Saturday, November 26, 2011

இவர் தான் முஹம்மது நபி...



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் - கோடானுகோடி மக்கள் இந்த மனிதர் மீது அபரிமிதமான அன்பை பொழிய என்ன காரணம்?, மிக குறுகிய காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பகுதியையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்திருக்கின்றார் என்றால், அவருடைய போதனைகள் எப்படி இருந்தன?

இம்மாதிரியான கேள்விகளுக்கு, சற்றே சுருக்கமான முறையில் விடை கொடுக்க முயலும் பதிவு தான் இது.

முஸ்லிம்களால் தங்கள் உயிரினினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் அறிந்துக்கொள்ளும் வண்ணம் இந்த பதிவு அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்). 

நபியவர்கள் குறித்து சில வரிகளில்: 

மக்கா நகரில் 570-ஆம் ஆண்டு பிறந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். மக்கா நகர மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். நேர்மையாளராகவும், உண்மையாளராகவும், மிகச் சிறந்த பண்பாளராகவும் அறியப்பட்டவர்கள். ஆனால், நபிகளாரின் நாற்பதாவது வயதில் இந்த காட்சிகள் மாறத்தொடங்கின. இந்த வயதில் தான் இறைச்செய்தியை மக்களுக்கு சொல்லும் நபியாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் முஹம்மது (ஸல்).

இறைவன் தன்னை நபியாக தேர்ந்தெடுத்திருக்கின்றான், இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க சொல்லிருக்கின்றான் என்று சொன்னதால் கேலியும், கிண்டலுமே மிஞ்சின. ஆனாலும் இறைச்செய்தியை எடுத்துச்சொல்வதில் பின்வாங்கவில்லை. அழகான முறையில் இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். இறைச்செய்தியால் கவரப்பட்ட மக்கள், சிறிது சிறிதாக இஸ்லாத்தின்பால் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். 

தங்களின் மூதாதையர் பின்பற்றிய பாதையிலிருந்து மக்களை திசை திருப்புகின்றார் முஹம்மது (ஸல்) என்று கொந்தளித்தனர் மக்கா நகர அதிகார வர்க்கத்தினர். சமாதானம் பேச சென்றனர். இஸ்லாத்தை எடுத்துக்கூறுவதை முஹம்மது (ஸல்) கைவிடுவாரேயானால், அவருக்கு, பொன் பொருள் அதிகாரம் என்று அனைத்தையும் தருவதாக கூறினர். ஆனால் நபியவர்களோ எளிமையான வார்த்தைகளை பதிலாக கூறினார்கள். 

ஒரு கையில் சூரியனையும், மற்றொரு கையில் சந்திரனையும் கொடுத்து தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்த சொன்னாலும் தன்னால் முடியாது என்ற வார்த்தைகள் தான் அவை. இன்றளவும், இஸ்லாத்தை எடுத்துச்சொல்லும்போது வரக்கூடிய தடங்கல்களையும், சோதனைகளையும் பொருட்படுத்தாது தொடர்ந்து முஸ்லிம்கள் செயல்பட ஊக்கமாய் இருப்பது அந்த எளிமையான, காத்திரமான வார்த்தைகள் தான். 

உலக மக்களுக்கெல்லாம் அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறுதித்தூதரை எதிர்த்தவர்கள், கொன்றொழிக்க வாளேந்தி புறப்பட்டவர்கள் என்று பலரும் ஒன்றன் பின் ஒன்றாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தனர். நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது அந்த பகுதி முழுவதுமே இஸ்லாத்தை தழுவியிருந்தது.

நபியவர்களின், வாழ்வின் பல்வேறு அங்கங்கள் குறித்த சுமார் 25 நபிமொழிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன. படித்துப்பாருங்கள், இந்த அற்புத மனிதர் குறித்த மேலும் பல தகவல்களை இதன் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். அவை உங்கள் வாழ்விற்கு வழிகாட்டியாக அமையலாம் (இறைவன் நாடினால்). 
**********
1. "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

2. ‘கன்னித்தன்மை இழந்த பெண்ணை, அவளுடைய உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! (கன்னிப்பெண் வெட்கப்படுவாளே) எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)' என்று மக்கள் கேட்டார்கள். ‘அவள் மெளனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி.

