Saturday, October 15, 2011

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

----------------
இலங்கையில் நடந்த போர்க்கொடுமைகளை வெளிக்கொண்டு வந்த பிரபல ஊடகமான சேனல் 4, தன்னுடைய ஆவணப்படம் ஒன்றிற்கு வைத்த தலைப்பு தான் நீங்கள் மேலே காணுவது.
---------------

                     1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம். 

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்????? 

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும்,  பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.  

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள். 

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார். 

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது. 

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ. 

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.  

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ. 

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

--------------------------

ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.  

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர். 

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார். 

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர். 

---------------------------

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர். 

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா. 

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி. 

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர். 

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:

வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன. 

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. 

கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார். 

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.      

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார். 

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர். 

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார். 

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க். 

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார். 

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன. 

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர்.  ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ.



பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்...
   
My Sincere thanks to:
1. Channel 4.
2. Mail Online.
3. Phillips V. Bradford

References: 
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga’s Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link 
8. The Pygmy in the Zoo - concentric.net. link
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science’s Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: “We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it.” - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






51 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    //"நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.//

    கண்ணீரே வந்தது......

    ReplyDelete
  2. மனிதனுக்குள் மிருகம்`னு சொல்வாங்க... ஆனால் இங்கு ஒரு இனத்துக்குள்ளேயே மிருகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


    மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.///////

    மனதை மிகவும் பாதித்து விட்டது.
    ----------
    .இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?//////////

    குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்த இவர்கள் மிருகத்துடன் கூட ஒப்பிட முடியா இழிபிறவிகள் இன்று இவர்கள்தான் மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்.
    -----------------------

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்

    பரிணாம வரலாற்றின் இன்னொரு முகத்தை காட்டியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    பரிணாமம் குறித்த மற்றுமொரு வித்தியாச பக்கத்தை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்., மாஷா அல்லாஹ் இதுவரை அறியாத செய்தி - அறிகின்ற போது கோபமும்- ஆதங்கமும் தான் ஏற்படுகிறது., பரிணாமத்தில் மனிதனை உயிர்பிக்க மனிதத்தை கூட கொல்ல முனைவார்கள் என்பது தான் வேதனையான நெருடல்.

    //ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.// //
    //வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் //
    -எவ்வளவு கீழ்தரமான சிந்தனை...!

    .ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது.

    மொத்தத்தில் தம் கூற்றை மெய்ப்படுத்த வேண்டும் என்பதற்காக >>> மெய்படுத்தியதாக பிறர் நினக்க வேண்டும் என்பதற்காக ஒரு சமுகத்தை கூட கேவலப்படுத்துவார்கள் பரிணாமத்தின் என்பது தெளிவு!

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆசிக்!

    உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் பின்னாலும் மிகுந்த சிரத்தை எடுப்பதை பதிவின் தரத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. பரிணாமவியலாரின் மற்றொரு முகத்தை திறந்து காட்டியமைக்கு நன்றி சகோ. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  7. சகோதரி ஆமினா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    முதன் முதலாக இதனை பற்றி படிக்கும் போது மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. டாவீனிய சிந்தனைகள் இருக்கும்வரை இனவெறி இருந்துக்கொண்டு தான் இருக்கும். இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இது ஒழிக்கப்படும்..

    ReplyDelete
  8. சகோதரர் Mohamed Faaique,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    ///ஆனால் இங்கு ஒரு இனத்துக்குள்ளேயே மிருகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...//

    பரிணாம கோட்பாடு போர்வையில் இவங்க செய்த அட்டுழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல சகோதரர். பேசினாலே கோபம் தான் வருது...

    ReplyDelete
  9. இது என்ன கொடூரம். சொல்லவே வார்த்தை வரலியே.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான பதிவு மனிதகுல வக்கிரங்களை வெளிக்கொணர்ந்த உங்கள் பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சகோதரர் முஸ்லிம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்த இவர்கள் மிருகத்துடன் கூட ஒப்பிட முடியா இழிபிறவிகள் இன்று இவர்கள்தான் மனித உரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்.///

    இது தான் சகோதரர் எனக்கும் புரியவில்லை. ஹிட்லர் பற்றிய என்னுடைய பதிவின் போதே இதை கேட்டிருந்தேன். பரிணாமத்தை நம்புபவர்கள அது சொல்லக்கூடிய இன ஏற்ற தாழ்வுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒரு நாத்திகரும் இது குறித்து அறிவியல் ரீதியாக பதில் சொல்லி நான் பார்த்ததில்லை..

