Monday, May 30, 2011

நபிவழித் திருமணத்தில் சோதனைகளா?




அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும் நபிவழியில் திருமணம் செய்ய மனஉறுதி கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளா நீங்கள்? 

அப்படியென்றால் இந்த பதிவின் முதல் இலக்கு நீங்கள் தான். உங்களின் மனஉறுதியை அதிகப்படுத்தி, உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்க முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

பதிவிற்குள் செல்லும்முன்,  நம் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காக, நபிவழி திருமணம் குறித்து சுருக்கமான விளக்கம்.

பெண்ணிடம் இருந்து வரதட்சணை/சீதனம் எதையும் (எவ்வழியிலும்) வாங்காமல், மணப்பெண்ணுக்கு மணக்கொடை கொடுத்து, எவ்வித சடங்குகளும் இன்றி எளிய முறையில் நடைபெறுவதே நபிவழி திருமணங்கள் ஆகும். விருந்து அளிக்க விருப்பமிருந்தால் அந்த செலவு மணமகனுடையதே.

பதிவிற்குள் செல்வோம். 

திருமணங்கள் குறித்த ஒரு உரையாடலின் போது, நபிவழி திருமணம் செய்த சகோதரி ஒருவரிடம் கருத்தை கேட்க, தன்னுடைய அனுபவத்தை மெயிலாக அனுப்பியிருந்தார் அவர். 

அந்த கடிதம் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு களைய சில நிமிடங்கள் ஆனது. 

பலவித தடைகள் ஏற்பட்ட போதும், நபிவழியில் மட்டுமே திருமணம் செய்வோம் என்று இந்த மணமக்கள் எவ்வளவு உறுதிப்பாட்டோடு இருந்திருக்கின்றார்கள்!!!! சுப்ஹானல்லாஹ்(1). 

நபிவழியில் திருமணம் செய்ய உறுதி பூண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இவர்களின் அனுபவம் பெரும் உற்சாகமாக இருக்குமென்பதால் அந்த கடிதம் சகோதரியின் அனுமதி பெற்று இங்கே பதிக்கப்படுகின்றது. 

---------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.

எனக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்த அன்றே நான் சொன்னது, 
'நபிவழித் திருமணம் மட்டுமே எனக்கு சம்மதம், அதனால் நீங்கள் எந்தநிலையிலும் கொள்கைச் சகோதரர்கள் அன்றி வேறு மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடாது, எந்த ஒரு துரும்பும் கணவன் வீட்டாருக்கு நீங்கள் கொடுக்கக் கூடாது, எனக்கு தேவையானதை நான் விரும்பி, எனக்காக மட்டும் கேட்பதை நீங்கள் எனக்குத் தந்தால் போதும்' 
என் பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நபிவழிக் கொள்கையுடையவர்களே என்பதால், 'இதில் என்ன சந்தேகம், இன்ஷா அல்லாஹ் அதுபோலவே முடிப்போம்' என்றார்கள். பிறகு நான் எதற்கு அதுபோல் சொல்லி வைத்தேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஏதாவது இடையில் வரக்கூடிய சின்ன சின்ன சோதனைக்கூட, மனித மனங்களை மாற்றிவிடும் என்று அஞ்சியிருந்தேன். அதனால் என் திருமணத்தை முடிவு செய்வதில் நான்தான் உறுதியாக இருக்கவேண்டும் என்று உறுதிசெய்து என் விருப்பத்தை முன்கூட்டியே கோரிக்கையாக வைத்துவிட்டேன். நான் அதில் உறுதியாக இருப்பதும் என் வீட்டார்களுக்கு நன்றாகவே தெரியும்.

திருமணப் பேச்சுக்கள் வருவதும், தவ்ஹீத்(2) மாப்பிள்ளை(?)யென வந்தும்கூட (அவர்களின் தாய்மார்களின் பேராசையால்) என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அளவு தடங்கல் ஏற்படுவதும், அந்தப் பேச்சு அப்படியே நின்று கேன்சல் ஆவதுமாக வருடங்கள் ஓடின. ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, 6 வருடங்கள்! (அப்போது எங்கள் ஊர் மற்றும் சுற்றுப்புறங்களில் தவ்ஹீத் சிந்தனையுள்ள‌ மாப்பிள்ளை அவ்வளவாக‌ இல்லாததும், நெடுதூர சம்ப‌ந்தத்தை நானும், என் பெற்றோரும் விரும்பாததும் இத்தனை வருஷங்கள் ஆனத‌ற்கு மேலும் சில‌ காரணங்கள்). 

இதற்கிடையில் மனதைக் கஷ்டப்படுத்தும் (சுற்றத்தாரின்) பேச்சுக்களும், செயல்களும் என் பெற்றோரை கலக்கப்பட வைத்தது. திருமணத்திற்கு காத்திருக்கும் ஒரு பெண் என்ற அடிப்படையில், நானும் மிகுந்த வேதனையடைந்தேன் என்றாலும், என்னுடைய கொள்கையில் சற்றும் மாறாத மன உறுதியை அல்லாஹுதஆலா எனக்குக் கொடுத்திருந்தான், அல்ஹம்துலில்லாஹ். 

ஆனால் என் பெற்றோர்கள் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், பேசிவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் எனக்குத் தெரியாமலே கொஞ்சம் வளைந்துக் கொடுக்க முடிவெடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக‌(?) சில பொருட்கள் கொடுக்க சம்மதித்ததும், ஒரு இடத்தில் தவ்ஹீத்(?) மாப்பிள்ளை முடிவானது. சில நாட்களிலேயே இந்த விஷயம் எனக்குத் தெரியவரவே 'நீங்கள் என்ன காரணம் சொல்லி இதைக் கேன்சல் பண்ணுவீர்களோ தெரியாது, தன் திருமண விஷயத்தில் தன் தாயையும், உடன் பிறந்தவர்களையும் கட்டுப்படுத்தத் தெரியாத மாப்பிள்ளை எனக்கு வேண்டவே வேண்டாம்' என்று அடித்துச் சொல்லிவிட்டேன்.

