Wednesday, February 2, 2011

எகிப்து புரட்சி - அமெரிக்கா - இஸ்ரேல் - முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்



------------------
எகிப்து புரட்சி குறித்த தகவல்கள் இந்த பதிவின் இறுதியில் update செய்யப்படுகின்றன.
------------------

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
  
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

எகிப்து - உலக நாடுகள் அனைத்தின் பார்வையும் இன்று இந்த நாட்டின் மீது தான் திரும்பியுள்ளது. சீனா தொடங்கி அமெரிக்கா வரை பல அரசாங்கங்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றது எகிப்தில் நடக்கும் மக்கள் போராட்டம். 

இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில்,

  • எதனால் இந்த புரட்சி? 
  • புரட்சி எப்படி தொடங்கியது?
  • இதன் பின்னணியில் யார் இருப்பதாக அரசு குற்றஞ்சாட்டியிருக்கின்றது?
  • மக்கள் போராட்டத்தின் போது நடந்த சம்பவங்கள்.
  • எகிப்து அதிபர் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?
  • எதுமாதிரியான ஆட்சி அடுத்து அமையலாம்?
  • இந்த புரட்சி குறித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதிகம் கவலைப்படுவதற்கு என்ன காரணம்?     
என்று இந்த புரட்சி குறித்து விரிவாக பார்க்கவிருக்கின்றோம்.


எதற்காக இந்த புரட்சி? 

இது நம்மில் பெரும்பாலானோர் அறிந்த விசயம்தான்.

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், அரசாங்கத்தில் ஊழல் மலிந்து கிடப்பது என்று இவை அனைத்திற்கும் எதிரான போராட்டம் தான் இந்த புரட்சி. எகிப்து மக்களை பொறுத்தவரை இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டுமென்றால் தற்போதைய அதிபர் முபாரக் பதவி விலகி புதிய அரசு மக்களால் தேர்ந்தெடுக்க படவேண்டும். 

(மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாமல், அதிபர் முபாரக் தன் மகனை அடுத்த அதிபராக்க முயன்றதும் ஒரு காரணம்)

கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை ஆண்டு வரும் முபாரக் பதவி விலக சம்மதிக்கவில்லை. தற்போதைய அமைச்சரவையை கலைத்து விட்ட முபாரக், புதிய துணை அதிபரையும், பிரதமரையும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீர்திருத்தமும் நடக்கும் என்று அறிவித்துள்ளார். 

ஆனால் அதிபரின் இந்த நடவடிக்கைகள் எகிப்து மக்களிடையே எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் கூடுதலாகவே போராட்டம் வலுவடைந்து வருகின்றது. முபாரக் பதவி விலகல் மட்டுமே அவர்கள் எதிர்ப்பார்ப்பது. அதற்கு குறைந்து எதையும் ஏற்க அவர்கள் தயாரில்லை. 


எப்படி தொடங்கியது போராட்டம்?

துனிசிய புரட்சி புத்துணர்ச்சியை கொடுக்க, சமூக தளங்களான ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் ஆரம்பித்த அரசுக்கு எதிரான பிரச்சாரம் நாளடைவில் வலுவடைந்து, அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வீரியம் கொண்டு எழ, கடந்த மாதம் 25 ஆம் தேதி, எகிப்து தலைநகர் கெய்ரோவின் வீதிகளில் இறங்கி போராட துவங்கினர் மக்கள்.      

ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகங்களை நோக்கி பேரணி சென்ற மக்கள், நாட்டின் தேசிய தொலைக்காட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட தொடங்கினர். கெய்ரோவின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கத்தில் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். சில மணி நேர அமைதிக்கு பிறகு, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் ஏற்பட, கண்ணீர் புகை குண்டுகளை உபயோகப்படுத்த துவங்கியது காவல் துறை. 



நாட்டின் தலைநகரில் தொடங்கிய போராட்டம் பின்பு மற்ற நகரங்களுக்கும் வேகமாக பரவ தொடங்கியது. அலெக்ஸ்சான்ட்ரியா, மன்சூரா, அஸ்வான் என பல நகரங்களுக்கும் பரவிய போராட்டம் எகிப்து அரசை திக்குமுக்காட வைத்தது. 

புரட்சிக்கு பின்னணியில் யார் இருக்கின்றார்கள்?

நாடு முழுவதும் போராட்டங்கள் தொடங்கிய சில மணி நேரங்களில், இதற்கெல்லாம் காரணம் "முஸ்லிம் சகோதரத்துவ" கட்சிதான் (Muslim Brotherhood) என்று குற்றஞ்சாட்டியது அரசு.  

யார் இந்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர்?

எகிப்து அரசியலை உற்று நோக்கி கொண்டிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சத்தை இந்த கட்சி தான் உருவாக்கியிருக்கின்றது. முபாரக் வீழ்ந்து இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால்? 

எகிப்திற்கான முன்னாள் இஸ்ரேலிய தூதர் எலி ஷேக்டு (Eli Shaked) சில தினங்களுக்கு முன் எகிப்து புரட்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், எகிப்தில் தேர்தல் நடந்தால், முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
  
எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியான இவர்களைப் பற்றி முதலில் பார்த்து விடுவோம். 

1928 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்சியின் குறிக்கோள், எகிப்தில் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டுமென்பதே ஆகும். வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ள இந்த அமைப்பு அரசியல் ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், மதம் சார்ந்த ஒரு இயக்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது .  

மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவை இந்த கட்சி பெற காரணம், இவர்களின் சமுதாய பணிகள் தான். 2005 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த கட்சி போட்டியிட தடை இருந்தாலும், இதன் உறுப்பினர்கள் சுயேட்சையாக நின்று 20% இடங்களை கைப்பற்றினார்கள் (இவ்வளவுக்கும் அந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது).

பிறகு ஒரு ஆவணத்தை வெளியிட்டு தன்னுடைய செல்வாக்கை பெருமளவு இழந்தது இந்த அமைப்பு. அதாவது, 2007 ஆம் ஆண்டு, தங்களின் அரசியல் நிலைபாடு குறித்து இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில், அதிபராக ஒரு பெண்ணையோ அல்லது கிருத்துவரையோ அனுமதிக்க போவதில்லை என்ற தெரிவித்திருந்தனர். எகிப்து மக்கள் பெருமளவில் இந்த கருத்தை எதிர்த்தனர்.

