Tuesday, July 23, 2013

பிரிட்டிஷ் முஸ்லிம்கள் - அறக்கொடைகள் - கடைசியில் நாத்திகர்கள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

பிரிட்டனின் பிரபல ஊடகமான "தி டைம்ஸ்", நன்கொடை/அறக்கொடை அளிப்பதில், சமயரீதியாக மக்களுக்கு உள்ள ஆர்வத்தை பிரதிபளிக்கும் ஆய்வொன்றின் முடிவுகளை சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. அந்த கட்டுரைக்கு தி டைம்ஸ் வைத்த தலையங்கம் இதுதான், 

Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013
அறக்கொடை அளிப்பதில் பிரிட்டனில் முஸ்லிம்கள் முன்னிலை வகிக்கின்றனர் - (Extract from the original article of) The Times, 20th July 2013.

இன்று பரவலாக பல்வேறு ஊடங்களும் பகிர்ந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் கவனிக்கத்தக்க தகவல்களை நமக்கு தருகின்றன. அதில் முக்கியமான சிலவற்றை இங்கே காண்போம். 

பிரிட்டனில், சாரிட்டி (charity) எனப்படும் அறக்கொடை அளிப்பதில் முஸ்லிம்கள் முதல் நிலையிலும், நாத்திகர்கள் கடைசியிலும் உள்ளனர். கடந்த 2012-ஆம் ஆண்டு, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 371 யூரோக்களை கொடுத்துள்ளனர் (இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 29,000 ரூபாய் ஆகும்). இதுவே மற்ற சமயத்தவர்களை பொருத்தமட்டில் பின்வருமாறு உள்ளது. 

யூதர்கள் - 270 யூரோக்கள் 
ப்ரோடஸ்டன்ஸ் கிருத்துவர்கள் - 202 யூரோக்கள் 
கத்தோலிக்க கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே அதிகமாக
மற்ற கிருத்துவர்கள் - 178 யூரோக்களுக்கு சற்றே குறைவாக
நாத்திகர்கள் - 116 யூரோக்கள் 


இதுமட்டுமல்லாது, நன்கொடை/அறக்கொடை கொடுக்காதவர்கள் பட்டியலிலும், யூதர்களுடன் இணைந்து நாத்திகர்கள் முன்னிலையில் உள்ளனர். சென்ற ஆண்டில், பத்தில் நான்கு நாத்திகர்கள் எவ்விதமான தர்மத்தையும் மேற்கொள்ளவில்லை. யூதர்களை பொருத்தமட்டில், இது, நான்கிற்கும் சற்றே அதிகமாக உள்ளது.

ரிச்சர்ட் டாகின்ஸ் போன்ற பிரித்தானியர்கள், நாத்திகத்தின் மூலம் ஆரோக்கியமான/கருணையான உலகத்தை உருவாக்க முடியும் என்று முயற்சிகள் செய்துவரும் நிலையில் இப்படியான முடிவுகள் நிச்சயம் பெரும் பின்னடைவே. தங்களின் செல்வத்தை எப்படி செலவழித்தால், செலவழித்தவருக்கு எப்படியான நன்மைகள் உண்டாகும் என்பதை நாத்திகர்கள் மனதில் பதிய வைத்து அறக்கொடைகளை அதிகரிக்க வேண்டியது டாகின்ஸ் போன்றவர்களின் முன்னால் உள்ள பெரும் சவாலாகும். 

நாம் பதிவிற்கு வருவோம்.

முஸ்லிம்களின் நன்கொடை யாருக்கு அதிகமாக சென்றுள்ளது?

இது பலரும் அறிந்துக்கொள்ள விரும்பும் கேள்வியாகும். இதற்கும் இந்த ஆய்வு பதிலளிக்கின்றது. முஸ்லிம்களின் நன்கொடைகள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களான Muslim Aid மற்றும் Islamic Relief போன்றவற்றிற்கு அதிகப்படியாக சென்றுள்ளது. அதே போல, பின்வரும் மருத்துவ நிறுவனங்களுக்கும் முஸ்லிம்கள் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளனர். 

1. புற்றுநோய் ஆய்வுக்கழகம் (Cancer Research) 
2. மேக்மில்லன் & பிரிட்டிஷ் இருதய கழகம் (MacMillan & British Heart Foundation)

சந்தேகமில்லாமல், இப்படியான ஆய்வுகள் மூலம் முஸ்லிம்கள் ஆச்சர்யமடைய ஒன்றுமில்லை. இஸ்லாம் அதிகப்படியாக வலியுறுத்தும் நன்மைகளில் (கடமையான) ஜகாத் மற்றும் தர்மங்களுக்கு முக்கிய பங்குண்டு. பொருளாதார வசதியுள்ள முஸ்லிம்கள் அதிகப்படியாக வழங்கி தங்களின் நன்மைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த ஆய்வு முடிவுகள் சிறு அளவிலாவது ஊக்கமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Infographics:
1. By Aashiq Ahamed

My sincere thanks to:
1. The Times Faith. 
2. Just Giving. 

References:
1. Muslims ‘are Britain’s top charity givers’ - The Times, 20th July 2013. link
2. UK Muslims Top Charity Givers - On Islam, 21st July 2013. link
3. Muslims 'Give Most To Charity', Ahead Of Christians, Jews And Atheists, Poll Finds - The Huffington Post, 21st July 2013. link
4. Justgiving - Wikipedia. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 






Wednesday, April 10, 2013

FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.

முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த படங்கள், துனிசிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. விளைவோ, கொலை மிரட்டல் முதற்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்கொண்டார்.

இதனை பயன்படுத்திக்கொண்ட பெfமன் அமைப்பு, முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமில்லை (??), அவர்கள் நினைத்ததை செய்யும் உரிமை இல்லை (!!) என்று கூறி போராட்டத்தில் குதித்தது. கடந்த ஏப்ரல் நான்காம் தேதியை "அரை நிர்வாண ஜிஹாத் நாள் (Topless Jihad Day)" என்று குறிப்பிட்டு, இந்த தேதியில், முஸ்லிம் பெண்களை விடுவிக்கும் விதமாக (???!!!), உலகின் பல்வேறு பகுதிகளில் அரைநிர்வாண ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்தது.

இவர்களின் போராட்டமே விரும்பத்தகாத வகையில் தான் இருக்கின்றது என்றாலும் இதனைத் தாண்டிய நடவடிக்கைகளிலும் பெfமன் அமைப்பினர் ஈடுபட்டனர். அதாவது, பிரெஞ்சு தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பள்ளிவாசலின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், முஸ்லிம்களின் அடிப்படை கொள்கையை விளக்கும் "இறைவன் ஒருவனே, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் (லாஇலாஹா இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலல்லாஹ்)" என்ற வாசகத்தை தாங்கிய பேனரை தீயிட்டு கொளுத்தினர்.