ஒருவாறாக அதையும் கேன்சல் பண்ணிவிட்டு, என் தாயார் அழுதுக் கொண்டே இருந்தார்கள். 'ஆண்கள் உறுதியாக இருந்தால் பரவாயில்லமா, பெண் இப்படி பிடிவாதமாக இருந்தால் நான் எப்போதுதான் உனக்கு திருமணம் முடித்து பார்ப்பேனோ, உன்னைவிட சின்ன பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிவிட்டதே' என்று பலமுறை கண்ணீரோடு மன்றாடினார்கள் என் தாயார். அவர்களின் ஒவ்வொரு கண்ணீர் துளியும் என்னை ரணப்படுத்தியதே தவிர, கொண்ட கொள்கையில் உறுதியோடு இருந்தேன். தந்தையோ மிகவும் பொறுமை! அவர்கள் இருவருக்கும் மன தைரியத்தைக் கொடுக்க அல்லாஹ்விடம் துஆ(3) செய்துவிட்டு, 

'இந்த முறையில் திருமணம் செய்ய இறைவன் எனக்கு நாடியிருந்தால் மட்டுமே என் திருமணம் நடக்கும்; இல்லாவிட்டால் எத்தனை வயதானாலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் சொன்னபடி வாழ்க்கை அமையும்வரை இப்படி காத்திருந்தே என் வாழ்க்கையை சந்தோஷமாக ஓட்டுவேன். ஒருவேளை எனக்குத் தெரியாமல் விட்டுக்கொடுத்து இதுபோல் நீங்கள் மீண்டும் மாப்பிள்ளையை முடிவு பண்ணி, அது கடைசி நேரத்தில் எனக்கு தெரிய வந்தாலும், திருமணத்தன்று சம்மதக் கையெழுத்து தரமாட்டேன், கல்யாணத்திற்கு பிறகு தெரிந்தாலும் அதற்காக கணவரிடமோ அவங்க வீட்டாரிடமோ போராடாமல் விடமாட்டேன், வாங்கியதை திருப்பிக் கொடுக்காவிட்டால் அது தலாக் வரை சென்றாலும் எனக்குக் கவலையில்லை, அல்லாஹ் சொன்ன மணவாழ்க்கைதான் எனக்கு முக்கியம்' என்று சொல்லிவிட்டேன். 

என் கொள்கையை ஒத்த‌ கணவரை அல்லாஹ் அமைக்கும் அந்த நாளும் வந்தது :) இருவீட்டாரும் மாப்பிள்ளை/பெண்ணைப் பார்த்த பிறகு அவரவர் ஊரில் (வெளி மக்களிடம்) மாப்பிள்ளை/பெண் பற்றிய‌ இருதரப்பு விசாரணைகளும் நடந்து முடிந்த‌து.

பிறகு கல்யாண நாள் மற்றும் (அவர்கள் வெளியூர் என்பதால் அதற்கான) முன்னேற்பாடுகள் போன்றவைக் குறித்தவற்றை பேசி முடிவு பண்ணிக் கொள்வதற்காக இருதரப்பு பெரியவர்கள் கூடியபோதே, எனக்கான மஹர்(4) 10 பவுனுக்குரிய‌ தொகை, எங்க ஊரில் திருமணம் என்பதால் வலிமா விருந்தை ஏற்பாடு செய்து வைப்பதற்காக அதற்குரிய தொகை, கல்யாணப் புடவைகள் வாங்கிக் கொள்வதற்கான தொகை என கைநிறைய‌ பணக்கட்டுகளை என்னவர் அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல், 'அந்த 10 பவுனுக்கும் நகை இருக்கவேண்டும், அதற்கான செய்கூலியைக்கூட அந்த பணத்திலிருந்து எடுக்கக் கூடாது, அதற்கான கூலி எவ்வளவு என்று (நகை வாங்கிய பிறகு) சொன்னால் அந்தப் பணத்தையும் நான்தான் தருவேன்' என்றும் என்னவர் சொல்லி அனுப்பிவிட்டார் :)

அப்போது நான் இருந்த அந்த குதூகல மனநிலை, அதை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு மட்டுமே புரியும். கொடுக்கும் நிலை இல்லாமல் வாங்கும் நிலையை அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தினானே என்ற சந்தோஷத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்துக் கொண்டே இருந்தேன். புன்னகையைத் தவிர, யாரிடமும் எந்த வார்த்தையும் பேசக்கூட வரவில்லை. இப்படியொரு நிலை எனக்கு என்று மட்டுமில்லை, எத்தனையோ தவ்ஹீத் பெண்களுக்கு வந்திருக்கலாம். ஆனால் நான் சந்தித்த சோதனைகளையும், அதற்கான போராட்டங்களையும் சொன்னால் அதை எழுத‌ பல பக்கங்கள் தேவைப்படும். அவ்வளவு கஷ்டங்களிலும் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நம்பி, அவனுக்காக உறுதியாக இருந்ததின் பலனை இன்றுவரை சந்தோஷமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்! 

(முன்பு நான் சொல்லியிருந்ததுபோல் பலவிதமாக தூற்றிய) எங்களின் சுற்றத்தார்கள் இந்த திருமண முடிவுகளைப் பார்க்கவேண்டும் என்பதால், (திருமணத்தை முடிவு செய்த அன்று) என் தந்தை அதுபோன்றவர்களை வலுக்கட்டாயமாக அழைத்திருந்தார்கள். அவர்களின் முன்னிலையில் அந்த ரூபாய்க் கட்டுகளை 'இது பெண்ணுக்காக மாப்பிள்ளை அனுப்பி வைத்துள்ளது' என்று சொல்லி, என் தந்தை என்னை அழைத்து வரச்செய்து என் கையில் கொடுத்ததும் அப்படியே அவர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனார்கள். அன்றிலிருந்து அவர்களும் தன் பிள்ளைகளுக்கு தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று தேட ஆரம்பித்தது தனிக் கதை :) 

அல்ஹம்துலில்லாஹ்(5), திருமணம் நல்லபடி/நினைத்தபடி/நபிவழிப்படி நடந்தேறியது. இவையெல்லாம் மிக குறுகிய காலத்திற்குள் நடந்து முடிந்தன. நினைக்காத புறத்திலிருந்து தன் அடியார்களுக்கு அருள்செய்யும் வல்ல ரஹ்மான், என் எண்ணம்போல் வாழ்வு அமைத்துக் கொடுத்தான். அவனுக்கே புகழனைத்தும்!

என் மாமியாரும், வீட்டார்களும் நபிவழிக் கொள்கைக் கிடையாது என்று திருமணத்திற்கு பிறகுதான் தெரியும். 
'எனக்கு தவ்ஹீத் கொள்கையில் வாழும் பெண்தான் வேண்டும். சீர், நகையெல்லாம் எனக்குத் தெரியாமல் வாங்க ஆசைப்பட்டு நீங்களாகவே யாரையாவது முடிவு பண்ணி வந்தால் அந்த திருமணம் நடக்காது' 
என்று என்னவர் தன் வீட்டாரை ஏற்கனவே மிரட்டி வைத்திருந்ததால் :) திருமணம் முடியும்வரை எதற்கும் வாய் திறக்காமல் இருந்திருக்கிறார்கள் என் மாமியார் வீட்டார்கள். 

மேலும், 
'அவர்கள் பெண்ணுக்கு விரும்பிப்போட அவர்களுக்குத் தெரியும். அவர்களால் இயலாவிட்டால் உடுத்திய துணியோடுகூட மகளை அனுப்புவார்கள்தான். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லை. எனவே உங்கள் பெண்ணுக்கு போடுவதை நீங்கள் போடுங்கள் என்ற வார்த்தைக்கூட‌ வரக்கூடாது' 
என்பதும் என்னவர் அவர் வீட்டருக்கு இட்டிருந்த‌ கட்டளை :) அதனால் திருமணம் முடியும்வரை மகனுக்கு பயந்து வாய்மூடி இருந்தவ‌ர்கள் திருமணத்துக்கு பிறகு சில பெரிய பிரச்சனைகளை எல்லாம் ஆரம்பித்தார்கள். 

