Monday, January 17, 2011

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

முஸ்லிம் பதிவர்கள் மற்றும் பின்னூட்டமிடும் முஸ்லிம்களை மனதில் கொண்டு எழுதப்படும் பதிவு. 

தமிழ் பதிவுலகில் பெரும்பாலான இஸ்லாமிய பதிவர்கள் அழகான முறையில் செயலாற்றி வருகின்றார்கள். இஸ்லாம் குறித்த தகவல்கள், சமூக பிரச்சனைகள், உலக நடப்புகள், தொழில்நுட்பம் என்று அருமையாக எழுதி வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

முஸ்லிம் பதிவர்களில் ஒரு பகுதியினர் நான் இங்கு சொல்லப்போகும் விஷயத்தை ஏற்கனவே செயல்படுத்தி தான் வருகின்றார்கள். அவர்கள் மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக...ஆமீன். 

மற்றொரு பகுதியினர், நான் இந்த பதிவில் சொல்ல விருப்பப்பட்டிருக்கும் மையக்கருத்து சரியானதாக இருந்தால் அதனை செயல்படுத்த ஆவணச் செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். தவறாக இருந்தால் சுட்டி காட்டுங்கள், இறைவனுக்காக என்னை மன்னிக்கவும் செய்யுங்கள்.

பதிவிற்குள் செல்வோம்...

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் அரேபியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி (Greetings) கொள்ள முற்படும் போது "அனிம் சபாஹன்" என்றோ அல்லது "அனிமு சபாஹன்" என்றோ கூறுவார்கள். இந்த வார்த்தைகள் "அல்-நிமாஹ்" என்ற வார்த்தையிலிருந்து வந்தவை. இதற்கு கிட்டத்தட்ட "குட் மார்னிங்" என்பதாக அர்த்தம் கொள்ளலாம்.  "இந்த காலை பொழுது உங்களுக்கு நல்லதாக இருக்கட்டும்" என்பதாக அர்த்தம் வரும். காலை பொழுது நன்றாக இருந்தால் அந்த நாளின் மற்ற பொழுதுகளும் நன்றாக இருக்கும் என்பது தான் அந்த முகமனின் பின்னணி.

இறுதி தூதர் (ஸல்) வந்த பிறகு, அவர்களின் வாழ்க்கை மாபெரும் புரட்சிக்கு உட்படுத்தபட்ட போது அவர்களின் வாழ்த்தும் முறைகளும் மாற்றம் கண்டன. அவர்கள் முன்பு கூறிக்கொண்டிருந்ததற்கும் மேலான மிக அழகிய முகமனை இஸ்லாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அது, 
அஸ்ஸலாமு அலைக்கும் (May Peace be upon you)
என்னும் அற்புத முகமனாகும். "உங்கள் மீது அமைதி நிலவுவதாக" என்று பொருள்படும் இந்த முகமன் கேட்பவர் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மனிதகுலம்  என்றென்றும் ஏங்குவது மன அமைதிக்காகத்தான். ஒருவர் நமது அமைதிக்காக பிரார்த்திக்கும் போது யார் தான் மகிழ்ச்சியடையாமல் இருப்பர்? அமைதி என்று பொருள்படும் ஸலாம் என்ற வார்த்தை அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். அமைதியின் பிறப்பிடம் இறைவன் தானே?



அன்றிலிருந்து அந்த வார்த்தை இன்றியமையாத ஒன்றாக திகழ ஆரம்பித்தது. ஸலாம், அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு என்று பல முறைகளில் சலாம் கூற ஆரம்பித்தனர் முஸ்லிம்கள். 

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவம் என்ன? 

அல்லாஹ்வின் தூதரிடம் ஒருவர் கேட்டார், "இஸ்லாத்தில் சிறந்த விசயம் எது?". அதற்கு இறுதித் தூதர் (ஸல்), "அடுத்தவருக்கு உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதுமே ஆகும்" என்று பதிலளித்தார்கள் --- Al-Bukhaari (12, 28 and 6236), Muslim (39), Ahmad (2/169), Abu Dawood (5494).  

ஆம், இஸ்லாத்தில் மிக முக்கிய விசயங்களில் ஒன்று அடுத்தவருக்கு சலாம் கூறுவது, இறைவனின் சாந்தி அவர் மீது நிலவ வேண்டுமென மனதார துஆ செய்வது. மேலே பார்த்த ஹதீஸை உற்று நோக்கினால் அழகான ஒரு விஷயத்தை உணரலாம். அதாவது, ஒருவருடைய வயிற்று பசியை போக்குவதும், அவருடைய மன அமைதிக்கு பிரார்த்திப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையென மிக அழகாக கூறியிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். 