பேனரை எரிக்கும் பெfமன் அமைப்பினர்.

நிச்சயம் இவர்களுடைய நடவடிக்கைகள் பெண்ணுரிமையை மீட்டெடுக்கும் செயல்களல்ல, மாறாக ஒரு மார்க்கத்தின் மீதான வெறுப்புணர்வு மட்டுமே. இதனை மேற்கத்திய ஊடகங்கள் வெளிப்படுத்தவும் செய்தன. இஸ்லாமொபோபியாவால் பெfமன் அமைப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரடியாகவே குற்றஞ்சாட்டின.

இப்படியான சூழலில் தான் பெfமனுக்கு எதிரான தீவிர பதிலடியை கொடுக்க ஆயத்தமாயினர் முஸ்லிம் பெண்கள். பதிலடி என்றால் சும்மா இல்லை, அது ஒரு அதிரடியான திட்டம். பெfமனை வெலவெலுத்து போகச்செய்யும் திட்டம்.

அப்படி என்ன திட்டம் என்று பார்ப்பதற்கு முன், இந்த திட்டத்திற்கு பின்னால் இருந்த சகோதரியை பார்த்து விடுவோம். இவருடைய பெயர் சோபிfயா அஹ்மத். பிரிட்டனின் பெர்மிங்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி இவர். "அரைநிர்வாண ஜிஹாத் நாள்" என்று அவர்கள் ஒரு நாளை ஏற்படுத்தினால் கண்ணியமான முறையில் போராட நாம் ஒரு நாளை ஏற்படுத்துவோம். அதற்கு பெயர் "பெருமைமிகு முஸ்லிம் பெண்கள் (Muslimah Pride Day) தினம்".

இந்த திட்டத்தின்படி, தாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக்கொள்ளும் பெண்கள், அதற்கேற்றப்படி வாசகங்களை அமைத்து தங்கள் புகைப்படத்துடனோ அல்லது இல்லாமலோ, muslimahpride@gmail.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பினால், இந்த நிகழ்வுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகப்பக்க பக்கத்தில் அந்த செய்தியை பதிவேற்றி விடுவார்கள் (அந்த பக்கத்தை <<இங்கே>> காணலாம். போராட்டம் குறித்த தகவல்களை <<இங்கே>> பெறலாம்).

இதுபோல, ட்விட்டரிலும் #MuslimahPride மற்றும் #Femen என்ற ஹாஷ்டேக்குடன் தங்கள் செய்திகளை அனுப்புமாறு முஸ்லிம் பெண்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். இப்படியாக அறிவிக்கப்பட்டது தான் தாமதம், இந்த முயற்சிக்கு அளப்பரிய ஆதரவை அள்ளி வழங்கிவிட்டார்கள் முஸ்லிம் பெண்கள். "பெfமனுக்கு எதிரான முஸ்லிம் பெண்களின் போராட்டம்" என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடங்கி நம்மூர் ஜீ நியூஸ் வரை இந்த செய்தியை பெரிய அளவில் பேசின.

இந்த போராட்டத்திற்கு வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு..

எங்களின் குரலை பெfமன் திருடிக் கொண்டது. 


சுதந்திரத்தின் உண்மையான பொருளை இஸ்லாமை தழுவியதிலிருந்து உணர்ந்துக் கொண்டேன். 


நிர்வாணம் என்னை விடுவிக்காது. மேலும், நான் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் இல்லை.


எனது அறிவாற்றலைக் கொண்டு என்னை எடைப்போடுங்கள் 


என் உரிமையை நிலைநாட்ட நீங்கள் தேவையில்லை


இவர் என்னுடைய சகோதரி. ஹிஜாப் அணிவது அவருக்கான சுதந்திரம்.


எனக்கு சுதந்திரமளித்தது இஸ்லாம். 


என் உடலை மறைக்க எனக்குள்ள சுதந்திரத்தை நீங்கள் நிராகரித்தால், நீங்கள் என்னை அடிமைப்படுத்துகின்றீர்கள் என்றே பொருள்.


நான் அடிமைப்படுத்தப்படுவதாக உங்களுக்கு தெரிந்தால் அதற்காக வருந்துகின்றேன். அதே நேரம், என்னை மன்னித்து விடுங்கள், ஏனென்றால், அப்படியாக அடிமைப்பட்டு இருப்பதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.  


நிர்வாணம் சுந்தந்திரமில்லை. உங்களின் ஒழுக்கத் தத்துவம் எங்களுக்கு தேவையுமில்லை.


சுதந்திரம் என்பது உடல் சார்ந்ததல்ல, அது உள்ளம் சார்ந்தது. நாங்கள் முஸ்லிம்கள், இஸ்லாமை விரும்புபவர்கள்.


நீங்கள் என்னை விடுவிக்க தேவையில்லை. நான் சுதந்திரமாகவே இருக்கிறேன்.

சுதந்திரமானவர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுக்க முடியாது. 

இதுமட்டுமல்லாமல், பெfமன் அமைப்புக்கு முஸ்லிம் பெண்கள் எழுதிய வெளிப்படையான கடிதம் அவர்கள் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. பெண்களின் விடுதலை என்ற போர்வையில் காலனி ஆதிக்க இனவெறியை மட்டுமே பெfமன் வெளிப்படுத்துவதாக சாடியுள்ள அந்த கடிதம், நாங்கள் முஸ்லிம்கள் என்பதில் பெருமைக் கொள்வதாகவும் கூறியது (அந்த கடிதத்தை முழுமையாக <<இங்கே>> படிக்கலாம்). 'இஸ்லாமில் பெண்களின் நிலை' குறித்த வெளிப்படையான உரையாடலுக்கும் பெfமன் அமைப்பினரை அழைத்துள்ளனர் முஸ்லிம் பெண்கள்.  

ஆனால் இந்த நிகழ்வுகளில் எனக்கு புரியாத விசயங்கள் இரண்டு. நிர்வாண போராட்டங்கள் எப்படி ஒருவருடைய இலக்கை அடைய வழிவகுக்கும்? முகம் சுளிக்க வைத்து இலக்கிலிருந்து தூரப்படுத்த மட்டுமே உதவும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும், முஸ்லிம் பெண்களை விடுவிக்க செய்யும் போராட்டம் என்று கூறிவிட்டு, தங்களை எதிர்க்கும் பெண்களை குர்ஆனினால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள் என்று தூற்றுவது எப்படி பெண்களை மதிப்பதாய் அல்லது அவர்களுக்கான உரிமையை வழங்குவதாய் மையும்?

முஸ்லிம் பெண்களின் அதிரடியான செயல்திட்டத்தால் பெfமன் அமைப்பின் கண்ணியமற்ற போராட்டங்கள் வீழ்த்தப்பட்டுவிட்டன. இஸ்லாமிய சகோதரிகளே, உங்களின் விவேகமான அணுகுமுறையால் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம். KEEP GOING....