கிருத்துவர்கள் மீது இந்த அமைப்பினருக்கு எந்தவொரு பாரபட்சமும் இல்லை. இதனை நீண்ட காலமாக இவர்கள் தெளிவுபடுத்தி தான் வந்திருக்கின்றனர். ஆனால் ஒரு கிருத்துவரை அதிபராக்க முடியாது என்பது அவர்களது அரசியல் நிலைபாடாக இருந்தது. எதிர்ப்பு அதிகளவில் கிளம்ப, தங்களின் இந்த ஆவணம் ஒரு முன்னோட்டம் மட்டுமே ஒழிய இறுதி முடிவு கிடையாது என்று கூறி தன்னுடைய கருத்தை திரும்ப பெற்று கொண்டது இந்த அமைப்பு.

வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம். அதாவது, எகிப்தில் நடந்த அரசியல் பிரச்சனைகளுக்கு பின்னணியில் இவர்கள் இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே வரலாறு முழுக்க இந்த கட்சியினர் எகிப்திய அரசாங்கத்தால் அதிக அளவில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அரசுக்கு எதிராக ஒரு பிரச்சனை நாட்டில் எழுகின்றது என்றால், அரசாங்கத்தின் சந்தேக கண்கள் முதலில் விழுவது இவர்கள் மேலாகத்தான் இருக்கும்.

அந்த காரணத்தினாலேயே தற்போதைய புரட்சிக்கும் இந்த இயக்கத்தினர்தான் தான் காரணம் என்று அரசு குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டில் உண்மையிருக்கின்றதா? 

இல்லையென்று மறுக்கின்றனர் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர். இந்த புரட்சிக்கு முதலில் விதை போட்டவர்கள் சமூக ஆர்வலர்கள் என்றும், பின்னர் தான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கின்றன ஊடகங்கள்.    

போராட்டத்தில் தாமதமாக குதித்தனர் என்றாலும், இவர்கள் மக்களுடன் அணி சேர்ந்த பிறகு போராட்டம் மிக வலிமையானதாக மாற தொடங்கியது. சில நாட்களில் இவர்களே பெரும்பாமையினராக இருக்கக்கூடிய அளவு போராட்டம் மாறியது.



அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் வீடு வீடாக சென்று மக்களை அழைத்து அடுத்த நாளும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் பார்த்து கொண்டனர்.

இவர்கள் ஆதரவால் மிகப்பெரிய அளவில் பல நகரங்களிலும் மக்கள் பேரணி நடத்த ஆரம்பித்தனர். இந்த இயக்கத்தின் தலைவர்கள் தொடர்ச்சியாக கைதானார்கள்.

ஜனவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்மா தொழுகைக்கு பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டகாரர்களுக்கும், போலிசாருக்கும் இடையே நடைப்பெற்ற சண்டையில் இதுவரை சுமார் 125 பேர் வரை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

புரட்சி கால நிலவரம்:

கெய்ரோ நகரின் முக்கிய சந்திப்பான தஹ்ரிர் சதுக்கம் வரலாற்று முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்திருக்கின்றது. அங்கேயே தொழுகின்றனர், போராடுகின்றனர்.   



அதிபர் முபாரக் பதவி விலகும்வரை இந்த சதுக்கத்தை விட்டு விலகப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர் போராட்டகாரர்கள்.

அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி கடந்த 27 ஆம் தேதி எகிப்து திரும்பி போராட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டார்.

போராட்டம் தொடங்கிய சில நாட்களுக்கு பிறகு போலீசார் பலரை காணவில்லை. அவர்களும் போராட்டத்தில்  குதித்திருக்கலாம் என்று அல்ஜசீரா ஊடகம் தெரிவிக்கின்றது.

சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்.

இராணுவத்தினர் மக்களுடன் ஒத்துழைப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது பணிக்கு திரும்பியுள்ள போலிசாரின் நடவடிக்கை எப்படி இருக்குமென்று தெரியவில்லை.

மக்களின் போராட்டம் சட்டத்திற்கு உட்பட்டது தான் என்றும், தங்கள் எண்ணங்களை அமைதியான முறையில் வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உண்டென்றும், மக்களை நோக்கி எவ்விதமான தாக்குதலையும் நிகழ்த்த மாட்டோமென்றும் எகிப்து இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதி அளித்துள்ளது. மேலும், மக்களை காப்பதே இராணுவத்தின் முதல் பொறுப்பு என்றும் கூறியுள்ளது. இராணுவத்தின் ஆதரவும் மக்கள் பக்கம் இருப்பதால் முபாரக் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சுமார் 125 பேர் இந்த புரட்சியின் போது இறந்திருப்பதாக கூறப்பட்டாலும், தற்போதைய நிலைமை சுமூகமாகவே இருக்கின்றது. ராணுவத்தினர், காவல் துறையினர் மற்றும் மக்கள் என அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி கொள்ளும் காட்சிகளும் நடந்தேறுகின்றன.



இந்த புரட்சி குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அதிக அளவில் கவலைப்பட என்ன காரணம்?

அமெரிக்காவை பொறுத்தவரை, மற்றொரு ஈரானாக எகிப்து ஆகிவிடக்கூடாது என்ற பயம். ஏனென்றால், 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமிய புரட்சி பல பாடங்களை அமெரிக்காவிற்கு புகட்டியுள்ளது. அதாவது, புரட்சிக்கு முன்பு இருந்த ஈரானிய அரசாங்கம் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டியது. ஆனால் புரட்சிக்கு பின்னரான அரசாங்கம் இன்று வரை அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வருகின்றது.

அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்ட்டர். புரட்சிக்கு பின்பான அரசாங்கமும் தனக்கு ஆதரவாக இருக்குமென்று கார்ட்டர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் இறைவன் நாடியதோ வேறொன்றை. அன்று கார்ட்டருக்கு ஏற்பட்ட நிலைமை இன்று ஒபாமாவுக்கு ஏற்பட்டிட கூடாதென்பதே அமெரிக்காவின் அச்சம். ஏனென்றால் தற்போதைய அதிபர் முபாரக் அமெரிக்க ஆதரவாளர்.

