Interesting..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்

இந்த பகுதியில் என் கவனத்தை ஈர்த்த நிகழ்வுகள் பகிரப்படும். எதிர்க்குரலின் முதன்மை பக்கத்திற்கு செல்ல <<இங்கே>> சுட்டவும்.

****

டைனாசர் இல்லையாம், பல்லியாம் 😊 😊

பறவைகள் எப்படி தோன்றின? சிறிய அளவிலான டைனாசர்களுக்கு காலப்போக்கில் இறக்கைகள் முளைத்து பறவைகள் தோன்றியதாக ஒரு கோட்பாடு உண்டு. இதனை அவ்வப்போது நிரூபிக்க முயற்சித்து மண்ணை கவ்வுவது பரிணாம ஆய்வாளர்களின் வழக்கமாகும். இந்த கோட்பாட்டை உற்று நோக்கினால் இதில் ஒரு திணுசான பிரச்சனை இருப்பதை புரிந்துக்கொள்ளலாம். 

அதாவது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான டைனாசர்கள் கூட சில கிலோ எடை கொண்டவை. ஆனால் பறவைகளில், வெறுமனே இரண்டு கிராம் மட்டுமே எடை கொண்டவை கூட உண்டு (படம் 2). அப்படியானால் எப்படி கிலோ கணக்கில் எடை கொண்ட டைனாசர்கள், கிராம் கணக்கில் எடை கொண்ட பறவைகளாக மாறியிருக்க முடியும்? எங்கேயோ இடிக்குதே என்று குழம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலாக ஒரு செய்தி கிடைத்தது. 

99 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு உயிரின மண்டை ஓடு, மரப்பிசின்களில் அருமையாக பாதுகாக்கப்பட்டு கிடைத்தது (படம் 1). வெறும் 14 மில்லி மீட்டர் நீளம் மட்டுமே கொண்ட அந்த விசித்திரமான மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் இந்த உயிரினத்தின் மொத்த எடை இரண்டு கிராம் மட்டுமே இருக்கும் என்பதையும் கண்டறிந்தார்கள். பின்னர், இந்த உயிரினம் ஒரு டைனாசர் என்றும், பறவைகளுக்கான தன்மைகளும் இதில் காணப்படுவதாக புளங்காகிதம் அடைந்தார்கள். அப்படியானால் பறவைகள் எப்படி டைனாசர்களில் இருந்து தோன்றியிருக்கும் என்பதற்கு ஆதாரம் கிடைத்து விட்டதாக ஆய்வாளர்கள் கூற, பரிணாம உலகம் இந்த செய்திக்கு பெரிய முக்கியத்துவத்தை கொடுத்தது. 


கடந்த மார்ச் மாதம், இந்த உயிரினம் குறித்த ஆய்வுக்கட்டுரை பாரம்பரியமிக்க 'நேச்சர்' ஆய்விதழில் வெளியானது. இதுவரை கண்டுடெடுக்கப்பட்டதிலேயே இதுவே மிகச் சிறிய டைனாசர் என மீடியாக்கள் அங்கலாய்த்தன. அந்தோ பரிதாபம், மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், அந்த ஆய்வுக்கட்டுரையை நேச்சர் இதழ் சத்தமில்லாமல் நீக்கிவிட்டது. என்னவென்று பார்த்தால், இதே போன்ற மற்றுமொரு எலும்பு ஆதாரம் கிடைத்ததாகவும், அதனை ஆய்வு செய்து பார்த்ததில், இது டைனாசர் எல்லாம் இல்லை, சந்தேகத்திற்கு இடமில்லாமல் அது பல்லி-யினுடைய எலும்பே என்பது நிரூபணம் ஆனதால் வேறு வழி இல்லாமல் மார்ச் மாத கட்டுரை தூக்கப்பட்டு விட்டது தெரிய வந்திருக்கிறது. 



ஆக, அது குட்டி டைனாசர் இல்லை, வெறும் பல்லி மட்டுமே. டைனாசரில் இருந்து பறவைகள் வந்தன என்ற கோட்பாட்டை இப்போதாவது நிரூபித்து விட்டோம் என்ற நினைத்து சந்தோசப்பட்ட பரிணாம ஆய்வாளர்களின் நினைப்பில் இந்த முறை மண்ணை வாரி போட்டு விட்டது பல்லி. இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.

படம் 1: மரப்பிசின்-னில் பாதுகாக்கப்பட்ட மண்டை ஓடு
படம் 2: உலகின் மிக எடை குறைந்த பறவையான Bee Hummingbird (2.6 கிராம் மட்டுமே எடை)

செய்திக்கான ஆதாரம்: https://gizmodo.com/weirdest-fossil-wasnt-a-dinosaur-after-all-1844620218


****

இந்த செய்தியை படித்துக்கொண்டு வரும்போது உற்சாகம் அப்படியே ஜிவ்வென ஏறியது 😊 'Proof Reading' என்ற வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, ஒரு கட்டுரையை எழுதிய பிறகு, அதிலுள்ள சொற்பிழைகள் அல்லது பொருள் பிழைகளை வரிக்குவரி சரி பார்ப்பதையே இது குறிக்கும். இப்படியான 'Proof Reading' செயல்பாடு நம் உடலில் மிக நேர்த்தியாக நடக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வொன்று சுவாரசியமாக விளக்கினால் எப்படி உற்சாகம் தொற்றாமல் இருக்கும் !!!!! 

நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இவை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரிந்து, புதிய செல்கள் உருவாகின்றன. ஒரு செல் பிரிய தயாராகும் போது, அதிலுள்ள மரபணுக்கள் (DNA) பிளந்து புதிய மரபணுக்கள் உருவாகின்றன. சரி, புதிதாக உருவான மரபணுக்களில் பிழை இருந்தால்? அப்படி பிழை இருந்தால் அதனை 'மரபணு மாற்றம்' என்று நாம் கூறுவோம். இப்படியான பிழைகள் மிக அரிது என்ற போதிலும், இவை நடந்துவிட்டால் பல்வேறு விதமான புற்றுநோய்களுக்கு நம் உடல் இலக்காகும். 



ஆக, இந்த பிழைகளை திருத்துவது மிக அவசியமாகிறது. எப்படி நம் உடல் இதனை செய்கிறது? MutS மற்றும் MutL எனப்படும் இரண்டு புரதங்கள் இணைந்து இந்த பிழை திருத்தும் பணியை செய்கின்றன. எப்படி ஒரு கட்டுரையை நாம் வரிக்குவரி சரி பார்ப்போமோ, அதுபோல, MutS புரதமானது, புதிதாக உருவான மரபணு இழையில் தன்னை இணைத்துக்கொண்டு வரிக்குவரி சரி பார்த்துக்கொண்டே வருகிறது. எங்காவது பிழையை கண்டுவிட்டால், அந்த இடத்தில் அப்படியே நங்கூரமிட்டு உட்கார்ந்துக் கொண்டு MutL புரதத்தை துணைக்கு அழைக்கிறது. விரைந்து வரும் MutL, பிழை இருக்கும் பகுதியை மார்க் செய்கிறது. பின்னர் இன்னும் சில புரதங்களுடன் இணைந்து மார்க் செய்யப்பட்ட பகுதி அழிக்கப்படுகிறது.     

பிறகு, அழிக்கப்பட்ட இடத்தில், பிழை இல்லாத மரபணு பகுதி திரும்பவும் உருவாக்கப்படுகிறது. இப்படியாக மரபணு மாற்றங்களில் இருந்து நம் உடல் காப்பாற்றப்பட்டு புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. இது மட்டுமல்ல, பிழை நீக்கப்படும் வரை, அது சார்ந்த செல்லின் செயல்பாடு முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. அதாவது பிழை சரி செய்யப்படும்வரை 'செல் பிரிதல்' எனும் வழக்கமான செயல்பாடு நடக்காது. இதன் மூலம், பிழையான மரபணுக்கள் மற்ற செல்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது !!!!!

கற்பனைக்கு எட்டாத இந்த வியப்பான கட்டமைப்பை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், நாம் முன்னர் எண்ணிக்கொண்டிருந்ததில் இருந்து இந்த செயல்பாடு வித்தியாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சி படைப்பின் ஆழத்தை, அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறது என்றால் அது மிகையல்ல. குர்ஆன், பல இடங்களில், இறைவனின் படைப்பில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் இருப்பதாக கூறுகிறது. அது சத்தியமான உண்மை என மற்றோரு முறை நிரூபணமான தருணம் இது. 