ஆரம்பத்தில் என் கணவருக்கும் என் பெற்றோருக்கும் தெரியாமல் நானே சமாளித்தேன். போகப்போக நான் மறைத்து வந்ததையும் மீறி அவர்கள் எனக்குத் தந்த‌ பிரச்சனைகள் (நான் சொல்லாமலே) என் கணவருக்கு தெரிய ஆரம்பித்தன. 

சீர் இல்லாமல் வந்ததால் நான் படும் துயரங்களை கண்ட என்னவர், எடுத்த எடுப்பிலேயே கடுமையாக தன் வீட்டாரை எதிர்க்க ஆரம்பித்தார். நடுவில் நானே சமாதானம் பண்ண வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் என் பெற்றோருக்கும் இவை தெரிய வந்ததும், அவர்கள் 'அல்லாஹ் தந்த உன் மாப்பிள்ளைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, மற்றவர்களின் தொல்லைகளை எவ்வளவு நாட்களுக்குதான் நீ தாங்கமுடியும்?' என்று சொல்லி, என்னை சும்மா பார்க்க வருவதுபோல் வந்து, சில பொருட்களை கொண்டு வந்தார்கள். வந்த என் பெற்றோர்கள் வீட்டிலிருந்து திரும்ப புறப்படும் முன்பே அதற்கான தொகையைக் கணக்கு பண்ணி (தன் வீட்டாருக்கு தெரியாமல்) வலுக்கட்டாயமாக திணித்து அனுப்பினார் என்னவர் :) இப்படியே ஓடியது. 

என்னவர் பயணம் போய்விட்டு வந்ததும், 'நாங்க வேண்டாம் என்று சொன்னாலும் அவங்க பிள்ளைக்காக‌ கொடுப்பதற்கு அவங்களுக்கல்லவா அறிவு வேணும்?' என்று யார் மூலமோ என் மாமியார் வீட்டார் (என்னவருக்கு தெரியாமல்) சொல்லியனுப்ப, ஆஹா.. மீண்டும் ஆரம்பித்துவிட்டார்களா என்று பயந்து, சிலபல பொருட்களுடன் மருமகன் பயணத்தை வரவேற்க வந்திறங்கினார்கள் என் பெற்றோர். அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் விலை அதிகம். அதற்குரிய தொகையைக் கொடுத்தால் என் பெற்றோர்கள் பிடிவாதமாக மறுக்கிறார்கள். என்னவருக்கோ கோபம்!

'பிள்ளைக்கு உதவும் என்றுதான் இவற்றை வாங்கி வந்தோம்' என்று சமாளிக்கிறார்கள். 'எனக்குத் தேவை என்று நான் கேட்டேனா? இந்த சமாளிப்பெல்லாம் எனக்கு ஆகாது என்று உங்களுக்குத் தெரியும்' என்று சொல்லி, கொண்டு வந்தவற்றை எடுத்துச் செல்லும்வரை நீங்கள் போகக்கூடாது என்று நான் பிடிவாதம் பிடிக்க, 'வாங்கி வந்தபிறகு திருப்பிக் கொடுப்பது சரியல்ல, அதற்கான தொகையை நாம் கொடுத்துவிட்டு இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து வந்ததாகவே காட்டிக் கொள்வோம், அப்போதாவது கொஞ்சம் இவர்கள் அடங்குவார்கள்' என்று என்னவர் சமாதான முடிவு சொன்ன பிறகு, மீண்டும் அதற்கான‌ தொகை என் பெற்றோரின் கைக்கு வலுக்கட்டாயமாக மாறுகிறது :) மருமகனை மறுத்துப் பேச இயலாமல், வேறு வழியின்றி என் பெற்றோர் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாகிப் போனது.

'அவர்கள் எது சொன்னாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை, நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்' என்று சொல்லி என் பெற்றோர்களை அனுப்பி வைத்தோம். இப்படியே என் மாமியார் வீட்டார் எதற்குமே சரிபட்டு வராததால், கடைசியாக என்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் சென்றார் என்னவர். அப்போதும் அவர்களின் தாயையும், குடும்பத்தாரையும் கவனிப்பதை சிறிதும் நாங்கள் குறைத்துக் கொள்ளவில்லை. 

பிறகுதான் எங்களின் நடவடிக்கையைக் கண்டு அவர்களே மனம் திருந்தி, இப்போது அவர்களும் கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). பிறகு என் மாமியார் மௌத்தாகிவிட்டார்கள். அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து, ரஹ்மத் செய்வானாக! இதுதான் என் நபிவழித் திருமணக் கதை :) 

குறிப்பு: 

மாப்பிள்ளை வெளியூர் என்பதால், (போக்குவரத்து கஷ்டம் கருதி) கல்யாணத்தன்றுதான் வலிமா(6) விருந்து கொடுத்தார்கள். (அன்றே கொடுப்பதற்கும் நபிவழியில் ஆதாரம் உள்ளது.) எங்கள் குடும்பம் பெரியது என்பதால், கூடுதலாக நாங்களே அழைப்புக் கொடுத்தவர்களுக்கான விருந்து செலவை மட்டும் என் தந்தை செய்தார்கள். 

(திருமணத்திற்கு முன்பே) நானே என் பெற்றோரிடம் விரும்பிக்கேட்ட சில நகைகள், புதிய ஆடைகள், பெண்களுக்கான சில அலங்காரப் பொருட்கள், நான் யூஸ் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பீரோ இவற்றை நான் என் பெற்றோரிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. அது ஏற்கனவே என்னுடையதாக இருந்தது. மாமியார் வீட்டிற்கு அந்த பீரோவைக்கூட எடுத்து செல்லக்கூடாது என்று தனிக்குடித்தனம் செல்லும்வரை, எங்க வீட்டிலேயே அதை வைத்துவிட்டேன். 

மற்றபடி என் மாமன்மார்கள், உறவினர்கள், தோழிகள் எனக்கு திருமணத்தில் செய்த அன்பளிப்பு நகைகளும் என்னிடமே. இன்றுவரை என்னிடம் எத்தனை பவுன் நகை உள்ளது என்ற விபரமும் என்னவருக்கு தெரியாது. நான் இஷ்டப்பட்டால் அதை விற்பேன், என் கணவருக்கு தேவைப்பட்டால் அவர் கேட்காமலே கொடுத்து உதவுவேன். அதேபோன்று நான் கேட்காமலே மீண்டும் அதை வாங்கித் தந்துவிடுவார்கள். சில நகைகள் வேண்டாம் என்று என்னவருக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறேன். அப்படி விட்டுக் கொடுத்ததையும்கூட, 'அல்லாஹ் பரக்கத் கொடுத்தால் அதைவிட அதிகமாகவே உனக்கு வாங்கித் தருவேன், இன்ஷா அல்லாஹ்' என்று (நான் மறந்ததையும்) அவர் மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கிறார் :)

மேலும் இங்கு நான் குறிப்பிட்டுள்ள எதுவும் தற்பெருமைக்காக சொல்லவில்லை என்பதை அல்லாஹ் பார்க்கிறான். என் வாழ்க்கை சொல்லும் பாடம் மற்ற‌ யாருக்காவது, பயன்பட‌லாமே என்ற நல்ல நோக்கில்தான் கூறியுள்ளேன்.