    ReplyDelete
  12. சகோதரர் பாஸித்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே.

    எத்தனை நாள் தான் பரிணாமத்தின் கோர முகம் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும். முகமூடிகள் கிழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. விரையில் முழுவதுமாக கிழிந்து தொங்கும்..இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  13. ஸலாம் சகோ.ஆஷிக்,

    ச்சே... இப்படியெல்லாம் கூட இழிந்த சிந்தனை கொண்டதா முன்னாள் அறிவியல்..?

    இப்படியும் மனிதத்தன்மையற்றுப்போய் மிருகங்கள் போல வாழ்ந்ருந்திருக்கிறார்களா ஆராய்ச்சியாளர்கள்..?

    //இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?//

    அடப்பாவிகளா..!!!
    இது இனவெறியா...
    பரிணாம வெறியா...
    படிச்சவங்களாடா நீங்க..?

    இதுவரை பரிணாமவியலாளர்கள் முட்டாள்கள் என்று மட்டும்தான் நினைத்துக்கொண்டு இருந்தேன்..!

    இல்லை... இவர்கள் "பயங்கரவாத காட்டுமிராண்டிகள்"..!

    Anti social elements - to be terminated as soon as possible..!

    இத்தளத்தில் நீங்கள் எழுதிய பரிணாம எதிர்ப்பு கட்டுரைகளிலேயே என் மனதை மிகவும் பாதித்த ஒன்று உண்டென்றால்... அது இதுதான் சகோ.ஆஷிக் அஹமத்..!

    ReplyDelete
  14. மனிதரிடம் சாதி, இன, நிற வேறுபாட்டை உடைக்கும் இறைவசனம் மற்றும் நபிமொழி :-

    "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்"

    (கூறுவது இறைவன், நூல்:குர்ஆன்-40:13)

    ஓ..மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (ஹதீஸ்: அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    ReplyDelete
  15. Inshaa Allah!! This is the most fictitious article I have ever read. :-)) Thank god the author didn't say Benga was a Brahmin because he has a thread across his chest. Benga did want to come to USA on his own choice for the second time, right?? I think he just wanted to use a free visa entry to USA. If he chooses USA over his home country, then he should die as a missing link, doesnt he?? Quoting 10 references gave this author an article, Darwin's theory has stood the test of time, even centuries.

    ReplyDelete
  16. என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது..

    பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  17. ஜசாக்கல்லாஹு கைரன் சகோ,
    தங்களின் உழைப்பும் ஈடுபாடும் ஆச்சர்யம் அளிக்கிறது.

    ROOTS என்றொரு டாக்குமென்டரி பார்த்திருக்கிறீர்களா.
    ஆப்ரிக்கர்களைக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக்கும் கொடுமை பற்றிய படம் அது.

    ReplyDelete
  18. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பகுத்தறிவு இல்லை என்பதால் மிருகங்கள் கேவலமானவை அல்ல, மகா கேவலமான பரிணாமவாதிகளோடு ஒப்பிடும்போது! இவர்களின் நிறவெறிக்கு 'பரிணாம ஆராய்ச்சி'யின் பெயர் வைத்து இந்தக் கொடுமையை நிறைவேற்றியிருக்கிறார்கள் பாவிகள். பார்க்க வந்த மக்களுக்குமா எதிர்த்துக் கேட்க அறிவில்லாமல் போச்சு? ஹ்ம்...!

    தங்களின் முயற்சிக்கும், உழைப்புக்கும் வல்ல நாயன் நற்கூலி வழ‌ங்குவானாக!

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்
    ( வரஹ்)
    மிகவும் நெகிழ்ச்சியான செய்தி யை பகிர்ந்துள்ளீர்கள்.

