Sunday, February 7, 2016

ரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...



நம் அனைவர் மீதும் இறைவனின், சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

என்ன தம்பி, தலைப்பே செம விவகாரமா இருக்கே....நேரா மேட்டருக்கு வா.

நம்ம டாகின்ஸ் புதுசா ஒரு சர்ச்சையை கிளப்பியிருக்காரு அண்ணே. ஒரு அறிவியல் கருத்தரங்குல, இங்கிலாந்தின் New Statesman ஊடக பத்திரிக்கையாளர் ஒருவர் இவரு கிட்ட கேள்வி கேட்டிருக்காரு. 

ரிச்சர்ட் டாகின்ஸ்
என்னான்னு?

மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டிருக்காரு. 'தம்பி இந்த கருத்தரங்குக்கு சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க'ன்னு டாகின்ஸ் சொல்லிருக்காரு. 

நியாயம் தானே ! 

ஆமாண்ணே, சரியான பேச்சு தான். இந்த நிருபர் திரும்பவும் அப்படியே கேள்வி கேட்டிருக்காரு. ஒரு கட்டத்துல, இந்த நிருபர் முஸ்லிம்னு தெரிஞ்சிகிட்ட டாகின்ஸ், 'உங்க இறைத்தூதர் பறக்கும் குதிரைல வானத்துக்கு போனாரே, அத நீ நம்புறியா'ன்னு கேட்டிருக்கார். அதுக்கு அந்த நிருபர், ஆமான்னு சொல்லிருக்கார். அவ்ளோதான் டென்ஷன் ஆகி, கோபத்துல அந்த நேர்க்காணல்ல இருந்தே வெளியேறிவிட்டார் டாகின்ஸ். 

ஆஹா, இது என்னப்பா விசித்திரமா இருக்கு. பிடிக்கலன்னா, மதங்கள் சம்பந்தமா கேள்வி கேட்டப்பவே வெளியேறி இருக்கலாமே. அது என்ன இஸ்லாம் சம்மந்தமா கேள்வி கேட்டு, சொன்ன பதில் புடிக்கலன்னு போறது. 

இது தான் பிரச்சன. பலரும் டாகின்ஸ்சுடைய இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிச்சு இருக்காங்க. இந்த பறக்கும் குதிரைய பத்தி பொதுமேடைல டாகின்ஸ் கேட்குறது இது முதல் தடவை இல்லை. ஏற்கனவே, ஆக்ஸ்போர்ட் யூனியன்ல, சில வருஷத்துக்கு முன்னாடி, அல்ஜசீரா ஊடகத்தின் மஹ்தி ஹசன் கூட நடந்த ஒரு நேர்காணல்ல இதே கேள்விய டாகின்ஸ் கேட்டிருக்காரு. அப்ப ஹசனும், இந்த நிகழ்வ 'இறைவன் புறத்துல இருந்து அவன் அடியாருக்கு காட்டப்பட்ட ஒரு அற்புத சம்பவமா நாங்க நம்புறோம்'னு சொன்னார்.

ஆமா, அல்ஜசீரா நிருபர் பேரு என்னான்னு சொன்ன? 

மஹ்தி ஹசன்.....

மஹ்தி ஹசன் 
யோவ், இந்த பயலா, சமீபத்துல கூட நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருத்தர ஒருவழி பண்ணி ட்விட்டர்ல வலதுசாரிகள் கிட்ட கடுமையா எதிர்ப்ப சம்பாரிச்சானே, அந்த பய தானே...

அவரே தான்....

ரொம்ப விவகாரமான பையன்பா. இவர பத்தி அப்பால பார்ப்போம். முதல்ல பறக்கும் குதிரை மேட்டருக்கு வா. என்ன சம்பவம் இது, இப்படியான நிகழ்வு இஸ்லாமுல இருக்கா? கொஞ்சம் டீடெயிலா சொல்லு. 

இப்படியான சம்பவம் இருக்கு.. அதாவது, சவூதி அரேபியாவின் மக்காவுல இருக்குற ஹரம் மசூதியில் இருந்து, (ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தின்) ஜெருசலத்தில் இருக்குற அக்ஸா மசூதி வரை, ஒரு இரவில், நபிகள் நாயகம் அழைத்து செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து வானுலகிற்கு சென்று திரும்பியதா இஸ்லாமிய மூல நூல்கள் சொல்கின்றன. குர்ஆன்ல இந்த சம்பவம் பின்வருவாறு விவரிக்கப்பட்டிருக்கு.. 

மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன் - அல்குர்ஆன் 17:1

ம்ம்ம். நீ தொடரு. 

இந்த பறக்கும் குதிரை குறித்து நபிமொழிகள்ல பின்வரும்படியான விளக்கம் வருது. 

"நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது....(இந்த நிகழ்ச்சி நடந்தது)..... கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது'' - அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி), நூல்: புகாரி 3207. 

ஒ, இந்த புராக் வாகனத்த தான் டாகின்ஸ் பறக்கும் குதிரைன்னு சொல்றாரா...

ஆமாம். இப்ப சொல்ல போறத நல்லா கவனியுங்க.  

சொல்லு சொல்லு. ரொம்ப சுவாரசியமா இருக்கு. 

இந்த புராக்ல போன சம்பவம் எல்லாம் ஒரு இரவுல நடந்து முடிஞ்சிருச்சுன்னு நான் சொன்னேன் இல்லையா. அடுத்த நாள் காலைல இத எப்படி மக்கள் கிட்ட சொல்றதுன்னு நபிகள் நாயகமே ரொம்ப கவலைல தான் இருந்திருக்காங்க. ஏன்னா, ஏற்கனவே இவரு குழப்பத்த ஏற்படுத்திகிட்டு இருக்குறதா மக்கா நகர மக்கள் நினைக்குறாங்க. இப்ப இந்த நேரத்துல இதை வேற சொன்னா, நிச்சயமா இவர் ஒரு பொய்யர்ன்னு முத்திரை குத்திருவாங்கன்னு அஞ்சி இருக்கார். 