என் மகனின் திருமணம் சமயம் இன்ஷா அல்லாஹ்(7) நான் உயிரோடு இருந்தால், அன்றைக்கு அல்லாஹ் எங்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு எவ்வளவு அதிகமாக‌ முடியுமோ அந்த‌ளவு மணப்பெண்ணுக்கு செய்து, அவர்களிடமிருந்து எதையும் கேட்காமல்/எதிர்ப்பார்க்காமல் மணமுடித்து வைக்க நிய்யத்(8) உள்ளது. நிறைவேற துஆ செய்யுங்கள்.

மஅஸ்ஸலாமா!(9)

அன்பு சகோதரி.
--------------------------

அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாமிற்குள் தங்களை முழுமையாக அர்பணித்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை அப்படியே பிரதிபலிக்க விரும்புவார்கள். 

  • பெண் வீட்டார் தாங்களாகவே விருப்பப்பட்டு (??) வரதட்சணை/சீதனம் கொடுக்க முன்வந்தாலும், இவையெல்லாம் நபியவர்கள் காட்டி தந்த வழிமுறைக்கு எதிரானது என்று கூறி தங்கள் எண்ணத்தில் உறுதியோடு நிற்கும் சகோதரர்களுக்கும், 
  • தாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் செயல்படாத மணமகன் தங்களுக்கு தேவையில்லை என்பதில் உறுதிப்பாட்டோடு இருக்கும் சகோதரிகளுக்கும்,    
  • இவை அனைத்திற்கும் மேலாக, இறைவன் சொல்லாத ஒன்றை, நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒன்றை நாங்கள் செய்யமாட்டோம் என்ற எண்ணத்தில் நங்கூரம் பாய்த்து உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கும், 

இந்த பதிவு எவ்விதத்திலாவது உதவியிருந்தால் அந்த புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக... 

இறைவா, நபிவழி திருமணத்தில் உறுதியோடு இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மனவலிமையை அளித்து அவர்கள் தங்கள் எண்ணங்களில் வெற்றி பெற உதவுவாயாக...ஆமீன். 

Please Note:

ஒரு உரையாடலின் போது, சகோதரர் ஒருவர், தான் ஒரு தளத்தில் படித்ததாக பின்வருவதை கூறினார்.

அதாவது, தன் மகள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு, அவர்களது திருமணத்தின் போது, நாயகம் (ஸல்) அவர்கள் பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியதாக கூறினார் அவர்.

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட தகவல். சஹிஹ் ஹதீஸ்களில் இது போன்ற தகவல்கள் காணப்படவில்லை. அதே நேரம் சில வரலாற்று நூல்களில் இதனை காணமுடிகின்றது.

அப்படியே இருந்தாலும் அந்த வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பரிசுப்பொருட்கள் கொடுத்தனுப்பியது உண்மைதானென்றாலும் அதன் பின்னணி வேறு.

பின்வருவது தான் அந்த பின்னணி.

நாயகம் (ஸல்) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்களுக்கான மஹராக தன் மருமகன் அலி (ரலி) அவர்களிடம் இருந்து அவரது கவசத்தை பெற்றார்கள். பிறகு அதனை விற்க சொன்னார்கள். வந்த பணத்தை மூன்றாக பிரித்தார்கள். ஒரு பகுதியை பிலால் (ரலி) அவர்களிடம் கொடுத்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கி கொள்ள சொன்னார்கள். மற்ற இரு பகுதியை கொண்டு பாத்திமா (ரலி) அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பினார்கள்.

ஆக, நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்தது மஹராக வந்த பணத்தில். இதற்கும், வரதட்சனை/சீதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன், 


வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.
2. தவ்ஹீத் - ஓரிறை கொள்கை. இங்கே, நபிவழியில் உறுதிப்பாடோடு இருப்பவர்களை குறிக்கின்றது.
3. துஆ - பிரார்த்தனை.
4. மஹர் - மணமகனால் மணமகளுக்கு கொடுக்கப்படும் மணக்கொடை.
5. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.
6. வலிமா - திருமண விருந்து.
7. இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்.
8. நிய்யத் - நோக்கம்/எண்ணம்.
9. மஅஸ்ஸலாமா - பிரியும் போது முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தை (ஆங்கிலத்தில் 'bye' என்று சொல்வதுபோல). இதற்கு "அமைதியுடன் (with peace)" என்று பொருள்.   


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ






35 comments:

வாஞ்ஜூர் said...

இந்த பதிவு நிச்சயமாக மனஉறுதியை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை கொடுக்கிறது .

எனது தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது
( “இளையாங்குடிDr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்” )


அவர்கள் 1960 ல் தொடங்கி பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.

தன் பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்" என முகத்திலடித்தாற்போல் கூறியவர்.

அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்.

----------------------
தந்தையின் இக்கொள்கையை கடைபிடித்து வாழ்வதுடன் இதை மற்றவர்களுக்கு எடுத்து கூறி பெரும்பாலோரின் முகச்சுளிப்புக்கும் வெறுப்புக்கும் ஆளாகினாலும் மனம் தளரவில்லை.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்


.

Aashiq Ahamed said...

மதிப்பிற்குரிய வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

-----
தன் பெண்பிள்ளைகளுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்" என முகத்திலடித்தாற்போல் கூறியவர்.
-----

நெத்தியடி...

அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்

தங்களின் பின்னூட்டம் மேலும் உற்சாகம் தருகின்றது...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

வாஞ்ஜூர் said...

நேர்முக‌ விடியோ வழியாக‌ காணுங்க‌ள்.