    பரிணாம கதைகளினால் ஏற்பட்ட விபரீத நிகழ்வுகளை அறியத்தந்தமைக்கு ஜஸாக்கல்லாஹு கைர் சகோ,

    பிறப்பால் உயர்வு தாழ்வு ,தீண்டாமை கொடுமைகளை எதிர்க்கும் இங்குள்ள நாத்திகர்கள் அதே கொள்கைகளை ஒத்த இனவெறி யை ஊக்கப்படுத்தும் டாவீனிய சிந்தனைகளை வைத்து விதண்டாவாதம் செய்வது ஏன்?

    ReplyDelete
  20. nice article. it is just the tool of intelligence differs btw region and culture and time. otherwise, man was/is intelligent in his own way. in that matter every living creature is...

    ReplyDelete
  21. மேற்கத்திய இனவெறி பரிணாமவியல் சூழ்ச்சிகளை போட்டு உடைத்துள்ளீர்கள். அனேகமாக தமிழில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லையென்றே நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள் சகோதரரே.

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

    //வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். //

    இந்த கட்டுரையை படித்து சிந்தனை தெளிவை பெற்றவர்களாவது, இனிமேல் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பெண் பார்க்க செல்லும் போது, பெண் கருப்பாக இருக்கின்றாள் என்று பெண்களை நிறத்தின் அடிப்படையில் ஓரம் கட்டி அவர்களை மனவேதனை அடையச் செய்யாமல் இருக்க வேண்டும்.

    அவ்வாறு நாம் செய்தால் இன்னும் இந்த உலகில் கருப்பு நிறத்தில் உள்ளவர்களை வெள்ளையர்கள் எப்படி இழிபிறவிகளாக நினைத்து பரிணாமக் கொள்கையை திணித்து, கொடுமைப்படுத்தினார்களோ அதையே தான் நாமும் நிற வெறியின் அடிப்படையில் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க இயலாமல் போய்விடும்.

    இப்படிக்கு,
    சிராஜ் ஏர்வாடி

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    சக மனிதனை தன்னில் ஒன்றாக நினைக்கும் ஒரு மனிதனால் இந்த செய்தியை அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியாது.

    இது வரை அறியாத செய்திகளில் ஒன்று.

    மனிதத்தன்மை இல்லாத படித்த மனிதர்கள் தன் பக்கத்து இல்லாத ஒரு விசயத்திற்காக எந்த அளவிற்கும் கீழ் இறங்குவார்கள் என்பதற்கு இந்த தகவலே சாட்சி.

    படிக்கும் போதே இப்போது தான் இந் நிகழ்ச்சி நடந்தது போல் மனம் கனக்கிறது.அதோடு என்ன ஒரு கொடுமை,மிருகத்தனமான ஒரு காரியம் என கோபம் எழுவதையும் தடுக்க முடிய வில்லை.

    \\இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்//

    தானாக போக வேண்டிய உயிரை தன் செயல்களின் மூலமாக அடுத்தவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தி தன் கைகளாலே போக்கி கொள்ள வைப்பது ஒரு வகையில் கொலை(மறைமுகமாக)செய்வதை போன்றதே.

    மறக்க முடியாத பதிவு.
    பகிர்வுக்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  24. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    எல்லாப் புகழும் இறைவனுக்கே..

    ///மொத்தத்தில் தம் கூற்றை மெய்ப்படுத்த வேண்டும் என்பதற்காக >>> மெய்படுத்தியதாக பிறர் நினக்க வேண்டும் என்பதற்காக ஒரு சமுகத்தை கூட கேவலப்படுத்துவார்கள் பரிணாமத்தின் என்பது தெளிவு!////

    இனவெறியின் வரலாற்றை பாருங்கள். அதில் பரிணாம கோட்பாட்டிற்கு நிச்சயம் மிகப்பெரிய இடமுண்டு. scientific racism என்ற ஒன்றுக்கு தீனி போட்டு வளர்த்ததில் பரிணாமத்திற்கு முக்கிய இடமுண்டு.

    ReplyDelete
  25. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...

    //தொடரட்டும் உங்கள் பணி.///

    நன்றி சகோதரர். இன்ஷா அல்லாஹ் இறைவன் தொடரக்கூடிய வாய்ப்பை கொடுத்தால் தொடர்வோம்...

    கருத்துக்கு நன்றி...

