Tuesday, March 16, 2010

அஹ்மத் தீதத்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.


இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    


1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.



அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "



என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.  
                         
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுப்ஹானல்லாஹ்...

அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthway.tv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 
1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.
  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.






8 comments:

  1. மாஷா அல்லாஹ்

    அல்லாஹ்வின் உதவியோடு

    அவருடைய உறுதி

    அவருடைய ஆற்றல்

    வியக்கிறேன் - அல்லாஹ் நாடினால் அவருடைய பேச்சுகளை முழுதுமாக கேட்க்க விழைகிறேன்.

    ஜஸாக்கல்லாஹ் சகோதரரே!

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்! அறைகுறை ஆங்கில அறிவோடு அஹ்மத் தீதாத் அவர்களின் வீடியோக்களை தேடித் தேடி பார்ப்பேன். தங்களுடைய விளக்கம் எனக்கு மிக உதவியாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்!!!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரரே உங்கள் தளத்தை படிக்க ஆரம்பித்த பின் எனக்கு என் ஆங்கில அறிவை நினைத்து வருத்தம் வருகிறது.அஹமத் தீதத் பற்றி அறிந்த நான் இந்த ஆங்கில புலமையின் காரணமாகவே ஒதுக்கி வைத்து இருந்தேன்.இன்ஷா அல்லாஹ் நான் முயற்சிக்கிறேன் .உங்களின் இந்த முயற்சிக்கு உரிய கூலியை கொடுக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  4. Jasakkallahu Hairan, for the information about Ahamed deedat. I wish to know about Dr.Zakir Naik also, I expect that as well as,……………….

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
    உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

    அஹ்மத் தீதத் VIDEO வேண்டும்.
    தமிழ் மொழிப்பெயர்ப்பு உள்ளதா. எங்கு கிடைக்கும்?
    குரன்னை படிக்கும்(தமிழ்) பொது அதிலுள்ள அர்த்தங்கள் புரிய என்ன செய்ய வேண்டும்.
    எந்த வஹி எபபோது வததுன்னு எப்பாடி தெரிங்குக்கணும்.
    PLS REPLY ME.

    ABDUL HACKIM.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அப்துல் ஹக்கீம்,

      வ அலைக்கும் சலாம்,

      அஹ்மத் தீதத் அவர்களின் அனைத்து வீடியோக்களையும் இந்த தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். http://english.truthway.tv/

      நான் அறிந்தவரை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லை. தங்களின் மற்ற கேள்விகளுக்கு சாட் மூலமாக வந்தால் சரியாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் (என் மெயில் முகவரி aashiq.ahamed.14@gmail.com)

      வஸ்ஸலாம்,

      Delete
    2. யா அல்லாஹ் என்னவென்று சொல்வது இவர்கள் ஈமானை ..உங்கள் கட்டுரையை படித்துக்கொண்டு வரும்போது .இறைவனின் கடைசி கட்ட சோதனை என்று வரும்போதே நினைத்து விட்டேன் .இவர் மவுத் ஆகிவிட்டார் என்று பிறகு அதிர்ச்சி யூட்டும் அடுத்த விஷயத்தை படிக்கும்போது கண்கள் கலங்காத குறைதான் அல்லாஹ் என்றும் அவருக்கு .சுவனத்தில் நல்ல அந்தஸ்தில் வைப்பானாக .அமீன் ..ஆஷிக் பாய் இணையத்தில் நான் தேடிக்கொண்டு இருக்கும் நபர் நீங்கள்தான் அல்ஹம்துலில்லாஹ் .உண்மையிலேயே இதுபோல ஒரு வலை பகுதியை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன் முழு மனதோடு சொல்கின்றேன் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இம்மையிலும் மறுமையிலும் நல்ல அந்தஸ்தில் இருக்க வைப்பானாக ஆமீன் , நான் சில நண்பர்களிடம் இதை தான் சொன்னேன் எனக்கு dr ZAKIRNAIK ,பிலால் பிலிப்ஸ் ,அப்துர்ரஹீம் கீரீம் .இவர்களை பற்றி ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து தாருங்கள் நான் என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிடவேண்டும் என்று ஏற்கனவே கூறியுள்ளேன் .எனக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது எனவே உங்கள் பதிவு எனக்கு மிகுந்த பயனுள்ளதாகவே அமையும் .உங்கள் அனுமதி வேண்டி காதிருக்கிறேன் ....

      Delete
    3. வ அலைகும் சலாம், அல்ஹம்துலில்லாஹ் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ

      Delete