செய்திக்கான ஆதாரம்: https://www.sciencedaily.com/releases/2020/07/200716123002.htm

****

சகோதரர் யோரம் (Joram van klaveren), இன்று இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது எனும் அளவு பிரபலமாகிவிட்டார். மேற்குலக கடும்போக்கு வலதுசாரிகளின் செல்லப் பிள்ளையாக இருந்து பின்னர் இஸ்லாமை தழுவி பெரும் அதிர்வை உண்டாக்கியவர். இவருடைய இஸ்லாமிற்கு எதிரான செயல்களை பார்த்தோமென்றால், 'ஓரமா போய் விளையாடுங்க' என்று நம்மூர் வலதுசாரிகளை சொல்லி விடுவோம்.

உதாரணத்திற்கு, இவர் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். நெதர்லாந்து பாராளுமன்றத்தின் மையப்பகுதியில் குர்ஆன், பைபிள் மற்றும் தோராஹ் ஆகிய நூல்கள் வைக்கப்பட்டிருப்பது இந்நாடு காலங்காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கமாகும். யோரம் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து குர்ஆனை அவையில் இருந்து அகற்ற செய்தார், இஸ்லாமை தடை செய்யவும் குரல் கொடுத்தார். பின்பு, மதசார்பற்ற நெதர்லாந்து அரசு, குர்ஆன் இல்லாமல் மற்ற நூல்கள் மட்டும் அவையில் இருப்பது நாட்டின் இறையாண்மைக்கு நல்லதல்ல என்று கூறி பைபிளையும், தோராஹ்வையும் அகற்றியது. இப்படியான ஒருவர் இஸ்லாமின்பால் வந்தால் எப்படி இருக்கும்? வலதுசாரிகள் மத்தியில் பூகம்பமே வெடித்தது. இதற்கு வாய்ப்பே இல்லை என நம்ப மறுத்தனர்.


இப்படியான வரலாறுக்கு சொந்தக்காரரான யோரம், இன்று நபிமொழிகளை அரபியிலேயே மேற்கோள் காட்டும் அளவு வளர்ந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய அழைப்பாளரான டாக்டர் சபீல் அஹமத் அவர்களுக்கு அளித்த பேட்டியில், தான் எப்படி இஸ்லாமை நோக்கி வந்தேன் என்பது குறித்து சில அழகான சம்பவங்களை விவரித்து இருந்தார்.

"2014-ல் இஸ்லாமிற்கெதிரான நூல் ஒன்றை எழுத தொடங்கினேன். இந்நூலிற்கு தேவைப்பட்ட தகவல்களுக்காக பலருக்கும் கடிதம் எழுதினேன். அப்படி நான் எழுதியவர்களில் ஒருவர் தான், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரான அப்துல் ஹக்கீம் முராத். 1970-களில் இஸ்லாமை தழுவிய முராத் தற்போது அரபி பயிற்றுவித்து கொண்டிருக்கிறார். இஸ்லாம் குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவரிடம் விளக்கம் கேட்டிருந்தேன். நிச்சயமாக பதில் வராது என்றே எண்ணினேன். ஆனால் பதில் வந்தது. என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து இருந்தார் முராத்.

கூடவே, குட்டையில் அமர்ந்துக் கொண்டு கேள்வி எழுப்பாதீர்கள். அதிலிருந்து வெளியே வாருங்கள், வெளியே ஒரு தோட்டமும், இஸ்லாம் எனும் அழகான மாளிகையும் இருக்கிறது. அதனுள் சென்று உக்கார்ந்து கேள்வியை கேளுங்கள் என்று அவர் சொன்ன கருத்து என்னை சிந்திக்க வைத்தது. முராத்-துடன் நடந்த கடித போக்குவரத்து, இஸ்லாம் நான் எண்ணியது போல மோசமில்லை என்ற கருத்தை வலுப்பெற வைத்தது. முஹம்மது நபி குறித்து தீவிரமான நெகட்டிவ் பார்வை என்னிடம் இருந்தது. மார்ட்டின் லிங்க்ஸ் எழுதிய முஹம்மது நபி பற்றிய நூலை படித்துக்கொண்டு வரும் போது, ஹிந்த் (ரலி) அவர்கள் குறித்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.

நபியின் சிறிய தந்தையை ஆள் வைத்து கொன்றதோடு மட்டுமல்லாமல் சடலத்தை சிதைத்தவர் ஹிந்த். இந்த செய்தியை கேட்டு நபி அழுதிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு பின்பு, முஹம்மது நபி (ஸல்) ஆட்சியாளராக இருக்கிறார், நபியை சந்திக்க வருகிறார் ஹிந்த் (ரலி). நிச்சயம் முஹம்மது (ஸல்) பழிவாங்க போகிறார் என்ற எதிர்பார்ப்போடு படிக்கிறேன். ஆனால் ஹிந்த் (ரலி) அவர்களை இஸ்லாமிற்கு வரவேற்றதோடு மட்டும் இல்லாமல் அவரை மன்னித்தும் விட்டார் நபி. இவ்வளவு கருணைமிக்கவரையா நான் தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

இஸ்லாம் குறித்து ஆழமாக படிக்க ஆரம்பித்த பிறகு அதன் மீது இருந்த வெறுப்பு விலகியது. இஸ்லாம் மிகவும் லாஜிக்கான மார்க்கமாக தோன்றியது. என்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பு நூல், அதன் பாதியிலேயே, இஸ்லாமிய ஆதரவு நூலாக மாறியது (பார்க்க படம்). இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். அம்மாவிடம் சொன்ன போது அவர் அழுதார், வேண்டாம் என்று சொன்னார், அல்லது குறைந்தபட்சம் உனக்குள்ளாகவே வைத்திரு வெளியே சொல்லாதே என்றார். அது எப்படி சாத்தியம்? இத்தனை நாட்களாக இஸ்லாமை எதிர்த்து வந்தேன். அதே மக்களிடம் சென்று நான் முஸ்லிமாகி விட்டேன் என்று சொல்வது தானே சரியானதாக இருக்கும்? இச்சம்பவம் நடந்து சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு என்னிடம் வந்தவர், நீ முன்பை விட இனிமையானவனாக மாறிவிட்டாய் என்றார் (சிரிக்கிறார்)"

சகோதரர் யோரம்-மின் மனமாற்றம் நெதர்லாந்து சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள மக்களை தூண்டியிருக்கிறது. தன்னுடைய அமைப்பின் மூலம், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், சிறைச்சாலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று இஸ்லாம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் யோரம்.

டாக்டர் சபீல் அஹமத்துடனான இவரது முழுமையான உரையாடலை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=11vOvqrfFAA

****

ஜெருசலம் நகரில் யூதர்கள் பெரும்பான்மையா? அது உண்மையா?

இன்றைய தேதியில் யூதர்கள் பெரும்பான்மையாக இங்கே ஆக்கிரமித்து இருந்தாலும் (யூதர்கள் 60%, முஸ்லிம்கள் 33%), ஒரு முக்கிய விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இன்றைய ஜெருசலம் நகரத்தை எப்படி நாம் புரிந்துக்கொள்கிறோம் என்பதில் தான் விசயம் இருக்கிறது.

இன்றைய ஜெருசலம் என்பது வரலாற்றில் நாம் படித்த / கேட்ட ஜெருசலம் அல்ல. அல் அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட இஸ்லாமிய, யூத, கிருத்துவ புனிதத்தலங்கள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நகரானது, இன்று, பழைய நகரம் (Old City) என்றழைக்கப்படுகிறது. சுமார் 0.9 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த பழைய நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தான் இன்றைய நவீன ஜெருசலம் உருவாக்கப்பட்டது. ஆக, பழைய நகரம் என இன்று அழைக்கப்படும் பகுதி தான் வரலாற்றில் நாம் படித்த ஒரிஜினல் ஜெருசலம்.

சரி, விசயத்திற்கு வருவோம். இந்த பழைய நகரத்தின் இன்றைய மக்கட்தொகை சுமார் 37,000 ஆகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மை. அதாவது, ஒரிஜினல் ஜெருசலத்தின் இன்றைய மக்கட்தொகையில் 81% மக்கள் முஸ்லிம்களாவர். யூதர்கள் 9% இருக்கின்றனர்.