அப்ப, இந்த சம்பவம் மேல, இன்னைக்கு டாகின்ஸ்சுக்கு இருக்குற கேள்வி/சந்தேகம்/கேலி எல்லாம் நபி வாழ்ந்த காலத்துல இருந்த மக்கள் கிட்டயும் இருந்துச்சுன்னு சொல்லு. சூப்பரா இருக்குப்பா. சரி, இந்த சம்பவத்த மக்கள் கிட்ட சொன்னப்ப என்ன நடந்துச்சு...

என்ன நடந்துச்சு என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு விளக்குது. 

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந்திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல், நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.
நபி (ஸல்) அவர்களிடம், "என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?'' என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். "இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப்படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
"உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?'' என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
உடனே அபூஜஹ்ல், "பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங்கள்!'' என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். "என்னிடம் அறிவித்ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்'' என்று அபூஜஹ்ல் கூறினான்.
"இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், "நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?'' என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவர்களும் அந்தச் சபையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், "வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்'' என்று கூறினர்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2670

கேட்கறதுக்கு செமையா இருக்கப்பா. மக்காவுக்கும், ஜெருசலதிற்கும் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரமாவது இருக்குமா?

இருக்குமண்ணே.... 

அன்னைக்கு இருந்த டெக்னாலஜி படி, ஒரு நாள் நைட்ல, இவ்வளவு தூரத்திற்கு போயிட்டு வந்திருக்க முடியாது.  ஆனா, இவர் இதற்கு முன் போயிராத/பார்த்திராத ஜெருசலம் பள்ளிவாசல் குறித்து நுணுக்கமான விசயங்கள கூட சரியா வர்ணிச்சு இருக்காரு. ஏற்கனவே அந்த பள்ளிக்கு போயிட்டு வந்திருந்த மக்கள் இவர் சொல்றது சரிதான்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அப்ப, இறைவன் நபிக்கு காட்டின அத்தாட்சியா/அற்புதமா தான் இந்த பயணத்த நாம புரிஞ்சிக்க முடியும். 

இவ்ளோ தான் மேட்டரு. இத ஒரு அற்புதமா (miracle), இறைவன் தன் அடியாருக்கு காட்டிய அத்தாட்சிகளாக தான் முஸ்லிம்கள் நம்புறாங்க. 

சரிதாம்பா... இந்த சம்பவத்த இறைவன் நடத்திக்காட்டிய அற்புதமா நம்புறதுல டாகின்ஸ்க்கு என்ன பிரச்சன? 

இதுக்கு அறிவியல்ரீதியான ஆதாரம் கேட்குறார்ண்ணே...

என்ன? என்னையா சொல்ற. 

ஆமா அவரு அப்படித்தான் கேட்குராறு. குதிரைக்கு எப்படி இறக்கை இருக்கும்? அது எப்படி பறக்கும்? யாரு பார்த்தா? இப்படியான ஆதாரங்கள்...

ஆஹா............ இறைவன் சைட்ல இருந்து நிகழ்த்தக்கூடிய ஒரு அற்புதத்துக்கு, இந்த உலகத்துல இருக்குற விசயங்கள அளவுக்கோலா வச்சு ஆதாரத்த கேட்குறது என்னய்யா லாஜிக்? அதுமட்டுமில்லாம நபி சொன்னது சரிதான்னு செக் செய்து அப்போதைய மக்கள் ஒத்துக்கிட்டு இருக்காங்க. இது பொய் என்று மக்கள் நம்பியிருந்தா இஸ்லாம் பரவியிருக்க வாய்ப்பே இல்ல. ஒருவேள New Statesman நிருபரோ அல்லது மஹ்தி ஹசனோ, 'இந்தா பாருங்க, நாங்க அந்த காலத்துலைய பறக்குறதுக்கு டெக்னாலஜி கண்டுபிடிச்சிட்டோம்'னு சொல்லியிருந்தா கூட டாகின்ஸ் கேட்கறதுல நியாயம் இருக்கு. இவங்க அப்படி சொல்லல தானே. 

கரெக்ட் தான். இவங்க அப்படி சொல்லல. ஒரு அற்புதமா இந்த சம்பவத்த நம்புறோம்னு தான் சொல்றாங்க. 

நல்ல வேலை நம்ம மோடி தப்பிச்சாரு...

என்ன சொல்றீங்க? இப்ப எதுக்கு மோடிய இதுல நுழைக்குறீங்க?

'ப்ளாஸ்டிக் சர்ஜரி அந்த காலத்துலயே நம்ம நாட்டுல இருந்துச்சு. அதுக்கு பிள்ளையார் தான் உதாரணம்'னு மோடி சொல்லப்போய் அவர நம்ம நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வழி பண்ணிட்டாங்க தானே. நல்ல வேலை மோடி இங்கிலாந்துல இத சொல்லல. 

சரிதான். பிள்ளையார் சம்பவத்த ஒரு தெய்வீக நிகழ்வா மோடி சொல்லியிருந்தா இந்த அளவிற்கு எதிர்ப்பு வந்திருக்காது. சரி நம்ம விசயத்துக்கு வாங்க. 

வந்தாச்சு. சொல்லு, டாகின்ஸ் இப்படியெல்லாம் பேசும் போது இந்த மஹ்தி ஹசன் சும்மா இருந்திருக்க மாட்டாரேப்பா...