    ReplyDelete
  26. லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

    //இது என்ன கொடூரம். சொல்லவே வார்த்தை வரலியே.///

    பரிணாம வரலாற்றை பாருங்கள். அறிவியல் என்ற பெயரில் இவர்கள் செய்த அட்டுழியம் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிட்லர் தன் வெறிக்கு பரிணாமத்தை காட்டி தான் நியாயம் கற்பித்தார். விளைவு அறுபது லட்ச மக்களின் சாவு. இனவெறி, பெண்களை தாழ்ந்தவர்களாக எண்ணியது என்று இப்படி பரிணாம அட்டுழியங்கள் பல பல.

    ReplyDelete
  27. சகோதரி ரம்யா அவர்களுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  28. சகோதரர் அம்பலத்தார்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..

    ReplyDelete
  29. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    ///இப்படியும் மனிதத்தன்மையற்றுப்போய் மிருகங்கள் போல வாழ்ந்ருந்திருக்கிறார்களா ஆராய்ச்சியாளர்கள்..?////

    அவர்களை மிருகங்கலாக்கியதற்கு ஆதாரமற்ற ஒரு கோட்பாட்டிற்கு மிகுந்த பங்குண்டு.

    வருகைக்கும் கருத்துக்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கும் ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  30. Brother Anony,

    May peace and blessings of Almighty be upon you...

    ///Benga did want to come to USA on his own choice for the second time, right?? I think he just wanted to use a free visa entry to USA. If he chooses USA over his home country, then he should die as a missing link, doesnt he??///

    Thanks for showing the mentality of the darwinist yet again.

    ///Darwin's theory has stood the test of time, even centuries.///

    :) :)

    May the Almighty show you the right path..

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

    /// பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா? /// இதில் சந்தேகமில்லை உள்ளதால் ஊனமானவர்கள் இந்த பரிணாமவியலாளர்கள் ... என்ன கொடுமை /// "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா./// வார்த்தைகளில்லை பேச ... தான் ஒரு மனிதன் என்று சக மனிதனுக்கு சொல்ல வேண்டியிருக்கு... இதற்கு பதில் ஆரம்பதிலையே அந்த சகோதரனை நீ மனிதனில்லை என்று கூறி கொன்றுபோட்டிருக்கலாம் .. எப்படி அவர் மணம் வேதனையால் துடித்திருக்கும்.. ... பரிணாம கோட்பாட்டிற்கு தூக்குகயிறு தயாராக இருக்கட்டும்..

    ReplyDelete
  32. சகோதரர் மாய உலகம்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

    வருகைக்கு நன்றி சகோதரர்..

    ReplyDelete
  33. சகோதரர் அரபுத்தமிழன்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    புகழ் அனைத்தும் இறைவனிற்கே...

    ///ROOTS என்றொரு டாக்குமென்டரி பார்த்திருக்கிறீர்களா.
    ஆப்ரிக்கர்களைக் கடத்திச் சென்று கொத்தடிமைகளாக்கும் கொடுமை பற்றிய படம் அது.///

    பார்த்ததில்லை சகோதரர். இன்ஷா அல்லாஹ் பார்க்க முயற்சிக்கின்றேன்.

    கருத்துரைக்கு நன்றி...

    ReplyDelete
  34. சகோதரரி அஸ்மா அவர்களுக்கு,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    ///பகுத்தறிவு இல்லை என்பதால் மிருகங்கள் கேவலமானவை அல்ல, மகா கேவலமான பரிணாமவாதிகளோடு ஒப்பிடும்போது! ///

    நச். சரியாக சொன்னீர்கள்.

    ///பார்க்க வந்த மக்களுக்குமா எதிர்த்துக் கேட்க அறிவில்லாமல் போச்சு? ஹ்ம்...!////

    அறிவியலே இவர்களை தாழ்ந்தவர்கள் என்று தானே சொல்கின்றது. அதனை மக்கள் ஒப்புக்கொண்டு தானே ஆகா வேண்டும்.

    கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  35. சகோதரர் ரப்பானி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    ///பிறப்பால் உயர்வு தாழ்வு ,தீண்டாமை கொடுமைகளை எதிர்க்கும் இங்குள்ள நாத்திகர்கள் அதே கொள்கைகளை ஒத்த இனவெறி யை ஊக்கப்படுத்தும் டாவீனிய சிந்தனைகளை வைத்து விதண்டாவாதம் செய்வது ஏன்?////

    நீங்க தான் நாத்திகர்களுடன் அடிக்கடி வாதம் செய்கின்றீர்கள் அல்லவா...கேளுங்கள் சகோதரர் அவர்களிடம். நாக்கை புடுங்குற மாதிரி கேளுங்கள். மனிதர்கள் எல்லாம் சமம் என்று சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது??