ஜெருசலத்தை சர்வதேச விதிகளுக்கு மாறாக ஆக்கிரமிப்பாளர்கள் (இஸ்ரேல் ??) நிர்வகித்தாலும், இப்பகுதியில் முஸ்லிம்களை பெரும்பான்மை இழக்க செய்ய வேண்டும் என்ற அவர்களின் முயற்சி இன்று வரை எடுபடவில்லை. முஸ்லிம்களும் கூட மக்கா, மதினாவிற்கு அடுத்து தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்நகரில், எப்படியான தியாகத்தை கொண்டும், தங்கள் இருப்பை உறுதி செய்து விட எண்ணுகின்றனர்.

ஆக, வரலாற்றில் நாம் கண்ட நிலப்பகுதி தான் ஜெருசலம் என்றால், அங்கே, இன்று பெரும்பான்மையாக இருப்பது முஸ்லிம்கள் தானே ஒழிய யூதர்கள் அல்ல. பொதுவாகவே, பாலஸ்தீனியர்கள் நெஞ்சுரம் மிக்கவர்கள், போராட்ட மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் கஷ்டங்களை நீக்கி, விரைவில் வெற்றியை இறைவன் தந்தருள்வானாக...

****

இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்ட போது கட்டிட கலையின் மாஸ்டர்பீஸ் எனவும், ஐரோப்பாவின் மிக அழகிய மசூதிகளில் ஒன்றாகவும் வர்ணிக்கப்பட்டது. வெறுமனே அழகு என்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பயன் தரும் வேறு பல தனித்துவங்களும் இந்த பள்ளிவாசலில் இருந்தன. குரோஷியாவின் மூன்றாவது பெரிய நகரமான Rijeka-வில் அமைந்துள்ளது இந்த பள்ளி. இந்நகரத்தின் முஸ்லிம் மக்கட்தொகை சில ஆயிரம்களை தொட்ட நிலையில், தங்களுக்கான முதல் மசூதியை கட்டமைக்க முயன்றனர் இந்நகர முஸ்லிம்கள்.



இவர்களின் பரந்து விரிந்த பார்வையானது, தொழுகைக்கான இடமாக மட்டும் இந்த பள்ளிவாசல் இல்லாமல் மேலும் பல பயன்களுக்கும் வழிவகுத்தது. ஒரு நூலகம், சமுதாயக் கூடம், அழைப்பு பணி மேற்கொள்வதற்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பகுதிகள், பயிற்றுவிக்கும் கூடம், இஸ்லாமிய வழியிலான ஆரம்ப பள்ளிக்கூடம் என 10,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மசூதியில் இவை அனைத்தையும் அடக்கினர். இவ்வளவு ஏன், உணவகம் கூட இந்த மசூதியில் உண்டென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 2009-ல் தொடங்கி 2013-ல் முடிக்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டுமான பணியில் கணிசமான பங்கு கத்தார் அரசிற்கு உண்டு.


இம்மக்களின் தொலைநோக்கு பார்வைக்கு இன்று பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. உணவு, புத்தகங்கள் என சகல வசதிகளும் இருப்பதால், இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள வரும் பிற சமய மக்கள், பொறுமையாக ஒரு முழு நாளையும் கூட இங்கே கழிக்கின்றனர். குரோஷியாவின் இரண்டாவது பெரிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே இஸ்லாமை தழுவிய பூர்வ குடிமக்களாவர். தங்களின் அணுகுமுறையின் மூலம் சீராக வளர்ந்துவரும் இந்த சமுதாயம் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

****

அசைவ செடிகளும், குழப்பங்களும்..... 

சில வகை செடிகள் பூச்சிகளை உணவாக கொள்கின்றன. இந்த மர்மத்திற்கு விடை அறிய ஜெர்மானிய மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் முயற்சித்த போது ஆச்சர்யமான உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. மேற்கொண்டு நான் சொல்ல போவதை புரிந்துக்கொள்ள சில அடிப்படையான விஷயங்களை நாம் தெரிந்திருக்க வேண்டும்.

பரிணாம கோட்பாட்டின் படி, ஒரு உயிரினம் முன்னேறிய ஒன்றாக (advanced) மாறும் போது, முன்பை காட்டிலும் அதற்கு மரபணுக்கள் அதிகரித்து இருக்க வேண்டும். உதாரணமாக, சைவ பட்சிணியான செடிகள், அசைவு உணவை எடுத்துக்கொள்ளக்கூடிய முன்னேறிய உயிரினங்களாக மாறும் போது, சைவ செடிகளைக் காட்டிலும் அசைவ செடிகளிடம் அதிகப்படியான மரபணுக்கள் காணப்பட வேண்டும். இதுவே பரிணாம 'வளர்ச்சி'யாகும்.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம். ஆசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படும் சில அசைவ செடிகளை ஆய்வுக்கு பயன்படுத்தினர். அவை Drosera, Dionaea மற்றும் Aldrovanda (பார்க்க படங்கள்). முடிவுகள் பேரதிர்ச்சியை கொடுத்தன. சைவ செடிகளில் இருந்து தான் அசைவ செடிகள் வந்தன என்று பரிணாம உலகம் நம்புகிறது. அப்படியானால் அசைவ செடிகளில் அதிகப்படியான மரபணுக்கள் இருக்க வேண்டும். ஆனால், ஆய்வின் முடிவுகளோ இதற்கு எதிராக இருந்தன.




எப்படியென்றால் பெரும்பாலான சைவ செடிகளில், மரபணுக்கள், 30,000 மற்றும் 40,000-திற்கு இடைப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அசைவ செடிகளிலோ, மரபணுக்களின் எண்ணிக்கை, 18,000 - 25,000 என்ற அளவிலேயே இருந்திருக்கிறது. இது எப்படி சாத்தியம் என இப்போது குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆக, பரிணாம எதிர்பார்ப்பின் படி முடிவுகள் வராமல், பரிணாம எதிர்ப்பாளர்களின் விருப்பப்படி முடிவுகள் வந்திருக்கிறது :-).

பரிணாம 'வளர்ச்சி'யானது, பரிணாம 'வீழ்ச்சி'யான பல தருணங்களில் இதுவும் ஒன்று.

செய்திக்கான ஆதாரம்: https://www.sciencedaily.com/releas…/2020/…/200514131733.htm

****

ரஷ்யா & இஸ்லாம்.......

பிரபல சர்வே நிறுவனமான Pew Research center, சென்ற வருடம் ரஷ்ய மக்களிடம் இஸ்லாம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. அதில், 76% ரஷ்யர்கள் இஸ்லாம் மீது நன்மதிப்பை கொண்டிருப்பதாக தெரிவித்தனர். மக்கள் மட்டும் அல்ல, ரஷ்ய அரசியல்வாதிகளும் கூட இஸ்லாமை தங்கள் பாரம்பரியத்தின் பிரிக்கமுடியா சக்தி என்றும், தங்கள் நாட்டை கட்டமைத்ததில் கணிசமான பங்கு இம்மார்க்கத்திற்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனாலேயே ரஷ்ய அரசியலமைப்பு இஸ்லாமிற்கு கவுரவமான இடத்தை கொடுத்திருக்கிறது.

ரஷ்யாவின் இன்றைய முஸ்லிம் மக்கட்தொகை 17% ஆகும் (சுமார் 2.5 கோடி). இதுவே 2050 - ஆம் ஆண்டு வாக்கில் முப்பது சதவிதத்தை தாண்டும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் மட்டும், முஸ்லிம்களின் மக்கட்தொகை சுமார் பத்து லட்சமாகும். முஸ்லிம்கள் இல்லையென்றால் மாஸ்கோவின் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியாது என இந்நகரத்தின் மேயர் ஒருமுறை குறிப்பிட்டது இங்கே கவனிக்கத்தக்கது.

ரஷ்யாவின் முஸ்லிம் பெரும்பான்மை குடியரசுகள் ஏழு ஆகும். செசன்யா, டகெஸ்டான், டாடரஸ்தான் ஆகியவை இதில் அடங்கும். வெளியுறவு மற்றும் ராணுவம் தவிர்த்து மற்ற அனைத்தையும் இவர்களே தீர்மானித்துக்கொள்ளலாம். ரஷ்யா குறித்த உரையாடல் என்றால் அதில் செசன்யா இல்லாமல் இருக்காது. சோவியத் உடைந்த போது தங்களையும் தனி நாடாக அறிவித்துக்கொண்டார்கள் செசன்னியர்கள். பின்னர் ரஷ்யாவுடன் இரு போர்கள். முடிவில் தங்களுடன் செசன்யாவை மறுபடியும் இணைத்துக்கொண்டது ரஷ்யா. இன்று, ரஷ்ய அரசின் பாசிட்டிவ் அணுகுமுறைகளால், செசன்யாவில் பிரிவினைவாதம் குறைந்து அமைதி நிலவுகிறது.

சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்வி/ஆன்மீக நிறுவனங்கள் ரஷ்யாவில் இயங்குகின்றன. இவற்றிற்கு மானியமும் வழங்குகிறது ரஷ்ய அரசு. டாடர் இன முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் டாடரஸ்தான் குடியரசின் தலைநகரான கசன் தான் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இரண்டாவது பெரிய ரஷ்ய நகரமாகும் (மாஸ்கோவிற்கு முதல் இடம்). இந்நகரில் அமைந்திருக்கும் Qolsarif பள்ளிவாசல், ஐரோப்பாவின் மிகப்பெரும் பள்ளிவாசல்களில் ஒன்றாகும் (படம் 1)


இரு பெருநாள் தினத்துடன், மற்றொரு தினத்தையும் தேசிய விடுமுறையாக அறிவித்திருக்கிறது டாடரஸ்தான் அரசு. அது என்னவென்றால், இவர்களின் மூதாதையர் இஸ்லாமை தழுவிய நாள் தான் அது. 922 - ஆம் ஆண்டு, மே 21-ல் டாடர் இன மக்கள், பாக்தாத்-திலிருந்து வந்த முஸ்லிம் மக்களின் பிரச்சாரத்தால் இஸ்லாமை தழுவினராம். ஆகவே அந்நாளை தேசிய விடுமுறையாக கொண்டாடுகிறது இந்த குடியரசு. டாடர் இன மக்களில் ஐவரில் ஒருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞராக இருக்கிறார். டகெஸ்டான் குடியரசில் பல்வேறு இஸ்லாமிய பல்கலைக்கழகங்களும், மதரசாக்களும் செயல்படுகின்றன.

ரஷ்யாவின் Norilsk நகரில் அமைந்துள்ள நார்ட் கமால் மசூதி தான் (படம் 2), உலகின் வடக்கோடியில் அமைந்துள்ள பள்ளிவாசலாகும். இதனை டாடர் இன மக்கள் நிர்வகிக்கின்றனர். எட்டாயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ள ரஷ்யாவில் இருந்து, வருடந்தோரும் சுமார் 20,000 முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கையை 28,000-மாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து சவுதி மன்னரை வலியுறுத்தி வருகின்றனர் ரஷ்யர்கள்.


யாரும் எதிர்பாரா வண்ணம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் (OIC) சேர விருப்பம் தெரிவித்தது ரஷ்யா. தற்பொழுது OIC-யில் பார்வையாளர் அந்தஸ்த்தில் இருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலும், அதற்கு பின்பான ரஷ்யாவிலும் நாம் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உண்டு. மக்கள் மனதில் ஆழமாக குடியேறிய ஒரு கொள்கையை அடக்குமுறையால் எல்லாம் வென்றுவிட முடியாது. என்றாவது ஒருநாள் அது உங்களை நிச்சயம் மிகைத்துவிடும். அப்பொழுது, அரவணைத்து செல்வது மட்டுமே உண்மையான வெற்றி என்ற நிதர்சனம் புரியவரும்.


படம் 3: செசன்ய தலைநகர் க்ராஸ்னி-யில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி.

இப்பதிவுக்கான ஆதார ஊடகங்கள்:
Pew Research, BBC, TRT World, The Times, NewsWeek, Russian Population census & Wikipedia

படங்களுக்கு நன்றி:
Wikipedia & TRT World.

****

போலி அறிவியலுக்கு மற்றுமொரு பின்னடைவு......எத்தியோப்பியாவின் கோன்சோ-கர்டுலா எனும் இடம் ஒரு விசயத்திற்கு உலக பிரசித்திப்பெற்றது. ஆதி கால மனிதர்களின் வாழ்வு குறித்த நிறைய ஆதாரங்கள் இங்கே கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கின்றன. அப்படியாக இங்கே கண்டுப்பிடிக்கப்பட்ட ஒன்று தான் மிருக எலும்பில் செய்யப்பட்ட கோடாரி (பார்க்க படம்).


சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய இந்த கோடாரியானது, முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த காலக்கட்டத்திய கோடாரிகள் கற்களால் செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவோ மிருக எலும்பினால் செய்யப்பட்டிருந்தது. இப்படியான ஆதாரங்கள் கிடைப்பது மிக அரிது என்பதால் அறிவியல் உலகம் இதனை உன்னிப்பாக கவனித்தது.

'எங்களுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. நீர் யானையின் கால் எலும்பில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த கோடாரி மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த மனிதர்கள் நாம் நினைத்ததை விடவும் அதி நவீன தொழில்நுட்பத்தையும், பல் துறை அறிவும் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர்' என்கின்றனர் இந்த ஆய்வை நடத்திய ஜப்பான் ஆய்வாளர்கள்.

ஒன்றை கவனித்தீர்களா? ஆதி மனிதர்கள் குறித்த ஆதாரங்களும், ஆய்வுகளும் அதிகமாக அதிகமாக, இந்த மனிதர்கள் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர் :-).

ஆதிமனிதன் தான் தோன்றியதில் இருந்தே அறிவில் மேம்பட்டவனாகவே இருந்திருக்கிறான். பரிணாம பார்வையில், ஆதி மனிதர்கள் அறிவில் குறைந்தவர்களாகவும், காலப்போக்கில் அறிவில் சிறந்தவர்களாக மாறியதாகவும் எண்ணுவதாலேயே, இப்படியான ஆய்வு முடிவுகள் வெளிவரும் போது ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைகின்றனர். பிரச்சனை ஆதி மனிதர்களிடம் இல்லை, சில ஆய்வாளர்களிடம் தான்.

செய்திக்கான ஆதாரம்: https://www.sciencenews.org/…/homo-erectus-hand-ax-stone-ag…

****

பெர்கே கான் (Berke Khan), மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானின் பேரனான இவருக்கு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த இவர் தான், இஸ்லாமை தழுவிய முதல் மங்கோலிய பேரரசர் ஆவார்.

பெர்கே கானின் உருவகப்படம்

செங்கிஸ்கான், தான் ஆட்சி செய்த பரந்த நிலப்பரப்பை தன் மகன், பேரன்களுக்கு நான்கு பகுதிகளாக பிரித்து கொடுத்திருந்தார். இதில் கோல்டன் ஹோர்ட் (இன்றைய மத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள்) பகுதியை ஆண்டார் பெர்கே.

புகாரா நகரில் ஒரு வணிக குழுவை சந்தித்த பெர்கே, அவர்களின் இஸ்லாமிய சொற்பொழிவால் கவரப்பட்டு இஸ்லாமை தழுவினார். இந்த தருணம் உலக அரசியலிலும் கூட ஒரு முக்கிய நிகழ்வாகும். காரணம், மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த மங்கோலிய படைகள் பெர்கேவின் இஸ்லாமிய தழுவலால் தடுமாற்றத்தை சந்தித்தன.

மங்கோலிய படைகளால் பல அப்பாவி உயிர்கள் பறிபோவதாக குற்றம் சாட்டிய பெர்கே, மற்ற முஸ்லிம் மன்னர்களுடன் இணைந்து தன் உறவினர்களான ஏனைய மங்கோலிய அரசர்களை எதிர்க்க ஆரம்பித்தார். தோல்வியையே சந்திக்காத படைகள் என்றழைக்கப்பட்ட மங்கோலிய படைகள் தொடர் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தன.

தன் உறவினர்களுக்கும் இஸ்லாமை எடுத்துரைத்தார் பெர்கே. ஒரு கட்டத்தில், செங்கிஸ்தான் பிரித்து கொடுத்த நான்கு பகுதிகளில், மூன்று பகுதிகள் முஸ்லிம் மங்கோலிய மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அத்தோடு செங்கிஸ்தான் தோற்றுவித்த மங்கோலிய பேரரசும் காலப்போக்கில் முடிவுக்கு வந்தது.