அது எப்படி இருப்பாரு...டாகின்ஸ்சுடைய இந்த பேச்சுக்களை 'sheer nonsense' அப்படின்னு சொல்லிட்டாரு ஹசன். 

ஆஹா, அப்படின்னா 'சுத்தமா அறிவுக்கு ஒத்துவராதது' என்று தானே அர்த்தம்....

ஆமா. ஹசனோட எதிர்வாதங்கள பாருங்க. அப்படியே மலைத்து போயிடுவீங்க...

சொல்லுப்பா...எனக்கு எந்த மாதிரி விசயத்துல ஆர்வம் ஜாஸ்தி...

ரெடியா.............................. "தாஜ்மஹால் அழகானது" - இந்த வாக்கியத்த நீங்க ஒத்துக்குறீங்களா? 

நான் என்ன ஒத்துக்குறது, உலகமே ஒத்துக்குமப்பா...

வெரி குட். சரி இந்த வாக்கியத்தின் உண்மைத்தன்மைய அறிவியல்ரீதியா எப்படி சோதித்து பார்க்குறது? 

என்ன?.........(சில நொடி மவுனம்)

புரியலையா. இன்னொருவிதமா சொல்லுறேன். 'நீங்க அழகானவர்' - இத எப்படி அறிவியல்ரீதியா நிரூபிக்.....

தம்பி நிறுத்து....நிறுத்து....ஸ்டியரிங்க என் பக்கமா திருப்பாத, உன்னுடைய குசும்பு எனக்கு தெரியும்....நீ தாஜ்மஹாலுக்கே வா.....

ஹா ஹா....சொல்லுங்கண்ணே சொல்லுங்க...தாஜ்மஹால் அழகானது என்பதை அறிவியலரீதியா எப்படி சோதித்து பார்ப்பீங்க. இப்படி கட்டுனதான் அழகு, இந்த வடிவம் கொடுத்தா தான் அழகு, ஒரு கட்டிடம் இப்படி இருந்தா தான் அழகு - இதற்கெல்லாம் அறிவியல்ரீதியா என்ன அளவுகோல்? 

எப்பா தம்பி, நான் அப்பவே சொன்னேன் இந்த மஹ்தி ஹசன் விவகாரமான பையன்ன்னு.... 

சரி இத விடுங்க..... 'உங்க மனைவி உங்கள விரும்புறார்' - இத எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? உண்மைன்னு நம்புவீங்க?

ஐயோ ஐயோ...தெரியாத்தனமா உன்கிட்ட கேள்வி கேட்டு மாட்டிகிட்டேன். என் மனைவி என்ன விரும்புறாங்கன்னு எனக்கு தெரியாதா..அவங்க உணர்வு எனக்கு புரியாதா....

அண்ணே, இந்த உணர்வு உணர்ச்சி இதையெல்லாம் விடுங்க. நீங்க அவங்கள விரும்புறதோ அல்லது அவங்க உங்கள விரும்புறதோ உண்மைன்னு எப்படி அறிவியல்ரீதியா சோதித்து பார்ப்பீங்க? நிரூபிப்பீங்க? 

முடியாதுப்பா....சத்தியமா முடியாது....

நீங்க நேர்ல பார்க்குற, உண்மைன்னு ஒத்துக்குற இம்மாதிரியான விசயங்களையே அறிவியல்ரீதியா சோதித்து பார்க்க முடியாது, அறிவியல்ரீதியா ஆதாரங்கள் கொடுக்க முடியாதுன்னு இருக்குறப்ப, தெய்வீகரீதியா நடந்த ஒரு அற்புத சம்பவத்துக்கு அறிவியல்ரீதியா ஆதாரம் கேட்குறது நியாயமா?? ------ இதுதான் ஹசனோட ஒரு வாதம்.

அடேங்கப்பா...எவ்ளோ ஆழமான வாதம்....... (கொஞ்ச நேரம் கழித்து சிரிக்கிறார்) தெரியாத்தனமா நம்ம ஆர்எஸ்எஸ் தலைவரு ஹசன் கிட்ட போய் மாட்டுனாரு பாரு. அத நினைச்சா சிரிப்பா தான்யா வருது. இந்த பையன பத்தி தெரிஞ்சிருந்தா பேட்டி கொடுக்க ஒத்துக்கிட்டு இருப்பாரா? 

ஹா ஹா ஹா....அறிவியல்ரீதியா சோதிச்சு பார்த்து நம்புறதுக்கு குர்ஆன்ல நிறைய விஷயம் இருக்கு. அதவிட்டுட்டு ஒரு தெய்வீக அற்புதத்துக்கு அறிவியல் ஆதாரம் கேட்டு தொங்குறதுல என்ன பயன் இருக்க முடியும்? 

ரொம்ப சரி... இதெல்லாம் இருக்கட்டும். டாகின்ஸ் நம்புற பரிணாமத்துக்கு ஆதாரம் இருக்கா???? (சிரிக்கிறார்) டயர்ட் ஆகிட்டேன் தம்பி...இதுக்கு பதில் சொல்லிட்டு நீ முடிச்சிக்க.

பரிணாமத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லங்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, இப்படியான கேள்வி கேட்டா டாகின்ஸ் எப்படி பதில் சொல்றார்ன்னு பாருங்க. 'ஒரு கொலை நடந்திருக்கு. அத நாம பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு கொலைதான்னு நம்புறோம். அதுமாதிரி தான் பரிணாமமும். பரிணாமம் நடந்ததை யாரும் பார்க்கல. ஆனா இருக்கும் ஆதாரங்களை வச்சு பரிணாமம் நடந்துச்சுன்னு நம்புறோம்' - இது தான் டாகின்ஸ்சோட விளக்கம். 