அதனாலேயே, உலகம் முழுவதும் முபாரக் பதவி விலக வேண்டுமென்று குரல்கள் ஒலித்து கொண்டிருக்க, அமெரிக்க அரசாங்கமோ, முபாரக் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று கூறி கொண்டிருந்தது.

இஸ்ரேல் நிலைமையோ இன்னும் சற்று ஆழமாக கவனிக்கப்பட வேண்டியது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹு வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்,  ஈரானைப் போல எகிப்தும் ஆகலாம் என்று.

அமெரிக்காவை விட இஸ்ரேல் அதிகமாக கவலைப்பட காரணம் தற்போதைய பிரச்சனையால் தன்னுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று நினைப்பதால் தான். கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்ரேலும், எகிப்தும் நட்பு பாராட்டி வருகின்றன (இதனை முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினர் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றனர்)

எகிப்தினுடனான நட்பு காலங்களில் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்ரேல். தன்னுடைய எல்லைக்கோட்டை எகிப்துடன் பகிர்ந்து கொண்டிருக்கும் இஸ்ரேல், இந்த அமைதி காலங்களில் பெருமளவு செல்வத்தை ராணுவத்துக்கு செலவழிக்காமல் நாட்டின் வளர்ச்சிக்கு செலவழித்திருக்கின்றது.

எகிப்துடனான போர்க்காலங்களில் சுமார் 23% வருவாயை ராணுவத்துக்கு செலவழித்த இஸ்ரேல், எகிப்துடனான அமைதிக்கு பிறகு 9% மட்டுமே தன் ராணுவத்துக்கு செலவிடுகின்றது. அதுபோல, எகிப்தினுடனான பகை காலத்தில் ஆயிரக்கணக்கில் தன் படைகளை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரேல், இப்போது சில நூறுகளில் மட்டுமே வீரர்களை நிறுத்தி வைத்திருக்கின்றது.

ஆக, எகிப்து என்னும் பெரிய நாடு அவர்களுடன் நட்புடன் இருப்பது என்றுமே அவர்களுக்கு நல்லது. இதற்கு இந்த புரட்சி மூலம் பங்கம் வந்து விடுமோ என்று தான் அஞ்சுகின்றது இஸ்ரேல். அவர்களுடைய சமீபத்திய அறிக்கைகள் அவர்களது கவலையை நன்றாகவே பிரதிபலிக்கின்றன.

ஆட்சி மாறுவது அவர்களுக்கு பிரச்சனையில்லை. எதுமாதிரியான புதிய அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தடுக்க போகின்றார்கள் என்பதுதான் இப்போது அவர்கள் முன்னால் இருக்கும் மிகப்பெரிய கவலை. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது அவர்களது தற்போதைய எண்ணமாக இருந்தாலும் இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

புரட்சிக்கு பின் என்ன நடக்கும்?

அதிபர் முபாரக் முன்மொழிந்திருக்கும் எந்தவொரு சீர்த்திருத்த நடவடிக்கையையும் ஏற்றுகொள்ள தற்போதைய நிலையில் மக்கள் தயாரில்லை. அதனாலேயே இன்னும் மிகப்பெரிய போராட்டத்தை நேற்று நடத்தி காட்டினர் மக்கள்.  மொத்ததில், முபாரக் பதவி விலகுவது மட்டுமே தீர்வாக அமையும்.



அப்படி ஒருவேளை அதிபர் முபாரக் பதவி விலகினால், இடைக்கால அரசு அமையலாம். அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவர் முஹம்மது அல்-பரேடி அதிபராக பொறுப்பேற்கலாம்.

பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

எதுமாதிரியான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பர்?

எகிப்தின் மக்கள் தொகையில் சுமார் 10% கிருத்துவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் (95%) காப்டிக் கிருத்துவர்கள் (இவர்கள் கிருத்துமஸ்சை ஜனவரி 7 ஆம் தேதி கொண்டாடும் பழக்கத்தை கொண்டவர்கள். காப்டிக் என்றால் "எகிப்திய" என்று அர்த்தம் வரும்). காலங்காலமாக எகிப்தில் வசித்து வருபவர்கள். இன்றைய எகிப்து முஸ்லிம்களின் முன்னோர்கள் காப்டிக் கிருத்துவர்களாக இருந்தவர்கள் தான்.

தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள்.

கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.

ஆக, கிருத்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட எந்தவொரு கட்சியையும் ஆட்சியில் உட்கார வைக்க மாட்டார்கள் எகிப்து மக்கள். அதுமட்டுமல்லாமல், இப்போது நடப்பது மக்கள் புரட்சி. இதில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் என்று அனைவரும் ஒற்றுமையுடன் பங்கேற்று கொண்டிருக்கின்றனர்.

மொத்தத்தில், கிருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கட்சிக்கே மக்களின் ஒட்டு விழும்.

எகிப்து பிரச்சனையின் முழு சாராம்சமும் இவைதான். தற்போதைய சூழ்நிலையில், எகிப்து மக்களின் போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது. அதிபர் முபாரக்கின் பதவி விலகல் தான் அது.

(இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் (feb 2, 2011), அதிபர் முபாரக் தனது பதவி காலம் முடியும் வரை (செப்டம்பர், 2011) பதவியில் நீடிக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டுமென்றும் போராட்டகாரர்கள் தெரிவித்து உள்ளனர்.

Update: 

04/02/2011 - கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், முபாரக் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட கூடியவர்களுக்குமிடையே நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, இன்று மிகப்பெரிய போராட்டத்துக்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். "முபாரக் வெளியேறும் நாள்" என்று அழைக்கப்படும் இந்த நாள் உலகளவில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

எகிப்து மக்கள் அதிசயக்கும் விதமாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது அரசு. ஆனால் இதனை அந்த இயக்கத்தினர் மறுத்து விட்டனர். முபாரக் முதலில் வெளியேற வேண்டுமென்றும், பின்பு அனைத்து கட்சிகள் இடம்பெறக்கூடிய தற்காலிய அரசை நியமிக்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது அந்த கட்சி.