3. "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள், "இல்லை. மாறாக,  மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணைபுரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள் (அபூதாவூத்).

4. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்".

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

5.  "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்ல முறையில் நடந்து கொள்பவர்களே" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ.

6. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதை தான் பார்த்ததில்லை. உணவு பிடித்திருந்தால் உண்பார்கள். பிடிக்காவிட்டால் அமைதியாக இருந்துவிடுவார்கள்.

அறிவிப்பாளர்: அபு ஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: முஸ்லிம்.

7. ‘தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்).
ஆதாரம்: புஹாரி.

8. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி).
ஆதாரம்: புகாரி.

9. ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
ஆதாரம்: புஹாரி.

10. (பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்) அப்போது ஹெராக்ளியஸ், ‘அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கின்றார்?’ என்று கேட்டார். நான், ‘தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்’ என்று பதிலளித்தேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி).
ஆதாரம்: புகாரி.

11. ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!’ என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) .
ஆதாரம்: புஹாரி.

12. நபி(ஸல்) அவர்களிடம் ஹிந்த் பின்த்து உத்பா(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியாக இருக்கிறார். அவரின் பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதால் என் மீது குற்றம் ஏதும் உண்டா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நியாயமான அளவிற்கு (உன் கணவனின் பணத்தை எடுத்து) அவர்களுக்கு உணவளிப்பதால் உன் மீது குற்றம் எதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

13. “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்' என்று மக்கள் கூறினார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

14. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஉபா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

15.  "ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) .
நூல்: முஸ்லிம்.

16. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள்)".

அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி).
ஆதாரம்: புஹாரி.

17. "(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.

அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

18. "மரணித்த பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் 'நீ என்ன அமல் (செயல்) செய்து கொண்டிருந்தாய்?' என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார், 'நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு - கடனாளிகளுக்கு தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாது வாங்கிக் கொள்வேன்' என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி).
நூல்: முஸ்லிம்.

19. "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.

20. 'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு 'ஆம்' என்றார்கள். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று வினவினோம். அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் (ரலி).
ஆதாரம்: முஅத்தா.

21. "ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தாய் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).
ஆதாரம்: புஹாரி.

22. ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி).
ஆதாரம்: அபூதாவூத்.

23. "ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்' என்று அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) சொல்லிக்கொண்டார். உடனே அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி).
ஆதாரம்: புஹாரி.

24. "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி).
நூல்: புஹாரி.

25. '(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார் அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.
நூல்: புஹாரி.

**********

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படிக்க, பதிவிறக்கம் செய்ய இங்கே சுட்டவும். இமெயில் மூலம் பெற விரும்புபவர்கள் எனக்கு மெயில் அனுப்பவும் (aashiq.ahamed.14@gmail.com). 

நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் நாம் வாழ்ந்திட இறைவன் அருள்புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தை சுருக்கங்களுக்கான விளக்கங்கள்:
1. ஸல் - ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் என்பதின் சுருக்கமாகும். இதற்கு "இவர் மீது இறைவனின் அமைதியும், கண்ணியமும் நிலவுவதாக " என்று பொருள்.
2. ரலி - ரலியல்லாஹு அன்ஹு/அன்ஹா என்பதின் சுருக்கமாகும். இதனை, நபியவர்களுடன் இருந்த/கண்களால் பார்த்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்துவார்கள். இதற்கு "இறைவன் இவர்களை பொருந்திக்கொள்வானாக" என்று பொருள். 

Please note:
"இவருக்கு பெயர் முஹம்மது (ஸல்)" என்ற தலைப்பில் மேலே உள்ள தனிப்பக்கத்தில், நெகிழ்வூட்டும் நபிமொழிகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.  