ஏன் ஸலாம் கூற வேண்டும்? 

சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கும் ஒரு உன்னத வழி என்பதால்...



பின்வரும் ஹதீசை கவனியுங்கள்.       

நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, "நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா? உங்களுக்குள்ளாக ஸலாத்தை பரப்புங்கள்" --- Muslim (54), Ahmad (2/391), and al-Tirmidhi (2513)   

சுபானல்லாஹ்...என்னவொரு அழகான வார்த்தைகள் !!!...நம்மிடையே அன்பை வளர்க்கும் ஒரு இடைமுகமாக ஸலாம் கூறுவது இருப்பதாக இறுதி தூதர் (ஸல்)  கூறியிருக்கின்றார்கள். 

ஸலாம் கூறுவதால் என்ன பயன்?

முஸ்லிம்களாகிய நமக்கு நன்கு தெரிந்த ஒன்று தான். ஒருவர் ஈமான் கொண்டு நல்ல அமல்களை செய்தால் அவர் சுவர்க்கவாதி ஆகின்றார். அந்த நல்ல அமல்களில் ஒன்று அடுத்தவருக்கு ஸலாம் கூறுவது. நல்ல அமல்களுக்கு கூலி உண்டல்லவா? ஸலாம் கூறுவதால் நன்மைகள் எவ்வளவு? 

ஒரு மனிதர் நாயகம் (ஸல்) அவர்களை கடந்து செல்லும் போது "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் (ஸல்) அவர்கள் "பத்து நன்மைகள்" என்று கூறினார்கள். மற்றொருவர் நாயகம் (ஸல்) அவர்களை கடக்கும்போது "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்தல்லாஹ்" என்று கூறினார். அவருக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் "இருபது நன்மைகள்" என்று கூறினார்கள். அப்போது மற்றொருவர் முஹம்மது (ஸல்) கடந்தார். அவர் "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதல்லாஹி வபர காத்துஹு " என்றார். அதற்கு பதில் ஸலாம் கூறிவிட்டு இறுதி தூதர் அவர்கள் "முப்பது நன்மைகள்" என்றார்கள் --- Al-Bukhaari in al-Adab al-Mufrad (586)      
       
ஒவ்வொரு முறை ஸலாம் கூறும்போதும் ஏகப்பட்ட நன்மைகள் நம் கணக்கில் ஏறிக்கொண்டே இருக்கின்றன...அல்ஹம்துலில்லாஹ்.

இப்போது, பின்னூட்டமிடும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் பதிவர்களுக்கு...

ஸலாம் கூறுவதின் முக்கியத்துவத்தை விரிவாக மேலே பார்த்தோம். இவ்வளவு அழகான ஒரு முகமனை நம்மில் பலரும் நம் பதிவுகளின் ஆரம்பத்தில், பின்னூட்டங்களில் அடுத்தவருக்கு சொல்லாமல் கிடைக்கும் நன்மையை இழக்கின்றோம். 

"உங்கள் மீது சாந்தி உண்டாவதாக" என்ற இந்த முகமன் எவ்வளவு அழகானது, மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். முஸ்லிமல்லாதவரை நோக்கி  இதனை கூறினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டுமல்லவா? (முஸ்லிமல்லாத தன் தந்தையை நோக்கி "உம் மீது ஸலாம் உண்டாவதாக" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக குர்ஆனின் 19:47 வசனம் கூறுகின்றது). இஸ்லாம் கூறும் இந்த அற்புத விஷயத்தை நமக்குள் வைத்து கொண்டால் போதுமா? முஸ்லிமல்லாத நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாமா?

முஸ்லிம்கள் நமக்குள்ளாக சகோதரத்துவத்தை வலுவாக வளர்க்கும் ஸலாத்தை ஒவ்வொருமுறையும் நாம் நம் சகோதரர்களுக்கு பின்னூட்டமிடும் போதும் சொன்னால் அழகாக இருக்குமல்லவா? நம்முடைய நன்மைகளும், நமக்குள்ளான அன்பும் கூடுமல்லவா? 

மற்றொரு அருமையான விசயத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஸலாம் கூறுவதற்கே இஸ்லாத்தில் இவ்வளவு முக்கியத்துவமென்றால் ஸலாத்திற்கு பதில் கூறுவதை பற்றி கேட்கவே வேண்டாம். அது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகின்றது.  "ஒருவர் உங்களுக்கு ஸலாம் கூறினால், அதனை விட சிறப்பான ஒன்றையோ அல்லது அதனையோ திரும்ப கூறுங்கள்" என்ற பொருளில் வரும் இறைவசனமும், நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றும் அதனை உறுதிப்படுத்துகின்றன. ஆக, நாம் மற்றொரு சகோதரருக்கு ஸலாம் கூறினால் அவர் நிச்சயமாக நமக்கு திரும்ப ஸலாம் கூறவேண்டும். நாம் ஸலாம் கூறியது போலவும் ஆகிற்று, அவரையும் பதில் ஸலாம் சொல்ல தூண்டியாகிவிட்டது. நமக்கும் நன்மை, அவருக்கும் நன்மை....சுபானல்லாஹ்.     