மில்லியன் கணக்கான மக்கள் திரண்டிருப்பதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடப்பதாகவும் அல் அரேபியா ஊடகம் தெரிவித்துள்ளது.

அதிபர் மாளிகையை நோக்கி பேரணி நடக்கப்போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜசீராவின் கெய்ரோ அலுவலகம் தாக்கப்பட்டு கருவிகள் உடைப்பட்டுள்ளதாக அந்த தளம் தெரிவித்துள்ளது.

05/02/2011 - பனிரெண்டாவது நாளாக போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

அதிபர் முபாரக் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சியின் தலைமை உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றார்கள். கட்சியின் புதிய பொதுச்செயலாளராக ஹோசம் பட்ரவி நியமிக்கப்படுள்ளார். இவர், அதிபர் முபாரக்கின் மகன் கமல் முபாரக் வகித்து வந்த கட்சியின் அரசியல் பிரிவு தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்கின்றார்.

06/02/2011 - பதிமூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது.

ஆளும் கட்சியின் தலைமை உறுப்பினர்களின் பதவி விலகல் ஆர்ப்பாட்டகாரர்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கின்றது.

திருப்புமுனையாக, முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பேச்சு வார்த்தைக்கு சம்மதித்து உள்ளது. மக்களின் உணர்வுகளை அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவே இந்த நடவடிக்கை என்று அது தெரிவித்துள்ளது

அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட கூட்டு குழுவை உருவாக்குவதென பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக எகிப்து தேசிய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

முபாரக் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும், அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும், இந்த அரசால் அரசியல் உள்நோக்கோடு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட தங்களுடைய இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை என முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்றும் லட்சகணக்கானோர் தஹ்ரிர் சதுக்கத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இறந்தவர்களுக்காக சிறப்பு தொழுகையை முஸ்லிம்களும், சிறப்பு பிரார்த்தனையை கிருத்துவர்களும் அங்கே மேற்கொண்டனர்.

08/02/2011 - பதினைந்தாம் நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதே நேரம் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகின்றது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வை அறிவித்துள்ளது அரசு.

09/02/2011 - நேற்று மதியத்திலிருந்து போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளன. நாடு திரும்பி போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வெளிநாடுவாழ் எகிப்தியர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலமாக செய்தி பரப்பப்படுகின்றது. எகிப்தியர்கள் பலர் நாடு திரும்பி போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். மற்றுமொரு பிரமாண்ட பேரணியை வரும் வெள்ளிக்கிழமை நடத்தி  காட்ட மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

10/02/2011 - பதினேழாவது நாளாக போராட்டம் தொடர்கின்றது. அதிபர் முபாரக் இன்று பதவி விலகுவார் என்ற செய்தி பரவுவதால் பரபரப்பு அதிகரித்திருக்கின்றது.

21:00 local - இன்னும் ஒரு  மணி நேரத்தில் முபாரக் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கின்றார். மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி இருக்கின்றது. 

லட்சகணக்கான மக்கள் அனைத்து நகரங்களிலும் திரண்டிருக்கின்றார்கள். அல்லாஹு அக்பர் என்ற கோஷம் விண்ணை பிளக்கின்றது.

பதவி விலக போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார் முபாரக்.

11/02/2011 - முபாரக்கின் நேற்றைய பேச்சு மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று ஜும்மாஹ் தொழுகைக்கு பிறகு பிரமாண்ட ஆர்பாட்டத்திற்கு மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்

6:03 PM (local) - முபாரக் பதவி விலகியதாக துணை அதிபர் அறிவித்தார்)

இன்ஷா அல்லாஹ், துவா செய்வோம்.....

  • எகிப்து மக்களின் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டுமேன்று...
  • எகிப்து மக்கள் எதிர்ப்பார்க்ககூடிய நல்லாட்சி அமைய வேண்டுமென்று...
  • பொருளாதாரத்தில் எகிப்து சிறந்து விளங்கி வறுமைகள் ஒழியவேண்டுமென்று...

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

My sincere thanks to:
1. Aljazeera.
2. BBC.
3. Reuters
4. Ottawa Citizen
5. AFP

References:
1. As it happened: Egypt unrest day five - BBC, 29th January 2011. link
2. Timeline: Egypt unrest - Aljazeera, 28th Jan 2011. link
3. Mubarak names deputy, protesters defy curfew - Times of India, 30th January 2011. link
4. China restricts news, discussion of Egypt unrest - Yahoo news, 31st January 2011. link
5. Brotherhood shows strength, limits in Egypt chaos - Associated Press. link
6. Muslim Brotherhood, Egypt Opposition Party, In The Spotlight During Protests - The Huffington Post, 30th January 2011. link
7. Al Jazeera undeterred by Egypt curb - Aljazeera, 30th January 2011. link
8. History of the Muslim Brotherhood in Egypt - Wikipedia. link
9. Threat of Muslim Brotherhood in Egypt likely overblown - Examiner, 29th January 2011. link
10. Muslim Brotherhood (Egypt) - The New York Times, updated on 31 January 2011. link
11. Israel 'fears' post-Mubarak era - Aljazeera, 31st January 2011. link
12. Giant protest to kick off in Egypt - Aljazeera, 1st February 2011. link
13. What is Coptic Christianity, and what do Coptic Christians believe? - Got questions.org. link
14. Muslim Brotherhhood, Egypt - LookLex Encyclopedia. link
15. Millions of protesters rock Egypt to oust Mubarak - Al-Arabiya, 1st February 2011. link
16. Over 200,000 in Egypt square call on Mubarak to go - MSN news, 1st February 2011. link
17. Muslims protect churches - National Post, 8th January 2011. link
18. Egypt's Copts clash with police - Aljazeera, 2nd January 2011. link
19. Muslim Brotherhood Falters as Egypt Outflanks Islamists - The Wall Street Journal, 15th May 2009. link
20. Muslim Brotherwood - Wikipedia
21. Defiant Mubarak vows to finish term -  Aljazeera, 2nd February, 2011. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 






39 comments:

  1. எகிப்தில் நடந்தது சனநாயகம் என்ற பெயரில் நடந்த
    எதேச்சிகாதார அரசு தான்.அதிபர் முபாரக் 10 வருடங்களுக்கு முன் மக்கள் செல்வாக்கை அதிகம் பெற்றிருந்தார் என்பதை மறுக்க முடியாது.

