோதரிகளை எங்கள் குழுவில் இணைத்து கொண்டு அழகான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்(3)

ஈமானை இறுக பற்றி பிடித்திருப்பவர்கள் மத்தியில் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவதற்கு எது ஆரம்பமாக (source) இருந்தது என்று உற்று நோக்கினோமேயானால் அது இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளில் தான் போய் நிற்கும்.    

இறைவன் மீது ஆணையாக, வினவில் அந்த பதிவு வந்திருக்காவிட்டால், அதில் நான் கலந்துரையாடாமல் இருந்திருந்தால் இன்று நானோ அல்லது எதிர்க்குரலோ அழைப்பு பணியில் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. 

ஆக, 

  • முதல் பத்தியில் நாம் பார்த்த நன்மைகள் மட்டுமல்லாது ஈமானில் சிறந்து விளங்குபவர்களை நமக்கு அடையாளம் காட்டுபவையும் இத்தகைய பதிவுகள் தான். 
  • அடையாளம் காட்டி, அவர்களுடன் நம்மை இணையச் செய்து இறையச்சம் உள்ள நல்லடியார்களாக நம்மை தொடரச்செய்வதும் இவை தான். 
  • இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்.       

இஸ்லாமிற்குள் முழுமையாக நுழைந்து விட சொல்கின்றது குர்ஆன். அறியாமையால் சில முஸ்லிம்கள் இது தெரியாமல் இருந்து விடுகின்றனர். அவர்கள் அறியாத இந்த செய்தியை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை முழுமையாக இஸ்லாமிற்குள் நுழைய செய்வதும் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகள் தான்.

இப்படி எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாய் இருந்து, சத்தியமார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவியாய் இருக்கும் அத்தகையோருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இப்போதைக்கு நம்மால் முடிந்தது "நன்றி" என்ற அழகான சொல் மட்டுமே....

அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதியணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் --- குர்ஆன் 61:08  

முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். நீங்கள் இரு தரப்பு வாதங்களையும் கண்டு குழம்பி போயிருக்கலாம். அது இயல்பானது தான், நாங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தது தான்.

இப்போது எது உண்மை என்று எப்படி கண்டுபிடிக்க போகின்றீர்கள்? எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இருப்பது ஒரே வழிதான். நீங்களாக குர்ஆனை முழுமையாக படிக்க முன்வருவது தான் அது. அப்படி தாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmailcom) அனுப்புவது தான். இன்ஷா அல்லாஹ் குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புகின்றேன் (மூன்று வெவ்வேறு சகோதரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறு தமிழாக்கங்கள்)

அல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இறைவா, இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்க செய்து, அவற்றிற்கு பதில் சொல்லுமளவு எங்களது கல்வி ஞானத்தை உயர்த்துவாயாக...ஆமீன்.

இறைவா, வினவு போன்றவர்களின் சூழ்ச்சிகளை கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியது போல், இனியும் உணர்த்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை கொடுக்குமளவு எங்களது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்.  

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. ஈமான் - நம்பிக்கை.
3. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