Showing posts with label பைபிள். Show all posts
Showing posts with label பைபிள். Show all posts

Sunday, April 11, 2010

"இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்".....



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.

இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் "How the Bible Led me to Islam" என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.

அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.            


"நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).

நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.

அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது. 

ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,

"நீ பைபிளை படித்திருக்கிறாயா"

எனக்கு ஆச்சர்யம், "அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்"

"இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை"  

நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.

அவர் தொடர்ந்தார், "பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை"

அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.  

பிறகு அவர் கூறினார், "நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?"

சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று "Genesis" (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.

அதிர்ச்சிகள் பல காத்திருந்தன...

ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?

உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ.................
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).

இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.

  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா? 
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்? 
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்? 

ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே...இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?

புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,

"இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது"...

அதையேத்தான் அவரும் கூறினார். "சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது".

சரியென்று "New Testament" டை படிக்க ஆரம்பித்தேன்.

இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.

ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே "New Testament"ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்...

என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.

"இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்"

பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,

"இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)"         

என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?


என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.


1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, "நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்" என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.    


கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.




சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.

அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.

ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், "உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்".

பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.    

நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.

நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.

பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.

இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.

பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், "உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்"

நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே...

நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், "உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்"

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

"முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற "Moon God" டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்" என்று என்னென்னவோ இருந்தது.                                                  

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். "நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை"

பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே?

ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,

"இஸ்லாமைப் பற்றி தெரியுமா?" என்று கேட்டார்..

"இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்" என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.

"So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்"

"நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்"    

"உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்"  

"நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?"

"ஆம், அதனால் என்ன?" 

"முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே"

"என்ன?" ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

"இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா" 

"ஜும்மாஹ் என்றால்?"

"ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது" (அரங்கத்தில் சிரிப்பு)

"எங்கே இருக்கிறது மசூதி?"

அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.  

அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.

அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.

என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். "என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா? இது அதற்குண்டான செட்அப்பா" ஒருவித பயம்.

பின்னர் குத்பா ஆரம்பித்தது "இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு" என்று ஆரம்பித்தார் இமாம்.  

அவ்வளவுதான் பயம் அதிகரித்தது...

"அடக் கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது", வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.                                

அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, "இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர". அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?  

குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

"என்ன செய்யப் போகிறீர்கள்" என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.

"தொழ போகிறோம்"

"யாரை"

"இறைவனை"

"எந்த இறைவன்?"

"உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை"

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
      
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.

சஜிதா செய்தார்கள். "ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது". முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.

தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.    

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

"இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?"

"ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்"

"அதை நான் படிக்கலாமா"

"நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்"

எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.

முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.

"இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்" என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.

கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.

திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...

இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.

நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.

என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.

என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?

அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.

இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.

தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.              

என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.   

நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.

அல்ஹம்துலில்லாஹ்...இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.

நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.

இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்"


அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக...ஆமின்.

நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழே கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Brother Yusha Evans Official website:
1. http://yushaevansdotcom

This Article translated from:
1. Br.Yusha Evans speach "How the Bible Led Me to Islam" on 6th Feb,2009 at Masjid Omar Al Farouk, Islamic Institute of Orange county, Anaheim, California.

Video downloaded from:
1. youtubedotcom

My Sincere Thanks to:
1. IIOC Internet committee reproduction.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.







Tuesday, March 16, 2010

அஹ்மத் தீதத்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.


இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    


1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கிறது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.



அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "



என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.  
                         
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான்  அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுப்ஹானல்லாஹ்...

அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedatdotcodotza

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthway.tv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 
1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.
  
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.