இறைவனே எல்லாம் அறிந்தவன்...

Please Note:
இந்த நிகழ்வு இன்னும் முடிவடையவில்லை. தங்கள் செய்திகளை அனுப்ப விரும்பும் சகோதரிகள், மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

My sincere thanks to:
1. Sister Asma (for french and Italy translations)

References:
1. Topless Jihad vs. Muslimah Pride - Loonwatch, 6th April 2013. link
2. Muslim women send message to Femen - Aljazeera stream, 5th April 2013. link
3. Muslim Women Against Femen - Facebook page. link
4. Muslim Women Against Femen..Muslimah Pride Day - Event page. link
5. Muslim Women Against FEMEN - Facebook group. link 
6. Muslimah Pride against Femen. Neocolonialism, stereotypes and choices - Another kind of communication. 5th April 2013. link
7. Femen - Wikipedia. link
8. Femen's Topless Jihad Day protested by Muslim women group - Zee News, 7th April 2013. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ.







Sunday, March 24, 2013

'அநாதை' மரபணுக்கள்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியையும் சமாதானமும் நிலவுவதாக...
"NOT having any family is tough. Often unappreciated and uncomfortably different, orphans have to fight to fit in and battle against the odds to realise their potential. Those who succeed, from Aristotle to Steve Jobs, sometimes change the world. Who would have thought that our DNA plays host to a similar cast of foundlings? When biologists began sequencing genomes, they discovered that up to a third of genes in each species seemed to have no parents or family of any kind" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
குடும்பம் இல்லாமல் இருப்பது கடினமானது. ஊக்கமில்லாமலும், அசௌகர்ய உணர்வோடும், இப்படியான ஆதரவற்றவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்த போராட வேண்டியிருக்கின்றது. வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டவர்களோ, அரிஸ்டாட்டில் முதல் ஸ்டீவ் ஜாப்ஸ் வரை, சில நேரங்களில், உலகை மாற்றியமைத்திருக்கின்றார்கள். 
யார் தான் நினைத்திருப்பர், நம்முடைய மரபணுக்களும் இப்படியான அநாதைகளை தன்னிடத்தே கொண்டிருக்குமென்று? மரபணு வரிசைமுறை ஆய்வுகளை மேற்கொண்ட உயிரியல் விஞ்ஞானிகள், ஒவ்வொரு உயிரினத்திலும், 30% வரையிலான மரபணுக்களுக்கு பெற்றோரோ அல்லது குடும்பமோ இல்லாததை கண்டுபிடித்தார்கள் - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. 

'நியூ சயின்டிஸ்ட்' இதழில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான கட்டுரையின் முதல் பத்தியை தான் நீங்கள் மேலே படித்தீர்கள். எதைப் பற்றி பேசுகின்றார் கட்டுரையாளர்? 'அநாதை' மரபணுக்களா, அப்படியென்றால் என்ன? - உங்களுக்குள் சுவாரசியத்தை கூட்டியிருக்கும் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றது இந்த பதிவு.

உயிரியல் உலகம் அடுக்கடுக்கான ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துவருகின்றது. சில நேரங்களில் ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு பதிலாக அதிர்ச்சி என்ற வார்த்தையை போட்டும் நிரப்பிக் கொள்ளலாம். ஆம், அத்தகைய அதிர்ச்சிகளில் ஒன்று தான் 'அநாதை' மரபணுக்கள்.

'அநாதை' மரபணுக்களா, அப்படின்னா???

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வுலகில் முதல் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும், பின்னர் அந்த உயிரினத்தில் இருந்து சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, காலப்போக்கில், இன்று (வரை) காணப்படும் உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றது பரிணாமக் கோட்பாடு. எளிதாக சொல்ல வேண்டுமென்றால், மனிதர்களையும் சேர்த்து, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் தான். இதனை வரைப்படம் வாயிலாக விளக்குவதற்கு பெயர் பரிணாம மரம் என்பார்கள்.

அறிவியலின் ஒரு பிரிவினர் பரிணாம மரத்தை ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு பிரிவினர் இதுக்குறித்த மாற்றுக்கருத்தை கொண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, பாக்டீரிய ஆராய்ச்சியில் பெரும் புரட்சி ஏற்படுத்திய கிரேக் வென்டர், பரிணாம மரத்தை கட்டுக்கதை என்று குறிப்பிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம் (படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்).

ஓகே...பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்துள்ளதற்கு என்ன ஆதாரம்?  மரபணு ரீதியாக உயிரினங்கள் அனைத்திற்கும் தொடர்பு இருப்பதே என்கிறார்கள் பரிமாணவியலாளர்கள். அதாவது ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணுக்களின் மூதாதையரை, காலங்கள் பின்னோக்கி செல்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு.

இப்படியான நம்பிக்கைக்கு தான் அண்மை கால ஆய்வுகள் மிகப்பெரிய இடியை இறக்கியிருக்கின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஈஸ்ட் எனப்படும் உயிரினத்தில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள் பல ஆச்சர்யமான உண்மைகளை வெளிக்கொண்டு வந்தன. இவற்றின் சுமார் 30% மரபணுக்கள் தனித்துவமாக இருந்தன. அதாவது, இந்த மரபணுக்கள் போல வேறு எந்த உயிரினத்திலும் மரபணுக்கள் இல்லை. பொதுவான மூதாதையரில் இருந்து உயிரினங்கள் வந்திருந்தால், இந்த 30% மரபணுக்களுடன் தொடர்புடைய மரபணுக்கள், ஈஸ்ட்டுடன் நெருங்கிய தொடர்புடைய உயிரினங்களிலாவது தென்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மை நிலவரங்கள் அப்படி இருக்கவில்லை. இப்படியான மரபணுக்கள் இந்த உயிரின பிரிவிற்கு மட்டுமே உரித்தானவையாக இருந்தன.

ஒரே வரியில் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த மரபணுக்களுக்கு பெற்றோரோ, மூதாதையரோ அல்லது பரிணாம வரலாறோ இல்லை.    இவை 'அநாதை' மரபணுக்கள் என்று அழைக்கப்படுவதின் காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். 


'அநாதை' மரபணுக்கள் (உருவகப்படம்) Image courtesy: New Scientist Magazine

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். சரி, தனித்துவமான மரபணுக்கள் உள்ளன, ஆனால் இந்த உயிரினம் விதிவிலக்காக இருக்கலாம் அல்லவா? இந்த உயிரினத்தில் மட்டும் எப்படியோ(??) இத்தகைய மரபணுக்கள் வந்திருக்கலாம் இல்லையா? - நல்ல கேள்விகள் தான். ஆனால் இங்கு தான் ஆச்சர்யங்கள் அதிர்ச்சிகளாக உருமாறிக் கொண்டிருந்தன.