அட்ரா சக்க...அட்ரா சக்க...இத தானய்யா இறை நம்பிக்கையாளர்களும் சொல்றாங்க. இறைவன நாங்க பார்த்ததில்லை, ஆனா அவனோட இருப்பை நிரூபிக்குறதுக்கு இந்த உலகத்துல நிறைய ஆதாரங்கள் இருக்கு, அவற்றை வஞ்சு தான் இறைவன நம்புறோம்ன்னு. டாகின்ஸ்ச விட பிரபலமா இருந்த நாத்திகரான பேராசிரியர் ஆண்டனி ப்ளு (இவர் குறித்த எதிர்க்குரல் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்), ஆத்திகரா மாறினதுக்கு இப்படியான ஆதாரங்களை தானே காரணமா சொன்னாரு. ஒரே அளவுக்கோலை வைத்துக் கொண்டு ஒன்ன மட்டும் நம்புவேன், இன்னொன்ன நம்ப மாட்டேன்னு சொல்றது அறிவுக்கு ஒத்துவர்ர விசயமாய்யா....

இத நீங்க டாகின்ஸ்கிட்ட தான் கேட்கணும்......

ஹி ஹி...நீ கிளம்பிக்க...

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

References: 
1. Mehdi Hasan vs Richard Dawkins: My faith in God is not foolish - Mehdi Hasan, 19th December 2012 . New Statesman. link
2. 'Pathetic': Richard Dawkins in extraordinary outburst against Islam - Jason Taylor. 29th December 2015. Express. link
3. My year in Islamophobia - Emad Ahmed. New Stateman. 22nd December 2015. link
4. Richard Dawkins is just as rude in person as he is on Twitter, apparently - Ryan Kearney, New Republic. link
5. Richard Dawkins debates Muslim Journalist - Youtube. link
6. Richard Dawkins, PZ Myers, AronRa and Hamza Tzortzis at Atheist Convention - Islamic Education and Research Academy. Youtube. link

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ  






Monday, January 25, 2016

'ஆக்டோபஸ் எனும் வேற்றுக்கிரகவாசி'





நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...

"Not to send you into a meltdown or anything but octopuses are basically ‘aliens’ – according to scientists. Researchers have found a new map of the octopus genetic code that is so strange that it could be actually be an “alien” " -  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com 
"உங்களை நிலைக்குலைய செய்வது எங்களின் நோக்கமல்ல. அதே நேரம், விஞ்ஞானிகளை பொருத்தமட்டில் ஆக்டோபஸ் ஒரு வேற்றுக்கிரகவாசியாக கருதப்படுகின்றது. ஆக்டோபசில் நடைபெற்ற சமீப கால ஆய்வுகள், அவை மிக வினோதமான மரபணுக்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இதனாலேயே வேற்றுக்கிரகவாசியாக அவை அறியப்படுகின்றன" - (extract from the original quote)  Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study, 13th August 2015, BT.com.  

நில்லுங்கள். உங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிடாதீர்கள். உலகில் யாருமே ஆக்டோபஸ்சை வேற்றுக்கிரகவாசியாக கருதுவதில்லை. ஆம், ஆக்டோபசின் மரபணுக்களில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள் நம் கற்பனைக்கு எட்டாத, நீண்ட கால நம்பிக்கைகளுக்கு சவால் விடும் செய்திகளை நமக்கு கொண்டு வந்திருக்கின்றன. அதே நேரம், நீங்கள் மேலே படித்த, பிரபல BT ஊடகத்தின் வர்ணனை சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது.

ஆக்டோபஸ்: 

சாக்குக்கணவாய் என்பது இவற்றுடைய தமிழ் பெயர் என்கிறது விக்கிப்பீடியா. எல்லோரும் புரிந்துக்கொள்ள ஏதுவாக நாம் ஆக்டோபஸ் என்றே அழைப்போம். 

ஆக்டோபஸ் பற்றிய பல உண்மைகள் வியப்பாகவே உள்ளன. எட்டு கைகள் கொண்ட இவற்றிற்கு மூன்று இதயங்கள் உண்டு. உங்களை ஆபத்தாக அது கருதினால் உங்கள் கண்களுக்கு முன்பாக, நேருக்கு நேராகவே மறைந்திருக்கும். இல்லை, நான் வார்த்தைகளை தவறாக போடவில்லை, சரியாக தான் சொல்லியிருக்கின்றேன். ஆம், உங்கள் முன்பு தான் நின்றிருக்கும், ஆனால் நீங்கள் பார்க்க முடியாது. ஆபத்தான நேரங்களில், சுற்றுச்சூழலின் நிறம் மற்றும் தன்மைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் அசாத்திய திறன் கொண்டவை ஆக்டோபஸ்கள். பல நேரங்களில், இவற்றின் எதிரிகளான ஷார்க் மீன்கள், டால்பின்கள், ஈல்கள் போன்றவை ஆக்டோபஸ்சின் பக்கத்திலேயே நீந்தி செல்லும். ஆனால் இவற்றை கண்டுபிடிக்க அவற்றால் முடியாது. 

ஒருவேளை எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டால், கறுப்பு நிற மையை பீச்சியடித்து தப்பிவிடும். இந்த மையானது மேகம் போல பரவி எதிரிகளை குழப்பமடைய வைக்கும். மேலும், வெறுமனே குழப்புவதற்கு மட்டுமல்லாமல் எதிரிகளின் நுகரும் தன்மையை தற்காலிகமாக மழுங்கடிப்பதற்கும் இந்த மை பயன்படுகின்றது. அதனால், இவை தப்பிய பிறகு, தங்களின் நுகரும் தன்மையால் இவற்றை தொடர்ந்து வர எதிரிகளால் முடியாது. 