    தமிழக கழக திமுக ஆட்சி மாதிரி, தன் மகன் காமல் முபாரக், மற்றும் உறவினர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததினால் மக்களின் குறிப்பாக
    இளைஞர்கள் முபாரக்கை வெறுத்தனர்.

    விரிவான அலசலுக்கு நன்றி,சகோதரா.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    சகோ அஷிக் அவர்களுக்கு
    நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் 40 க்கும் மேற்ப்பட்ட எகிப்தியார்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவர்கூட ஹிஸ்னி முபராக்கைப் பற்றி நல்லவிதமாக சொன்னதில்லை அவ்வளவு எதிர்ப்பை சம்பதித்து வைத்திருக்கிறார்.

    நல்ல பதிவு நன்றி சகோ

    ReplyDelete
  3. விரிவான அலசல். நிறைய செய்திகள். இறைவன் நல்ல மாற்றங்களைத் தந்து, அநியாயக்காரர்களின் முடிவுகள் துவங்கச் செய்யட்டும். நன்றி.

    ReplyDelete
  4. எகிப்து புரட்சியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.ஆனால் கண்டிப்பாக ஈரான் மாதிரி இருக்காது.ஈரான் ஒரு படுபிற்போக்கான ஆட்சி.அது முன்பு இருந்த ஷாக்களின் ஆட்சியை விட வேண்டுமானாலும் மேலாக இருக்கும்.ஏன்னென்றால் ஈரானின் வளர்ச்சியின் இயங்கியல் அப்படி.ஆனால் எகிப்து அப்படி கிடையாது.அது ஜனநாயகத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நாடு.மத அடிப்படைவாத்தின் காட்டுமிரண்டிகளின்சட்டங்களின் அரசுக்களை அது ஏற்றுக்கொள்ளாது.

    ReplyDelete
  5. சகோதரர் எண்ணத்துபூச்சி அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    தங்களுடைய கருத்துக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  6. சகோதரர் ஹைதர் அலி,

    வ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    முஹம்மது அல்-பரேடி கூட அமெரிக்க ஆதரவாளர் தான். அதனால் பொது தேர்தலில் அவருக்கு ஆதரவு இருக்குமா என்று தெரியவில்லை. இறைவனே எல்லாம் அறிந்தவன்.

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

    ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ.

    ReplyDelete
  7. சகோதரி ஹுசைனம்மா அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    -----
    இறைவன் நல்ல மாற்றங்களைத் தந்து, அநியாயக்காரர்களின் முடிவுகள் துவங்கச் செய்யட்டும்
    -----

    ஆமீன்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  8. சகோதரர் அனானி,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைய இறைவன் அருள் புரியட்டும்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. ரூபகாந்தன்Wednesday, February 02, 2011

    எகிப்தின் புரட்சி எல்லா உலக மக்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.பொதுவாகவே புரட்சி என்பது மக்களின் மீதான அடக்குமுறை அரசுக்கு எதிராக ஒன்றுப்பட்ட மக்களின் உணர்ச்சி போராட்டத்தின் வெடிப்பே புரட்சி ஆகும்.ஆனால் அதை சில மதவாதமும்,இராணுவ சர்வதிகாரமும்,புரட்சியின் தலைமைகளைக்கைப்பற்றும்போது அதன் பாத்திரம் மாறிப்போய்விடுகிறது.அப்படி தான் ஈரானின் புரட்சியும்,ஷா மன்னனின் கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக எல்லா அமைப்புகளும் போராடினார்கள்.ஆனால் அதை மத அடிப்படைவாதத்தை முன்வைக்கும் தலைமைகள் கைப்பற்றியதால் தான் அது இஸ்லாம் புரட்சி என்று ஆனது.ஆனால் இப்படி பிற்போக்கான அரசு தான் அமையும் என்று அந்த மக்களுக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பாக அந்த அமைப்புகளை ஆதரித்திருக்க மாட்டார்கள்.எனினும் இதை ஈரானின் வளர்ச்சியின் ஜனநாயகத்தின் தன்மைகளை வைத்து தான் சொல்லவேண்டும்.ஈரான் ஷாக்களின் ஆட்சியை விட பொருளாதாரரீதியில் மேம்போக்காக வேண்டுமானாலும் இப்பொழுது இருக்கலாம்.ஆனால் இது ஒரு இடைநிலை ஆட்சிதான்.ஆனால் எகிப்து ஈரானைப்போல் ஒரு ஆட்சியை ஏற்றுக்கொள்ளாது.
    மக்கள் சுதந்திரத்தைதான் விரும்புகிறார்கள்.அதற்காக தான் போராடுகிறார்கள்.அவர்கள் ஒருபோதும் தன்னை அடக்கிவைக்கிற,அடிமைப்படுத்துகிற சமுகத்தை விரும்பமாட்டார்கள். எகிப்து இன்றைய சூழலில் அது எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு மக்கள் புரட்சி எனபதில் சந்தேகமில்லை.இது ஐரோப்பா மக்களுக்கு விவேகத்தைக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    மிக மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள் சகோ.ஆஷிக். மிக்க நன்றி. நான் தற்போது இதே விஷயத்தைத்தான் எழுத எண்ணி இருந்தேன். //சூயஸ் கோப்பை இறுதிப்போட்டி: ஏகாதிபத்யம் Vs.எகிப்திய மக்கள்//--தலைப்பிலேயே உள்ளடக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    எகிப்திய மக்கள் புரட்சியை எதிர்கொள்ள அமெரிககா, எகிப்தின் சினாய் தீவில் பன்னாட்டு படையினருக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை ரெஜிமண்ட் அந்நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எகிப்திய மக்கள் புரட்சியை எதிர்கொள்ள இஸ்ரேல் ஆயுதங்களை எகிப்திற்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ReplyDelete
  11. தொடர்ச்சி...