    கருத்துக்கும் துவாவிற்கும் நன்றி...

    ReplyDelete
  36. Sister dr.tj vadivukkarasi,

    May peace and blessings of the almighty be upon you..

    // it is just the tool of intelligence differs btw region and culture and time. otherwise, man was/is intelligent in his own way. in that matter every living creature is...//

    Exactly. If those darwinists understand this basic fact they would have easily abandoned this proof less theory...

    ReplyDelete
  37. சகோதரர் நல்லடியார்,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    /மேற்கத்திய இனவெறி பரிணாமவியல் சூழ்ச்சிகளை போட்டு உடைத்துள்ளீர்கள். அனேகமாக தமிழில் இத்தகைய முயற்சிகள் இதுவரை இல்லையென்றே நினைக்கிறேன்./

    வாங்க நல்லடியார். இவங்க சூழ்ச்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த அறிவியலற்ற கோட்பாடு ஒழிய துவா செய்யுங்கள். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...ஆமீன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  38. சகோதரர் ஏறுவாடி,

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    //இந்த கட்டுரையை படித்து சிந்தனை தெளிவை பெற்றவர்களாவது, இனிமேல் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பெண் பார்க்க செல்லும் போது, பெண் கருப்பாக இருக்கின்றாள் என்று பெண்களை நிறத்தின் அடிப்படையில் ஓரம் கட்டி அவர்களை மனவேதனை அடையச் செய்யாமல் இருக்க வேண்டும். ////

    நச் நச் நச்....

    //அவ்வாறு நாம் செய்தால் இன்னும் இந்த உலகில் கருப்பு நிறத்தில் உள்ளவர்களை வெள்ளையர்கள் எப்படி இழிபிறவிகளாக நினைத்து பரிணாமக் கொள்கையை திணித்து, கொடுமைப்படுத்தினார்களோ அதையே தான் நாமும் நிற வெறியின் அடிப்படையில் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை யாரும் மறுக்க இயலாமல் போய்விடும். ///

    இப்படி செய்பவர்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளட்டும்...

    அருமையான கருத்துரைக்கும் ஜசாக்கல்லாஹ்...

    ReplyDelete
  39. சகோதரி சபிதா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    இந்த பதிவிற்காக தகவல்கள் கலெக்ட் செய்த போது நான் அடைந்த வேதனைக்கு அளவில்லை. ராஜா ராம் மோகன் ராய் செய்த அளப்பரிய காரியங்கள் போன்றவற்றை பள்ளிகளில் படித்து தெளிவுறும் நம் பிள்ளைகள் இது போன்ற செய்திகளை படித்து வரலாற்றில் நடந்த கொடுமைகளை தெரிந்துக்கொள்ள செய்யாதது ஏனோ?

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  40. சகோதரர் மாணவ நண்பன்,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    ///There is no words to say!///

    :(..

    நீங்க அறிந்தவர்களிடம், மறக்கடிக்கப்பட்ட இத்தகைய வரலாற்றை காட்டி விழிப்புணர்வு அடைய செய்யுங்கள் சகோதரர்.

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  41. சகோதரர் nagore flash அப்துல்லா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    //பரிணாம கோட்பாட்டிற்கு தூக்குகயிறு தயாராக இருக்கட்டும்..///

    இன்ஷா அல்லாஹ். அசத்தியம் அழிந்தே தீரும். அது வரலாறு நமக்கு சொல்லும் பாடம்..

    கருத்துரைக்கு நன்றி சகோதரர்...

    ReplyDelete
  42. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
    இப்பொழுது தான் படித்தேன் ...
    என்ன சொல்வது என்று தெரிய வில்லை .. அந்த அளவிற்கு நான் முதிர்ச்சி பெறவில்லை பரிணாமம் விஷயத்தில் .... இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் கற்று கொள்வேன் ...