மெல்லுடல் (Mollusca) உயிரினங்களான இவை, கடல் பாறைகளின் சின்னஞ்சிறிய விரிசல்களுக்குள் கூட தன் உடலை புகுத்திக்கொண்டு எதிரிகளிடம் இருந்து தப்பிக்கும். தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்திலும் தோல்விடைந்து விட்டதா, எதிரி நெருங்கிவிட்டதா, கடைசி முயற்சியாக, தன் எட்டு கைகளில் ஒன்றை அறுத்துவிட்டு விடும். இதன் மூலம் எதிரிகளின் கவனத்தை சிதறடிக்கும். ஆச்சர்யம் என்னவென்றால், அந்த கையானது சில நாட்களில் திரும்ப வளர்ந்துவிடும். 

உயிரியலின்படி, தலைக்காலிகள் (Cephalopod) என்ற வகுப்பில் வரும் இவை, தங்களுடைய ஒவ்வொரு கையிலும், இரண்டு வரிசையில் உறிஞ்சு குப்பிகளை கொண்டிருக்கும். இந்த குப்பிகள், தன்னிச்சையாக சுவைகளை உணரக்கூடியவை என்பது மற்றுமொரு கவனிக்கத்தக்க செய்தி.

Fig 1. ஆக்டோபஸ் உறிஞ்சு குப்பிகளை காட்டும் படம் 
கணவாய் என்று நாம் பேச்சு வாக்கில் கூறும், உணவிற்கு பயன்படுத்தும் ஊசிக்கணவாய்களும் (squid), தலைக்காலிகள் என்ற இந்த வகுப்பில் தான் வருகின்றன என்ற போதும், அவற்றுடன் ஒப்பிடும் போது, ஆக்டோபஸ் மிக அறிவார்ந்த உயிரினமாக கருதப்படுகின்றது. இவ்வளவு ஏன், எலும்பு இல்லா (invertebrates) உயிரினங்களிலேயே மிக புத்திசாலியானவை என்ற பெருமையும் ஆக்டோபஸ்களுக்கு உண்டு. ஒருமுறை, இவற்றிற்கு பிடித்த உணவான நண்டுகளை ஜாடியில் போட்டு மூடிய போது, ஜாடியை திறந்து நண்டுகளை பிடிக்கும் அளவு அறிவார்ந்தவையாக இவை செயல்பட்டன. 

Fig 2. a) ஆக்டோபஸ்                                                     b) கணவாய்
ஆக, ஆய்வாளர்களை பொருத்தமட்டில், உலகில் உள்ள எல்லா உயிரினங்களில் இருந்தும் பெரிதும் வித்தியாசப்பட்டவை ஆக்டோபஸ்கள். இதன் காரணமாகவே, பிரபல பிரிட்டிஷ் உயிரியலாளரான மார்ட்டின் வெல்ஸ், ஆக்டோபஸ்களை 'ஏலியன் (வேற்றுக்கிரகவாசி)' என்று குறிப்பிட்டார். 

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தி (Gene Sequence technique):

உயிரினங்களின் விசித்திர நடவடிக்கைகளின் பின்னணியை எப்படி அறிந்துக்கொள்வது? மரபணுக்களை ஆராய்வதே பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று எண்ணினர் ஆய்வாளர்கள். இப்படியான சூழலில் தான் 'மரபணு வரிசைப்படுத்துதல்' தொழில்நுட்பம் வந்தது. உயிரினங்களின் மரபணுக்களை ஆராயும் வழிகளை அது எளிதாக்கியது. இன்றோ, பல்வேறு உயிரினங்களின் பின்னணியை இந்த தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து வருகின்றனர் உயிரியலாளர்கள்.

இந்த யுக்தியைக் கொண்டு, ஆக்டோபஸ்சில் முதன் முதலாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக பாரம்பரிய 'நேச்சர் (Nature)'  ஆய்விதழில் வெளிவந்தன. இந்த உயிரினத்தை போலவே ஆய்வு முடிவுகளும் விசித்திரமான செய்திகளை கூறின. அதன் பிரதிபலிப்பு தான் 'இவை வேற்றுக்கிரகவாசிகள்'  என்றுக் கூறி வெளிவந்த தலையங்கங்கள். அறிவியல் உலகை மட்டுமல்லாமல், சாமானியர்களின் உலகையும் சேர்த்து ஆட்கொண்டது இந்த செய்தி. தமிழில் கூட, சில தளங்களில் இதுக்குறித்து செய்திகள் வெளியானதாக நியாபகம்.

"The octopus appears so utterly different from all other animals, even ones it’s related to, that the British zoologist Martin Wells famously called it an alien. In that sense, you could say our paper describes the first sequenced genome from an alien," -  Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.
"ஆக்டோபஸ்கள், மற்ற உயிரினங்களில் இருந்து மிகவும் வேறுபடுகின்றன. இவை தொடர்புடைய (கணவாய் போன்ற) மற்ற உயிரினங்களில் இருந்தும் கூட இவை வேறுபடுகின்றன. அதனாலயே, பிரிட்டிஷ் உயிரியலாளர்  மார்டின் வெல்ஸ் இவற்றை 'ஏலியன்' என்று அழைத்தார். அப்படி பார்த்தால், நாங்கள், இந்த வேற்றுக்கிரகவாசியின் மரபணு தொகுப்பை முதல் முறையாக ஆய்வு செய்து வரிசைப்படுத்தியுள்ளோம்" - Clifton Ragsdale, Associate Professor of Neurobiology and leader of the team that worked on the octopus at the University of Chicago. Science Daily, August 12, 2015.

