Thursday, February 2, 2012

மீலாது நபி விழா - சில கேள்விகள்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான். 

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு. 

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன். 

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை. 

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள். 

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம். 

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? 

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? 

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா? 

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? 

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது? 

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ் 

முஸ்லிமல்லாதவர்களுக்கு: 

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். 

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






33 comments:

Rabbani said...

''குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம்.

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? ''

அஸ்ஸலாமு அலைக்கும்
மீலாது விழாவை மறுக்க நீங்கள் எழுப்பிய மேற்கண்ட கேள்விகள் புதியவை . மிகசரியான கருத்து

Rabbani said...

"நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? "

சாட்டையடி

Rabbani said...

"இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா?

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்ல வேண்டிய வரும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? "


நியாயமான கேள்விகள்

ஜாகிர் said...
This comment has been removed by a blog administrator.
Jafar Safamarva said...

சரியான நேரத்தில் தேவையான பதிவை சகோதரர் ஆசிக் ஆவர்கள் கொடுத்திருக்கிறார்கள். ஏனென்றால் எங்களுராகிய கூத்தாநல்லூரில் இந்த பித்அத்தை வழிகேடு என்றே அறியாமல் 60 வருட கால முன்னோர்களின் பாரம்பரியம் என்ற பெயரில் வருடந்தோறும் பீடுநடை போட்டு வருகிறது. மார்க்கத்தின் காவலர்களாக தங்களைக் கூறிக்கொள்ளும் உலமாக்களும் இதில் உள்ளடக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனை!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஆஷிக் அஹமத்...

என்னது...?
மிலாடி... மீலாது நபியா...?
கூடிய சீக்கிரம் வருதா...?

நான் சவூதியில் உள்ளவன் என்பதால் இப்படித்தான் அறிந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

இங்கே எந்த காலண்டரிலும் அந்த தேதியில் ஒரு குறிப்போ...
அல்லது அன்னிக்கு விடுமுறையோ...
அல்லது இங்கே மக்களில் மவ்ளூது ஒதுவதோ...
அல்லது மதினாவில் ஏதும் சிறப்பு நிகழ்ச்சியோ..

எதுவுமே கிடையாது..!

சுவனப்பிரியன் said...

சலாம் சகோ ஆஷிக்!

அவசியமான பதிவு! முகமமது நபி பிறந்த சவுதி அரேபியாவில் இப்படி ஒரு விழாவை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நபியவர்களுக்கு மரியாதை செய்வதென்பது அவர் எப்படி வாழ்ந்து காட்டினாரோ அது போன்று நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதுதான். இன்று இளைஞர்களில் பலர் உணர்ந்து வருகின்றனர். பெரியவர்களிலும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை அதன தவறை விளக்கி பிரசாரம் செய்வோம்.

வஸ்ஸலாம்!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

"இன்றைய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக முழுமையாக்கி விட்டேன்"(திருக்குர்ஆன் 5:3)

---என்று அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்த பின்னும் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை கமா போட்டு நுழைப்பது எதற்கு..?

"உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?" (அல்குர்ஆன் 49:16)

---என்ற அல்லாஹ்வின் கேள்விக்கு, 'நபிக்கே தெரியாத இந்த மீலாது விழா எனும் பித்அத் கொண்டாடுபவர்கள்' என்ன பதில் சொல்லப் போகிறார்கள்..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

'பித்அத்' என்றால் முஹம்மத் நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நூதன அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும்.

நபியவர்கள் எதை மார்க்க விஷயமென போதித்தார்களோ அவை மாத்திரமே தீன் ஆகும்.

நபியவர்கள் பித்அத் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும் மிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குப் போதித்ததை நாம் கவனிக்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் நபியவர்கள் ஏதாவது உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது பித்அத் பற்றிய எச்சரிக்கையை விடுத்தவண்ணம் பின்வருமாறுதான் தமது உரையைதொடங்குவார்கள் என்று இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.

'புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.. அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகின்றேன் . பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனாகும் . வழிகாட்டல்களில் சிறந்தது நபி முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும் . அனைத்திலும் மிகக் கெட்ட விடயம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்அத்துகள் - இஸ்லாத்தில் இல்லாத மௌட்டீகங்களாகும் . இவை அனைத்துமே பித்அத்தாகும் .பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும் . அனைத்து வழிகேடுகளும் நரகத்தின் பக்கமே கொண்டுபோய்ச் சேர்க்கும்' என்று கூறியே ஆரம்பிப்பார்கள் (அபூதாவூத் 1060 நஸாயி 3991).

நமது நோக்கம் நரகம் அல்ல...
எனவே மீலாது விழா போன்ற பித்அத் களை நிரகாரிப்போம்..!

ஆயிஷா said...

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்...
நான் அமீரகத்தில் இருந்த போது இதற்க்காக விடுமுறை கொடுத்ததாக நினைவில்லை.ஆனால் இந்த வருடம் விடுமுறை அளித்து இருக்கிறார்கள்.மிகவும் குழம்பிப் போனேன்.இதைக் கொண்டாடுவதா அல்லது வேண்டாமா என்று...!இப்போது தெளிவாகி விட்டது.மிக்க நன்றி,

சிராஜ் said...

சலாம் சகோ ஆசிக் அஹமது,

15 வருட பிரச்சாரத்திற்கு பின், நமது மக்கள் இன்னும் மீலாது விழா கொண்டாடுவது வேதனையான ஒன்று. இது இன்றும் நிலைத்து நிற்க, கூலிக்கு மாரடிக்கும்
ஹசரத் மார்கள் ஒரு முக்கிய காரணம்.

இறைவா! எங்கள் மக்களுக்கு மார்கத்தை உள்ளது உள்ளபடி சொல்லும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத மக்களை இமாம்களாக தருவாயாக.

ஜாகிர் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
மவ்லீத் இறை தூதர் காட்டி தராத வழிமுறை.புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த வழிகேடு.அல்லாஹ் வின் உதவியால் இன்று விழிப்புனர்வு ஏற்பட்டு
வருகிறது.அல்ஹம்துலில்லாஹ். முழுமையாக இத்தீங்கிலிருந்து நம் மக்கள் விடுபட வேண்டும் என்று வல்ல ரஹ்மானிடம் பிறார்த்திப்போம்.

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நேரத்தின் அவசியம் கருதி அழகிய பதிவு.,

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது சகோ

நபிகள்
பிறந்த மக்காவிலும்-
மரணித்த மதினாவிலும்

கொண்டாடப்படாத பிறந்த நாள் நிகழ்வு

தெற்காசிய நாடுகளில் மட்டும் கொண்டாடப்படுவதற்கு என்ன காரணம்.....?

அறியாமையா... நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை.,

சகோ சிராஜ் சொல்வதுப்போல சுயநலமிக்க சில மௌலவிகளின் "நபிகளாரை கண்ணியப்படுத்தும்" நிகழ்வாக மக்களின் முன் போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தியது தான் என்றால் அது மிகையாகாது!

அல்லாஹ் அத்தகைய நிலையே இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் மாற்ற போதுமானவன்

Aashiq Ahamed said...

சகோதரி ஆயிஷா,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

இறைவன் கிருபையால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

ஆம் சிஸ்டர். உங்களைபோல இஸ்லாமை தழுவிய பல புதியவர்களுக்கும் இது குறித்த குழப்பம் இருக்கலாம் என்று தான் இந்த பதிவு. என்ன செய்வது சில முஸ்லிம்கள் இப்படியான அறியாமைத்தனத்தை தான் அடுத்தவர்களுக்கு காட்டி கொண்டிருக்கின்றார்கள்.

நம்மை இதுப்போன்ற பிதாஅத்திலிருந்து காக்க இறைவன் போதுமானவன்..

வஸ்ஸலாம்,

Aashiq Ahamed said...