    ஜஜாகல்லாஹ்

    ReplyDelete
  43. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ.ஆஷிக்,

    ரொம்ப நாட்களாக விடுபட்டு போயிருந்த பதிவு இது. இப்பொழுதுதான் முழுவதுமாக படிக்க முடிந்தது. படித்ததும், கிலாஃபத் இருந்திருந்தால் உமர் (ரலி_ அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இவரையும் என்ன விலை கொடுத்தும் மீட்டு வந்து நெஞ்சோடு அணைத்திருந்திருப்பாரே..... இஸ்லாமிய ஆட்சி அன்று இல்லாமல் போனதே என்ற எண்ணம் மட்டுமே நிலவியது. கல்லையும் கரைக்கும் நிஜம். என்ன சொல்ல..... இதற்கெல்லாம் கூலி கட்டாய்ம் உண்டு என்பது மட்டுமே நிவாரணம் அளிக்கிறது.

    பகிர்வுக்கு நன்றி சகோ. ஆங்கிலத்தில் இத்தனை தூரம் தேடிப் படிக்க இயலா சகோதர சகோதரிகளிடம் இந்த உண்மையை எடுத்துச்செல்லும் உங்களின் அமலுக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் நற்கூலி வழங்குவானாக. இந்த கேவல கருத்தை தூசியை விட துரிதமாய இந்த பூமியை விட்டு அப்புறப்படுத்துவானாக. ஆமீன்.

    ReplyDelete
  44. அஸ் ஸலாமு அலைக்கும் சகோ,

    இதை இப்படியே பத்திரிக்கை மூலமாகவும் கொண்டுவந்தால் இன்னமும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளதே....சிந்தியுங்கள் இன்ஷா அல்லாஹ்...

    ReplyDelete
  45. இதைப் படிக்கும் போது உள்ளம் கொதிக்கிறது!

    சக மனிதனுக்கு இவ்வளவு அவமானங்களா?

    ReplyDelete
  46. Yasmin RiazdheenTuesday, May 15, 2012

    Assalamu Alaikum Bro. Aashiq..

    Very informative article.. Keep it up brother...

    Nenjai urukkum manithaabimaanamarra seyal...

    Ivargalai Valla iraivanidam oppadaippoam...

    Jazak Allah Khairan Brother intha arumaiyaana pagirvukku...

    ReplyDelete
  47. மிகவும் பயனுள்ள தகவல் ..மனிதன் குரங்கிலிருந்து பரிமாணம் அடைந்தான் என்பதற்கு பரிமானவியலாலர்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ...96 வீதமான DNA எமக்கும் குரங்குக்கும் ஒற்றுமையாக இருப்பதுதான் ஆனால் பரிமாணவியலை வெள்ளையர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என காட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதற்காக இவ்வாறு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ...ஒரு சமூகம் விஞ்ஞானத்தை தமது சமூகத்துக்கு சார்பாக வளைக்க முயன்றதற்காக பரிமாணக் கோட்பாடு பிழை என்ற முடிவிற்கு வர முடியாது ..எதிர்காலத்தில் பரிமாணக் கோட்பாடு பிழையாக்கப்பட்டல் அதற்கு பதிலான கோட்பாடையும் விஞ்ஞானம் கண்டு பிடிக்கும் ...இதற்காக எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் என்ற பல்லவியை நான் ஏற்றுக்கொள்வதில்லை ..பரிமானவியலை தவறாக்குவதற்கு தடையாக இருக்கும் மிகப்பெரிய விடயம் DNA குரங்கைத்தவிர வேறு எந்த விலங்கிற்கும் எமது DNA ஒத்துவரவில்லை பின்பு எதை வைத்து நிரூபிக்க போகிறார்கள் என்று பார்ப்போம்