இதையெல்லாம் விட மேலாக...

சகோதரர்கள் சிலர் எனக்கு அனுப்பும் மெயில்களை கண்டு நான் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், தாவாஹ் செய்ய அவர்கள் எவ்வளவு ஆர்வப்படுகின்றார்கள் என்பதை எண்ணி பூரிப்படைந்திருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். 

ஆம், அடுத்தவருக்கு ஸலாம் கூறும் இந்த சிறு விஷயம் கூட ஒரு அழைப்பு பணிதான். நம்மிடையே தாவாஹ் செய்ய விரும்பாத சகோதர/சகோதரிகள் இருப்பனரா? நிச்சயமாக இருக்க மாட்டோமல்லவா? இஸ்லாத்தில் நாம் அறிந்த விஷயம் சிறியதாக இருந்தாலும் அது நமக்கு தெளிவாக தெரிந்திருந்தால் அதனை அடுத்தவருக்கு சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?

பின்னூட்டங்களில், பதிவுகளின் துவக்கத்தில் ஸலாம் கூறுவோம்...சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்...நன்மைகளை அள்ளுவோம்...இன்ஷா அல்லாஹ்.

நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் --- (சூறா மாயிதா,02)

இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து சரியெனபட்டால் செயல்படுத்த ஆவண செய்யுங்கள், இன்ஷா அல்லாஹ். ஏக இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி நம்முடைய நற்காரியங்களுக்கு தகுந்த கூலி வழங்குவானாக, ஆமீன்.

தவறாக இருக்கும் பட்சத்தில் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். தவறாக ஏதும் கூறியிருப்பின் இறைவனுக்காக என்னை மன்னியுங்கள்... 

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்க செய்வானாக...ஆமீன். 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

My sincere thanks to:
1. Islam-qa.com for Hadith references. 


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 







60 comments:

அரபுத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் யா அன்பின் ஆஷிக் :)
JazaakALLAHu khair.

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)...

சகோதரர் அரபு தமிழன்,

உங்களுடைய வருகைக்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

முஸ்லிமல்லாதவரை நோக்கி இதனை கூறினால் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டுமல்லவா?

அதை நீங்கள் சொல்லக்கூடாது. அல்லாதவர்கள் சொல்லவேண்டும்.

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

-----------
அதை நீங்கள் சொல்லக்கூடாது. அல்லாதவர்கள் சொல்லவேண்டும்.
----------

நீங்கள் சொல்வது சரிதான் சகோதரரே. நான் பார்த்த வரையில் முஸ்லிமல்லாத சகோதரர்கள் இந்த முகமனை ஏற்றுக்கொள்கின்றார்கள். அதனால் தான் பதிவில் சேர்த்தேன்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி. "உங்கள் மீது அமைதி உண்டாவதாக" என்ற இந்த முகமன் உங்களை எந்த விதத்தில் புண்படுத்துகின்றது? அப்படி கூறினால் உங்களை நோக்கி அதனை சொல்வதை தவிர்த்து விடுகின்றேன்.

உங்களுக்கு இறைவன் உண்மையை அறியக்கூடிய பாக்கியத்தையும், உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்.

தங்களுடைய கருத்துக்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

முஹம்மத் ஆஷிக் said...

சகோ.ஆஷிக் அஹமத் & மற்றும் அனைவருக்கும்(அனானி உட்பட)...

உங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

நல்லதொரு பதிவை வாசித்தோம். பதிவில் கண்டவை நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய அழகிய செயல்முறை என்பதை புரிந்தோம். இன்ஷாஅல்லாஹ் எப்போதும் அதன்படி நடப்போம்.

நன்றி, சகோ.

Aashiq Ahamed said...

சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

---------
இன்ஷாஅல்லாஹ் எப்போதும் அதன்படி நடப்போம்
-----------

இன்ஷா அல்லாஹ்...ஜசக்கல்லாஹு க்ஹைர்....

இறைவன் நம்முடைய முயற்சிகளை ஏற்று கொள்வானாக...ஆமீன்

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஸாதிகா said...

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
சகோதரர்,நல்ல கருத்தினை கூறி இருக்கின்றீர்கள்.வல்ல அல்லாஹ் இதற்குறிய நற்கூலியை உங்களுக்கு தந்தருள்வானாக ஆமீன்.