==> "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா? <===


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரன் ஆஷிக்,
நபி வழி திருமணம் தான் செய்வேன் இல்லையெனில் திருமணமே தேவையில்லை என்ற கொள்கையில் உறுதியாக நின்று திருமணம் முடித்த அந்த சகோதரியின் வாழ்க்கை நமக்கு சஹாபிய பெண்மணிகளின் கொள்கைப் பற்றை மீண்டுமொருமுறை நினைவுறுத்துகின்றது. அவரின் கணவரும் இங்கே போற்றுதலுக்குரியவர். ஏனெனில் தமது குடும்பத்தினர்களை நபி வழிப்படி தான் தன்னுடைய திருமணம் நடத்த வேண்டுமென்று கட்டளையிட்டு கொள்கை சகோதரியை மணமுடித்து தனது திருமணத்தை நபி வழியில் நடத்திக் காட்டியிருக்கின்றார். இன்றைய இளைஞர்களில் பலர் ஏகத்துவம் பேசினாலும் தன்னுடைய திருமணம் என்று வரும்போது தமது குடும்பத்தினர்களின் வற்புறுத்தலுக்கு உட்பட்டு நபிவழியை அப்படி ஓரமாக வைத்து விட்டு தமது திருமணத்தை நபியவர்கள் காட்டி தராத வரதட்சினை, ஹஜ்ரத் துவா, மலர் மாலை, சடங்குகள் சம்பிரதாயங்கள் புடை சூழ நடத்தி விடுகின்றனர்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வாஞ்சூர் அப்பாவின் பின்னூட்டமும் ஒரு பாடத்தை நமக்கு நினைவூட்டுகின்றது. அது என்னவெனில் இப்படி நபியவர்கள் காட்டி தராத திருமணங்களுக்கு செல்லாதே என்பது தான் அது. அத்தகைய திருமணங்களுக்கு செல்வது உண்மையான இஸ்லாமியர்களுக்கு அழகல்ல. அந்த வகையில் நான் சமீப காலமாக நபி வழிக்கு மாற்றமாக நடைபெறும் எந்தவொரு திருமணத்திற்கும் செல்வதில்லை. அத்தகைய திருமணங்களை புறக்கணிக்கிறேன் என்பதை திருமணத்திற்கு அழைப்பு விடுப்பவர்களிடம் சொல்லியும் விடுகிறேன். எனவே சொந்த பந்தங்கள் வேண்டுமென்று நபி வழிக்கு மாற்றமான திருமணத்திற்கு செல்வதும் மார்க்கத்திற்கு முரனானதே. மார்க்கமா இல்லை சொந்த பந்தங்களா என்பதை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு வேலை வரதட்சினை மட்டும் இல்லாமல் அதே சமயம் நபி வழிக்கு மாற்றமாக ஒரு திருமணம் நடந்தாலும் அது நபி வழி திருமணம் இல்லை என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

எனக்கு தெரிந்த ஒரு உண்மை சம்பவம் நபிவழி திருமணம் தொடர்பாக.....

நமக்கெல்லாம் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களை நன்றாக தெரிந்திருக்கும். இஸ்லாத்தின் பெயரில் இஸ்லாத்தில் இல்லாததை சொல்லி மக்களை வழிகெடுக்கும் போர்ப்படை தளபதிகளில் ஒருவர் அவர். அவர் தவ்ஹீத் ஆலிம்களுடன் விவாதமும் புரிந்திருக்கிறார். அத்தகைய விவாதங்களில் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியுடன் சேர்ந்து தவ்ஹீதிற்கு எதிராக விவாதம் புரிந்தவர் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு ஆலிம். (அவர் பெயர் முகைதீன்.) இன்றும் ஜமாலியுடன் அவர் இருக்கிறார். அவருடைய மகன் தவ்ஹீத் கொள்கையின் பக்கம் வந்து விட்டார். அவர் அதிக பிடிப்புள்ளவராகவும் இருந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு இறைவன் தன்னுடைய முதல் சோதனையை அனுப்பி வைத்தான் திருமண வடிவத்தில். அவருடைய தந்தை (குராபி ஆலிம்) அவருக்காக பெண் பார்த்து (தவ்ஹீத் அல்லாத பெண் தான்) அவரை திருமணம் முடிக்க சொல்ல அவரோ திருமணம் செய்தால் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்ணை தான் திருமணம் செய்வேன். இல்லையெனில் திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

தந்தை எவ்வளவோ மன்றாடியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த குராபி ஆலிம் ஒரு தவ்ஹீத் ஆலிமிற்கு (மேலப்பாளையம் ஷம்சுல் லுஹா அவர்களுக்கு) போன் போட்டு மகனை கொஞ்சம் திருமண விசயத்தில் கொள்கையில் தளர்த்த சொல்லுங்கள் என்று கேட்கின்ற அளவிற்கு நிலைமை. இப்படி இருந்தும் தம் கொள்கையில் உறுதியாக இருந்தார் அந்த சகோதரர். இதனால் கோபமடைந்த குராபி ஆலிம் தன் மகனை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல அவருடைய மகன் தவ்ஹீத் பள்ளியில் வந்து தங்கி விட்டார். (ஆனால் அவருடைய பாட்டி பேரன் வந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து அவரை வீட்டுக்கு அழைத்து வர சொல்லி விட்டார்). தந்தை வந்து மகனை வீட்டுக்கு கூப்பிட அவரோ நபிவழி திருமணத்திற்கு சம்மதித்து தவ்ஹீத் பெண்ணை மணக்க அனுமத்தித்தால் வீட்டுக்கு வருவேன். இல்லையெனில் வீட்டுக்கு வர மாட்டேன் என்று ஒரேயடியாக சொல்லி விட்டார். மகனின் கொள்கை உறுதியால் அந்த குராபி ஆலிம் நபிவழி திருமணத்திற்கும் தவ்ஹீத் பெண்ணை மனமுடிப்பதற்கும் அனுமதி அழித்து விட்டார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் எந்த தவ்ஹீத் கொள்கை தவறு என்று மேடையில், விவாதங்களில் பேசுகின்ற முகைதீன் (இன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்) ஆலிம் அவர்கள் தம் மகனின் கொள்கை உறுதியால் அதே நபி வழி திருமணத்திற்கு தலையாட்ட வேண்டிய நிலைமை. எனவே கொள்கையில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் எந்த ஒரு விசயத்தையும் இலகுவாக்கி வைப்பான்.

சுவனப்பிரியன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்! சகோ. ஆஷிக்

சிறந்த பதிவு. அந்த சகோதரியைப் போலவே அனைத்து இஸ்லாமிய பெண்களும் உறுதியுடன் இருந்தால் அரபு நாடுகளைப் போன்ற நிலையை தமிழகத்திலும் இன்ஷா அல்லாஹ் கொண்டு வரலாம். சகோ வாஞ்சூராரின் பின்னூட்டமும் சிறப்பாக இருந்தது.

உங்களின் திருமணமும் நபி வழியில் நடக்க பிரார்த்திக்கிறேன்.

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஷேக் தாவுத்,

--------
எனவே கொள்கையில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் எந்த ஒரு விசயத்தையும் இலகுவாக்கி வைப்பான்.
-------

இன்ஷா அல்லாஹ்...நிச்சயமாக...

தங்களின் வருகைக்கும், உங்கள் நண்பரின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

வ அலைக்கும் ஸலாம் சகோதரர் சுவனப்பிரியன்,

தங்களின் வருகைக்கும், துவாவிற்கும் மிக்க நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

அன்னு said...

அஸ் ஸலாமு அலைக்கும் சகோ ஆஷிக்,

அந்த சகோதரியின் மன உறுதியும், அதைப்போலவே தன் உறுதியில் சற்றும் மனம் தளராத சகோதரரின் நிய்யத்தும், அதன் மீதான அமலும், மாஷா அல்லாஹ் நம் எல்லோருக்கும் மிகப்பெரும் பாடம்.