இந்த ஆய்வுக் குறித்து செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் பலவும், வேற்றுக்கிரகவாசி போன்ற வர்ணனைகள் மூலம் மக்களின் கவனத்தை கவர நினைத்தனவே தவிர, ஆய்வாளர்கள் இந்த உயிரினத்தை அப்படி அழைக்க பின்னால் இருந்த காரணங்களின் ஆழத்தை, காலங்காலமாக நம்பப்பட்டுவரும் பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆக்டோபஸ்சின் மரபணுக்கள் சவால் விட்டதை எடுத்துரைக்க ஏனோ மறந்துவிட்டனர்.

அப்படி என்ன சொல்லின ஆய்வு முடிவுகள்?

மரபணு வரிசைப்படுத்துதல் யுக்தியைக் கொண்டு எந்தவொரு உயிரினத்தின் மரபணுக்களை பரிணாமவியலாளர்கள் ஆராய்ந்தாலும், பரிணாமத்திற்கு ஆதரவான விசயங்களை அதில் தேடுகின்றனர். உதாரணத்திற்கு, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்ததாக இவர்கள் நம்புகின்றனர். அதனால் இன்றைய மனிதனும், குரங்கின் சில இனங்களும் தொடர்புடையவை (அல்லது உறவினர்கள்) என்று கூறுகின்றனர்.

இதனை மனதில் கொண்டு,  மனித மரபணுக்களில் சோதனை நடத்தி, முடிவுகளை குரங்கின் சில இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்படி ஒற்றுமை (??) இருந்தால், 'பார்த்தீர்களா, குரங்கு போன்ற ஒன்றிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று நாங்கள் சொன்னது உண்மையாகிவிட்டது" என்பார்கள்.

ஒருவேளை இவ்விரு உயிரினங்களின் மரபணுக்களுக்கும் தொடர்பில்லை என்றால்? மனிதனின் தோற்றம் குறித்த இவர்களின் புரிதல் தவறு என்று தானே அர்த்தம்? ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மர்மமான முறையில் பரிணாமம் வேலை செய்திருக்கின்றது என்று இவர்கள் கூறும் விளக்கத்தை கண்டு நாம் நம் விதியை நொந்துக்கொள்ள வேண்டும் :-) :-).

சரி விடுங்க விசயத்திற்கு வருவோம். ஆக்டோபஸ்சில் நடத்தப்பட்ட மரபணு ஆய்விலும் இத்தகைய தொடர்பை தேடினர். அதாவது, மற்ற மெல்லுடல் மற்றும் எலும்பில்லா உயிரினங்களை ஆக்டோபஸ் ஒத்திருக்கும் என்று நினைத்தனர். ஆனால் உண்மையோ, பரிணாமவியலாளர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'ஆச்சர்யம், திகைப்பு, எதிர்ப்பார்க்காதது' போன்ற வர்ணனைகள் தான்.

எப்போது இவர்கள் 'எதிர்பார்க்காதது' போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறார்களோ அப்போதே நாம் உஷாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ பிரச்சனை வந்துவிட்டது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். 

1. இவர்கள் எதிர்பார்த்திராத முதல் விசயம், ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க அளவு, இவை தொடர்புடைய மெல்லுடல் உயிரினங்களுடன் ஒத்திராமல், முதுகெலும்பு உள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்த மரபணுக்களுடன் ஒத்திருந்தன (அட).

"What's more, they saw a massive expansion in a family of genes that's involved in setting up brain circuits. These genes have been studied in mice and were previously thought to be numerous only in animals with backbones. "We were really surprised as we were poking through the octopus genome to see that there were just 150 [or] 160 of these genes," Albertin says. She says they're completely absent in the invertebrates that scientists normally work on, like flies or nematode worms" - Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs , Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
"இன்னும் என்ன வேண்டும், ஆக்டோபஸ்சின் மூளை அமைப்புகளுடன் தொடர்புடைய சுமார் 150, 160 மரபணுக்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இப்படியான மரபணுக்களை எலிகளில் அவர்கள் கண்டுள்ளனர். மேலும், இந்த மரபணுக்கள் முதுகெலும்புள்ள விலங்குகளில் மட்டுமே சாத்தியம் என்று எண்ணியிருந்தனர். ஆய்வாளர்கள் இதுவரை ஆய்வு செய்துள்ள எலும்பில்லாத உயிரினங்களில் இவை முற்று முழுவதுமாக காணப்படவில்லை  - (Extract from the original quote of) Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105
ஒரு உயிரினத்தின் மரபணுக்கள், அது சார்ந்த உயிரினங்களுடன் ஒத்துப்போகாமல், எங்கோ தூரமாக உள்ள உயிரினங்களுடன் ஒத்துப்போவதான காட்சிகளை, நிச்சயம், பரிணாம ஆதரவாளர்கள் விரும்புவதில்லை. பரிணாமக் கோட்பாட்டின் யூகங்களுக்கு முற்றிலும் மாறான செய்திகள் இவை. இந்த விவகாரத்தை நோக்கும் சாதாரண மனிதனுக்கு கூட இது புரியும். ஆனால், நம்பிக்கையின் பால் சுழலும் பரிணாமவியலாளர்கள், இவற்றை ஏற்க மறுத்து, இந்த நிகழ்வுகளுக்கு வேறு காரணங்களை தேடி அலைகின்றனர்.