My Sincere thanks to: 
6. சகோதரர் ஜாபர் ஸபாமர்வா.
7. சகோதரர் ஜாஹிர் ஹுசைன். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ






35 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

    - பா. ராகவன். :-
    சித்து வேலைகளையும் அற்புதம் நிகழ்த்துவதையும் முகம்மது நபி, இஸ்லாத்தின் மையப்புள்ளியாக ஒருபோதும் வைத்ததில்லை. -

    முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் - இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.

    ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம்.

    மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது.

    காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

    முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின.

    இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

    ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது. - பா. ராகவன்.



    .

    ReplyDelete
  2. நல்ல முயற்சி..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    மனிதப்பிறவிகள் மத்தியிலோர்
    மனித நேயப்பிறவி -

    மாநபி (ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்)அவர்கள் குறித்த ஆக்கத்தை எதிர்க்குரலும் தம் பங்கிற்கு திறம் பட தந்திருப்பது மகிழ்வளிக்கிறது..,

    இரு ஹதிஸ்களுக்கு மத்தியில் வண்ணத்தை வேறுப்படுத்தினால் இன்னும் பார்வையிட எளிதாக இருக்குமே சகோ!

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்.
    :)

    ReplyDelete
  4. Assalaamu alaikkum

    இந்த ஹதீசுகளை படிக்கும் போது மனதில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. நல்ல முயற்சி இதுபோன்று மென்மேலும் தொடர அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தையும்,அறிவையும் தர பிரார்த்திக்கிறேன்.

    kalam

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்!

    அனைத்தும் மிக முக்கியமான நபி மொழிகள். தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொகுப்பு.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    நல்ல முயற்சி. ஜசாகல்லாஹ் கைரன் கதீரா

    ReplyDelete
  8. அன்பு வாஞ்சூர் அப்பா,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு

    அருமையான சுட்டியை கொடுத்திருக்கிண்றீர்கள். நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் மிக ஆர்வமுடன் படித்த தொடர் இது. மிக அழகாக எழுதி இருப்பார் பா.ராகவன் அவர்கள். மறுபடியும் பலர் அறிந்துக்கொள்வதற்கு பகிர்ந்ததற்கு நன்றி.

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  9. சகோதரர் Mohamed Faaique,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    முயற்சி நம்முடையது, ஹிதாயத் அவனுடையது...

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  10. சகோதரர் குலாம்,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

    ///இரு ஹதிஸ்களுக்கு மத்தியில் வண்ணத்தை வேறுப்படுத்தினால் இன்னும் பார்வையிட எளிதாக இருக்குமே சகோ!//

    கலர் வித்தியாசம் திசை திருப்பும்விதமாக இருந்துவிடுமோ என்ற அச்சமே அம்மாதிரி வைக்காததற்கு காரணம். தற்போது நீங்கள் சொன்ன பிறகு, கலர் shade மாற்றி இருக்கின்றேன். உதவிக்கு ஜசாக்கல்லாஹ்.

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும்

    ரொம்ப நன்றி பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  12. சகோதரர் கலாம்,

    வ அலைக்கும் சலாம்,

    //இந்த ஹதீசுகளை படிக்கும் போது மனதில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.//

    ஆம். பலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இன்ஷா அல்லாஹ், அந்த தாக்கம் நமக்குள் ஒரு விதையாக இருந்து நாம் அழகான முறையில் வாழ வல்ல இறைவன் அருள் புரியட்டும்...

    தங்களுடைய துவாவிற்கு மிக்க நன்றி...

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  13. Assalamu alikum
    bro. Useful post jazakallahu kair

    ReplyDelete
  14. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

    .

    ReplyDelete
  15. அழகிய பகிர்வை, அன்புடன் வரவேற்கிறோம். இதுபோல் மீண்டும் மீண்டும் தொடர்க!!

    ReplyDelete
  16. தமிழ்மணம் மகுடம்

    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை

    இவர் தான் முஹம்மது நபி... - 22/25

    Aashiq Ahamed

    ReplyDelete
  17. Entha pathivukum ' - ' vote'ah?!
    Hmmm enna solvathu!!