    ReplyDelete
  48. சகோதரர் கிருத்திகன் யோகராஜா,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    1. //மனிதன் குரங்கிலிருந்து பரிமாணம் அடைந்தான் என்பதற்கு பரிமானவியலாலர்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ...96 வீதமான DNA எமக்கும் குரங்குக்கும் ஒற்றுமையாக இருப்பதுதான்//

    fine. மரபணு தகவல்கள் ஒன்றாக இருப்பது பரிணாமத்திற்கு ஆதாரமாக ஆக முடியாது. அப்படிப்பார்த்தால் வாட்சின் என்ற பறவையின் மரபணுக்கள் அதன் பக்கத்தில் உள்ள எந்த பறவையிடணும் ஒத்து போகவில்லை. ஆக பரிணாமம் தவறு என்று கூறி விடலாமா? ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நாம் ஒன்றை அணுக முடியும். குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான் என்றால் அதற்கு தொல்லுரியியல் வாயிலாக நமக்கு ஆதாரம் கிடைக்க வேண்டும். அப்படி எதுவும் தெளிவாக நமக்கு கிடைக்கவில்லை. இறைவன் நாடினால் இது குறித்து ஒரு பதிவு இடுகின்றேன். அப்போது பார்த்துவிட்டு கருத்து கூறுங்கள்.

    2. //ஆனால் பரிமாணவியலை வெள்ளையர்கள் தம்மை உயர்ந்தவர்கள் என காட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதும் அதற்காக இவ்வாறு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது//

    சகோ, நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் பரிணாமம் இனரீதியான வேறுபாட்டையே போதிக்கின்றது. மனித பரிணாமத்தில் கடைசியில் வெள்ளையர்கள் பரிணாமம் அடைந்தார்கள் என்பது பரிணாம புரிதல். கடைசியாக பரிணாமம் அடைபவர்கள் முன்னேற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதும் பரிணாம புரிதல். ஆக, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று வெள்ளையர்கள் நம்புவதில் என்ன தவறு இருக்கின்றது. பரிணாமத்தை அறிவியலாக ஏற்றுக்கொண்டவர்கள் பரிணாமம் கூறும் ஏற்ற தாழ்வுகளையும் ஏற்று தான் ஆக வேண்டும்.

    3. //ஒரு சமூகம் விஞ்ஞானத்தை தமது சமூகத்துக்கு சார்பாக வளைக்க முயன்றதற்காக பரிமாணக் கோட்பாடு பிழை என்ற முடிவிற்கு வர முடியாது///

    இல்லை. இதில் வளைக்க ஒன்றுமில்லை. பரிணாமம் என்ன சொன்னதோ அதை தான் நிரூபிக்க முயன்றார்கள்.

    4. //..எதிர்காலத்தில் பரிமாணக் கோட்பாடு பிழையாக்கப்பட்டல் //

    தற்போதே அதனை உண்மையா பொய்யா என்பதில் ஆய்வாளர்களிடையே மாற்றுக்கருத்து உள்ளது.

    5. //இதற்காக எல்லாவற்றையும் கடவுள் படைத்தார் என்ற பல்லவியை நான் ஏற்றுக்கொள்வதில்லை//

    எல்லோருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கின்றது. ஆதாரங்கள் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். அந்த அடிப்படையில் நான் பரிணாமம் உண்மையாக இருக்க முடியாது. ஒரு அறிவார்ந்த சக்தி தான் பின்னிருக்க வேண்டும் என்று நம்புகின்றேன்.

    6. //பரிமானவியலை தவறாக்குவதற்கு தடையாக இருக்கும் மிகப்பெரிய விடயம் DNA குரங்கைத்தவிர வேறு எந்த விலங்கிற்கும் எமது DNA ஒத்துவரவில்லை பின்பு எதை வைத்து நிரூபிக்க போகிறார்கள்//

    தவறான புரிதல். பரிணாமத்தை தவறாக்க மிக எளிமையான விசயங்களே போதும். உயிரினங்கள் சிறிது சிறிதாக வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்று பரிணாமம் கூறுகின்றது. ஆனால் அதற்கு nammidaஆதாரம் இல்லை. இது ஒன்றே போதும் பரிணாமம் தவறு என்று புரிந்துக்கொள்ள...

    நன்றி...

    ReplyDelete
  49. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).... அருமையான பதிவு... உண்மையை நாங்கள் அறிய உதவி இருக்கிறீர்கள்... ஜெஸக்கல்லாஹ் ஹைர்

    படிக்கும் போது பெங்கவின் நிலையை நினைத்தால் நெஞ்சம் பாதறுகிறது...

    அந்த சிறுவன் 40 ஆயிராம் மிருகங்களுக்கு மத்தியில் நான் மனிதன் நான் மனிதன் உங்களைப் போன்று மிருகம் இல்லை என்று நிருபித்திருக்கிறார்..

    ReplyDelete