அப்படி கண்டுபிடித்த ஒரு காரணம் தான் 'தன்னிச்சையாக பரிணமித்தல் (Convergent Evolution)'. அதாவது, தொடர்பில்லாத இரண்டு உயிரினங்களிடையே மரபணுக்கள் ஒத்திருக்கின்றனவா, அப்படியானால், இந்த மரபணுக்கள் இரண்டு உயிரினங்களிலும் தன்னந்தனியாக பரிணமித்து விட்டதாக அர்த்தமாம். ஆக, மரபணுக்கள் தொடர்பிருந்தாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம், தொடர்பில்லை என்றாலும் அங்கு பரிணாமம் நடந்ததாக அர்த்தம். what a pity !!!

சரி, இந்த தன்னிச்சையாக பரிணமித்தலுக்கு ஆதாரம்? அட, பரிணாமத்தின் மற்ற விசயங்களுக்கு மட்டும் ஆதாரம் இருக்கா என்ன? அப்படித்தான் இதுவும். லூஸ்ல விடுங்க.

2. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது தகவல் இன்னும் விவகாரமானது. ஆக்டோபஸ்சின் மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவை தனித்துவம் வாய்ந்தவையாம். அப்படியென்றால், இதுப்போன்ற மரபணுக்கள் உலகில் வேறு எந்த உயிரினங்களிலும் காணப்படவில்லை என்று அர்த்தம் (அப்படி போடு).

We identified hundreds of cephalopod-specific genes, many of which showed elevated expression levels in such specialized structures as the skin, the suckers and the nervous system  - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668
நூற்றுக்கணக்கான தனித்துவமான மரபணுக்களை நாங்கள் ஆக்டோபஸ்சில் கண்டறிந்துள்ளோம். தோல், உறிஞ்சு குப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடையவாக இவை இருக்கின்றன - (Extract from the original quote of) Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668

பரிணாம ஆதரவாளர்களுக்கு இன்னும் சோகமான செய்தி என்னவென்றால், இப்படி புதிய மரபணுக்கள் தென்பட்டால் கூறும் வழக்கமான காரணத்தை கூட கூற முடியாதபடி செய்துவிட்டது ஆக்டோபஸ் :-). எப்படி என்கின்றீர்களா? எப்போதெல்லாம் புதிய மரபணுக்கள் உயிரினங்களில் தென்படுகின்றவோ, அப்போதெல்லாம் ரெடிமேடாக இவர்கள் வைத்துள்ள பதில், "மரபணு நகலெடுத்தல்" என்பதாகும். அப்படின்னா என்ன?

மரபணு நகலெடுத்தல் (Gene Duplication):

உங்களிடம் ஒரு ஆவணம் (டாகுமென்ட்) இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அதனை நகல் (ஜெராக்ஸ்) எடுக்கின்றீர்கள். எடுக்கப்பட்ட நகலில் சில மாற்றங்களை செய்து புது வேலைக்கு பயன்படுத்துகின்றீர்கள். அதே நேரம், உங்கள் ஒரிஜினல் ஆவணம் அப்படியே இருந்து, தொடர்ந்து பழைய வேலைக்கே பயன்படுகின்றது. 

புதிய மரபணுக்கள் எப்படி உருவாகின என்பதற்கும் இப்படியான ஒரு விளக்கத்தையே காலங்காலமாக கொடுத்து வந்தனர் பரிணாமவியலாளர்கள். அதாவது, ஒரு உயிரினத்தில் உள்ள மரபணு, தன்னை நகல் எடுத்துக்கொள்கின்றது. நகல் எடுக்கப்பட்ட மரபணு காலப்போக்கில் மாற்றமடைந்து புதிய மரபணுவாக உருவெடுக்கின்றது. இந்த மரபணுவானது உயிரினத்தில் புதிய வேலைகளை செய்கின்றது. அதே நேரம், பழைய மரபணுவோ தொடர்ந்து தன்னுடைய பழைய வேலையை செய்துக்கொண்டிருக்கின்றது. 

Fig 3. மரபணு நகலெடுத்தல் முறை செயல்படும் விதம்

ஆக, பழைய மரபணுக்கள் பழைய வேலையையும், அவற்றில் இருந்து நகல் எடுக்கப்பட்டு உருவான புதிய மரபணுக்கள் புதிய வேலைகளையும் செய்ய ஆரம்பித்தன. ஒரு உயிரினத்தில் புதிய மரபணுக்கள் காணப்படுவதற்கு இதுவே காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த விளக்கமானது "மரபணு நகல் எடுத்தல்" என்றழைக்கப்படுகின்றது. 

ஆனால், எப்போது உயிரினங்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பம் (Gene Sequence) வந்ததோ, அப்போதே பிரச்சனைகள் தலைக்கு மீறி போக ஆரம்பித்தன. புதிய மரபணுக்கள் எனப்படுபவை குறித்த ஆழ்ந்த பார்வையை இவை கொடுக்க ஆரம்பித்தன. நிச்சயம் பரிணாமவியலாளர்களுக்கு இது இக்கட்டான நிலையே. 

எப்படி என்றால், உங்களின் புதிய ஆவண நகல், ஒரிஜினல் ஆவணத்தை ஒத்து தானே இருக்கும்? அல்லது குறைந்தபட்ச ஒற்றுமைகளாவது இருக்கும் அல்லவா? 'நகலெடுத்தல்' வழிப்படி புதிய மரபணுக்கள் வந்திருந்தால், அந்த புதிய மரபணுக்கள், தங்களின் மூதாதையரான பழைய மரபணுக்களுடன் குறைந்தபட்ச தொடர்பையாவது கொண்டிருக்க வேண்டுமல்லவா? 