பெர்கேவின் காலத்திற்கு பிறகு, செங்கிஸ்கானின் வழி தோன்றல்கள் பலரும் இஸ்லாமின்பால் வந்தனர். தைமூர், பாபர் என இந்த லிஸ்ட் பெரியது என்பதும், மிகப்பெரிய நிலப்பரப்புகளை அவர்கள் ஆண்டனர் என்பதும் நாம் எல்லாம் நன்கறிந்த வரலாறு.

****

வெட்டுக்கிளிகள். குர்ஆன், மண்ணறையிலிருந்து எப்படி மனிதர்கள் தீர்ப்பு நாளில் எழுப்பப்படுவார்கள் என்பதற்கு இவற்றை உதாரணம் காட்டுகிறது (குர்ஆன் 54:7).

வெட்டுக்கிளிகள் வேகமாகவும், அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு வெட்டுக்கிளி அதிகபட்சம் 300 முட்டைகள் வரை இடும். மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்து இவற்றின் சந்ததிகள் வெளியே வருகின்றன. ஒரு சதுர கிலோ மீட்டரில் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் வரைக்கூட வெளியே வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.


வெட்டுக்கிளி படையெடுப்பு எனும் விசித்திர செய்தியானது ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகும். எந்த அளவிற்கு என்றால், 1895-ஆம் ஆண்டு அமெரிக்கா/கனடாவில் நடந்த வெட்டுக்கிளி படையெடுப்பு 2900 கிலோமீட்டர் நீளத்திற்கும் , 180 கிலோமீட்டர் அகலத்திற்கும் இருந்தது. இதில் பங்கெடுத்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் கோடியாகும். இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

தீர்ப்பு நாளின் போது, வெட்டுக்கிளிளை போல மனிதர்கள் வெளியேறுவார்கள் என குர்ஆன் கூறும் போது, அந்நிகழ்வு எப்படியான பிரமாண்ட ஒன்றாக இருக்கும் என்பதை இதனை தாண்டி மிக சிறப்பாக விவரிக்க முடியாது. நிச்சயமாக, சிந்திப்பவர்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

****

வெரி குட். அடுத்த நம்பிக்கையில் கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை அடிப்படையிலேயே கை வைத்துவிட்டார்கள். இந்த செய்தியை புரிந்துக்கொள்ள முதலில் நாம் நம்முடைய ஸ்கூல் காலத்திற்கு சென்று வந்து விடுவோம். உயிரின செல்கள் இரண்டு வகைப்படும். ஒன்ற Procaryote, மற்றொன்று Eucaryote. 

Eucaryote வகை செல்கள் பல்வேறு மண்டலங்களை தன்னுள்ளே கொண்டவை. ஒவ்வொரு மண்டலமும் தனித்துவமான வேலைகளை செய்து உடல் இயக்கத்திற்கு உதவி செய்கின்றன. மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களில் இவ்வகை செல்கள் காணப்படுகின்றன. 

Procaryote வகை செல்கள், மண்டலங்கள் இல்லாத மிக எளிமையான கட்டமைப்பை கொண்டவை. பாக்டீரியா உள்ளிட்ட உயிரினங்களில் இவை காணப்படுகின்றன. பரிணாம புரிதலின்படி, எளிமையான Procaryote செல்களில் இருந்து சிக்கலான வடிவமைப்பை கொண்ட Eucaryote செல்கள் தோன்றியதாக காலங்காலமாக  நம்பப்பட்டு வருகிறது. எப்படி மற்ற பரிணாம நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லையோ அது போல இதற்கும் ஆதாரம் கிடையாது. இருந்தாலும் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

சரி நாம விசயத்திற்கு வருவோம். Procaryote செல்கள், மண்டலங்கள் இல்லாத எளிமையான கட்டமைப்பை கொண்டவை என்ற நம்பிக்கையில் தான் தற்போது மண் விழுந்திருக்கிறது. கடந்த சிலபல ஆண்டுகளாக மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை கொண்டு பாக்டீரியாக்களில் நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், Procaryote செல்களிலும் சிக்கலான கட்டமைப்பை கொண்ட பல்வேறு மண்டலங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றன. 


உதாரணத்திற்கு, Eucaryote செல்களுக்கு ஆற்றலைக் (energy) கொடுக்கும் Mitochondria மண்டலம் இருப்பது போல,  Procaryote செல்களுக்கு ஆற்றலை கொடுக்க Anammoxosome மண்டலம் உள்ளது. ஆச்சர்யம் என்னவென்றால், இந்த Procaryote மண்டலங்களில் சில, Eucaryote மண்டலங்களை ஒத்திருந்தாலுல், பல மண்டலங்கள் தனித்துவமாக இருக்கின்றன. 

இன்னும் வியப்பு என்னவென்றால், எல்லா வகை பாக்டீரியாக்களிலும் இந்த  மண்டலங்கள் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு வகைக்கும் வேறுபடுகின்றன. இதெல்லாம் நீண்ட கால நம்பிக்கைகளுக்கு ஷாக் கொடுக்கக்கூடிய கண்டுபிடிப்புகள். 

ஆக, Eucaryote செல்களை போல, Procaryote செல்களும் சிக்கலான வடிவமைப்பை கொண்டவை தான் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், Procaryote-டிலிருந்து Eucaryote வந்ததாக சொல்லப்பட்டு வந்த கதை கிழிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இப்போது எப்படி விளக்கத்தை மாற்றியிருக்கிறார்கள் என்றால், Procaryote Eucaryote ஆகிய இரண்டும் தனித்தனியே பரிணாமம் அடைந்ததாம். அடங்கோ :-) :-) 

நீங்க எதையாவது சொல்லிட்டு போங்க, நம்ம கிட்ட திணிக்காத வரைக்கும் ஒகெ...

படங்கள்: Procaryote மண்டலங்களை காட்டும் elecron micrograph & Reconstruction படங்கள்.
படங்களுக்கு நன்றி: Quanta Magazine


****

நீங்கள் படத்தில் பார்ப்பது ஒரு வித்தியாசமான பல்லி இனம். 


முதுகில் தடிமனான செதில்கள் கொண்ட இவை பலவகையில் மற்ற பல்லிகளிடம் இருந்து வேறுபடுகின்றன. இவை முட்டையிடுவதில்லை, மாறாக பெற்றெடுக்கின்றன. பாலூட்டவும் செய்கின்றன. பாலைவனங்களில் அதிகம் காணப்படும் இவை தங்களை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் முறையும் விநோதமாக இருக்கிறது. பயமுறுத்தப்பட்டால் தன் வாலை வாயில் கவ்விக்கொண்டு (பார்க்க படம்) ஒரு பந்து போல சுருள ஆரம்பித்து விடுகின்றன. இதனை தாண்டியும் எதிரிகள் நெருங்கினால் இவற்றின் தடிமனான முதுகு செதில்கள் எதிரிகளை திண்டாட வைத்துவிடும். இறைவனின் படைப்பில் தான் எத்தனை ஆச்சர்யங்கள் !!!!

****

தமிழகம் தவறவிட்ட டைனாசர் கதை.... 1989-ஆம் ஆண்டு, திருச்சியில், இரண்டு மீட்டர் நீளமுள்ள தாடை எலும்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அது அப்பகுதியில் வசித்திருக்கக்கூடிய டைனாசர் ஒன்றிற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது. இதில் வியப்பான தகவல் என்னவென்றால், தாடை எலும்பே இரண்டு மீட்டர் என்றால், அந்த விலங்கின் மொத்த நீளம் 34 மீட்டராக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டது. அப்படியானால், இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட டைனாசர்களிலேயே இது தான் பெரியது என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைக்கவிருந்த தருணம் அது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை அடுத்தது.

பிரமாண்டமான பாறைகளில் படிந்திருந்த இந்த எலும்பு படிமங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் காரணமாக சம்பந்தப்பட்ட இடத்திலேயே அதனை விட்டு வைத்திருந்தனர். அடுத்த வந்த மழைக்காலத்தில் அந்த படிமங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இந்த சம்பவத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சான்றாக, இன்று நம்மிடம் இருப்பதெல்லாம் மங்கிய நிலையில் உள்ள கறுப்பு-வெள்ளை புகைப்படம் மட்டுமே.

***

இது செமையான கண்டுபிடிப்பு. குரங்குகளுக்கும் இன்றைய மனிதர்களுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும், அறிவில் குறைந்தவர்கள் என்றும் கருதப்படும் நியாண்டர்தல் மனிதர்கள், வலி நிவாரணிகளையும் ஆண்டிபயாடிக்களையும் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. நியாண்டர்களின் பல் படிமங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த ஆச்சர்யமான செய்தியை நமக்கு தருகின்றன.