இந்த உயிரினத்திற்கென்று இல்லை, அதன் பிறகு பல்வேறு உயிரினங்களில் நடத்தப்பட்ட மரபணு வரிசைமுறை ஆய்வுகள், இப்படியான 'அநாதை' மரபணுக்கள் ஒவ்வொரு உயிரின பிரிவிலும் இருப்பதை உறுதி செய்தன. புழுக்களில் இருந்து எலி வரை, கொசுவிலிருந்து மனிதன் வரை - இந்த வரிசை நீண்டுக்கொண்டே போகின்றது.

"every group of animals also possesses a small proportion of genes which are, in contrary, extremely variable among closely related species or even unique. For example, a gene may be present in one species or animal group, but not in any other. Such genes are referred to as "novel," "orphan" or "taxonomically restricted" 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.
ஒவ்வொரு விலங்கின பிரிவிலும், வழக்கத்திற்கு மாறாக, சிறிய அளவிலான மரபணுக்கள் முற்றிலும் வேறுபட்டவையாக அல்லது தனித்துவமாக காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு உயிரினத்தில் காணப்படும் மரபணு வேறெந்த உயிரினத்திலும் காணப்படவில்லை. இப்படியான மரபணுக்கள் 'அநாதை', 'விசித்திரமான' அல்லது 'வகுப்பு தொகுப்புமுறை கட்டுப்படுத்திய' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன - (Extract from the original quote of) 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008.

இப்படியான மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டப்போது, எதிர்காலம் இதற்கு பதில் சொல்லுமேன்று நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள் பரிணாமவியலாளர்கள். ஆதிகால மரபணுக்களின் கடைசியாக பிழைத்திருக்கக்கூடிய மரபணுக்களே இவை என்றும், இவற்றில் ஒரு சிறப்பும் இல்லை எதிர்கால ஆய்வுகள் இவற்றின் மூதாதையர் குறித்த விளக்கத்தை தரும் என்றும் சிலர் எண்ணினார்கள். ஆனால் நடந்ததோ நேர்மாறாக இருந்தது. மேற்கொண்டு இவற்றில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிலைமையை மேலும் சிக்கலாக்கினவே தவிர, பரிணாமவியலாளர்கள் எதிர்பார்த்த விடையை தரவில்லை.

'அநாதை' மரபணுக்களால் என்ன பயன்?

இந்த மரபணுக்களின் பயன்பாடுகள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அதே நேரம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல்கள், இவை மிக முக்கிய பணிகளை செய்வதாக கூறுகின்றன. எப்படி? விஷம் நிறைந்த பெட்டகங்களை தங்கள் இரையை நோக்கி செலுத்தி அவற்றை உணர்விழக்கச் செய்கின்றன ஜெல்லி மீன்கள் . இந்த பெட்டகங்களை கட்டமைக்கும் அதிநவீன செல்களின் உருவாக்கத்தில் 'அநாதை' மரபணுக்களே வழிகாட்டுகின்றன.

ஜெல்லி மீன். Image Coutesy: underwater.com.au

மற்றொரு உதாரணத்தையும் கூறலாம். ஆர்ட்டிக் பிரதேசங்களில் வாழும் ஒருவகை மீன்கள் (Polar Cod), அங்கு நிலவும் கடும் குளிரில் பிழைத்திருக்க அவற்றில் இருக்கும் 'அநாதை' மரபணுவே உதவி செய்கின்றது. மனித மூளையின் செயல்பாடுகளிலும் இந்த மரபணுக்கள் பங்காற்றலாம் என சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக, இவை தனித்துவமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளையும் உயிரினங்களில் செய்கின்றன.

எப்படி தோன்றின 'அநாதை' மரபணுக்கள்?

இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. இதுவரை படித்த நீங்களும் வியந்திருப்பீர்கள். இந்த மரபணுக்களுக்கு பரிணாம வரலாறும்(?) இல்லை. பின்பு எப்படி உருவாகின? உருவானதோடு நில்லாமல் முக்கிய செயல்களையும் செய்கின்றனவே, அது எப்படி?

'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பதற்கு 'சைன்ஸ் டெய்லி' தளத்தின் மொழியில் பதில் சொல்ல வேண்டுமென்றால் அது "obscure" என்பதாகும். புரியவில்லை/விளக்கமில்லை என்பது தான் இதன் அர்த்தம்.

மற்றொருமுறை பரிணாமக் கோட்பாட்டின் கணிப்பு தவறாகியிருக்கின்றது. அதனால் என்ன? கோட்பாடு எதிர்பார்க்கும்படி ஆதாரம் இல்லையென்றால், ஆதாரத்திற்கு ஏற்றப்படி கோட்பாட்டை உருவாக்கி/மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியது தான்.

"where do they come from? With no obvious ancestry, it was as if these genes had appeared from nowhere, but that couldn’t be true" All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.
இவை எங்கிருந்து வருகின்றன? தெளிவான மூதாதையர் இல்லாமல், இவை திடீரென தோன்றியிருப்பது போல தெரியலாம். ஆனால் இது உண்மையாக இருக்க முடியாது - (Extract from the original quote of) All alone: Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013.

ஆம், உண்மையாக இருக்க முடியாது :-) :-). அடுத்த என்ன, கற்பனைத் திறனை கட்டவிழ்த்துவிட வேண்டியது தான்.

மூதாதையர் இல்லை, பின்பு எப்படித்தான் இந்த மரபணுக்களின் தோற்றத்தை விளக்குவது? 'அநாதை' மரபணுக்கள் இருவழிகளில் தோன்றியிருக்க'லாம்' (Possibility) என்று கருதுகின்றார்கள் பரிணாமவியலாளர்கள்.

1. உயிரினங்களின் DNA-க்களில் உள்ள மரபணுக்களை இருவகையாக பிரிக்கின்றனர். ஒன்று, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை தன்னகத்தே கொண்ட மரபணுக்கள் ( 'அனாதை' மரபணுக்களும் இந்த பிரிவில் அடக்கம்). பல்வேறு புரதங்கள் ஒன்று சேர்ந்து உயிரினங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன. இவை Coding DNA என்றழைக்கப்படுகின்றன.

மற்றொரு பிரிவோ, புரதங்களை உருவாக்காத மரபணுக்களாகும். இவை Non-coding DNA அல்லது 'குப்பை' மரபணுக்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த குப்பை மரபணுக்கள் என்பவை உயிரினங்களில் பரிணாமம் ஏற்படுத்திய எச்சம்/மிச்சம் என்று நம்புகின்றார்கள் பரிணாமவியலாளர்கள். அதாவது, இவை ஒருகாலத்தில் பயனுள்ளதாக இருந்து இப்போது பயனற்றவையாக மாறிவிட்டன என்பது அவர்களது யூகம் (இதனால் தான் இவற்றிற்கு பெயர் 'குப்பை' மரபணுக்கள்).