    எகிப்து பற்றி பல மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலும் கவலைப்படுவது எதற்கெனில் சூயஸ் கால்வாய்க்காத்தான்.

    அது எகிப்தில் இருந்தாலும், எகிப்தின் கையில்-கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதே இவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உலக ஆளுமைக்கும் ரொம்ப ரொம்ப முக்கியம்.

    அதனை பாதுகாப்பதற்காகத்தான் எகிப்தின் சினாய் தீவில் பன்னாட்டு படையினரும், கண்காணிப்பாளர்களும் 1956-முதல் ஐநா அமைதிப்படை என்ற போர்வையில் அங்கே முகாமிட்டுள்ளனர்.

    1956-ஆம் வருட 'சூயஸ் கோப்பை அரை இறுதிப்போட்டியில்' ஜமால் அப்துல் நாசரின் எகிப்திய அரசு ஐரோப்பிய-அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் தோற்றுப்போனது.

    பிற்காலத்தில் ஏகாதிபத்ய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பிரிட்டனை தூக்கி விட்டு அமெரிக்கா அமர்ந்து கொண்டது. ஏகாதிபத்திய அணியில் எகிப்தையும் பந்து பொருக்கி போடும் ஒரு எடுபிடியாக சேர்த்துக்கொண்டது. இது எகிப்திய மக்களுக்கு அப்போதிருந்தே பிடிக்கவில்லை.

    அதனால்தான் எகிப்திய ஜனநாயகம் 'கைப்பற்றப்பட்டு' தொடர்ந்து முப்பது வருடங்களாய் பந்து பொருக்கிப்போடும் எடுபிடி சிறுவனாக(அதாவது எகிப்திய அதிபராக) ஹோஸ்னி முபாரக் ஏகாதிபத்திய அணியின் கேப்டனால் காப்பாற்றப்பட்டு வருகிறார்.

    ReplyDelete
  12. சகோதரர் ரூபகாந்தன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    எகிப்து புரட்சி சர்வதேச அளவில் அதிக கவனத்தை பெற்றுள்ளதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதில் சம்பந்தபட்டுள்ளதே காரணம். அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இப்போது இருக்ககூடிய தலையாய கவலை அங்கு அப்படிப்பட்ட அரசாங்கம் அமையப்போகின்றது என்பதில் இல்லை. அது எப்படிப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்குமா என்பது தான் அவர்களது கடமை. சிறிது காலத்திற்கு முன் எகிப்தில் இஸ்ரேலுக்கு எதிரான மிகப்பெரிய பேரணியை நடத்தினர் மக்கள். இப்போது புரட்சியும் வெடித்திருப்பதால் இரு நாடுகளும் கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்திருக்கின்றன.

    ஒருவேளை சுதந்திரமான தேர்தல் நடந்தால் இஸ்ரேல் கணக்கு பண்ணி வைத்திருப்பது போல அவர்களுக்கு எதிரான அரசாங்கம் அமையலாம். இதுதான் இப்போது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் உள்ள பெரிய தலைவலி.

    நன்றி..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  13. சகோதரர் முஹம்மது ஆஷிக்,

    வ அலைக்கும் ஸலாம்,

    அல்ஹம்துலில்லாஹ்...பல தகவல்களை தந்துள்ளீர்கள்..நன்றி. பந்து பொருக்கி போடும் சிறுவர்கள் தங்கள் நிலை உணர்ந்து திருந்தட்டும், ஏகாபியத்தை எதிர்த்து இனியாவது போராடட்டும். அதற்கு இறைவன் அருள் புரியட்டும்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  14. அருமையான அலசல்...மிக்க நன்றி உங்களின் இந்த பதிவிற்க்கு..

    ReplyDelete
  15. சகோதரர் நந்தா ஆண்டாள்மகன்,

    அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)

    உங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  16. Aslamualaikkum
    very useful information sir

    ReplyDelete
  17. Good Work down by u. Its informative.

    ReplyDelete
  18. Dear Idroos,

    Wa alaikum salaam...

    thanks for your comment. all praise due to Allah(swt)...

    Wassalaam,

    Your brother,
    aashiq ahamed a

    ReplyDelete
  19. Dear brother Anony,

    Assalaamu Alaikum (may peace and blessings of the Almighty be upon you)

    Thanks for your comment and visit.

    thanks and take care

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  20. ரூபகாந்தனுடைய கருத்துக்கள் மிக சிறந்த நியயமானவை. ஆனால் பிற்போக்கான மத அடிப்படைவாதத்தை முன்வைக்கும் முஸ்லிம்கள் இதை ஏற்பார்காளா?

    ReplyDelete
  21. சகோதரர் thequickfox,

    அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானம் நிலவுவதாக)

    சகோதரர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், முஸ்லிம்கள் குரான் மற்றும் நபிவழி படி வாழ விரும்புபவர்கள். இந்த இரண்டையும் முழுமையாக பின்பற்றுவதற்கு பெயர் பிற்போக்கு என்றோ, அல்லது அடிப்படைவாதம் என்றோ, அல்லது மிதவாதம் என்றோ எப்படி வேண்டுமென்றாலும் நினைத்து கொள்ளலாம். முஸ்லிம்களை நோக்கி அடிப்படைவாதி, பிற்போக்குவாதி என்பதால் அவர்கள் வருத்தப்படவும் போவதில்லை, அல்லது மிதவாதி என்றால் சந்தோசப்படவும் போவதில்லை.