சகோதரர் ரப்பானி,

வ அலைக்கும் சலாம்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் ஜாஹிர்,

வ அலைக்கும் சலாம்

நிச்சயமாக பிரார்த்திப்போம் சகோதரர்,

வருகைக்கு நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் ஜாபர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுப்ஹானல்லாஹ்...உங்கள் ஊரில் மாற்றம் ஏற்பட இறைவன் போதுமானவன்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் sadicali,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களுடைய பின்னூட்டம் எனக்கு புரியவில்லை. ஆகையால் வெளியிடவில்லை. தாங்கள் தயவுக்கூர்ந்து எளிதான வார்த்தைகளில் விளக்குமாறு கேட்டுகொள்கின்ரேன். எனக்கு மெயில் ஆக அனுப்பினால் ரொம்ப நல்லது (aashiq.ahamed.14@gmail.com)

புறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

தாஜுதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் கவலையுடன் நானும் பங்கேடுத்துக்கொள்கிறேன். தொடர் விழிப்புணர்வு அவசியம் செய்ய வேண்டும்.

யூதர்களின் சூழ்ச்சியே இது போன்ற மவ்லிதுகள்.

இணைவைப்பு வாசகங்கள் (நவுதுபில்லாஹ்..) அதிகம் நிறைந்தே மவ்லிதுகள் என்பதற்கு அதன் அர்த்தங்களே சாட்சி.


உண்மை அறியாத மக்களிடம் இது போன்ற மவ்லிதுகள் வழிகேடுகள் என்று தொடர் விழிப்புணர்கள் செய்து நம்மக்களை வழிகேடுகளிலிருந்து பாதுகாப்பது நம்முடைய கடமை.

அல்லாஹ் பாதுகாப்பானாக...

பார்வையாளன் said...

ஒருவரை மதிப்பது வேறு.. இணை வைப்பது வேறு...

mondia said...

மீலாதுன் நபி விழா!
ஆண் பெண் வீதியில் உலா!
இதனால் வக்து தொழுகை கலா!

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புரிந்து கொண்டோம் , அனைவருக்கும் துஆ செய்வோம்

Aashiq Ahamed said...

சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்

வெரி குட் பாஸ்..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் சுவனப்பிரியன்,

வ அலைக்கும் சலாம்,

இன்ஷா அல்லாஹ் நிச்சயம் செய்வோம்..

கருத்துக்கு நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் சிராஜ்,

வ அலைக்கும் சலாம்,

//இறைவா! எங்கள் மக்களுக்கு மார்கத்தை உள்ளது உள்ளபடி சொல்லும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்சாத மக்களை இமாம்களாக தருவாயாக//

ஆமீன்...ஆமீன்,

Aashiq Ahamed said...

சகோதரர் குலாம்,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் தாஜுதீன்,

வ அலைக்கும் சலாம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Ayushabegum said...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

//நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா?//

பளார் என அறை விழுந்த சத்தம்..:-))

நல்ல பதிவுக்கு நன்றி சகோ..

Aashiq Ahamed said...

சகோதரர் பார்வையாளன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

//ஒருவரை மதிப்பது வேறு.. இணை வைப்பது வேறு...//

இதற்கு பதிவில் தெளிவாக பதில் சொல்லிருப்பதாகவே நினைக்கின்றேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Aashiq Ahamed said...

சகோதரர் mondia,

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னப்பா இப்படி பொளந்து காட்டுறீங்க.. :)

கருத்துக்கு நன்றி சகோதரர்..

Aashiq Ahamed said...

சகோதரி ஜலீலா கமால்,

வ அலைக்கும் சலாம்,

அல்ஹம்துலில்லாஹ். மிக்க மகிழ்ச்சி..

கருத்துக்கு நன்றி...

Aashiq Ahamed said...

சகோதரி ஆயிஷா பேகம்,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக அவசியமுள்ள பதிவு. இந்த செய்தியை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இன்ஷா அல்லாஹ் மக்கள் நேர் வழி அடைவார்கள்.
kalam.

Post a Comment