ஆனால் 'குப்பை' மரபணுக்கள் என்பவை மிக முக்கியமான செயல்பாடுகளை உயிரின செல்களில் செய்கின்றன என்ற ஆய்வு முடிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உதாரணத்திற்கு, புரதங்களை உருவாக்கும் மரபணுக்களை இந்த 'குப்பை' மரபணுக்கள்  ஒழுங்குபடுத்துகின்றன என்பது இவற்றின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும். ('குப்பை' மரபணுக்கள் குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்).

அதெல்லாம் சரி, நான் மேலே குறிப்பிட்ட 'குப்பை' மரபணுக்களும், 'அநாதை' மரபணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?

'அநாதை' மரபணுக்களுக்கு மூதாதையர் யாரும் இல்லாததால், ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள இவை, அந்த உயிரினத்திலேயே, 'குப்பை' மரபணுக்களில் ஏற்படும் தற்செயலான மாற்றங்களால், ஆரம்பத்திலிருந்து (from the scratch) உருவாகியிருக்க வேண்டும் என்கின்றார்கள் பரிணாமவியலாளர்கள். 

எளிதாக சொல்ல வேண்டுமென்றால், 'குப்பை' மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் புதிதாக உருவாகியிருக்க வேண்டும். இதனை 'de Novo origin from Non-coding DNA" என்கின்றார்கள். De Novo என்றால் "ஆரம்பத்திலிருந்து" என்று அர்த்தம். புதிதாக உருவானதால் தான் இவற்றின் மூதாதையரை வேறு உயிரினங்களில் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது என்னடா விசித்திரமா இருக்கே என்று பார்வையாளர்கள் நினைக்கலாம். ஆனால் இயற்கையின் வல்லமையை :-) :-) நன்குணர்ந்த பரிணாமவியலாளர்களுக்கும் இது விசித்திரமாகத் தான் தோன்றியது. பின்னே இருக்காதா? எது நடக்க வாய்ப்பே இல்லை என்று முன்பு கூறி வந்தார்களோ அதனை நம்பி தொலைக்க வேண்டிய அல்லது வேறு வழியே இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு 'அநாதை' மரபணுக்கள் தள்ளிவிட்டனவே...

சில ஆய்வாளர்களின் பார்வையில், 'குப்பை' மரபணுக்களில் இருந்து புரதங்களை உருவாக்கும் 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் சைபர் மட்டுமே (practically zero). மற்றவர்களின் பார்வையிலோ இப்படியான உருவாக்கத்திற்கு மிக அற்பமான (infinitesimally small) வாய்ப்புகளே உள்ளன.

"If de novo emergence does indeed have a large role in orphan evolution, one has to explain how a new functional protein can emerge out of a previously non-coding sequence. This would seem highly unlikely a priori, particularly when one considers our current knowledge of protein evolution - The evolutionary origin of orphan genes" - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692.
'அநாதை' மரபணுக்கள் புதிதாக (அல்லது துவக்கத்திலிருந்து) உருவாக முடியும் என்றால், பயனுள்ள புரதங்களை 'குப்பை' மரபணுக்கள் எப்படி உருவாக்கியிருக்கும் என்பதை ஒருவர் விளக்க வேண்டி வருகின்றது. கோட்பாடு ரீதியாக, தற்போதுள்ள நம்முடைய புரத பரிணாம அறிவுப்படி, இதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகின்றன - (Extract from the original quote of) Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. 

ஆக, எதனை நம்புவது கடினமாக இருந்ததோ, அதனை வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. சரி போகட்டும், 'குப்பை மரபணுக்களில் இருந்து 'அநாதை' மரபணுக்கள் உருவாகலாம் என்ற இப்போதைய புரிதலிலாவது தெளிவு இருக்கின்றதா என்றால் 'இல்லை' என்பதையே பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது.

இந்த பதிவிற்காக, இந்த தலைப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டியிருந்தது (அந்த ஆய்வுக் கட்டுரைகளை கீழே மேற்கோள் காட்டியுள்ளேன். பதிவிற்கு எதிர்வினையாற்ற விரும்புபவர்கள் அனைத்து மேற்கோள்களையும் முழுமையாக பார்த்துவிட்டு செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்). அவற்றில் எதுவுமே 'அநாதை' மரபணுக்கள் இப்படித்தான் உருவாகின என்று அறுதியிட்டு கூறவில்லை. மாறாக எல்லாமே அனுமானம் தான். இப்படி நடந்திருக்கலாம் (may be), வாய்ப்பிருக்கலாம் (possible) என்று எல்லாமே 'லாம்' தான்.

அதுமட்டுமல்லாமல், இப்படியாக 'அநாதை' மரபணுக்கள் உருவாகுவதற்கு மில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இந்த யூகத்தை டெஸ்ட் செய்வதும் கடினமாகின்றது.

ஸ்ப்பா...... வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டதற்கு இன்று வாய்ப்பிருக்கின்றது, இன்று வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுவதற்கு நாளை வாய்ப்பில்லாமல் போகலாம்...என்னவோ போங்க :-) :-)

2. மேலே சொன்னதே கண்ண கட்டுது, இதுல அடுத்தது வேறயா? அதிக நேரம் எடுக்காது, இதையும் கேட்டுவிடுங்கள். 'அநாதை' மரபணுக்கள் என்பவை ஒரிஜினல் மரபணுக்களில் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பின்னர் நகல் எடுக்கப்பட்ட மரபணுக்களில் வேகமாக பரிணாமம் நடந்ததால் மூதாதையருடன் உள்ள ஒற்றுமைகள் துடைத்தெரியப்பட்டுவிட்டன என்கின்றது இரண்டாவது யூகம். இதனை 'Duplication followed by quick divergence' என்கின்றார்கள்.

இப்படியான விளக்கம் அனைத்து 'அனாதை' மரபணுக்களுக்கும் ஒத்துவராது என்று பரிணாமவியலாளர்களே கூறுவதால் இங்கு அதிகம் அலசப்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் பின்னூட்டங்கள் வாயிலாக அல்லது தனி பதிவாக பார்ப்போம் (இறைவன் நாடினால்).

முடிவாக..

தன்னுடைய 'அநாதை' மரபணுக்கள் குறித்த கட்டுரையில், நான் மேலே கூறியுள்ள இரண்டு வழிமுறைகளையும் மிக சுருக்கமாக ஒரே வரியில் குறிப்பிட்டுள்ள விக்கிப்பீடியா, அந்த கட்டுரையின் கடைசி பத்தியை இப்படி தொடங்கி நிறைவுச் செய்கின்றது.

"It is still unclear how orphan genes arise" - Wikipedia.
'அநாதை' மரபணுக்கள் எப்படி தோன்றின என்பது இன்னும் தெளிவாகவில்லை - (extract from the original quote of) Wikipedia.