    ReplyDelete
  18. சலாம் சகோ

    மைனஸ் ஓட்டு போட்ட விஷக்கிருமிகள் யார் சகோ

    ReplyDelete
  19. சகோதரர் ஸ்டார்ஜன்,

    வ அலைக்கும் சலாம்,

    தாங்கள் கொடுத்த சுட்டியை பார்த்தேன். கொள்ளை அழகான எழுத்து நடை. அதனை ஒத்த கருத்துக்குகள். சொல்ல வந்ததை சுருக்கமாக, நச் என்று சொல்லிவிட்டீர்கள். அல்ஹம்துலில்லாஹ். அந்த கட்டுரையில் ஆரம்ப பத்தியில் ஒரே ஒரு வார்த்தையில் மட்டும் மாற்று கருத்து உண்டு. இன்ஷா அல்லாஹ் பின்னர் மெயில் அனுப்புகின்றேன்.

    தங்களின் மேலான இந்த பணியை இறைவன் பொருத்திக்கொள்வானாக...ஆமீன்.

    ReplyDelete
  20. சகோதரர் சுவனப்பிரியன்,

    வ அலைக்கும் சலாம்

    ///தொடருங்கள் சகோ...///

    இன்ஷா அல்லாஹ். வருகைக்கு நன்றி..

    வஸ்ஸலாம்,

    ReplyDelete
  21. சகோதரி ஜலீலா,

    வ அலைக்கும் சலாம்...

    //அழகிய தொகுப்பு.//

    அல்ஹம்துலில்லாஹ். வருகைக்கு நன்றி...

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  22. சகோதரி ஆயிஷா அபுல்,

    வ அலைக்கும் சலாம்,

    //நல்ல முயற்சி. ஜசாகல்லாஹ் கைரன் கதீரா///

    ஊக்கத்திற்கு நன்றி. தங்களின் துவாவிற்கு மிக்க நன்றி..

    ///மைனஸ் ஓட்டு போட்ட விஷக்கிருமிகள் யார் சகோ///

    பொதுவில் பெயர் சொல்ல வேண்டாம் என்று நினைக்கின்றேன் சகோதரி....லூசில் விடுவோம். அவர்களுக்கு இறைவன் நேர்வழி காட்டட்டும்..

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
  23. சகோதரர் அய்யூப் (அந்நியன் 2)

    வ அலைக்கும் ஸலாம்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  24. சகோதரர் s.jaffer.கான்,

    ///Entha pathivukum ' - ' vote'ah?!///

    இதையெல்லாம் கண்டுக்காதிங்க...

    தங்களின் துவாவிற்கு மிக்க நன்றி...

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  25. சகோதரர் அப்துல் காதர்,

    வ அலைக்கும் ஸலாம்,

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி..

    வஸ்ஸலாம்...

    ReplyDelete
  26. சகோதரர் ரியாஸ்,
    சகோதரர் சுல்தான்,

    வருகைக்கும் துவாவிற்கும் நன்றி..

    ReplyDelete
  27. அன்புள்ள எதிர் குரல் வாசகர்களே அகில உலக அருட்கொடையின் வாழ்வின் சுவைகள் அறியாதது அறியாமையே இந்த பதிவுக்கு ஓட்டு வேண்டவே வேண்டாம்!


    நாத்திகம் பேசும் தோழமைக்கு சில சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை ஆசிக் அஹமது பதிவுகள் தரலாம் ப்ளாக்கர் பதிவுகளில்
    அவசியம் படிக்க வேண்டிய அந்த பதிவுகள் நமது வாசகர்களுக்கும் பயனுல்லதாக இருக்கும்.அந்த வரிசையில் http://www.ethirkkural.com/
    பதிவுகள்அனைத்தையும் இந்த ஒரே பதிவில் நீங்கள் கண்டு கொள்ளவும் படிக்கவும் பதிவிடுகிறேன்.
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம்
    http://www.kaleelsms.com/2011/12/httpwwwethirkkuralcom.html

    எனது வலையில் அகிலத்தின் அருள் கொடையான அல்லாஹ்வின் தூதர் பற்றிய ஒரு தொடர் கட்டுரையை எனது என்ன ஓட்டத்தில் பதிந்து இருக்கிறேன் படியுங்களேன் http://www.kaleelsms.com/search/label/%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D

    ReplyDelete
  28. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் kaleel,

    அல்ஹம்துலில்லாஹ்..நான் கூட என்னுடைய பதிவுகளை இந்த அளவிற்கு மெனக்கெட்டு தொகுத்ததில்லை சகோதரர்...பார்க்கும்போதே மனதில் உற்சாகம் பொங்குகின்றது.