Aashiq Ahamed said...

சகோதரரி ஸாதிகா அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

தங்களுடைய துவாவிற்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

இளம் தூயவன் said...

நல்ல கருத்து தான், இவற்றில் எந்த ஒரு தவறான அருத்தமும் இல்லை. அமைதி இல்லையெனில் வாழ்க்கை என்னும் படகு கவிழ்ந்துவிடும். அனானிமௌஸ் இன்று இல்லையெனில் ,ஒரு நாள் அவர் உங்களை நேசிப்பார்.

Aashiq Ahamed said...

சகோதரர் இளம் தூயவன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய கருத்துக்கு நன்றி...

-------------
அனானிமௌஸ் இன்று இல்லையெனில் ,ஒரு நாள் அவர் உங்களை நேசிப்பார்
---------------

அல்ஹம்துலில்லாஹ்...ஊக்கமளிக்கும் வார்த்தை...உங்கள் கூற்று உண்மையாக இறைவன் அருள் புரியட்டும்...ஆமீன்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அருமையான பதிவு!

அரபியில் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுவதால் சில நண்பர்கள் அதை தனிப்பட்ட மார்க்கத்திற்கு சொந்தமானது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்காக 'உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் கருணையும் உண்டாக‌ட்டுமாக!' என்று பிரார்த்தித்து, நம் முகமனைத் தெரிவிப்போம். விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளட்டுமே!

எல்லோரும் இறைவனின் அருள் பெற்று நலமுடன் வாழ்வோம், இன்ஷா அல்லாஹ்!

Aashiq Ahamed said...

சகோதரி அஸ்மா அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)...

--------------
அவர்களுக்காக 'உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் கருணையும் உண்டாக‌ட்டுமாக!' என்று பிரார்த்தித்து,
-------------

நிச்சயமாக...என்னுடைய இந்த பதிவு கூட அப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் அரபியில் சொல்லி பக்கத்தில் தமிழில் மொழிபெயர்த்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.

தங்களுடைய கருத்துக்கு நன்றி...ஜசக்கல்லாஹ்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அந்நியன் 2 said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.நல்லொதொரு விளக்கம் அளித்துள்ளிர்கள் நன்றி.

மாற்று மத சகோதரர்களும் சகோதரிகளும் தவறாக நினைக்கக் கூடாது,இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை இம்மார்க்கம் மனித குலத்திற்கு சொந்தமானது இது மனித குலத்திற்காக ஏக இறைவனால் அருளப்பட்டது,இதில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது.

இந்துக்களின் வேதங்களான சமஸ்கிருதத்தில் கூட இஸ்லாத்தைப் பற்றியும் இறைவன் ஒருவன் என்ற கொள்கையைப் பற்றியும் இறைவனின் தூதர் (நபிஸல்)முஹம்மதைப் பற்றியும் விரிவாக கூறி இருக்கு கொஞ்சம் படியுங்கள்.

ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண சமன் வித மஹாமத் இதிக்கியாத சிஷ்ய சாகா சமன்விதநிருபஸ்சேவ மகாதேவமருஷ்தல நிவாஷிணம். ( பவிஷ்ய புராணம் 3,3,5 -8 )

இதன் பொருள் என்னவென்று பார்ப்போமா ?

அந்நிய நாட்டினிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார் அவருடைய பெயரானது மஹாமத் (முஹம்மது )அவர் பாலைவனப் பகுதியை சேர்ந்தவராக இருப்பார்.
இதுமட்டுமில்லாது அண்ணாரின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் இன்னும் ஏராளமான விசயங்களை பற்றியும் சமஷ்கிருதத்தில் நிறைய காண கிடைக்கலாம்,அவற்றில் சில....
அவர்கள் கத்னா (லிங்க சேதி) செய்வார்கள்,தாடி வைத்திருப்பார்கள்,குடுமி வைத்திருக்கமாட்டார்கள்,மாமிசம் உண்ணக்கூடியவராக இருப்பார்கள்,சப்த்தம் போட்டு அழைப்பார்கள் (அதான் /பாங்கு ) முஸைல (முசலமான்) என்று அழைக்கப் படுவார்கள் என்று அந்த வேதம் கூறுகிறது ( பவிஷ்ய புராணம் 3:25 :3 )

அதுபோல அதர்ணவேதம் இருபதாவது காணம்,ரிக்வேதம்,மந்திரம் 5 சூக்த்தம் 28ல் காண கிடைக்கும்.

ராஜவம்சம் said...

அல்ஹம்துலில்லாஹ் அருமையானப்பதிவு அவசியமானதும் கூட வாழ்த்துக்கள்.

Aashiq Ahamed said...