இங்கு தான் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. மரபணு வரிசைப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வகையான உயிரினங்களின் மரபணு தகவல்களை சேமித்து வைத்துள்ளனர் ஆய்வாளர்கள். (அவற்றில்) தேடித்தேடி பார்த்தார்கள், புதிய மரபணுக்களுடன் தொடர்புடைய பழைய மரபணுக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஒரு உயிரினத்தின் புதிய மரபணுக்கள்  வேறு எந்தவொரு உயிரினத்திலும் காணப்படவில்லை. காணப்படவே இல்லை. இவை புத்தம் புதியவை, வேறு எங்கும் இல்லாதவை. 

சரி போகட்டும். இப்படியான மரபணுக்கள் காணப்படுவது மிக அரிதான நிகழ்வு என்று தங்களை சமாதானப்படுத்திக்கொள்ள முயன்ற தருணத்தில், தொடர்ந்து, பல்வேறு உயிரினங்களில் புதிய மரபணுக்களை கண்டறிய ஆரம்பித்தனர். புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருந்தன. 

"For most of the last 40 years, scientists thought that this was the primary way new genes were born — they simply arose from copies of existing genes. The old version went on doing its job, and the new copy became free to evolve novel functions. Certain genes, however, seem to defy that origin story. They have no known relatives, and they bear no resemblance to any other gene. They’re the molecular equivalent of a mysterious beast discovered in the depths of a remote rainforest, a biological enigma seemingly unrelated to anything else on earth" - Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015. 
"கடந்த நாற்பது வருடங்களாக, புதிய மரபணுக்கள் பிறந்ததற்கு நகல் எடுத்தலே பிரதான காரணம் என்று ஆய்வாளர்கள் நினைத்தனர் - அதாவது, ஏற்கனவே இருக்கும் மரபணுக்களின் நகல் மூலம் இவை பிறந்ததாக. பழைய மரபணுக்கள் தங்களின் வழக்கமான வேலைகளை பார்க்கும், நகலோ பரிணமித்து புதிய வேலைளை பார்க்கும். ஆனால், குறிப்பிடத்தக்க மரபணுக்கள் 'நகல் எடுத்தல்' என்ற விளக்கத்திற்கு உடன்படவில்லை. அவற்றிற்கு மூதாதையர் இல்லை, வேறு எந்த மரபணுக்களை போலவும் அவை இல்லை. தொலைத்தூர மழைக்காட்டில், உலகில் உள்ள எந்த உயிரினத்தோடும் ஒப்பிட முடியாத ஒரு மர்ம விலங்கு கண்டுபிடிக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியான சூழலே இது" -  (extract from the original quote of) Emily Singer, A Surprise Source of Life’s Code, Quanta Magazine, 18th August 2015.

இந்த பிரச்சனையில் தான் ஆக்டோபஸ்சும் பரிணாமவாதிகளை தள்ளி விட்டுவிட்டது. ஆக்டோபஸ்சில் காணப்படும் புதிய மரபணுக்கள் 'நகலெடுத்தல்' மூலம் வந்தவை என்று கூற முடியாத அளவு தனித்துவமாக இருக்கின்றன. இதனால் தான் இவை எப்படி வந்தன என்பதை விளக்காமல் கமுக்குமாக கட்டுரையை முடித்துவிட்டார்கள் ஆய்வை நடத்தியவர்கள். இவ்விவகாரத்தின் வீரியத்தை இதிலிருந்தே நாம் உணரலாம். அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன , நாம் சொல்லுவோமே. உண்மைகள் நெடுநேரம் உறங்காதே...

பைனல் பன்ச்:

விசித்திரமாகவும், வேறு எந்த உயிரினத்திலும் காணப்படாத மரபணுக்கள் ஆக்டோபஸ்சில் காணப்படுவதாலும் அவை வேற்றுக்கிரகவாசிகள் என்றால், உலகில் இப்படியான பல வேற்றுக்கிரகவாசிகள் உண்டு. மனிதன் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் தனித்துவமான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு வகையில் விசித்திரமானது தான். அது புரியாத வரை சிலருக்கு எதுவும் புரியாது :-) :-)

"ஹலோ நாசாவா, நீங்க ஏலியன்களை எங்கெங்கோ தேடுறீங்களே, நம்ம பரிணாம பங்காளிகள் கிட்ட கேட்டா, இந்த பூமியிலேயே புடிச்சு தருவாங்க. ஆவண பண்ணுங்க"

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

Pictures taken from:
Fig 1 - Scientific American.
Fig 2 - Google
Fig 3 - Designed by Aashiq Ahamed

References:
1. The octopus genome and the evolution of cephalopod neural and morphological novelties - Nature 524, 220–224, 13 August 2015, doi:10.1038/nature14668. link
2. Octopus genome surprises and teases - Dennis Normile. Science Magazine, Aug. 12, 2015. link
3. Octopus genome holds clues to uncanny intelligence - Alison Abbott, Nature, 12 August 2015. link
4. Octopus Genome Reveals Secrets to Complex Intelligence - Katherine Harmon Courage, Scientific American, August 12, 2015. link
5. Octopus Genome Offers Insights Into One Of Ocean's Cleverest Oddballs - Nell Greenfieldboyce, NPR , August 12, 2105. link
6. Don't freak out, but scientists think octopuses 'might be aliens' after DNA study - BT, 13 August 2015. link
7. The Octopus Genome: Not "Alien" but Still a Big Problem for Darwinism - Casey Luskin, Evolution News and Views, August 24, 2015. link
8. Amazing facts about Octopus - One kind. link
9. A Surprise Source of Life’s Code - Emily Singer, Quanta Magzine, August 18, 2015. link
10.  சாக்குகணவாய் - விக்கிப்பீடியா. link
11. ஆக்டோபஸ் - கல்வி சோலை. link
12. Common Octopus (Octopus vulgaris) - National Geographic. link

சகோதரத்துவத்துடன்,
ஆஷிக் அஹமத் அ.