Yeah, it is still unclear :-) :-) இந்த பதிவின் முதல் படத்தில் இருக்கும் 'அநாதை' மரபணுக்கள் சிரிப்பது தெரிகின்றதா???

மூடநம்பிக்கைகளில் இருந்து காத்து, இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

My Sincere thanks to:
1. Nature education
2. DNA learning Center.
3. New Scientist Magazine.
4. Science Daily.
5. Dr.Paul Nelson.
6. Tamil cube dictionary website.

References:
1. All alone -  Helen Pilcher, New Scientist, page 41, 19th Jan 2013. link
2. A happy ending for orphan genes -  Helen Pilcher, Science Monkey, 17th Jan 2013. link
3. Orphan Gene - Wikipedia. link
4. 'Orphan' Genes Play An Important Role In Evolution - Science Daily, 18th Nov 2008. link
5. Biological Common Descent is a Doctrine in Crisis - Dr. Paul Nelson. link
6. Ribosomes, Transcription, and Translation - Nature Educaton. link
7. Transcription and Translation Tool - Attotron.com. link
8. Phylogenetic patterns of emergence of new genes support a model of frequent de novo evolution - Rafik 9. Neme and Diethard Tautz, BMC Genomics 2013, 14:117 doi:10.1186/1471-2164-14-117, 21st Feb 2013. link
10. The evolutionary origin of orphan genes - Diethard Tautz and Tomislav Domazet-Lošo, Nature, VOLUME 12, OCTOBER 2011, Page No. 692. link
11. The Evolutionary Origin of Orphan Genes - Dr.Cornelius Hunter, Darwin's God, 30th Dec 2012. link
12. De-novo Evolution of Genes - Max Planck Institute for Evolutionary Biology. link
13. Must a Gene Have a Function? - LAURENCE A. MORAN, Sandwalk, 8th feb 2012. link
14. Orphan Genes and the Myth of De Novo Gene Synthesis - Designed DNA, 6th March 2012. link
15. Gene Birth, de novo - Biobabel. 4th July 2012. link
16. How Can There Be Orphan Genes? -  Molecular Evolution Forum, 29th May 2009. link
17. Mechanisms and Dynamics of Orphan Gene Emergence in Insect Genomes - Genome Biology and Evolution, Oxford journals, Volume 5, Issue 2, Page No. 439-455. doi: 10.1093/gbe/evt009, 24th Jan 2013. link
18. Orphans as taxonomically restricted and ecologically important genes - Microbiology, 10.1099/mic.0.28146-0, August 2005, vol. 151 no. 8 2499-2501. link
19. De Novo Genes: The Evolutionary Explanation -  Dr.Cornelius Hunter, Darwin's God, 23rd Nov, 2009. link
20. De Novo Origin of Human Protein-Coding Genes - PLoS Genet 7(11): e1002379, doi:10.1371/journal.pgen.1002379, 20th Nov 2011. link 
21. Recent de novo origin of human protein-coding genes - Genome Res.  2009 October; 19(10): 1752–1759, doi:  10.1101/gr.095026.109. link
22. Gene - Wikipedia. link
23. Darwinian alchemy: Human genes from noncoding DNA - Adam Siepel, Genome Res. 2009. 19: 1693-1695, doi:10.1101/gr.098376.109. link
24. Unique “Orphan Genes” Are Widespread; Have No Evolutionary Explanation - Creation Evolution Headlines, 19th Nov 2008. link
25. New Genes, New Brain - The Scientist, 19th Oct 2009. link
26. Orphan Genes - Youtube. link
27. Assessing the NCSE's Citation Bluffs on the Evolution of New Genetic Information - Evolution News, 25th Feb 2010. link
28. Fighting about ENCODE and junk -  Brendan Maher, NATURE NEWS BLOG, 6th Sep 2012. link
29. Gene duplication - Wikipedia. link

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






Tuesday, February 5, 2013

நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம். 

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை. ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர் செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு போடுவது ஒருவித அறியாமையே. 

உண்மை என்னவென்றால், ஒன்றிற்காக போராடப்பட வேண்டியது அவசியம் என்றால், விளம்பரமாகிவிடும் என்று அமைதியாக இருந்திட முடியாது. அப்படி இருந்தால், அது, பல நேரங்களில் நம் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். நம் மவுனமும் வீணாகிப்போகும். போராட வேண்டியதற்கு போராடாமல் மவுனமாக இருந்ததற்கான வலியை மிக அதிகமாகவே வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

சரி விடுங்க நாம் பதிவிற்குள் செல்வோம். இரு தினங்களுக்கு முன்பாக (3rd Feb 2013), நியூயார்க் டைம்ஸ் தினசரியில் பிரெஞ்சு முஸ்லிம்கள் குறித்து வெளியான கட்டுரை, நான் முதல் பத்தியில் சொன்ன கருத்தை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றது. எம்மாதிரியான எதிர்மறை எண்ணங்களும் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பையும் தரவில்லை. அவை தந்ததெல்லாம் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே.   

பிரான்சில் இஸ்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தை, அதன் காரணிகளை அலசும் இந்த கட்டுரையோடு சில இடங்களில் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்காமல் அந்த கட்டுரையின் தமிழாக்கத்திற்கு செல்கின்றேன். 

"பாரிஸ்சின் புறநகர் பகுதியில் (CRÉTEIL) அமைந்துள்ள இந்த விசாலமான, நேர்த்தியான நவீன கட்டிடம் 'இஸ்லாமை தழுவியவர்களின் மசூதி' என்று அறியப்படுகின்றது. 

சஹாபா பள்ளிவாசல் என்றழைக்கப்படும் இந்த மசூதியில், ஒவ்வொரு வருடமும், சுமார் 150 பேர் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர்.  அதிசயவைக்கும் 81 அடி மினாரட்டுடன், 2008-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசல், பிரான்சில் வளர்ந்துவரும் இஸ்லாமின் அடையாளமாக திகழ்கின்றது. வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்பவர்களில் எண்ணற்றவர்கள் ரோமன் கத்தோலிக்கர்களாக முன்பிருந்த இளைஞர்கள். 


CRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி 

இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தபோதும், கடந்த 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வுடன் இஸ்லாம் அணுகப்படும் இந்த சூழலில், பிரஞ்சு மக்களிடையே இஸ்லாம் வளர்ந்து வருவது அரசிற்கு கடும் சவாலாக திகழ்கின்றது. 

தங்கள் குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் விளையும் சிக்கல்களை நெடுங்காலமாகவே பிரெஞ்சு அதிகாரிகள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். சென்ற அக்டோபர் மாதம், தீவிரவாத போக்குடைய பனிரெண்டு நபர்களை பிரஞ்சு அரசாங்கம் கைது செய்தது. இதில் மூன்று பேர், சமீபமாக இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர். 