சகோதரர் அந்நியன் 2 அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

--------------
இஸ்லாம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை இம்மார்க்கம் மனித குலத்திற்கு சொந்தமானது இது மனித குலத்திற்காக ஏக இறைவனால் அருளப்பட்டது,இதில் ஒளிவு மறைவு எதுவும் கிடையாது.
-------------

தெளிவாக கூறியிருக்கின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். ஜசக்கல்லாஹு க்ஹைர். இஸ்லாம் உலக மக்கள் அனைவருக்குமான மார்க்கம். நடுநிலையோடு நோக்கும் எவருக்கும் அது திறந்த புத்தகமாகவும் நேர்வழியாகவும் இருக்கின்றது.

தாங்கள் இந்து மத வேதங்கள் குறித்து சொன்ன கருத்துகளை தெளிவாக ஆராய்ந்த பின் என்னுடைய கருத்தை பதிக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் ராஜவம்சம் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

---------
அல்ஹம்துலில்லாஹ் அருமையானப்பதிவு அவசியமானதும் கூட வாழ்த்துக்கள்
-----------

எல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களுடைய கருத்துக்கு நன்றி...

இறைவன் நம் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்துவானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

mondia said...

good keep it up follow me please dinaex.blogspot.com

RAZIN ABDUL RAHMAN said...

வ அலைக்கும் ஸலாம் சகோ..
நல்லதோர் பதிவு.நான் கடைப்பிடித்துவரும் பழக்கமும் கூட..இதை நான் இன்னும் செம்மையாக்கிக் கொள்ள அறிவுறுத்தியதற்கு நன்றிகள்..

அன்புடன்
ரஜின்

Aashiq Ahamed said...

சகோதரர் ரஜின் அப்துல் ரஹ்மான்,

வ அலைக்கும் ஸலாம்...

-----
நான் கடைப்பிடித்துவரும் பழக்கமும் கூட
------

ஆம் சகோதரர்...நம்மில் பலரும் இதனை கடை பிடித்து தான் வருகின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ். கடை பிடிக்காத சகோதர/சகோதரிகள் இந்த அழகிய முகமனின் முக்கியத்துவத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு தெரியப்படுத்தவும், ஏற்கனவே பின்பற்றும் சகோதரர்கள் மற்றொருமுறை நினைவுபடுத்தி கொள்ளவே இந்த பதிவு...எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே

தங்களுடைய கருத்துக்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

NKS.ஹாஜா மைதீன் said...

அஸ்ஸலாமு அழைக்கும்..மிகவும் பயனுள்ள பதிவு.....சலாமை பரப்புவோம்....

ஹைதர் அலி said...

அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்...

அன்பு சகோதரர் அஷிக் அவர்களுக்கு
நல்ல பதிவு அருமையான விளக்கம்

நன்றி சகோ

Anonymous said...

etharkaka thoother antha varthai use panninar
yen antha samayathil amaithee illaiya.

Aashiq Ahamed said...

சகோதரர் ஹாஜா மைதீன்,

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்),

------
சலாமை பரப்புவோம்
------

இன்ஷா அல்லாஹ்...அதற்கு இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ .

Aashiq Ahamed said...

சகோதரர் ஹாஜா மைதீன்,

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்),

------
சலாமை பரப்புவோம்
------

இன்ஷா அல்லாஹ்...அதற்கு இறைவன் அருள் புரிவானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ .

சகோதரர் ஹைதர் அலி அவர்களுக்கு,

வ அலைக்கும் ஸலாம்,

தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

-----------
etharkaka thoother antha varthai use panninar
yen antha samayathil amaithee illaiya
----------

ஓஹோ...ஒருவருக்கு ஸலாம் கூறுவதற்கு முன் அவர் ஏற்கனவே அமைதியுடன் இருக்கின்றாரா இல்லையா என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு தான் ஸலாம் கூற வேண்டுமென்று சொல்கின்றீர்களா?...உங்கள் லாஜிக் படி போவார் வருபவரிடம் எல்லாம் "அண்ணே/தம்பி, நீங்க அமைதியுடன் இல்லையா அப்பன்னா நான் உங்களுக்கு ஸலாம் சொல்றேன். நீங்க அமையுடன் இருக்கிண்றீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் உங்களை நோக்கி ஸலாம் கூறுவதை தவிர்த்து விடுகின்றேன்" என்று சொல்ல வேண்டுமா?

மேலும், இன்றைக்கு மன அமைதியுடன் இருப்பவருக்கு நாளை மனஅமைதி தேவையில்லையா?

சிந்தியுங்கள் சகோதரே...இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டட்டும்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Lakshmi said...

தெரியாத பல விஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது. நல்ல தெளிவான விளக்கங்கள். நன்றி.