    நபியையும், குரானையும் முழுமையாக பின்பற்றி நடக்கும் அரசாங்கம் அடுத்தவருக்கு நன்மை பயப்பதாக, முன்னேற்றம் உடையதாகத்தான் இருக்குமே ஒழிய பாதகமான ஒன்றாக இருக்காது. முஸ்லிம்கள் இஸ்லாமிய ஷரியத் படி தான் அரசமைய வேண்டுமென்று நினைப்பார், அதில் எந்த சந்தேகமும் வேண்டும். அந்த ஷரியத் மாற்று நம்பிக்கை உள்ளவர்களையும் நிம்மதியாக வாழ வைக்கும். சிந்தித்து, ஆராய்ந்து பார்க்க முன்வாருங்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அமைதியையும், மகிழ்ச்சியையும் தந்தருள்வானாக..ஆமீன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அலைக்கும்...
    அருமையாக நன்கு ஆராய்ந்து அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் அமைந்து உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. நன்றாகவும் விரிவாகவும் எழுதியிருக்கிறீர்கள். என்னோடு பணி புரியும் சக ஊழியரான எகிப்தியரும் 'முஸ்லிம் பிரதர்ஹுட்' ஆட்சியைப் பிடித்தால் நல்லது என்கிறார். பார்ப்போம் இறைவனின் நாட்டம் எப்படி என்று.

    ReplyDelete
  24. Hello,

    Before discussing about Evolution, Tunisia, Egypt, Somalia etc, etc, Why dont you explain this Buraq puruda???

    http://senkodi.wordpress.com/2011/02/01/space-bhuraaq/

    Whatz ur answer??

    ReplyDelete
  25. சகோதரர் இளம்தூயவன் அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம்,

    தங்களுடைய பாராட்டுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  26. சகோதரர் சுவனப்பிரியன்,

    அஸ்ஸலாமு அலைக்கும்.

    சுதந்திர தேர்தல் நடத்தப்பட்டால் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தான் வெற்றி பெரும் என்று இஸ்ரேல் கணித்துள்ளது. பார்ப்போம், இறைவன் என்ன நாடுகிறான் என்று.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  27. Dear Brother Anony,

    Assalaamu Alaikum,

    Imm...the issues raised on the link you provided were raised by beleivers and non-beleivers during prophet's period also. So this is not a new attack on Islam.

    From Islamicity,

    --------
    It may be recalled that according to authentic reports when the Prophet narrated the incidents of this extraordinary journey the following day to the people in Makka, the unbelievers found the whole narration utterly amusing. (Muslim, K, al-Iman, 'Bab Dhikr al-Masih ibn Maryam' - Ed.) In fact, even the faith of some Muslims was shaken because of the highly extraordinary nature of the account. (See Ibn Hisham, Sirah , vol. I, p.398 and al-Qurtubi, comments on verse 1 of the surah - Ed.)
    -------

    also see this,

    Isra and Miraj: The Miraculous Night Journey

    So brother, for every issue you bring on thinking that it will attack Islam, we have answers (insha allah). It is pity that still you don't understand this fact.

    Islam has got all the answers to make the un-prejudiced people to accept it. May Allah(swt) make you to be a one in that league...

    May Allah(swt) bless you and your family with happiness and peace..

    Thanks and take care,

    Your brother,
    Aashiq Ahamed A

    ReplyDelete
  28. You do not have any answer for the questions i have posted so far??

    Dont give links. If you have answer provide.

    For Evolution, there are so many proofs. Unprejudiced persons can see that and understand that.

    ReplyDelete
  29. அஸ் ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ ஆஷிக்,

    நல்ல விரிவான பதிவு. அல்ஹம்துலில்லாஹ். ஆனால் இங்கு உள்ள பலரும் அஞ்சுவது என்னவெனில், இதில் இஸ்ரேலின் பங்கும் உண்டோ என்பதுதான். ஏனெனில் எகிப்தின் புரட்சி தோன்றியது சகோ.மர்ஹூம்.முஹம்மதுவின் தற்கொலையால் மட்டுமல்ல, மாறாக அதன் முன் விக்கிலீக்ஸ் வெளியிட்ட, முபாரக்கின் ஆடம்பர வாழ்க்கையின் படங்களின் மேலும், தகவல்களின் மேலும் மக்களின் வெறுப்பு கிளம்பியதுதான். இன்னும், விக்கி லீக்சின் பின் இஸ்ரேல் இருப்பதற்கு வலுவான பல ஆதாரங்களை மெயிலில் கண்டேன். தாங்கள் அதன் மேல் பதிவெழுதுவீர்களானால் உங்களுக்கு அதை ஃபார்வர்டு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ். அரபு நாடுகளின் பிளவுக்கும் உட்குழப்பங்களுக்கும் காரணகர்த்தா இஸ்ரேலைத் தவிர வேறு யாரேனும் இருக்க சாத்தியமில்லை என்பதே என் வாதமும். அல்லாஹூ அலீமுல் ஹகீம்.

    வ ஸலாம்.

    ReplyDelete
  30. சகோதரி அன்னு அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம்,

    அமெரிக்காவின் 51வது மாகாணமான இஸ்ரேலுக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை சில காலத்துக்கு முன் நடத்தி காட்டியவர்கள் எகிப்தியர்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நடந்தால் தான் இஸ்ரேல் கவலைப்படும். முபாரக் தொடர்ந்தால் இஸ்ரேலை விட மகிழ்ச்சியடைபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இது என்னுடைய கணிப்பு...எனினும் அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

    ஆர்ப்பாட்டகாரர்கள் முபாரக்குக்கு கொடுத்த கேடு இன்றோடு முடிகின்றது. துவா செய்யுங்கள், இன்று நடக்கக்கூடிய போராட்டம் அமைதியான முறையில் நடந்து எகிப்தியர்களின் எண்ணங்கள் நிறைவேற வேண்டுமென்று.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  31. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ,

    இஸ்ரேலின் ராஜதந்திரங்கள் நம்மால் கணிக்க இயலாதது. பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ் என்ன நடக்கப் போகிறதென்று. முஜாஹிதீன்களுக்கு ஆதரவு தரும் வண்ணம் ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் எண்ணம். அல்லாஹூ முஸ்த்’ஆன்.

    வ ஸலாம்.