சுமார் நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த பற்படிமங்களை ஆய்வு செய்ததின் மூலம், எந்தவிதமான செடிகளை பயன்படுத்தினால் வலிகளையும், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கமுடியும் என்பதை அவர்கள் அறிந்திருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், இன்று நாம் பயன்படுத்தும் வலி நிவாரணியான ஆஸ்பிரினின் (Aspirin) மூலப்பொருள் சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) ஆகும். இந்த அமிலம் மிகுந்துள்ள செடிகளை நியாண்டர்தல் மனிதர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தியுள்ளனர்.  இது மட்டுமல்லாமல், பெனிசிலின் போன்ற ஆண்டிபயாடிக்  மருந்துக்கான மூலப்பொருட்களை கொண்டுள்ள செடிகளையும் நியாண்டர்தல்கள் பயன்படுத்தியுள்ளனர்.

பெனிசிலின் கண்டுபிடிப்பதற்கு நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான அறிவை நியாண்டர்தல் கொண்டிருந்தனர் என்பதெல்லாம் மிகுந்த வியப்பான செய்திகள். ஆனால் இப்படியான கண்டுபிடிப்புகள் கூட நியாண்டர்தல் மனிதர்கள் குறித்த தவறான பரிணாம பார்வையை மாற்றவில்லை என்பது இன்னும் வியப்பான விசயம்.

இந்த செய்திக்கான ஆதாரம்: https://goo.gl/qGLbkH

நியாண்டர்தல்கள் குறித்த என்னுடைய விரிவான ஆய்வுக்கட்டுரையை படிக்க: https://goo.gl/vT7RoO

***

விசித்திரத்திலும் விசித்திரம் என்ற பதம் உண்மையாக இருக்குமானால் அதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்த ப்ளாட்டிபஸ் (platypus). இன்று பலருக்கும் நன்கு அறிமுகமாகி இருக்கும் இந்த உயிரினம், முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது, மேற்குலக ஆய்வாளர்கள் நம்ப மறுத்துவிட்டனர். இப்படியான உயிரினம் இருப்பதாக கூறப்படுவது நன்கு கட்டமைக்கப்பட்ட பித்தலாட்டம் என்றே அவர்கள் எண்ணினர். அவர்களால் நம்ப முடியாததற்கு முக்கிய காரணம், ப்ளாடிபஸ்சின் உருவம். பல்வேறு உயிரினங்களில் இருந்து உறுப்புகளை எடுத்து ஒரு உயிரினமாக உருமாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ப்ளாட்டிபஸ்.


உருவம் மட்டுமில்லை, மேலும் பல்வேறு ஆச்சர்யங்களையும் தூக்கி போட்டது இந்த விலங்கு. முட்டையிடும் பாலூட்டி இனம், பாலூட்டிகளில் விஷத்தை பீச்சியடிக்கும் தன்மை கொண்ட உயிரினம் என்று ஆச்சர்யங்களை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, மரபணுக்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் அது இன்னும் விசித்திரமான செய்தியை சொல்லின. ஊர்வனவற்றின் மரபணுக்கள், நிலநீர் வாழ் உயிரினங்களின் மரபணுக்கள் என்று எல்லாம் இதன் உடலில் கலந்துக் கட்டி இருந்தன. இவ்வளவு ஏன், பறவைகளின் மரபணுக்கள் கூட இவற்றில் உள்ளன. இது இப்படி வந்தது, அது அப்படி வந்தது என்று பரிணாமவாதிகள் அடித்து விடும் வழக்கமான எந்த கதையும் இவைகளிடம் செல்லுபடியாகவில்லை என்பது கூடுதல் காமெடி செய்தி.

***

பர்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட ராம்ரீ தீவு ஒரு விசித்திரமான நிகழ்வுக்கு பெயர் பெற்றது. பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் மட்டுமின்றி மனித குலத்திற்கே கிலி உண்டாக்கிய சம்பவம் அது.

ஜனவரி 26, 1945. இரண்டாம் உலகப்போர் உச்சத்தை அடைந்திருந்த நேரம். ராம்ரீ தீவில் விமானத்தளம் அமைக்கும் முயற்சியில் இறங்கியது பிரிட்டன். இது சாத்தியமாக வேண்டுமென்றால் இத்தீவை ஏற்கனவே ஆக்கிரமித்து இருக்கும் ஜப்பானிய படைகளை துரத்த வேண்டும். சில வார உக்கிரமான சண்டைக்கு பிறகு பிரிட்டனின் கை ஓங்கியது.  ஜப்பானியர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

சரணடைய மறுத்த சுமார் ஆயிரம் ஜப்பானிய வீரர்கள் ராம்ரீ தீவின் சதுப்பு நில காடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். சுமார் பத்து கிலோமீட்டர் நீளமுள்ள அடர்ந்த காடுகள் அவை. தங்களை மீண்டும் தயார்ப்படுத்திக்கொள்ள அற்புதமான வாய்ப்பு இது. ஆனால் நடந்ததோ கோரமான, கேட்பவர்களை பயத்தில் ஆழ்த்தும் படுகொலைகள். இதற்கு காரணம் எதிரி படைகள் அல்ல. சக மனிதர்களும் அல்ல....பின்னே?

ஜப்பானிய படைகள் - ராம்ரீ தீவு 

பிப்ரவரி 19, 1945 இரவு. சதுப்புநில காடுகளில் திடீரென கண்டமேனிக்கு துப்பாக்கிகள் ஒலிக்கும் சத்தம். கூடவே அலறும் மனிதர்களின் ஓசையும். காடுகளை சுற்றி ரோந்து சென்றுக்கொண்டிருந்த பிரிட்டன் படை வீரர்கள் காடுகளுக்குள் இருக்கும் ஜப்பானியர்களின் கூச்சலைக் கேட்டு பயத்தில் உறைந்தனர்.

எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. திடீரென தோன்றுகின்றன, மனிதர்களை இழுத்து செல்கின்றன. யாரென்று கேட்கிறீர்களா? அவை முதலைகள், உப்பு நீர் முதலைகள்.

இருபது அடிக்கும் மேலாக வளருபவை, ஒரு டன் வரை எடை கொண்டவை. அதிகம் அறிந்திருக்கப்படாத கொடூர கொலையாளிகள். இவைகளிடம் தான் ஜப்பானியர்கள் மாட்டிக்கொண்டனர். அந்த இரவு, திரும்பவும் நினைத்து பார்க்க முடியாத இரவு.

உப்புநீர் முதலை 

அடுத்த நாள், ஆயிரம் ஜப்பானிய வீரர்களில் இருபது பேர் மட்டுமே மிஞ்சியிருந்ததாக இயற்கையாளர் ப்ரூஸ் ஸ்டான்லி ரைட் குறிப்பிடுகின்றார். அச்சத்தின் உச்சி எதுவோ அதனை தொட்ட நிலையில் இருந்தார்கள் தப்பி பிழைத்து, பிரிட்டன் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள். சம்பவம் குறித்த அவர்களின் வர்ணனை மனித குலம் மீண்டும் இப்படியான சூழலை சந்தித்திற கூடாது என்பதை வலியுறுத்தியது.

விலங்குகளால் கொல்லப்பட்ட மிகப்பெரும் நிகழ்வாக ராம்ரீ சம்பவத்தை குறிப்பிடுகின்றது கின்னஸ் புத்தகம்.

***

பூமியில், மனிதர்கள் செல்லவே முடியாத இடங்களில் ஒன்று தான் நீங்கள் கீழே பார்க்கும் பாம்புத் தீவு. பிரேசிலின் Sao Paulo நகரில் இருந்து சுமார் 90 மைல் தூரத்தில், அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது இத்தீவு.


மனிதர்களால் செல்ல முடியாததற்கு காரணம், இங்கு வசிக்கும் மிகக் கடுமையான விஷமுள்ள Golden Lancehead பாம்புகள் தான். ஒரு மைலுக்கும் குறைவான நீளமுள்ள இத்தீவில் சுமார் 4000-5000 பாம்புகள் வசிக்கின்றன.

Golden Lancehead Snake

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இத்தீவின் ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் ஒரு பாம்பை நீங்கள் காண முடியும். அப்படியானால், ஒவ்வொரு மூன்று அடி தூரத்திலும் மரணம் காத்திருக்கின்றது என்று அர்த்தம். பிரேசிலின் அதிகாரத்தில் உள்ள இத்தீவில், கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்படுகின்றது.