Aashiq Ahamed said...

அன்பு அம்மா லக்ஷ்மி அவர்களுக்கு,

உங்கள் மீதும் உங்களது குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...ஆமீன்

தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

கார்பன் கூட்டாளி said...

தங்களின் மீது இறைவனின் அமைதி நிலவட்டுமாக.

இது சொல்லப்பட வேண்டிய விஷயம் தான், இதற்காக தவறாக சொல்லிவிட்டோமோ என்று எண்ண தேவை இல்லை.

Aashiq Ahamed said...

சகோதரர் கார்பன் கூட்டாளி,

உங்கள் மீதும் இறைவனின் அமைதி நிலவுவதாக...ஆமீன்.

தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

sjk said...

assalmu alikkum brother...this post is very useful to me....

Aashiq Ahamed said...

சகோதரர் SJK,

வ அலைக்கும் ஸலாம்,

----------
this post is very useful to me....
---------

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

வாழ்த்துக்கள் தோழரே இஸ்லாம் மதத்தின் மீதும் மதத்தவர் மீதும் நம்பிக்கை உடைய வேற்று மதத்தவன் நான். எனது வாழ்வில் ஒளியேற்றிய குரு ஒரு இஸ்லாம் மதத்தவர். நேற்று எனது தாயாரின் நிலை கவலைக்கிடமாகி இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதை ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்த வைத்தியரே முன்னின்று செய்தார். அவரை நான் கடவுளின் தூதராகவே பார்கிறேன். மன்னிக்கவும் நான் ஏன் இதை இங்கே கூறுகிறேன் என்று தெரியவில்லை ஆனால் கூறும்போது மனம் ஆறுதல் அடைகிறது.

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் அமைதி நிலவுவதாக...ஆமீன்)

சகோதரே உங்களுடைய உணர்வுகளை நன்கு உள்வாங்கி கொள்ள முடிகின்றது. ஒரு சில விஷயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்துவது என்னுடைய கடமை என்று நினைக்கின்றேன்.

இஸ்லாமை பொறுத்தவரை இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூட நம்மை போன்ற ஒரு மனிதரே. ஆம், இன்று உலக மக்களுக்கு ஒரு ஒளியாக இஸ்லாம் இருக்கிறதென்றால் அந்த மனிதர் மூலமாகத்தான். ஆனால், அவரையும் இன்னும் பிற தூதர்களையும் உலகிற்கு அனுப்பி வைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே எல்லாப் புகழும் உரித்தாவதாக.

முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இதனை நன்கு உணர்ந்தே இருக்கின்றோம். நாங்கள் முஹம்மது (ஸல்) முதற்கொண்டு வேறு எந்தவொரு தூதரையும் வழிபடுவதில்லை. அவர்களை அனுப்பி வைத்து "உலக மக்கள் எப்படி வாழ வேண்டுமென்று" சொல்லி கொடுத்த இறைவனை மட்டுமே வணங்குகின்றோம்.

தூதர்களையே நாங்கள் வணகுவதில்லை என்னும் போது மற்றவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். இஸ்லாமை எடுத்து கூறும், இஸ்லாம் காட்டிய வழிமுறை படி வாழும் ஒவ்வொருவரும் மற்ற மத மக்களை அதிகம் கவர்கின்றனர். அவர்கள் மூலமாக பலரும் இஸ்லாமை தழுவுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் காரணம் இறை வேதமும் இறுதி தூதரின் வழிகாட்டுதலுமே ஆகும். இந்த இரண்டும் இல்லையென்றால் அவர்களால் மற்ற மக்களுக்கு நேர்வழியை எடுத்து கூறவோ வாழ்ந்து காட்டவோ ஒன்றுமிருக்காது. ஆக, இதையெல்லாம் கொடுத்த இறைவன் ஒருவனை மட்டுமே வணங்குவோம்.

இதையெலாம் ஏன் கூறுகிறேனென்றால் உங்களுடைய பின்வரும் வார்த்தைகளால் தான்,

--------
அதை ஒரு இஸ்லாம் மதத்தை சேர்ந்த வைத்தியரே முன்னின்று செய்தார். அவரை நான் கடவுளின் தூதராகவே பார்கிறேன்
--------

உங்களுடைய இந்த வார்த்தைகள் முஸ்லிம்களை சங்கடப்படுத்தும். முஸ்லிம்களை பொறுத்தவரை இனி தூதர் வர மாட்டார். இவ்வளவு ஏன், அந்த மருத்துவரை நோக்கி நீங்கள் இந்த வார்த்தையை கூறியிருந்தால் அவரே ஆட்சேபித்து இருப்பார். அதற்கு பதிலாக "ஜசக்கல்லாஹு க்ஹைர்" (உங்களுடைய இந்த பணிக்கு இறைவன் நற்கூலி வழங்கட்டும்) என்று கூறினால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடையலாம். நீங்களும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கலாம். அவரை உங்களுக்கு உதவ செய்த இறைவனுக்கு நன்றி செலுத்தலாம்.

