Monday, January 17, 2011

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முஸ்லிம் பதிவர்கள் மற்றும் பின்னூட்டமிடும் முஸ்லிம்களை மனதில் கொண்டு எழுதப்படும் பதிவு. 

தமிழ் பதிவுலகில் பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் அழகான முறையில் செயலாற்றி வருகின்றார்கள். இஸ்லாம் குறித்த தகவல்கள், சமூக பிரச்சனைகள், உலக நடப்புகள், தொழில்நுட்பம் என்று அருமையாக எழுதி வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

முஸ்லிம் பதிவர்களில் ஒரு பகுதியினர் நான் இங்கு சொல்லப்போகும் விஷயத்தை ஏற்கனவே செயல்படுத்தி தான் வருகின்றார்கள். அவர்கள் மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமீன். 

மற்றொரு பகுதியினர், நான் இந்த பதிவில் சொல்ல விருப்பப்பட்டிருக்கும் மையக்கருத்து சரியானதாக இருந்தால் அதனை செயல்படுத்த ஆவணச் செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள், இறைவனுக்காக என்னை மன்னிக்கவும் செய்யுங்கள்.

பதிவிற்குள் செல்வோம்...

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி (Greetings) கொள்ள முற்படும் போது "அனிம் சபாஹன்" என்றோ அல்லது "அனிமு சபாஹன்" என்றோ கூறுவார்கள். இந்த வார்த்தைகள் "அல்-நிமாஹ்" என்ற வார்த்தையிலிருந்து வந்தவை. இதற்கு கிட்டத்தட்ட "குட் மார்னிங்" என்பதாக அர்த்தம் கொள்ளலாம்.  "இந்த காலை பொழுது உங்களுக்கு நல்லதாக இருக்கட்டும்" என்பதாக அர்த்தம் வரும். காலை பொழுது நன்றாக இருந்தால் அந்த நாளின் மற்ற பொழுதுகளும் நன்றாக இருக்கும் என்பது தான் அந்த முகமனின் பின்னணி.

இறுதி தூதர் (ஸல்) வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மாபெரும் புரட்சிக்கு உட்படுத்தபட்ட போது அவர்களின் வாழ்த்தும் முறைகளும் மாற்றம் கண்டன. அவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்ததற்கும் மேலான மிக அழகிய முகமனை இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது, 
அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)
என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம்  என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்? அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே?



அன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். 

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன? 

அல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், "இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது?". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), "அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).  

ஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். 

ஏன் ஸலாம் கூற வேண்டும்? 

சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...



பின்வரும் ஹதீசை கவனியுங்கள்.       

நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, "நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா? உங்களுக்குள்ளாக ஸலாத்தை பரப்புங்கள்" --- Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513)   

சுபானல்லாஹ்...என்னவொரு அழகான வார்த்தைகள் !!!...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்)  கூறியிருக்கின்றார்கள். 

ஸலாம் கூறுவதால் என்ன பயன்?

முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு? 

ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)      
       
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.

இப்போது, பின்னூட்டமிடும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பதிவர்களுக்கு...

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவத்தை விரிவாக மேலே பார்த்தோம். இவ்வளவு அழகான ஒரு முகமனை நம்மில் பலரும் நம் பதிவுகளின் ஆரம்பத்தில், பின்னூட்டங்களில் அடுத்தவருக்கு சொல்லாமல் கிடைக்கும் நன்மையை இழக்கின்றோம். 

"உங்கள் மீது சாந்தி உண்டாவதாக" என்ற இந்த முகமன் எவ்வளவு அழகானது, மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். முஸ்லிமல்லாதவரை நோக்கி  இதனை கூறினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டுமல்லவா? (முஸ்லிமல்லாத தன் தந்தையை நோக்கி "உம் மீது ஸலாம் உண்டாவதாக" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது). இஸ்லாம் கூறும் இந்த அற்புத விஷயத்தை நமக்குள் வைத்து கொண்டால் போதுமா? முஸ்லிமல்லாத நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?

முஸ்லிம்கள் நமக்குள்ளாக சகோதரத்துவத்தை வலுவாக வளர்க்கும் ஸலாத்தை ஒவ்வொருமுறையும் நாம் நம் சகோதரர்களுக்கு பின்னூட்டமிடும் போதும் சொன்னால் அழகாக இருக்குமல்லவா? நம்முடைய நன்மைகளும், நமக்குள்ளான அன்பும் கூடுமல்லவா? 

மற்றொரு அருமையான விசயத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஸலாம் கூறுவதற்கே இஸ்லாத்தில் இவ்வளவு முக்கியத்துவமென்றால் ஸலாத்திற்கு பதில் கூறுவதை பற்றி கேட்கவே வேண்டாம். அது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகின்றது.  "ஒருவர் உங்களுக்கு ஸலாம் கூறினால், அதனை விட சிறப்பான ஒன்றையோ அல்லது அதனையோ திரும்ப கூறுங்கள்" என்ற பொருளில் வரும் இறைவசனமும், நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றும் அதனை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நாம் மற்றொரு சகோதரருக்கு ஸலாம் கூறினால் அவர் நிச்சயமாக நமக்கு திரும்ப ஸலாம் கூறவேண்டும். நாம் ஸலாம் கூறியது போலவும் ஆகிற்று, அவரையும் பதில் ஸலாம் சொல்ல தூண்டியாகிவிட்டது. நமக்கும் நன்மை, அவருக்கும் நன்மை....சுபானல்லாஹ்.     

இதையெல்லாம் விட மேலாக...

சகோதரர்கள் சிலர் எனக்கு அனுப்பும் மெயில்களை கண்டு நான் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், தாவாஹ் செய்ய அவர்கள் எவ்வளவு ஆர்வப்படுகின்றார்கள் என்பதை எண்ணி பூரிப்படைந்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். 

ஆம், அடுத்தவருக்கு ஸலாம் கூறும் இந்த சிறு விஷயம் கூட ஒரு அழைப்பு பணிதான். நம்மிடையே தாவாஹ் செய்ய விரும்பாத சகோதர/சகோதரிகள் இருப்பனரா? நிச்சயமாக இருக்க மாட்டோமல்லவா? இஸ்லாத்தில் நாம் அறிந்த விஷயம் சிறியதாக இருந்தாலும் அது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தால் அதனை அடுத்தவருக்கு சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

பின்னூட்டங்களில், பதிவுகளின் துவக்கத்தில் ஸலாம் கூறுவோம்...சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்...நன்மைகளை அள்ளுவோம்...இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் --- (சூறா மாயிதா,02)

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து சரியெனபட்டால் செயல்படுத்த ஆவண செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். ஏக இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி நம்முடைய நற்காரியங்களுக்கு தகுந்த கூலி வழங்குவானாக, ஆமீன்.

தவறாக இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்... 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன். 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My sincere thanks to:
1. Islam-qa.com for Hadith references. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 







Monday, January 10, 2011

"இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்"



உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.


----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை" என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர், "பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 

இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link 
3. Federation of Student Islamic Societies. link

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