இத்தீவில் வசிக்கும் பாம்புகளுக்கான உணவு, இங்கு வரும் பறவைகள் மட்டுமே. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இங்கு வாழை பயிரிட எண்ணி, பாம்புகளை அழிக்க இந்த தீவு முழுக்க கொளுத்தப்பட்டது. ஆனாலும், பாம்புகளிடம் இருந்து விடுபட முடியவில்லை.

இன்று, அரிய வகை விளங்கினமாக கருதப்படும் Golden Lancehead பாம்புகளை பாதுகாக்கும் பொருட்டு, பிரேசிலிய அரசாங்கம், இத்தீவில் மனித நடமாட்டத்திற்கு (ஆய்வு பணிகளை தவிர்த்து) தடை விதித்து விட்டது.  

***
நீங்கள் படத்தில் காணும் தவளை, முழுமையாக வளர்ந்த நிலையிலேயே, 7.7 மில்லி மீட்டர் அளவு தான் உள்ளது. பாப்புவா நியு கினியாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வகை தவளைகள் தான், நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களில் மிகச் சிறியவையாகும்.


இவற்றை படம் பிடிப்பது கூட சவாலான ஒன்றாக இருந்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். நீங்கள் கேமராவை focus செய்வதற்குள் இவை காணாமல் போய்விடும். ஆள் பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும், தன் அளவை விட முப்பது மடங்கு தூரம் தாவக்கூடியவையாக இருக்கின்றன. 

சில வருடங்களுக்கு முன்பு தான், உலகின் மிகச் சிறிய பறக்கும்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அளவு என்ன தெரியுமா? வெறும் .4 மில்லி மீட்டர் தான். இயல்பான நிலையில் நம் கண்ணிற்கு புலப்படாத இவ்வகை பூச்சிகள் முழுமையாக வளர்ந்திருந்தன.


யோசித்து பாருங்கள், நாம் பாக்டீரியாவையோ அல்லது வைரசையோ பற்றி பேசவில்லை. முதுகெலும்பு கொண்ட தவளை குறித்து பேசுகின்றோம். இத்தனை சிறிய அளவில் அனைத்து உறுப்புகளும் உள்ளலடங்கிய, பரிபூரணமாக வேலை செய்யும் ஒரு உயிரினம்.


படைப்புகள் தான் எவ்வளவு ஆச்சர்யங்களை நமக்கு தருகின்றன!!!
***

மனிதனின் வரலாற்றை அறிவதில் அறிவியலுக்கு என்றுமே தனி ஆர்வம்  உண்டு. பரிணாம துறைகளிலேயே மிகவும் சிக்கலானது என்றால் அது மனிதனின் தோற்றம் மற்றும் நடத்தைகளை ஆராயும் துறை தான் என்று பல்வேறு ஆய்வாளர்கள் எளிமையாக கை காட்டி விடுவார்கள். ஆம், அவ்வளவு சிக்கலானது இந்த துறை. அவ்வப்போது இத்துறையில் வெளிப்படும் ஆய்வு முடிவுகள் தொடர்ந்து நிலைமையை மர்மமாக்கியே வருகின்றன.

இந்த சமீபத்திய ஆய்வை பாருங்கள். இஸ்ரேலிய ஆய்வாளர்களால் குசம் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள் நான் முதல் பத்தியில் சொன்னவற்றை மெய்ப்பிக்கின்றன. அந்த குகையில், சுமார் மூன்று லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய மனித நடவடிக்கைகளை கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.



இறைச்சியை வெட்ட பயன்படும் கற்கருவிகள் குகைக்குள்ளேயும், வெளியேவும் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும், இவற்றிலிருந்து சில மீட்டர்கள் தள்ளி முற்றிலும் மாறுபட்ட கருவிகளையும் கண்டறிந்துள்ளனர். இந்த கருவிகள் வேறுவிதமான செய்கைகளுக்கு பயன்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல், அந்த இடத்தில் எரிக்கப்பட்ட மிருகங்களின் எலும்புகளையும் கண்டறிந்துள்ளனர்.

இவையெல்லாம், அந்த குகை ஒரு கேம்ப் போல செயல்பட்டதற்கான ஆதாரம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது, இன்று மனிதர்கள் ஒரு இடத்தில் அவ்வப்போது ஒன்றுக்கூடி உண்டு மகிழ்கின்றனர் அல்லவா, அதுபோலவே மூன்று லட்ச ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் செய்துள்ளனர் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

ஆக, இக்கால மனிதர்களின் நடத்தைகளை போலவே அவர்களும் இருந்துள்ளது, பரிணாமத்தை பொறுத்தமட்டில் நிச்சயம் வியப்பான செய்தியே. இந்த ஆய்வு குறித்து குறிப்பிடும் Science Daily தளம், இந்த முடிவுகள், அக்கால மனிதர்கள் மிகச் சிறந்த சமூக கட்டமைப்பை கொண்டவர்களாகவும், அறிவில் தேர்ந்தவர்களாகவும் இருந்ததற்கான ஆதாரங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

நான் முதல் பத்தியில் சொன்ன சிக்கல்களுடன் இந்த ஆய்வு முடிவுகளும் சேர்ந்துக்கொண்டு விட்டன. இந்த ஆய்வு குறித்து விரிவாக அறிய http://www.sciencedaily.com/releases/2014/01/140127101236.htm



****
பரிணாமம் குறித்து அமெரிக்கர்களிடையே சமீபத்தில் (டிசம்பர் 30) நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பிரபல ஆய்வு மையமான Pew Research-ஆல் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பின்வருகின்றன. 

33% அமெரிக்கர்கள், தற்போதைய உருவிலேயே உயிரினங்களை இறைவன் படைத்தான் என்ற கருத்தில் உள்ளனர். 

24% அமெரிக்கர்களோ, பரிணாமம் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதனை இயக்குவது இறைவன் தான் என்கின்றனர். 

பரிணாமம் உண்மை, ஆனால் இதற்கு இறைவன் துணை தேவையில்லை, இயற்கையே போதும் என்று 32% மக்கள் கூறியுள்ளனர். 

இந்த ஆய்வில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு தகவல் என்னவென்றால், குடியரசு கட்சியை சார்ந்தவர்கள் பரிணாமத்தை நம்புவது கணிசமாக குறைந்துள்ளது. சென்ற முறை, பரிணாமத்தை நம்புவதாக 54% பேர் கூறியிருந்தனர், ஆனால் தற்போதோ இந்த எண்ணிக்கை 43%-மாக குறைந்துள்ளது. 

ஆய்வு குறித்த முழு தகவல்களை Pew research-ன் அதிகாரப்பூர்வ தளத்தில் படிக்கலாம். http://www.pewforum.org/2013/12/30/publics-views-on-human-evolution/

***

உலகின் முதல் டிகிரி வழங்கும் கல்வி நிறுவனத்தை கட்டமைத்த பாத்திமா அல்-பிஹ்ரி..

இன்று, படிப்பில் தேறுபவர்களுக்கு டிகிரி எனப்படும் அங்கீகாரம் வழங்கப்படுகின்றது. UNESCO மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் தகவலின்படி இத்தகைய நடைமுறையை முதன் முதலில் ஆரம்பித்து வைத்த கல்வி நிறுவனம் மொராக்கோவில் உள்ள அல்-குவரவின் பல்கலைகழகமாகும். இந்த கல்வி நிறுவனத்தை பாத்திமா அல்-பிஹ்ரி என்ற பெண்மணி 859-ஆம் ஆண்டு கட்டினார். உலகின் மிக பழமையான டிகிரி வழங்கும் கல்விநிறுவனம் என்ற பெருமையுடன் இன்றளவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது இந்த பல்கலைகழகம். பல்கலைகழகத்தின் படம் கீழே...