    மிக அழகான, இறைவனுக்காக மட்டுமே என்னை விரும்பகூடிய உங்களை போன்ற சகோதரர்கள் கிடைத்தத்திற்காக இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்...

    தங்களின் மேலான இந்த பணிக்கு தக்க நற்கூலியை இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  29. avar ivar entru bathivu seyvathai thavirthu vittu avarkal ivarkal ena ghanniyamaaha bathivu seythaal innum arumaiyaaka irukkum vaazthukkal

    ReplyDelete
  30. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்டவைகள் இக்காலத்துக்கு எப்படி பொருந்தும்?
    நீங்கள் உங்கள் மருமகளை திருமணம் புரிவீர்களா?
    அல்லது 6 வயது குழந்தயைதான் மணம் புரிவீர்களா?
    அல்லது உங்கள் வீட்டில் மனித அடிமைகளை வைதுக்கொண்டிருக்கிரீர்களா?
    மேற்கண்டவைகள் எப்படி இக்காலத்துக்கு பொருந்தாதோ அதுபோல்தான் நீங்கள் சொல்லும் அக்காலத்து வழிமுறைகள் இக்காலத்துக்கு ஒத்து வராது.

    ReplyDelete
  31. சகோதரர் அனானி,

    உங்கள் மீது அமைதி நிலவுவதாக..ஆமீன்..

    //1500 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லப்பட்டவைகள் இக்காலத்துக்கு எப்படி பொருந்தும்?//

    ஏன் பொருந்தாது. இஸ்லாம் உங்கள் முன்னேற்றத்தை தடுத்து விட்டதா. நிலையான இஸ்லாமிய ஆட்சியை கொண்டுள்ள நாடுகள் வளமாக தானே இருக்கின்றது. தொழில்நுட்பத்தில் சிறந்தவகைகலாக தானே இருக்கின்றன? இஸ்லாம் எந்த வகையில் முன்னேற்றத்தை தடை செய்தது?. தனி மனித ஒழுக்கம் குறித்து இஸ்லாம் தெளிவாக பேசுகின்றது. இவை இக்காலத்திற்கு சரி வராது என்று நீங்கள் கருதினால் அது உங்கள் பார்வையே ஒழிய இஸ்லாமின் தவறு கிடையாது.

    பலமுறை பலரால் பதில் சொன்ன கேள்விகளையே திரும்ப கேட்டிருக்கிண்றீர்கள்..

    //நீங்கள் உங்கள் மருமகளை திருமணம் புரிவீர்களா?// - இது போன்ற கேள்விகளை கேட்கும் போது சற்றே தெளிவாக கேளுங்கள். வளர்ப்பு மகனை உங்கள் சொந்த மகனாக கருத முடியாது என்று குர்ஆன் தெளிவாக அறிவிக்கின்றது.

    //அல்லது 6 வயது குழந்தயைதான் மணம் புரிவீர்களா?// - ஆயிஷா (ரலி) அவர்களது திருமண விளக்கம் குறித்து இங்கே பாருங்கள்.

    //அல்லது உங்கள் வீட்டில் மனித அடிமைகளை வைதுக்கொண்டிருக்கிரீர்களா?//

    உண்மையாகவே உங்களுக்கு இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் http://onlinepj.com இந்த தளத்திற்கு சென்று உங்கள் கேள்விகளுக்காக பதில்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

    இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் மார்க்கம். இதற்கு இதுவரை பங்கம் வந்ததில்லை. இனியும் வராது.

    நன்றி..

    ReplyDelete
  32. Thiruvalluvar is far better than Nabi. He didnt married 9 yrs girl and etc.,

    ReplyDelete