    ReplyDelete
  32. உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

    எகிப்திய புரட்சியில் இஸ்ரேலுக்கு காலில் வெந்நீர் கொட்டிது என்றால், இந்த புரட்சி இப்போது ஜோர்தானிலும் பற்றிக்கொண்டதும், வெந்நீர் இப்போது இஸ்ரேலின் உச்சந்தலையில். காரணம், "அகபா துறைமுகம்". இது ஜோர்தானின் "ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு" என்ற மிக முக்கிய துறைமுகம். எகிப்திற்கு 'அது பத்தோடு ஒன்று ரக' துறைமுகம். இரு நாட்டின் எல்லைக்கோடும் சேரும் இடத்தில் அகபா துறைமுகம் உள்ளது. போரின் மூலம் அதனை கைப்பற்றி அங்கே வந்து உட்கார்ந்துகொண்டு அந்த துறைமுகத்தை ஆண்டு அனுபவிக்கிறது இஸ்ரேல்.

    வளைகுடாவில் இஸ்ரேலை அங்கீகரித்த இரண்டே அரபு நாடுகளில் ஒன்று எகிப்து மற்றொன்று ஜோர்தான். இந்த அமைதி ஒப்பந்தத்தின் விளைவுதான் அகபா துறைமுகம் இஸ்ரேலுக்கு அனுமதி. இந்த இரண்டு நாடுகளிளும்தான் மக்கள் புரட்சி நடக்கிறது இப்போது..! இரண்டில் ஒரு நாட்டில் புரட்சி வெற்றி என்றால் கூட இஸ்ரேல் கதை கந்தல்தான்.

    அகபா துறைமுகத்தில் மட்டும் இஸ்ரேலிய ராணுவம் இல்லை என்றால், ஹமாஸ் பன்மடங்கு விஸ்வரூபம் எடுக்கும். அதற்கு வேண்டிய அனைத்து போர் தளவாடங்களையும் "எங்கிருந்தாவது" இத்துறைமுகம் மூலம் பெற்று விடும்.

    ReplyDelete
  33. தொடர்ச்சி...

    அம்மான்,பிப்௦.3:
    ஸமீர் ரிஃபாய்க்கு பதிலாக ஜோர்டானின் புதிய பிரதமராக முன்னாள் ராணுவ ஆலோசகர் மஃரூஃப் பகீதை மன்னர் அப்துல்லாஹ் நியமித்த பொழுதும் எதிர்கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புதிய பிரதமரை நியமித்ததால் ஒரு பலனுமில்லை என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர். விலை வாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தப்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரிஃபாயிக்கெதிராக போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மன்னர் அப்துல்லாஹ் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு நிர்பந்தத்திற்குள்ளானார். மன்னரின் நடவடிக்கை போதுமானது அல்ல எனவும், ரப்பர் ஸ்டாம்பான பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமெனவும் இஸ்லாமிய கட்சியான இஸ்லாமிக் ஆக்ஷன் ஃப்ரண்ட் தலைவர் ஸகீ பனீ ரஷீத் தெரிவித்துள்ளார்.

    செய்தி:மாத்யமம்

    ReplyDelete
  34. சகோதரி அன்னு அவர்களுக்கு,

    வ அலைக்கும் ஸலாம்...

    அமெரிக்கா என்ற நாடு துணையாக இல்லாவிட்டால் இஸ்ரேலின் ராஜதந்திரம்?

    -------
    முஜாஹிதீன்களுக்கு ஆதரவு தரும் வண்ணம் ஆட்சி அமைய வேண்டும் என்பதே என் எண்ணம்
    -------

    இன்ஷா அல்லாஹ். துவா செய்து கொண்டே இருப்போம்...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  35. அஸ்ஸலாமு அலைக்கும்! நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் பொழுது இஸ்ரேலுக்கு அஸ்தமனம் ஆரம்பமாகி விட்டதுக்கான முதற்படிதான் இந்த அமெரிக்க அடிவருடிகளுக்கு எதிரான புரட்சிகள் போன்று தோன்றுகிறது. மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட தகவலில் இஸ்ரேல் அரபு நாடுகளின் மீது அணுகுண்டு வீச திட்டமிட்டிருந்ததாக உள்ளது. இன்னும் எகிப்துடனான நட்பு இஸ்ரேலுடைய ராஜ தந்திரத்தால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. துருக்கியுடனான இஸ்ரேல் நட்பும் அவ்வளவு நன்றாக இல்லை.இன்ஷா அல்லாஹ் இஹ்வானுல் முஸ்லிமீன் கட்சி ஆட்சியை பிடித்தால் சரித்திரம் மாறும் . அல்லாஹ்வே அறிந்தவன்

    ReplyDelete
  36. சகோதரர் ஷா நவாஸ்,

    வ அலைக்கும் ஸலாம்,

    தங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  37. விளக்கமான உங்களது அலசலுக்கு நன்றிகள்.

    /சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இருப்பதால், திருட்டு சம்பவங்களை தடுக்க, எகிப்து மக்கள் தங்களுக்குள்ளாக அணிகளை உருவாக்கி வீடுகள், ஓட்டல்கள், அங்காடிகள், அருங்காட்சியகங்கள் என பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாத்து வருகின்றனர். இதற்கு அனைத்து கட்சியினரும் உதவி புரிகின்றனர்./ எந்தவொரு புரட்சியிலும் கேள்விப்படாத ஆச்சரியமான விஷயம்.

    இறைவன் நமது துஆவை விரைவில் நிறைவேற்றுவானாக! ஆமீன்.

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் enrenrum16,

    ஆம். அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின் நடவடிக்கைகள், "ராணுவமும் மக்களும் ஒன்றே" என்ற மக்களின் கோஷங்கள், உணவை ராணுவம் மக்கள் என்று அனைவரும் பகிர்ந்து உண்ணுவது என பல ஆச்சர்யப்படும் சம்பவங்கள் இந்த புரட்சியில் இருக்கின்றன.

    ----
    இறைவன் நமது துஆவை விரைவில் நிறைவேற்றுவானாக!
    -----

    ஆமீன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  39. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
    மாஷா அல்லாஹ். மிக காத்திரமான ஆய்வு. உங்களுக்கு எல்லாம் வல்ல அலாஹ் நற்கூலி வழங்குவானாக. தற்போதைய நிலவரங்கள் குறித்தும், மற்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் ஆய்வுகளை தொடர்ந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சகோ ஆஷிக் அஹ்மத் மற்றும் இங்கு கருத்து பதிபவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் தன் அன்பை சொரிவானாக.

    ReplyDelete