மேலதிக தகவல்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Fatima_al-Fihri
http://en.wikipedia.org/wiki/Qarawiyyin 

****

பரிணாமத்திற்கு எதிரான புத்தகம் - வெளியிடுகின்றது பிரபல நிறுவனம்

அறிவார்ந்த கோட்பாடை (Intelligent Design) ஆதரிக்கும் ஆய்வாளர்களில் முக்கியமானவரான ஸ்டீபன் மேயர் எழுதிய Darwin's Doubt (டார்வினின் சந்தேகம்) நூல் ஜூன் 18 ஆம் தேதி வெளிவருகின்றது. இதனை வெளியிடுபவர்கள், உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் (publisher) ஒருவரான ஹார்ப்பர் கோலின்ஸ் நிறுவனத்தார். பார்க்க http://www.harpercollins.com/books/Darwins-Doubt-Stephen-C-Meyer/?isbn=9780062071477

எதிர்பார்த்தப்படியே, கடுமையான கடுப்பை பரிணாமவியலாளர்களிடையே இது ஏற்படுத்தியுள்ளது. நன்கறியப்பட்ட பரிணாமவாதியான ஜெரி கோயின், இந்த புத்தகத்தை வெளியிவதின் மூலம் தன்னுடைய நற்பெயரை ஹார்ப்பர் நிறுவனம் இழந்துவிட்டதாக கூறியுள்ளார். பார்க்க http://www.algemeiner.com/2013/04/25/atheist-professor-jerry-coyne-fiddles-while-the-darwinian-palace-burns/

உலகின் பாரம்பரியமிக்க நிறுவனத்தால் வெளியிடப்படுவதால் இந்த புத்தகம் மிக அதிகமான மக்களை சென்றடையும் வாய்ப்பு பிரகாசித்துள்ளது. ஸ்டீபன் மேயரின் முந்தைய புத்தகத்தை போலவே இந்த நூலும் அறிவியல் உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படும் வேளையில், ஹார்ப்பர் போன்ற நிறுவனங்கள் அறிவார்ந்த கோட்பாட்டை ஆதரிக்கும் நூல்களுக்கு முட்டு கொடுப்பது அறிவியல் உலகில் நிலவும் பரிணாம விவாதத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. 


*****

போப் செய்தி உண்மையல்ல, ஆனால் இது உண்மை

போப் குறித்த வதந்திகள் ஒரு முக்கிய உண்மை செய்தியை மறைத்து விட்டன. சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு கிரீட் வில்டர்ஸ் (Greet Wilders) என்ற பெயர் நன்கு அறிமுகமாகி இருக்கும். டென்மார்க்கின் தீவிர வலது சாரி கட்சியின் தலைவரான இவர் இஸ்லாம் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு பெயர் போனவர்.

இப்போது வெளியாகி இருக்கும் அந்த முக்கிய செய்தி என்னவென்றால், இந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான Arnoud Van Doorn இஸ்லாமை ஏற்று பெரும் பரபரப்பை ஐரோப்பாவில் ஏற்படுத்தியுள்ளார். "பெரும் பரபரப்பு" என்பது நிச்சயம் சாதாரண வார்த்தையாகவே இருக்க முடியும். இஸ்லாம் மீதான தன் கட்சியின் வெறுப்புணர்வு இஸ்லாம் குறித்து ஆராய தூண்டியதாகவும், ஒரு வருட ஆய்வுக்கு பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அல்-ஜசீரா ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் Arnoud Van Doorn.

தற்போது கட்சியில் இருந்து விலகியுள்ள இவர், தான் மிகப்பெரும் சவாலை சந்திக்கவிருப்பதை உணர்ந்துள்ளதாகவும், இவற்றில் இருந்து விடுபட இறைவன் உதவுவான் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய உலகில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த செய்தி குறித்து முழுமையாக படிக்க.. http://www.onislam.net/english/news/3341/461645.html


*****

பிரான்சின் முன்னணி ஆய்வாளரான Didier Raoult டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இவர் பிரான்சிலேயே மிகப்பெரிய உயிரியல் விஞ்ஞானியாம். பல புதிய பாக்டீரியாக்களை கண்டுபிடித்தவராம். உலகிலேயே (இது வரையிலான) மிகப்பெரிய வைரசை கண்டுபிடித்தது இவரது டீம் தானாம். 

இவரின் Dépasser Darwin (Beyond Darwin) என்ற அறிவியல் புத்தகம் சென்ற ஆண்டு வெளியானது. இதில் டார்வினின் பரிணாம கோட்பாட்டை முற்றிலுமாக நிராகரித்துள்ளாராம் Raoult. 

இதையெல்லாம் யார் சொல்கின்றார்கள் தெரியுமா? சில நாட்களுக்கு முன்பாக வெளியான, மதிப்புமிக்க ஆய்விதழான Science தான் தெரிவிக்கின்றது.  

Raoult last year published a popular science book that flat-out declares that Darwin's theory of evolution is wrong - Science Magazine, 2nd March 2012.
சென்ற ஆண்டு Raoult பிரசுரித்த பிரபல அறிவியல் புத்தகம், டார்வினின் பரிணாம கோட்பாடு தவறு என்று வெளிப்படையாக அறிவிக்கின்றது - Science Magazine, 2nd March 2012. 

சிலபல மாதங்களுக்கு முன்பு தான் (டாகின்ஸ்சின் வார்த்தைகளில்) பரிணாமத்தின் ஆணிவேரான பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று வர்ணித்தார் மற்றொரு முன்னணி உயிரியல் ஆய்வாளரான கிரேக் வென்டர். இப்போது இவர். 

பரிணாமத்திற்கு மாற்றாக உள்ள "அறிவார்ந்த வடிவமைப்பு (intelligent design} கோட்பாடு" வளருகின்றதோ இல்லையோ, பரிணாமக்கோட்பாடு அதள பாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. 

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க...

பரிணாம கோட்பாடு குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் காண <<இங்கே>> சுட்டவும். 

References:


*****
Robert B. Laughlin - Physicist, Nobel laureate 1998.

In his 2005 book, he says the following.

Evolution by natural selection, for instance, which Charles Darwin originally conceived as a great theory, has lately come to function more as an antitheory, called upon to cover up embarrassing experimental shortcomings and legitimize findings that are at best questionable and at worst not even wrong. Your protein defies the laws of mass action? Evolution did it! Your complicated mess of chemical reactions turns into a chicken? Evolution! The human brain works on logical principles no computer can emulate? Evolution is the cause! 

சிறந்த கோட்பாடாக டார்வினால் கருதப்பட்ட இயற்கை தேர்வு, பின்னாளில், கோட்பாடுகளுக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. செயல்முறை தோல்விகளை மறைக்கவும், சர்ச்சையான விசயங்களை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. Mass action விதிகளை உங்கள் புரதம் சவால் விடுகின்றதா, பரிணாமம் செய்திருக்க வேண்டும். பல்வேறு வேதியல் பொருட்கள் ஒன்று சேர்ந்து கோழியாக மாறிவிட்டனவா, பரிணாமம் தான் காரணம். உலகின் எந்த கணிப்பொறிகளாளும் முடியாத தர்க்கரீதியான செயல்களை உங்கள் மூளை செய்கின்றதா, பரிணாமம் தான் காரணம் - Extract.

Robert B. Laughlin, A Different Universe: Reinventing Physics from the Bottom Down (New York: Basic Books, 2005), P.No.168-69.


*****
Lynn Margulis - Respected Biologist, recipient of the William Procter Prize for Scientific Achievement, recipient of the National Medal of Science.

In her April, 2011 interview with Discover magazine she says the following...

"Natural selection eliminates and maybe maintains, but it doesn't create"
"Neo-Darwinists say that new species emerge when mutations occur and modify and organism. I was taught over and over again that the accumulation of random mutations led to evolutionary change-led to new species. I believed it until I looked for evidence."

இயற்கை தேர்வு புதிய உயிரினங்களை உருவாக்காது. மரபணு மாற்றங்களால் புதிய உயிரினங்கள் உருவாகும் என்று நியோ-டார்வினிஸ்ட்கள் கூறுகின்றனர். நானும் நம்பினேன், ஆதாரங்களை பார்க்கும்வரை.... - Extract

Q: What kind of evidence turned you against neo-Darwinism?

"What you'd like to see is a good case for gradual change from one species to another in the field, in the laboratory, or in the fossil record -- and preferably in all three. Darwin's big mystery was why there was no record at all before a specific point [dated to 542 million years ago by modern researchers], and then all of the sudden in the fossil record you get nearly all the major types of animals. The paleontologists Niles Eldredge and Stephen Jay Gould studied lakes in East Africa and on Caribbean islands looking for Darwin's gradual change from one species of trilobite or snail to another. What they found was lots of back-and-forth variation in the population and then -- whoop -- a whole new species. There is no gradualism in the fossil record."

Source: http://discover.coverleaf.com/discovermagazine/201104?pg=68#pg70

*****

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