பிரெஞ்சு செய்தியறிக்கைகளை பொருத்தமட்டில், இஸ்லாமிய அடிப்படைவாத(?) போக்கிற்கு சிறைச்சாலைகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினர் இஸ்லாமை கடைபிடிக்கும் மக்களாவர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் முஸ்லிம்கள், தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக அணுகப்படுவதாக கூறுகின்றனர். பிரெஞ்சு குடிமக்கள் இஸ்லாமை ஏற்பதால் அதிகரித்துவரும் பிரச்சனைகள், சகிப்புதன்மையற்றதாக பிரெஞ்சு சமூகம் மாறிவருவதை பிரதிபலிப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்.

எது எப்படியாகினும், இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்திருப்பது சந்தேகத்திற்கிடமில்லாத நிகழ்வாக மாறிவிட்டது. 'ஆச்சர்யமூட்டும் வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன, குறிப்பாக 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு" என்கின்றார் பிரெஞ்சு உள்துறை அதிகாரியான பெர்னார்ட். 

ஆறு மில்லியன் மக்கட்தொகையை கொண்ட பிரெஞ்சு முஸ்லிம் சமூகத்தில், சுமார் ஒரு லட்சம் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிரெஞ்சு குடிமக்களாவர். இது 1986-ஆம் ஆண்டு ஐம்பதாயிரமாக இருந்ததாக பெர்னார்ட் தெரிவிக்கின்றார். முஸ்லிம் இயக்கங்களோ இந்த எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றன. 

திருமணத்திற்காக மதம் மாறுவது நீண்ட காலமாகவே பிரெஞ்சு சமூகத்தில் நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வென்றாலும், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. இஸ்லாமை ஏற்கும் பல இளைஞர்கள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள விரும்பி இஸ்லாமை ஏற்கின்றனர். 

21 வயதான சார்லி, இளம் வயதிலேயே நிறைய வேதனைகளை சந்தித்தவர். ரோமன் கத்தோலிக்கராக வளர்ந்த இவருக்கு பள்ளியில் நிறைய முஸ்லிம் நண்பர்கள் கிடைத்தனர். தன்னுடைய 19-ஆம் வயதில் இஸ்லாத்தை தழுவிய சார்லி, 'இஸ்லாமை ஏற்பதென்பது ஒரு சமூக நிகழ்வாகவே மாறிவிட்டது' என்கின்றார். சிலர் ஆர்வத்தில் இஸ்லாமை ஏற்பதாகவும் அவர் கூறுகின்றார்.  

முஸ்லிம்கள் அதிகம் வாழும் சில பகுதிகளில், அங்கு வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கின்றனர். ஒரு குழுவாக இப்படி செயல்படுவதை அவர்கள் பெரிதும் விரும்புவதாக சமூகவியல் வல்லுனரான ஆம்கார் தெரிவிக்கின்றார். 

புறநகர் பகுதிகளை பொருத்தமட்டில், இஸ்லாம் என்னும் மார்க்கம் சமூகரீதியான மாற்றத்தை மட்டும் கொண்டுவரவில்லை, ஒரு அடைக்கலத்தையும் அது கொண்டுவந்துள்ளது. நவீனயுகத்தின் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் புகலிடமாக இஸ்லாம் திகழ்வதாக ஆய்வாளர்களும், இஸ்லாமை தழுவியவர்களும் கூறுகின்றனர்.  

கட்டமைப்பையும், ஒழுக்கத்தையும் வேறெந்த மார்க்கத்தை விடவும் இஸ்லாம் அதிகமாக கொடுப்பதாக கூறும் ஆம்கார், குடும்ப அமைப்பின் முக்கியத்துவதிற்கும், ஆண் பெண்ணுக்கான தெளிவான பொறுப்பிற்கும் திரும்ப இஸ்லாம் உதவுவதாக கூறுகின்றார். 'இஸ்லாமை ஏற்றவர்கள் தங்களுக்குள் அமைதியை உணர்கின்றனர். இஸ்லாமை தழுவியவுடன், உலகம் தெளிவான ஒன்றாக அவர்களுக்கு மாறிவிடுகின்றது' என்று மேலும் தெரிவிக்கின்றார் ஆம்கார்.  

தென் கடற்கரை பகுதியான மர்சேவை பொருத்தமட்டில் 'கடந்த மூன்றாண்டுகளில், வியக்கத்தக்க வகையில் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துள்ளன" என்கின்றார் இந்த பகுதியின் முக்கிய மசூதியின் இமாமான அப்துர் ரஹ்மான் கவுல். மர்சேவின் பிரெஞ்சு கவுன்சில் தலைவரான இவர், 2012-ஆம் ஆண்டு மட்டும், சுமார் 130 இஸ்லாமிய தழுவல்களுக்கான சான்றிதழ்களில் கையொப்பமிட்டுள்ளார். 

பிரான்சின் மதச்சார்பின்மை கொள்கை ஆன்மீகரீதியான வெற்றிடத்தை அதன் குடிமக்களிடம் உருவாக்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் மதசார்பின்மை என்பது மதங்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. இது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி இஸ்லாமை மக்கள் கண்டெடுக்க வழிவகை செய்துவிட்டது. 

பிரபலங்கள், குறிப்பாக கால்பந்து நட்சத்திரங்கள் இஸ்லாமை ஏற்பது குடிமக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக இஸ்லாம் மேலும் வளருவதற்கு வழிவகை செய்வதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஆனால், வளர்ந்து வரும் இஸ்லாமின் செல்வாக்கு ஒருவிதமான பதற்றத்தை உருவாக்கியுள்ளது, குறிப்பாக வலதுசாரிகளிடம். பிரான்சின் எதிர்காலம் குறித்து பேசும் போதெல்லாம் அங்கே இஸ்லாமின் பங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு, பாரிஸ் மேட்ச் இதழில், ராப் இசை பாடகியாக இருந்து இஸ்லாமை தழுவிய டையமின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் வெளிவாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளித்த டையம் தன்னை விமர்சித்தவர்களின் கருத்தை நிராகரித்தார். ஹிஜாப் அணிந்திருப்பதால் தான் அடிப்படைவாத(?) முஸ்லிமாகி விட மாட்டேன் என்றும், இஸ்லாமை ஏற்றது தன் தனிப்பட்ட விருப்பம் என்றும், மனச்சோர்வில் சிக்கியிருந்த தனக்கு அதிலிருந்து விடுபட இஸ்லாம் உதவியதாகவும் குறிப்பிட்டார். 

ரபெல்லோ, CRÉTEIL பகுதியில் புத்தகக்கடை வைத்திருக்கும் இவர், தன்னை போன்றவர்களே பிரெஞ்சு முஸ்லிம்களை பிரதிபலிப்பதாக கூறுகின்றார். திசைக்காட்டியுடன் கூடிய விரிப்புகளையும் விற்கும் ரபெல்லோ, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை சுட்டிக்காட்டும்போது, 'இஸ்லாம் என்றால் இதுதான் என்ற கற்பனையான மனநிலையில் இருந்து வெளிவரவேண்டும். பிரெஞ்சு குடிமகனாகவும், முஸ்லிமாகவும் ஒருவர் அமைதியுடன் வாழ முடியும்' என்கின்றார்" 

இதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை...

இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 

Please Note:
முழுமையான, வார்த்தைக்கு வார்த்தையான மொழிபெயர்ப்பு அல்ல. நீளம் கருதி சில வரிகள் விடப்பட்டும், சுருக்கப்பட்டும் உள்ளன. முழுமையாக படிக்க கீழ்காணும் லிங்க்கை சுட்டவும். 

Reference:
1. More in France Are Turning to Islam, Challenging a Nation’s Idea of Itself - New york times, 3rd Feb 2013. link 

வஸ்ஸலாம்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ  






Thursday, January 10, 2013

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன். 

ஒவ்வொரு முயற்சிக்கும் விதை எங்கிருந்தாவது தூவப்பட வேண்டும். எங்களுக்கான விதை என்றால் அது உம்மத் குழுமம் தான். சில வருடங்களுக்கு முன்பாக, இணையத்தில் நிலவும் தவறான இஸ்லாமிய புரிதல்களை களைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருந்தது. அப்படியான தருணத்தில் சில பதிவர்களை ஒருங்கிணைத்து ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த குழுமம். 

இஸ்லாம் என்னும் அற்புத வழிமுறை இருந்ததால் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைப்பதில் சிரமம் இருக்கவில்லை. சில பதிவர்களுடன் துவங்கிய இந்த முயற்சி இன்று பல பதிவர்களுடன் ஆரோக்கியமான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. நபிமொழி தொகுப்பான சஹிஹ் முஸ்லிமை மின்னூல் வடிவில் கொண்டுவந்தததில் தொடங்கி ஒரு கட்டுக்கோப்பான பதிவர் வட்டத்தை எட்டியது வரை இந்த குழுமம் நடத்திக்காட்டிய ஆக்கப்பூர்வமான பணிகள் பல. புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக. 

அப்படியான முயற்சிகளில் ஒன்றை தான் நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டிருக்கின்றீர்கள்.  முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது எங்களின் நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று. இன்று அது சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றோம். இம்மாதிரியான எதிர்கால முயற்சிகளுக்கு நிச்சயம் இந்நூல் முன்னோடியாக இருக்கும் என்று கூறிக்கொள்ளும் இத்தருணத்தில் சிலருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியத்தில் சகோதரர்கள் சிராஜ், நிஜாம் மற்றும் சகோதரி ஆமினா முஹம்மத் ஆகியோருக்கு பெரும் பங்கு உண்டு. அடுத்ததாக, உம்மத் குழும சகோதர சகோதரிகள். இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த பணியை முன்னெடுத்து சென்றிருக்க முடியுமா என்பது சந்தேகமே. கட்டுரைகளை தொகுக்க குழு அமைத்ததில் தொடங்கி, நேர்த்தியான திட்டமிடல் வரை இவர்களின் உழைப்பு அலாதியானது. இவர்கள் அனைவரின் கல்வி ஞானத்தையும் இறைவன் அதிகரித்து தருவானாக என்று பிரார்த்தித்தவனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.       

ஒரு தரமான படைப்பாக இந்நூல் உங்கள் உள்ளத்தினை ஆக்கிரமிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.   



சகோதரத்துவத்துடன், 
ஆஷிக் அஹமத் அ, 
உம்மத் பதிவர் குழுமம்.

----------------

இன்னும் சில தினங்களில் (இன்ஷா அல்லாஹ்) வெளிவர இருக்கும் முஸ்லிம் பதிவர்களின் நூலுக்காக எழுதப்பட்ட இந்த முன்னுரையே உங்களுக்கு பல தகவல்களை தந்திருக்கும். 


பதிவுலகம் என்பது சவால்கள் நிறைந்த பகுதி. இங்கு நிலைப்பதற்கும் சரி, சிறப்பாக செயல்படுபதற்கும் சரி கடுமையான பொறுமையும், சிறப்பான செயல்பாடுகளும் அவசியம். அதிலும் இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை களையவதென்பதே நோக்கம் என்றால் அதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டும். அந்த வகையில் இன்றைய முஸ்லிம் பதிவர்களின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியையே தருகின்றன. 

இஸ்லாம் குறித்த பல தவறான புரிதல்கள் இன்று ஆக்கப்பூர்வமாக எதிர்க்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு, தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்ற கருத்து, முன்பு எப்போதும் இல்லாத அளவு இன்று வலுப்பெற்று வருகின்றது. இதுவொரு மிக ஆரோக்கியமான முன்னேற்றம். 

ஆனால் இது போதுமா என்றால், இல்லை. ஆம், தமிழ் பேசும் ஒவ்வொரு வீட்டிற்கும் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு "எதிர்க்குரல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும் இன்ஷா அல்லாஹ். 

நூலில் இருந்து சில க்ளிப்ஸ் 

கடந்த சில மாதங்களாக, இந்த தளத்திற்கு, குர்ஆன் கேட்டு வரும் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளின் கோரிக்கைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. அத்தகைய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த நூல் இருக்கும். 

இணையத்தில் எழுதுவதோடு மட்டுமல்லாமல், ஒரு புத்தகமாக வெளிக்கொண்டு வந்து பலருக்கும் சேர்க்க வேண்டும் என்ற எங்களின் தொலை நோக்கு பார்வை இன்று சாத்தியப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

எதிர்வரும் சென்னை புத்தக கண்காட்சியின் போது வெளிவரும் இந்த நூல் குறித்த மேலதிக தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் புத்தகம் கிடைக்கும் இடங்கள்:



நூல் விற்பனையாளர்கள்:

சஜிதா புக் சென்டர்,
248, தம்பு செட்டி தெரு,
முதல் தளம்,
பாரிமுனை,
சென்னை- 600 001
044 - 25224821


Sajitha Book Centre,
248, Thambu Chetty Street,
Ist Floor,
Parrys,
Chennai 600 001.
044 - 25224821


தொடர்புக்கொள்ள:

ஆஷிக் அஹமத் : 90432 99006
சகோதரர் சிராஜ்: 99415 85566

இந்த தளம் மூலம் நேரடியாக நூலை பெறவிரும்புவோர், எத்தனை புத்தகம் தேவை, முகவரி உள்ளிட்ட தகவல்களை எனக்கு மெயில் (aashiq.ahamed.14@gmail.com) மூலம் தெரிவியுங்கள். இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கின்றேன். 

எங்கள் முயற்சிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள் இந்த பணிக்கும் உங்களின் மேலான ஆதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள் - குர்ஆன் 05:02

இறைவன் என்றென்றும் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக..ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