சகோதரரே தங்களுடைய வார்த்தைகள் சங்கடத்தை கொடுத்ததால் இந்த பதிலுக்கு நான் தள்ளப்பட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.

தங்களிடம் கடைசியாக ஒரு வேண்டுகோள். தாங்கள் இஸ்லாம் முதற்கொண்டு அனைத்து மார்க்கங்களையும் ஆராய்ந்தறிய முன்வாருங்கள். எது சரியென படுகின்றதோ அதனை தழுவுங்கள். வேறெதையும் விட படைத்தவனை அங்கீகரிப்பது முக்கியமானது. சற்று அமைதியாக சிந்தித்து பாருங்கள். இறைவன் நாடினால் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறைவன் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தந்தருள்வானாக...ஆமீன்.

நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

தயவுசெய்து பிழை பொருக்க வேண்டுகிறேன் (வைத்தியரை இறை தூதர் என்று கூறியவன்) அறியாமல் தவறு செய்து உங்களின் மனம் நோகும்படி நடந்துவிட்டேன். நிச்சயமாக உங்களின் கருத்தை உள்வாங்கி நேரம் வரும்பொழுது ஆவன செய்வேன். நன்றி சகோதரரே, உங்கள் மார்க்கத்தின் படியே அந்த வைத்தியருக்கு இறைவன் நற்கூலி வழங்கட்டும் என்று பிராத்திக்கிறேன். மீண்டும் கூறுகிறேன் இது நான் அறியாமல் செய்த பிழை.
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக

Anonymous said...

Please teach your Koran to these fellows before attempting Kaafirs. People like Sawez, Bin Laden , Hussain are more dangerous than all the kaafirs in the world.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Postgrads-turn-robbers-for-quick-money-kicks/articleshow/7344440.cms

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

--------------
Please teach your Koran to these fellows before attempting Kaafirs. People like Sawez, Bin Laden , Hussain are more dangerous than all the kaafirs in the world.

http://timesofindia.indiatimes.com/city/delhi/Postgrads-turn-robbers-for-quick-money-kicks/articleshow/7344440.cms
--------------

வருத்தமளிக்கும் செய்தி. உலக சுகத்துக்கு மட்டும் ஆசைப்பட்டு சத்திய மார்க்கத்தின் போதனைகளை புறக்கணித்ததின் விளைவு தான் இது. இனியாயவது அந்த சகோதரர்கள் திருந்தி சத்தியமார்க்கத்தின்பால் வாழ இறைவன் அருள் புரியட்டும். அங்குள்ள சகோதரர்களும் இவர்களுக்கு தாவாவை கொண்டு செல்லட்டும்..

(அப்புறம், என்னை நோக்கி அந்த ஒன்பது எழுத்து ஆங்கில வார்த்தையை கூறுவதை தவிர்த்ததற்கு நன்றி. அல்ஹம்துலில்லாஹ்)

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

abdul said...

அஸ்ஸ்லாமு அலைக்கும் சகோதரர் ஆஷீக் அஹ்மது
உங்கள் பதீவுகள் அனைத்தும் அருமை மென்மேலும்
வர துவாச்செய்கிர்றேன் நன்றீ

abdul said...

அஸ்ஸ்லாமு அலைக்கும் சகோதரர் ஆஸீக் அஹமது
உங்கள் பதீவுகள் அனைத்தூம் அருமை மென்மேலும்
வர துவாச்செய்கிறேன் ந்ன்றீ

Aashiq Ahamed said...

சகோதரர் அப்துல்,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

எல்லாப் புகழும் இறைவனிற்கே. தங்களுடைய துவாவிற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்.

ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

நட்புடன் ஜமால் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஜமால்

Anonymous said...

How come you guys preach to Kaffirs??

Pls see the below:

http://nagoorumi.wordpress.com/2010/12/16/312

watz ur answer?
On the top tab, you have posted a letter to Non-muslims. It is clear that you Muslim guys need more advice and preaching than Kaffirs.

Aashiq Ahamed said...

சகோதரர் அனானி,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கு நான் முன்னர் அளித்த பதிலையே உங்களுடைய கடைசி பின்னூட்டத்துக்கும் எடுத்து கொள்ளுங்கள்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

assalamu alaikkum

your post s very nice,

Aashiq Ahamed said...

Dear Anony,

Assalaamu Alaikum,

Thanks for your comment.