உம்முல் மு’மினீன் ஃபாத்திமா(ரலி) அவர்களின் திருமணத்தை மட்டுமல்ல. இன்னும் சிலர் அன்னை ஸைனப்(ரலி)அவர்கள் தன் கணவர் அபுல் ஆஸ் அவர்கள் பிணைக்கைதியாக இருந்த போது பிணைத்தொகையாக தன் கழுத்து மாலையை அனுப்புவார்கள். அந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்து அப்படியானால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் தன் பெண்ணுக்கு அன்பளிப்பாக அளித்ததுதானே என்பார்கள். அதைப்பற்றியும் சேர்த்திருக்கலாம்.

எப்பொழுதும் போலவே இனிமையான ஒரு பதிவு, அதைவிடவும் இனிமையான சகோதரியின் வாழ்வினை பகிர்வு.

ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

Aashiq Ahamed said...

சகோதரி அன்னு,

வ அலைக்கும் ஸலாம்,

---------
அந்த சகோதரியின் மன உறுதியும், அதைப்போலவே தன் உறுதியில் சற்றும் மனம் தளராத சகோதரரின் நிய்யத்தும், அதன் மீதான அமலும், மாஷா அல்லாஹ் நம் எல்லோருக்கும் மிகப்பெரும் பாடம்.
------------

ஆம். நிச்சயமாக.

----------
இன்னும் சிலர் அன்னை ஸைனப்(ரலி)அவர்கள் தன் கணவர் அபுல் ஆஸ் அவர்கள் பிணைக்கைதியாக இருந்த போது பிணைத்தொகையாக தன் கழுத்து மாலையை அனுப்புவார்கள். அந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்து அப்படியானால் அதுவும் நபி(ஸல்) அவர்கள் தன் பெண்ணுக்கு அன்பளிப்பாக அளித்ததுதானே என்பார்கள்.
----------

இதைப்பற்றி தெரியாது சகோதரி. நீங்கள் சொல்லி தான் தெரிகின்றது. ஜசாக்கல்லாஹு க்ஹைர்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

ஷர்புதீன் said...

salam

:)

Aashiq Ahamed said...

வ அலைக்கும் சலாம் சகோதரர் சர்புதீன்,

:)

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

புதுகை.அப்துல்லா said...

தங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் நிலவுவதாக.

நான் தவ்ஹீத் இல்லை. ஆனால் என் திருமணத்திற்காக நகையோ,பணமோ,வேறு பொருட்களோ எதுவும் நான் பெறவில்லை. அதேபோல எனது மூன்றாம் சகோதரியின் கணவர் ( அவரும் தவ்ஹீத் கிடையாது) சுமார் 23 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் எதுவும் பெறாமல் உறுதியாக மறுத்து என் சகோதரியை மணம் செய்தவர்.

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

சகோ.ஆஷிக், அந்த சகோதரியின் மெயிலை... அவர் அனுமதிபெற்று அனைவரிடமும் இந்த பதிவு மூலமாக பகிர்ந்தமைக்கு முதற்கண் தங்களுக்கு மிக்க நன்றி.

அந்த சகோதரியின் கடிதம் படித்தபின்னர் அந்த நெகிழ்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை.

சுப்ஹானல்லாஹ்.

இந்த தம்பதிகள் இருவரின் இஸ்லாமிய கொள்கை உறுதியும் அதில் விட்டுக்கொடுக்காத ஈடுபாடும்... கண்டு மகிழ்ச்சி...! நெகிழ்ச்சி...! இதுபோன்ற உறுதி மெய்யாலுமே மகத்தானவை...! மாஷாஅல்லாஹ்.

இனி வரும் இளைய சமுதாயத்துக்கும், நமக்கும், நமக்கு முந்திய முதிய சமுதாயத்துக்கும் ஒவ்வொரு வரியிலும் ஏகப்பட்ட படிப்பினைகளும் ஊக்கமும் நீக்கமற நிறைந்துள்ளன.

இருவரின் எண்ணத்துக்கும் ஏற்றவாறு சரியான துணையை அல்லாஹ் சேர்த்து வைத்திருப்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.

அல்ஹம்துலில்லாஹ்.

இந்த சிறப்புமிக்க "உதாரண திருமணத்தில்" கலந்து கொண்ட மக்கள் நிஜமாலுமே கொடுத்து வைத்தோர்.

அப்போது நமக்கு கலந்து கொள்ள முடியாவிட்டாலென்ன...?

இப்போது சொல்வோமே திருமணவாழ்த்து ..!

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

(பாரக்கல்லாஹ் லக.
வ பாரக்க அலைக்க,
வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்..!)

"உங்கள் மீது இறைவன் பேரருள் புரியட்டும். மேலும், நற்காரியங்களில் உங்களை இணைத்து மேலும் பேரருள் புரியட்டும்."

அல்லாஹூ அக்பர்.

Aashiq Ahamed said...

சகோதரர் அப்துல்லா,

தங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.

-------
நான் தவ்ஹீத் இல்லை.
-------

சகோதரர், சில விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டனவோ என்று அஞ்சுகின்றேன்.

தவ்ஹீத்வாதியாக (ஓரிறை கொள்கைவாதி) இருந்தால் தான் ஒருவர் முஸ்லிமாக இருக்கமுடியும். இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுவதும் அதைத்தான்.

தாங்கள் தவ்ஹீத் கொள்கையையும், தவ்ஹீத் ஜமாத்துகளையும் போட்டு குழப்பி கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

சகோதரி அவர்கள் இங்கே "தவ்ஹீத்" என்று கூறியிருப்பது, நபிவழி கொள்கையில் உறுதியோடு இருப்பவர்களை. இதனை நான் தெளிவாக "வார்த்தைகளுக்கான விளக்கங்களில்" குறிப்பிட்டுள்ளேன். பார்க்கவும்.

--------
ஆனால் என் திருமணத்திற்காக நகையோ,பணமோ,வேறு பொருட்களோ எதுவும் நான் பெறவில்லை. அதேபோல எனது மூன்றாம் சகோதரியின் கணவர் ( அவரும் தவ்ஹீத் கிடையாது) சுமார் 23 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எங்களிடம் எதுவும் பெறாமல் உறுதியாக மறுத்து என் சகோதரியை மணம் செய்தவர்.
---------

அல்ஹம்துளில்லாஹ்...எங்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் முஹம்மது ஆஷிக்,

வ அலைக்கும் சலாம்,

----
இனி வரும் இளைய சமுதாயத்துக்கும், நமக்கும், நமக்கு முந்திய முதிய சமுதாயத்துக்கும் ஒவ்வொரு வரியிலும் ஏகப்பட்ட படிப்பினைகளும் ஊக்கமும் நீக்கமற நிறைந்துள்ளன.
----

ஆம். நிச்சயமாக. அல்ஹம்துலில்லாஹ்.

//அப்போது நமக்கு கலந்து கொள்ள முடியாவிட்டாலென்ன...?

இப்போது சொல்வோமே திருமணவாழ்த்து ..!

بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير

(பாரக்கல்லாஹ் லக.
வ பாரக்க அலைக்க,
வ ஜமஅ பைனக்குமா ஃபீ க்ஹைர்..!)