All Praise due to Allah(swt)...

your brother,
aashiq ahamed a

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆஷிக் அவர்களே...
தங்களுடைய பக்கத்தை இன்றே நான் பார்வையிடுகின்றேன்.மிகவும் அவசியமான ஒரு விஷயத்தை அழகான முறையில் எடுத்துரைத்திருக்கின்றீர்கள்.மிகவும் சந்தோஷம்.
இன்னும் உங்களுடைய ஒவ்வொரு எழுத்துக்களையும் நான் பார்வையிட்டு கருத்தோடு வருகின்றேன்.இன்ஷா அல்லாஹ்....
தொடரட்டும் உங்கள் நற்பணி....

அன்புடன்,
அப்சரா.

Manithan said...

ஏக இறைவன்னு சொல்லறதே ப்ராம்மணீயம். Accept all people as equals. Accept all Gods as equals. Yega iraivan appadinra conceptae asingam. At least dont use this concept any more. appadithan use pannuvenna, ஏக இறைவன்னு சொல்லிட்டு டகால்டி விட்டுட்டு திரிஞ்சா உங்க ஏக இறைவனே உங்களை மன்னிக்க மாட்டார். Do you know why muslims in India dont get respect? The answer is your yega iRaivan concept. pongappa, neengalum unga matha veRiyum.

Aashiq Ahamed said...

சகோதரி அப்சரா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனிற்கே. என்னுடைய பதிவுகளில் தவறேதையும் தாங்கள் கண்டால் தயவுக்கூர்ந்து சுட்டி காட்டுங்கள். இறைவன் நம்முடைய முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் மனிதன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)

சகோதரரே, எங்களுக்கு மரியாதை என்பது இறைவனிடத்தில் மட்டுமே உள்ளது. உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இறைவேதத்திற்கு எதிராக எங்களால் நடக்கமுடியாது. அதுபோலவே, இறுதி வேதத்தில் சொல்லப்பட்ட எதுவும் மக்களுக்கு எதிராகவும் இருக்காது. இதற்கு பெயர் மதவெறி என்றால், அடிப்படைவாதம் என்றால்...இந்த சொற்கள் எங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாது, துயரப்படுத்தாது.

சிந்திக்க முன்வாருங்கள் என்பதே உங்களுக்கான என்னுடைய பதில்...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Anonymous said...

http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431

Whatz your answer for this?

Aashiq Ahamed said...

Dear Anony,

May peace and blessings of the Almighty be upon you...aameen.

My Answer?...well...welll...Another country requires another revolution to transform minds...

Thanks and take care,

Your brother,
Aashiq Ahamed A

Muslim Refugee said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ஆஸிக் அவர்களுக்கு
தங்கள் பக்கத்தை இன்றுதான் பார்க்கக்கிடைத்தது. பார்த்தவிடயமும் பாராட்டத்த்கது.இன்ஸா அல்லாஹ் அனைவரம் அதன்பால் செயற்படுவோமாக.
muslimrefugee.blogspot.com

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் muslim refugee...

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே...

மேலும், உங்களுடைய தளத்தில் நான் பல மாதங்களுக்கு முன் எழுதிய "இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்" என்ற பதிவையும் காண நேர்ந்தது. ஜசக்கல்லாஹு க்ஹைர்..

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Rafik said...

Assalamu Alaicum varahamahtullahi wabarakathuhu brother Ashik,

It was a good post. Jazakallahair for this.

May Allah swt bless you & you family.

Brother Mohamed Rafik,
Kuwait.

Aashiq Ahamed said...

சகோதரர் ரபீக்,

வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

தங்களுடைய கருத்துகளுக்கும் துவாவிற்கும் நன்றி.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

F.NIHAZA said...

அஸ்ஸலாமு அலைக்பும் ககோதரா...
இன்றுதான் எங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன்...
நல்ல விடயங்களை சொல்கிறீர்...
மாஷா அல்லாஹ்...தொடருங்கள்...

Aashiq Ahamed said...

அன்பு சகோதரி F.NIHAZA,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

///நல்ல விடயங்களை சொல்கிறீர்...///

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...ஆமீன். நல்ல விசயங்களாக இருந்தால், அவை இஸ்லாத்திற்கு உட்பட்டு இருந்தால், தாங்கள் இதுவரை அதனை செயல்படுத்தாமல் இருந்தால்...இன்ஷா அல்லாஹ் செயல்படுத்த ஆவணச்செய்யுங்கள்..

தங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

SADAMFIVE said...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

Aashiq Ahamed said...

சகோதரர் sadamfive,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

mum said...

வ அலைக்கும் சலாம் சகோ...
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...
பகிர்விற்கு நன்றி...

Post a Comment