"உங்கள் மீது இறைவன் பேரருள் புரியட்டும். மேலும், நற்காரியங்களில் உங்களை இணைத்து மேலும் பேரருள் புரியட்டும்." //

திரும்ப ரிபீட் செய்கின்றேன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Abdul Basith said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

அவசியமான பதிவு சகோ.! பதிவை படிக்கும் போதே என்னையும் அறியாமல் கண்கலங்கினேன். ஆறு வருடம், அதுவும் ஒரு சகோதரி, இஸ்லாத்தின் கொள்கைக்காக பொறுமையுடனும், இறை நம்பிக்கையுடனும் காத்திருந்தது நமக்கெல்லாம் படிப்பினையாகும். அதே சமயம் சகோதரர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்கள் கூறியது போல, சகோதரியின் கணவரும் பாராட்டப்பட வேண்டியவர் ஆவார். அவர்கள் இருவரையும் அல்லாஹ் நல்லவற்றின்பால் ஒன்றிணைப்பானாக!

வாங்க வேண்டிய சகோதரி “கொடுக்க மாட்டேன்” என்பதில் உறுதியாக இருக்கும் போது, கொடுக்க வேண்டிய நாம் “வாங்க மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்க வேண்டாமா?

இன்று நடைபெறும் முஸ்லிம்களின் (அதிகமான) திருமணங்களில் மஹர் என்பது பெயருக்காகவே கொடுக்கப்படுகிறது. அதுவும் சிறிது நகையுடன், 1001, 5001 என்று கணக்கு வேறு! குறைந்த அளவு மஹர்(???) கொடுத்துவிட்டு, அதைவிட பன்மடங்கு பெண்வீட்டாரிடம் வாங்குவது, யாரை ஏமாற்றுவதற்காக? மஹர் கொடுக்க உத்தரவிட்ட இறைவனையா?

வரதட்சணை வாங்குவதற்கு சிலர் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாததாக இருக்கிறது. நாங்கள் கேட்கவில்லை, அவர்கள் தருகிறார்கள்” என்று கூறுகிறார்கள். ஏன் அதை தடுப்பதற்கு இவர்களுக்கு திராணி இல்லையா? அல்லது இந்த காரணத்தை நாளை இறைவனிடம் தான் கூற முடியுமா?

இன்னும் சிலர், “எங்களுக்கு விருப்பமில்லை தான், ஆனால் பெற்றோர்கள் தான்..... பெற்றோரின் சொல்லை எப்படி மீறுவது?” என்று கூறுகிறார்கள். ஏன் இதற்கு முன் இவர்கள் பெற்றோரின் சொல்லை மீறியது இல்லையா? பைக் வாங்குவதற்கும், தனக்கு விருப்பமான கல்லூரியில் சேருவதற்கும் அடம்பிடித்து சாதிப்பவர்கள், வரதட்சணை/சீதனம் விசயத்தில் மட்டும் “பெற்றோரின் சொல்லை கேட்கிறேன்” என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

திருமணம் என்பது பந்தமாகும். அதை வியாபாரமாகி விலை போகாதீர்கள்!

என்னுடைய நிலை:
நான் என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். வரதட்சணை/சீதனம் அது எந்த வழியிலானாலும் வாங்கக் கூடாது என்று! நாளை (இறைவன் நாடினால்) என் திருமணத்தின் போதும் நான் இதே நிலையில் இருக்கவும், நம் அனைவரும் வரதட்சணை/சீதனம் வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்யவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!

Aashiq Ahamed said...

சகோதரர் பாசித்,

வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

------
வாங்க வேண்டிய சகோதரி “கொடுக்க மாட்டேன்” என்பதில் உறுதியாக இருக்கும் போது, கொடுக்க வேண்டிய நாம் “வாங்க மாட்டோம்” என்பதில் உறுதியாக இருக்க வேண்டாமா?
------

நிச்சயமாக சகோதரர்.


------
யாரை ஏமாற்றுவதற்காக? மஹர் கொடுக்க உத்தரவிட்ட இறைவனையா?
------

தங்களை தாங்களே ஏமாற்றி கொள்பவர்கள்.

-----
வரதட்சணை வாங்குவதற்கு சிலர் கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளமுடியாததாக இருக்கிறது. நாங்கள் கேட்கவில்லை, அவர்கள் தருகிறார்கள்”
------

ஓ. சும்மா நாட்களில் கொடுப்பார்களா??

Aashiq Ahamed said...

-----
ஏன் அதை தடுப்பதற்கு இவர்களுக்கு திராணி இல்லையா? அல்லது இந்த காரணத்தை நாளை இறைவனிடம் தான் கூற முடியுமா?
-----

நிச்சயமாக கூற முடியாது. தவறு செய்து விட்டோம் என்று தான் கூற முடியும்.

-----
இன்னும் சிலர், “எங்களுக்கு விருப்பமில்லை தான், ஆனால் பெற்றோர்கள் தான்..... பெற்றோரின் சொல்லை எப்படி மீறுவது?” என்று கூறுகிறார்கள். ஏன் இதற்கு முன் இவர்கள் பெற்றோரின் சொல்லை மீறியது இல்லையா? பைக் வாங்குவதற்கும், தனக்கு விருப்பமான கல்லூரியில் சேருவதற்கும் அடம்பிடித்து சாதிப்பவர்கள், வரதட்சணை/சீதனம் விசயத்தில் மட்டும் “பெற்றோரின் சொல்லை கேட்கிறேன்” என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
--------

நச் நச். அல்ஹம்துலில்லாஹ். சாட்டியடி கேள்வி.


-----
திருமணம் என்பது பந்தமாகும். அதை வியாபாரமாகி விலை போகாதீர்கள்!
-----

இன்று சமூகம் சிறுக சிறுக மாறி வருவதாக தெரிகின்றது சகோதரர். இன்ஷா அல்லாஹ் முழுவதுமாக திருந்துவார்கள்.


-------
நான் என் பெற்றோரிடம் சொல்லிவிட்டேன். வரதட்சணை/சீதனம் அது எந்த வழியிலானாலும் வாங்கக் கூடாது என்று! நாளை (இறைவன் நாடினால்) என் திருமணத்தின் போதும் நான் இதே நிலையில் இருக்கவும், நம் அனைவரும் வரதட்சணை/சீதனம் வாங்காமல், மஹர் கொடுத்து திருமணம் செய்யவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்!
-------

இன்ஷா அல்லாஹ். தங்களின் எண்ணம் வெற்றி பெற ஏக இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதர சகோதரிகளுக்கு,
நபி வழி திருமணம் என்பது வெறுமனே வரதட்சனை மற்றும் சீதனம் மட்டும் இல்லாமல் நடைபெறும் திருமணம் என்று நம்மில் பலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது. ஏனெனில் வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்வேன் என்று தான் பலர் கூறுகின்றனர். ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் (ஹஜ்ரத் துவா, இந்த மத்ஹப் என்று அறிவித்தல் உட்பட) எதுவுமில்லாமல் செய்யப்படும் திருமணம் மட்டுமே நபி வழி திருமணம் என்பதை மீண்டுமொருமுறை நினைவு படுத்துகிறேன். மற்றவை எல்லாம் வெறுமனே திருமணம் தான். நபி வழி திருமணம் இல்லை.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
உங்கள் கட்டுரையில் தவ்ஹீத் என்ற பதத்தினை தவிர்த்து இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றும் உண்மை முஸ்லீம் அல்லது ஓரிறை கொள்கையில் உறுதி கொண்டிருப்பவர் என்று எழுதியிருக்கலாம்.வரதட்சனை வாங்காதவர்கள் எல்லாம் தவ்ஹீத்வாதிகளா?வரதட்சனை வாங்காதிருப்பது என்பது ஒரு சுன்னத் மட்டுமே.
தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் மாப்பிள்ளை என்று அழைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.அல்லாஹ்வும் நம்மை முஸ்லீம் என்று பெயரிட்டு "முஸ்லீம்" என்றே அழைக்கச் சொல்லுகிறான். மேலும் தவ்ஹீத் என்ற வார்த்தையும் குரானில் நேரடியாக இல்லை.நாம் நம்மை முஸ்லீம் என்றழைப்பதிலேயே பெருமை கொள்வோம்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்;.பாதுகாவலர்களிலெல்லாம் அவனே மிக்க நல்லவன், மிகச் சிறந்த உதவியாளன்.(குரான்:22:78)
என்றும் அன்புடன்,
HBA. 

HBA said...

கூகுள் அக்கவுன்ட் மூலம் கமென்ட்ன் அனுப்ப இயலாததால் அனாமியாக எனது கருத்துக்களை அனுபியுள்ளேன்.


என்றும் அன்புடன்,
HBA.

நட்புடன் ஜமால் said...

நபி வழி திருமணம் என்பது வெறுமனே வரதட்சனை மற்றும் சீதனம் மட்டும் இல்லாமல் நடைபெறும் திருமணம் என்று நம்மில் பலர் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது. ஏனெனில் வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்வேன் என்று தான் பலர் கூறுகின்றனர். ஆனால் சடங்கு சம்பிரதாயங்கள் (ஹஜ்ரத் துவா, இந்த மத்ஹப் என்று அறிவித்தல் உட்பட) எதுவுமில்லாமல் செய்யப்படும் திருமணம் மட்டுமே நபி வழி திருமணம் என்பதை மீண்டுமொருமுறை நினைவு படுத்துகிறேன். மற்றவை எல்லாம் வெறுமனே திருமணம் தான். நபி வழி திருமணம் இல்லை. ]]


வழிமொழிகிறேன் ...

ஏம்.ஷமீனா said...

Dear brother Aashiq ahamed,
Assalaamu aleykum wa rahmatullahi wa barakatuh !

Jazakkallahu kheir for this useful article.
Even if we are indians, we are muslim. So we must follow SUNNAH's rules, which is the best for each one of us... We don't have forget that first of all we are MUSLIMS, and ALLAH(swt) knows the best for us... ALhamdullilah...

Hope that this article will be an eye opener.

May ALLAH(swt) bless this sister...



Your sister,
M.Shameena

Riyaz Ahmed said...

அகிலங்கள் அனைத்தையும் படைத்த இடு இணை இல்லாத இறைவனுக்கே அனைத்து புகழும்...

சகோதிரி உங்களுடைய மார்க்க வலிமை அனைவருக்கும் ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறது..மாஷா அல்லாஹ்...அல்லாஹ் உங்களுக்கு உங்கள் கணவருக்கும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை கொடுபானாக...உங்களை போலவே நானும் நபிவழியில் தான் திருமணம் செய்ய போகிறேன்..வல்ல இறைவனிடத்தில் எனக்காக துஆ செய்யுங்கள்....

Aashiq Ahamed said...

சகோதரர் HBA,

வ அலைக்கும் ஸலாம்,

தவ்ஹீத் என்பது உலகளவில் முஸ்லிம் அறிஞர்கள் "ஓரிறை கொள்கையை" எளிதாக சொல்லுவதற்கு உபயோகப்படுத்தும் வார்த்தை. ஒருவர் தொவ்ஹீத்வாதியாக இருந்தால் தான் முஸ்லிமாக இருக்க முடியும்.

நம் மாநில அளவில், தவ்ஹீத் ஜமாத்தை சாராத லட்சக்கணக்கான தவ்ஹீத்வாதிகள் இருக்கின்றனர். நம் இடத்தில் மட்டும் தான் தௌஹீதையும். தவ்ஹீத் ஜமாத்தையும் போட்டு குழப்பி கொள்கின்றனர். உலகளவில் அப்படி கிடையாது.

அந்த சகோதரி தன்னுடைய கடித்ததில் அந்த பத்தை எப்படி உபயோகித்திருக்கின்றார் என்பதை பதிவின் கீழே சொல்லியுள்ளேன்.

---------
வரதட்சனை வாங்காதிருப்பது என்பது ஒரு சுன்னத் மட்டுமே.
---------

நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை பின்பற்றி நடப்பதை தானே ஒவ்வொரு முஸ்லிமும் விரும்புவார். அதில் நமக்கு சந்தேகம் இல்லையே.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

சகோதரர் ஜமால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Aashiq Ahamed said...

Dear Shameena,

wa alaikum salaam wa rahmathullaahi vabara kaaththuhu...

yes..we are muslims first. we should not allow our cultural systems to contradict with our belief.

thanks for your comments...

Your brother,
Aashiq Ahamed A

Aashiq Ahamed said...

சகோதரர் ரியாஸ்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

----
.உங்களை போலவே நானும் நபிவழியில் தான் திருமணம் செய்ய போகிறேன்.
-----

தங்களின் நிய்யத் நிறைவேற ஏக இறைவன் துணை நிற்பானாக...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Shamsul said...

Salam Brother..

Really Useful..

இந்த கட்டுரையை உங்கள் அனுமதியுடன் facebook இல் Publish பண்ணலாமா?

-Shamsul

Anonymous said...

Salam Brother...

Really Useful and energetic...

Can i publish this article in my Facebook profile with your permission?

-Shamsul

Aashiq Ahamed said...

வ அலைக்கும் சலாம் சகோதரர் சம்சுல்,

என்னுடைய எந்தவொரு கட்டுரையையும் என்னுடைய அனுமதி இல்லாமலேயே நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம்..எடிட் செய்தால் மட்டும் எனக்கு முன்னமே தெரியபடுத்த வேண்டும்...

தங்களுடைய உதவிக்கு ஜசாக்கல்லாஹ் சகோதரர்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

Anonymous said...

ஸலாம்

அந்த சகோதரிக்கு


பா(இ)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(இ)ர(க்)க அலை(க்)க வஜமஅ பை(இ)ன(க்)குமா பீ(எ) கைரின் ஆதாரம்: அபூதாவூத் 1819

Post a Comment